பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

தமிழ்ச்சிறுகதையின் பெருவெளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்ச்சிறுகதையின் பெருவெளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பிப்ரவரி 14, 2021

'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' - நிறைவாக

 


நிறைவாக,

    சு.வேணுகோபால் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' வாசித்து முடித்தேன். 13 இலக்கிய ஆளுமைகள் பற்றிய திறனாய்வு அடங்கிய தொகுப்பு.
    ஒவ்வொரு கட்டுரையையும் வாசித்து முடித்த பின் அது குறித்த வாசிப்பு அனுபவத்தை எழுதி வந்தேன். இப்போது நிறைவாக சிலவற்றை சொல்ல வேண்டியுள்ளது.
    நம் காலத்து மூத்த ஆளுமைகளின் படைப்புகள் பற்றிய இக்கட்டுரைகள் மிகவும் முக்கியமானவை.
    அவர்கள் எவ்வாறு தனித்திருக்கிறார்கள் எவ்வாறு ஆளுமைகளாக கருதப்படுகின்றார்கள் என்பதனை கட்டுரையாசிரியர் விளக்கமாக சொல்லியுள்ளார்.
    இதன் வழி, அவர்களின் படைப்புலகை வாசகர்கள் எளிதில் புரிந்துக்கொண்டு தங்களின் வாசகப்பார்வையை விசாலப்படுத்தலாம்.
    அதோடு கதைகளை எப்படியெல்லாம் அணுகலாம். எங்கிருந்து கண்டுகொள்ளலாம் போன்ற நுணுக்கங்களை இக்கட்டுரைகள் வழி அறிந்துக் கொள்ளலாம்
மீள்வாசிப்பு செய்யவும் புதிய வாசகர்கள் கதைகளைத் தேடி வாசிக்கவும் இந்த திறனாய்வு பெரிதும் உதவும் என நம்புகின்றேன்.
    இப்படியான புத்தகத்தை கொடுத்தமைக்கு ஐயா சு.வேணுகோபால் அவர்களுக்கும் தியாகு நூலகத்திற்கும் நன்றியும் அன்பும்.

'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' - பதிமூன்றாவது கட்டுரையை முன்வைத்து

 

பதிமூன்றாவது கட்டுரையை முன்வைத்து...

    தற்போது சு.வேணுகோபால் அவர்கள் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் 13 படைப்பாளர்களின் படைப்புகளையும் அதன் உள் வெளி பரப்புகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து உணர்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
    *பதிமூன்றாவது கட்டுரையாக 'கி.ராஜநாராயணன் : கிராமியப் பன்மைத்தன்மையிலிருந்து சாராம்சததை தொகுக்கும் எழுத்துக்கலை' என்கிற கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர்.*
    இந்த புத்தகத்தின் கடைசி கட்டுரை. நிறைவான கட்டுரையும் கூட. கி.ராஜநாராயணன் அவர்களை கரிசல் நிலத்தை எழுதியவர் என செல்வது வழக்கம். அவர் கரிசல் வட்டார மனிதர்களைப் பற்றியே அதிகமும் எழுதியுள்ளார்.
    இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து கிராம மக்களின் அன்றாட இயக்கம் எப்படிப்பட்டதாக இருந்தது என்று காண முனைவோருக்கு கி.ராவிப் எழுத்துகள் முதல் ஆவணமாக அமையும்.
    இவ்வரிகள் என்னை யோசிக்க வைத்தன. நம் நாட்டில் எழுதும் கதைகளில் பெரும்பாலான கதைகள் தோட்ட வாழ்க்கையை மையப்படுத்தியே இருக்கும். இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இதையே எழுதப்பொகிறார்கள் என்கிற ஏளன பேச்சு பேசுகின்றவர்களும் உண்டு. நம் வாழ்க்கையை நாம் எழுதாமல் வேறு யார் எழுதுவார்கள் என கேட்பவர்களும் உண்டு.
    ஆனால், இன்னும் 50 ஆண்டுகள் கழித்து அக்கதைகள் நம் தோட்ட வாழ்வு பற்றிய ஆவணமாக அமையுமா என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது. என்ன சொல்கிறோம் என்பதைக் காட்டிலும் எவ்வளவு ஆழ்ந்து ஆழமாக சொல்கிறோமோ அதுதான் பின்னாளில் பேசப்படும் என்பதில் எனக்கு நம்பிககை உண்டு.
    கி.ரா தன் கதையுலகில் காட்டும் மனிதர்கள் பற்றிய கட்டுரையாளர் சிறப்பாகவே சொல்லியுள்ளார். பல கதைகள் குறித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    அனுபவம் கதையாகும் போது அது எப்படி கலையாகிறது என்பதை இக்கட்டுரைவழி அறிய முடிகிறது. சொல்லப்போனால் வாசிக்க வாசிக்க முடிந்துவிடக் கூடாதே என்கிற ஆசையுடந்தான் கட்டுரையை வாசித்து முடித்தேன்.

'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' - பனிரெண்டாவது கட்டுரையை முன்வைத்து

 

பனிரெண்டாவது கட்டுரையை முன்வைத்து
    தற்போது சு.வேணுகோபால் அவர்கள் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் 13 படைப்பாளர்களின் படைப்புகளையும் அதன் உள் வெளி பரப்புகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து உணர்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
    *பனிரெண்டாவது கட்டுரையாக 'ஆ.மாதவனின் : பாதையற்ற பயணம்
என்கிற கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர்.*
    மற்ற கட்டுரைகளை வாசிக்கையில் இருந்த மனநிலை இக்கட்டுரையை வாசிக்கையில் இருக்கவில்லை. ஆ.மாதவனின் ஒரு படைப்பைக் கூட வாசிக்காத குற்றவுணர்ச்சியே மேலோங்கியது.
    நண்பர்களுடன் பேசும் சமயங்களில் ஆ.மாதவன் பற்றிய பேச்சு எழுந்திருக்கிறது. ஆனால் ஏனோ சிரத்தை கொண்டி அவரது படைப்புகளை படிக்கவில்லை.
அப்படியான மனநிலை காரணமாக எத்தனை முக்கியமான படைப்புகளைத் தவறவிட்டுள்ளேன் என்பதை இக்கட்டுரை காட்டியது.
    ஆ.மாதவனின் கதைகளின் இருக்கும் விரிந்த பரப்புகள் பற்றி ஆசிரியர் கூறுகிறார். அதோடு 'எப்படி அடைத்தாலும் கூட்டைவிட்டுத் தப்பித்து விடுகிறது மனம். இச்சை தடுத்துவிட முடியாத மானிட இயல்பாக இருப்பதைக் காண்கிறார். நாற்புறம் நகரும் நண்டுக்கால் புரவியின் நடனங்கள்தான் காமம் என்பது ஆ.மாதவன் கண்ட விடை' என்கிறார் கட்டுரையாசிரியர்.
    'புதுமைப்பித்தனுக்கு அடுத்தப்படியாக புறஉலக மனிதர்களை அதிகம் எழுதியவர்களில் ஆ.மாதவனையும் சொல்லலாம்' என்கிறார்.
    மனித மனங்களையும் அதன் பலவீனங்களையும் படைப்புகளில் சொல்வதில் ஆ.மாதவன் தனியாக தெரிகின்றார்.
    அவரின் பல கதைகளைப் பற்றி நமக்கு சொல்வதின் வழி, தேடி வாசிக்கும் ஆர்வத்தை கொடுக்கின்றார் கட்டுரையாசிரியர்.

பிப்ரவரி 09, 2021

தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி - பதினொன்றாவது கட்டுரையை முன்வைத்து

(பதினொன்றாவது கட்டுரையை முன்வைத்து...)

தற்போது சு.வேணுகோபால் அவர்கள் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் 13 படைப்பாளர்களின் படைப்புகளையும் அதன் உள் வெளி பரப்புகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து உணர்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர். 

*பதினொன்றாவது கட்டுரையாக 'அசோகமித்திரன் : பறிபோகும் நம்பிக்கையின் துயரக்காட்சிகள்' என்கிற கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர்.* 

வாசிக்க வாசிக்க அசோகமித்திரன் என்னும் படைப்பாளி மீது பெரிய மரியாதையும் ஆர்வமும் ஏற்படுகின்றது. மற்ற படைப்பாளர்களில் இருந்து அசோகமித்திரன் எவ்வாறு தனித்து தெரிகின்றார், என்பதனை அதற்கான கதைகளோடு கட்டுரையாசிரியர் சொல்லியுள்ளார். 

'நாம் வண்டித் தடத்தின் வழியாக நடந்து சென்றால் அசோகமித்திரன் இரும்புப்பாதை வழியாக கடப்பார்' என்று சொல்வதின் வழி அசோகமித்திரனை புரிந்துக்கொள்ளும் வழியை எளிமையாக்குகிறார். ஆனால் அந்த எளிமையான அறிமுகம் ஆழ்கிணறு பொன்ற வாழ்வின் இன்னொரு பக்கத்தை அவரது கதைகளில் நமக்கு காட்டுவதையும் குறிப்பிடுகின்றார்.


பிரயாணம் சிறுகதை பலருக்கும் பல வகையான அனுபவத்தைக் கொடுக்கும். அவ்வாறே, கட்டுரையாசிரியர் தனது வாசிப்பு அனுபவத்தை முன் வைக்கின்றார். ஆங்காங்கே அசோகமித்திரனின் நாவல்கள் குறித்து கோடிட்டு காட்டுகின்றார்.

நாவலுக்கும் சிறுகதைகளுக்கும் இடையில் உள்ள ஒற்றுமைகளையும் அதன் மாற்றங்களை சொல்லும் போது புதியவர்களுக்கு மேலும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

எழுத்தாளரின் படைப்புகளை அதன் பலம் பலவீனம் கொண்டே எழுதியுள்ளார். ஆனாலும் பலமே அசோகமித்திரன் படைப்புகளில் ஓங்கியிருப்பதை மறுப்பதற்கில்லை.

அவை வெறும் கதைகள் அல்ல, காலத்தை ஆவணப்படுத்தும் செயல்.  நாம் கடந்த வந்த காலங்களை, மனித  வாழ்வின் நெருக்கடிகளை இவரின் கதைகள் வழி கண்டுகொள்ளலாம் என்கிறார்.

சின்ன வருத்தம், எனக்கு மிகவும் பிடித்த புலிக்கலைஞன் பற்றி ஒன்றும் சொல்லாததுதான். ஆனால் வாசிக்கத் தவறிய பல சிறுகதைகளைத் தெரிந்துக்கொண்டதில் மகிழ்ச்சி.

#தயாஜி

பிப்ரவரி 07, 2021

'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' - பத்தாவது கட்டுரையை முன்வைத்து

(பத்தாவது கட்டுரையை முன்வைத்து...)

    தற்போது சு.வேணுகோபால் அவர்கள் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் 13 படைப்பாளர்களின் படைப்புகளையும் அதன் உள் வெளி பரப்புகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து உணர்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
    *பத்தாவது கட்டுரையாக 'ஜெயகாந்தன் : மரபைச் செழுமையாக்கியவர்' என்கிற கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர்.*
    தமிழ்ச்சூழலில் ஜெயகாந்தனின் பெயர் பிரபலம். சொல்லப்போனால் அவரின் படைப்புகளை படிக்காதவர்களுக்குக் கூட ஜெயகாந்தன் பற்றிய விபரங்கள் தெரிந்திருக்கும். அதற்கான காரணத்தைக் கட்டுரையில் கோடிட்டு காட்டியுள்ளார் ஆசிரியர்.
    இக்கட்டுரைக்கு ஆரம்பிப்பதற்கு முன் ஆசிரியர் சிலவற்றை தெளிவுப்படுத்தியுள்ளார். தனது இளமை காலத்தில் ஜெயகாந்தனின் அத்தனைப் படைப்புகளையும் தேடித்தேடி வாசித்தது, அவை ஏற்படுத்திய தாக்கங்கள் போன்றவற்றை பகிர்ந்துக் கொள்கிறார். ஆனால் நல்ல வேளையாக தன் வாசிப்பை விசாலப்படுத்தியதின் வழி ஒரு வட்டத்திற்குள் தான் சிக்கிக்கொள்ளாமல் இருந்ததாகச் சொல்கிறார். கட்டுரையில் அதற்கான காரணம் நமக்கு புலப்படுகிறது.
    என்னதான் தனக்கு விருப்பமான எழுத்தாளராக இருந்தாலும், விமர்சனம் என வரும்பொழுது எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது முக்கியமான கேள்வி. முகநூலில் தனக்கு லைக் போட்டவர் என்ற ஒரு காரணமாக போலியாக விமர்சனங்களை முன் வைப்பவர்களும், விமர்சித்துவிட்டார்கள் என்பதால் முகநூலில் ப்ளாக் செய்பவர்களுக்கும் அவரவர்களுக்கான இடத்தை இக்கட்டுரை காட்டிக்கொடுத்து விடுகிறது.
    'புதுமைப்பித்தன், மரபில் நின்று கலகம் செய்தார். ஜெயகாந்தன் வஞ்சிக்கப்பட்டவர்களின் சார்பாக நின்று மரபிற்குள் புதிய புரிதலை உண்டாக்கினார்.' என்கிறார் ஆசிரியர். கூடவே ஜெயகாந்தனின் பலவீனங்களையும் சொல்கிறார். யோசிக்கையில் இன்றளவும் அந்த பலவீனம் பல படைப்பாளிகளிடம் இருப்பதை உணர முடிகின்றது.
    'அவரது நடையில் இருக்கும் துல்லியம் கதைகளுக்கு எவ்வளவு பலத்தைக் தருகின்றனவோ அதே அளவு பாலகீனத்தையும் தருகின்றது' என சொல்லும் கட்டுரையாளரின் விளக்கம் நிச்சயம் கவனிக்கவேண்டிய ஒன்று.
    வழக்கம் போல் வாசிக்கவேண்டிய ஜே.கேவின் சிறுகதைகளையும் அதற்கான காரணத்தையும் சொல்கிறார். நிச்சயம் அக்கதைகளை தேடவைக்கும்.

'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' - ஒன்பதாவது கட்டுரையை முன்வைத்து


(ஒன்பதாவது கட்டுரையை முன்வைத்து...)

    தற்போது சு.வேணுகோபால் அவர்கள் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் 13 படைப்பாளர்களின் படைப்புகளையும் அதன் உள் வெளி பரப்புகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து உணர்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
    *ஒன்பதாவது கட்டுரையாக 'சுந்தர ராமசாமி : அதீதப்பிரக்ஞையில் நழுவும் கலை எழுச்சி' என்கிற கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர்.*
    சுந்தர ராமசாமி கதைகளைப் பற்றி கூறும் போது, 'கதைகளை மிகமிக கவனமாகத்தான் உருவாக்கியிருக்கிறார். உலகத்தரம் வாய்ந்த கதைகளாக அமைந்துவிட வேண்டும் என்ற காதலுடன் தான் கதைகளை எழுதியிருக்கிறார்'
என்கின்றார்.
    ஆனால் சு.ராவின் படைப்புகளில் அவர் தவறவிட்ட பகுதிகளை ஒவ்வொன்றாக ஆழமாக அலசுகின்றார். ஒரு படைப்பாளயின் படைப்புகளை அணுகும் போது பொதுபுத்தி சார்ந்த பார்வை கொண்டிருக்காமல், தன் வாசிப்பின் அனுபவம் கற்றுக்கொடுத்த்திருக்கும் தெளிவில் இருந்து அணுகவேண்டிய அவசியத்தை இக்கட்டுரை வழி அறிய முடிகின்றது.
    சு.ரா அவர்கள் தனது கட்டுரைகள் மொழிபெயர்ப்புகள், கவிதைகள், சிறுகதைகள் போன்றவற்றில் வெவ்வேறான பரிணாமங்களை கொண்டிருப்பது வாசகர்களுக்கு புலப்படும் வண்ணம் கட்டுரை இருப்பது அதன் சிறப்புகளில் ஒன்று.
    சு.ராவின் படைப்புகள் மீது வைக்கப்படும் விமர்சனம் அவரின் நவீன இலக்கியத்தளத்திற்கான பங்களிப்பை கெடுக்காதவாறு கட்டுரையாசிரியர் எழுதுயுள்ளார்.
    படைப்பாளியின் படைப்புகள் மீது விமர்சனம் வைக்கும் அதே வேளையில் அவர் மீதான தேடலை புதியவர்களுக்கும் மீள் வாசிப்பாளர்களுக்கும் கொடுக்கும் வண்ணமே கட்டுரையை இயற்றியுள்ளார்.
    ஒரு பக்கம் பலவீனங்களை சொல்வதோடு இன்னொரு பக்கம் அப்படைப்பு எப்படி தனக்கான இடத்தை அடைகிறது என கோடிட்டு காட்டுகிறார் கட்டுரையாளர் சு.வேணுகோபால்.
    எழுதிய காலகட்டம் தொட்டு இன்றுவரை சர்ச்சையைக் கொடுக்கும் 'பிள்ளை கெடுத்தாள் விளை' என்கிற சு.ராவின் சிறுகதைப் பற்றிய தனது பார்வையை, அக்கதையை அணுகவேண்டிய இன்னொரு சாத்தியக்கூறுகளை முன் வைப்பதன் வழி இக்கட்டுரை படைப்பாளியின் படைப்புகள் மீதான அக்கறையை காட்டுகிறது.
    முந்தைய கட்டிரைகள் போல இக்கட்டுரையிலும் எழுத்தாளரின் முக்கியமான ஆக்கங்களை குறிப்புகளாக கொடுத்துள்ளார் ஆசிரியர்.

'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' - எட்டாவது கட்டுரையை முன்வைத்து

 

(எட்டாவது கட்டுரையை முன்வைத்து...)

    தற்போது சு.வேணுகோபால் அவர்கள் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் 13 படைப்பாளர்களின் படைப்புகளையும் அதன் உள் வெளி பரப்புகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து உணர்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
    *எட்டாவது கட்டுரையாக 'தி.ஜானகிராமன் : அபூர்வமான சொல்முறைக் கலைஞன்' என்கிற கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர்.*
    இதுவரை வாசித்த கட்டுரைகளின் சற்றே நீளமான கட்டுரை. ஆனால் வாசிக்க வாசிக்க கட்டுரை முடிந்துவிடக்கூடாது என்கிற எண்ணமே மேலோங்கியது.
    கட்டுரையாளருக்கு தி.ஜானகிராமன் மீதான அன்பையும் விருப்பத்தையும் கட்டுரை முழுக்க நம்மால் உணர முடிகிறது. எப்படி இந்த அளவிற்கு தி.ஜாவின் எழுத்துலகில் இவரால் இத்தனை இலகுவாக நுழைந்து வர முடிந்தது என்கிற ஆச்சர்யத்தை எப்படி சொல்வது.
    கட்டுரை முழுக்க தி.ஜாவின் படைப்புலகம் பற்றி பேசியிருந்தாலும், வாசகர்களுக்கும் இன்றைய எழுத்தாளர்களுக்கும் தேவையான பல உள்ளீடுகளை கட்டுரையாளர் எழுதியுள்ளார்.
    முந்தைய கட்டுரைகளில் இல்லாத அளவிற்கு இந்த கட்டுரையில் பல விடயங்கள் உள்ளன. தி.ஜாவின் சிறுகதைகளைப் பற்றி மட்டுமில்லாமல் அவரின் நாவல்களின் படிமத்தையும் கோடிட்டு காட்டியுள்ளார்.
    'தி.ஜானகிராமன் எந்தக் கலைக்கோட்பாடுகளின் கண்ணாடிகளையும் மாட்டிக்கொண்டு சமூகத்தைப் பார்க்கவில்லை. மழை போல, வெயில் போல, உப்புசம் போல, காற்றுப்போல இயங்குகின்ற சமுக இயக்கத்தில் கரைந்தவர்' என்கிறார் ஆசிரியர்.
    கதாப்பாத்திரங்களின் உடல் மொழியில் இருந்து அவர்களின் உரையாடல் வறை தி.ஜா எந்த அளவிற்கு கவனம் செலுத்தியுள்ளார் என சொல்லும் அதே வேளையில் அது தொழிற்பட்டது போல அல்லாமல் இயல்பாக அவருக்கு கைவந்ததாகச் சொல்கிறார்.
    வழக்கம் போல , தி.ஜாவின் முக்கியமான சிறுகதைகளைச் சொல்லி, அதற்கான காரணத்தையும் சொல்கிறார். இந்த கட்டுரைக்கு பிறகு நாம் வாசிக்கும் அல்லது மீள்வாசிப்பு செய்யும் தி.ஜாவின் படைப்புகள் வேறொரு பார்வையைக் கொடுக்கும் என நம்புகிறேன்.
    ஒரு வாசகனாக, ஒரு எழுத்தாளனாக எனக்கு பல வழிகாட்டுதல்களை இக்கட்டுரையின் வழி கட்டுரையாளர் சொல்லியுள்ள உணர்வுடன் இந்த கட்டுரையை இன்னொரு முறை வாசிக்கின்றேன்.

'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' - ஏழாவது கட்டுரையை முன்வைத்து

(ஏழாவது கட்டுரையை முன்வைத்து...)

    தற்போது சு.வேணுகோபால் அவர்கள் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் 13 படைப்பாளர்களின் படைப்புகளையும் அதன் உள் வெளி பரப்புகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து உணர்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
    *ஏழாவது கட்டுரையாக 'கு.அழகிரிசாமி : காலத்தின் கோலங்களை கதையில் வரைந்த கலைஞன்' என்கிற கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர்.*
    கு.அழகிரிசாமிக்கும் மலேசிய சிறுகதை வளர்ச்சிக்கும் பங்கிருப்பதை யாரும் மறுக்க முடியாது.
    1952-ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டு வரை ஐந்தாண்டுகள் மலேசியா 'தமிழ்நேசன்' பத்திரிகையில் ஆசிரியராக இருந்தார். அன்றைய சூழலில் பத்திரிகைகளில் வெளிவரும் கதைகள் மீது அதிக கவனம் செலுத்தியுள்ளார். அதற்காக பல வழிகளைக் கையாண்டார். அதன் மூலம் அவர் சில சிக்கல்களையும் சந்தித்துள்ளதாக தெரிகிறது.
    'மலேசியாவில் இருந்து மீண்டும் தமிழகம் வந்ததற்கு ”மலேசிய நாட்டில் தன்னுடைய இலக்கிய வாழ்க்கைக்கு உற்ற நண்பர்கள் இல்லை என்பதாலும், தமிழ் நாட்டு அன்பர்களை விட்டுப் பிரிந்திருக்க மனமில்லாததாலும் நான் மலேசியா நாட்டை விட்டு தமிழ்நாட்டுக்குத் திரும்பினேன்” என்று அழகிரிசாமி காரணம் கூறினார். மேலும், "தமிழ்நேசன்' நாளிதழ் அலுவலகத்திலும் வெளியே அரசியல்வாதிகள் சிலரின் ஒத்துழையாமையும் அவருக்கு ஆசிரியர் பணியில் சோர்வை ஏற்படுத்தின.' என இணையத்தில் குறிப்பொன்றை சமீபத்தில் படிக்க நேர்ந்தது.
    சு.வேணுகோபால் அவர்கள் எழுதியுள்ள இந்த கட்டுரை கு.அழகிரிசாமி அவர்களின் ஆளுமையைச் சிறப்பாகவே வெளி கொணர்ந்துள்ளது.
    சிறுகதை எழுத விருப்பமுள்ளவர்கள் எங்கிருந்து கதைகளை எடுக்கலாம். யாருக்கான கதைகளை படைக்கலாம் போன்ற விபரங்களை கு.அழகிரிசாமியின் சிறுகதைகள் வழி இக்கட்டுரையில் எடுத்துரைத்திருக்கிறார் கட்டுரையாளர்.
    'தமிழ்ச் சமூகத்தின் அசலான வாழ்க்கையை இவ்வளவு செறிவோடும் உக்கிரத்தோடும் சொன்ன வெறொருவர் இந்தக்காலத்தில் இல்லை' என கட்டுரையாளர் சொல்லிவிட்டு அதற்கான கதைகளையும் அறிமுகம் செய்கிறார்.
    'கார்சியா மார்க்வெஸ்ஸின் 'மிகப்பெரும் சிறகுகளுடன் வயோதிகன்' என்ற கதையில் விரியும் மானிட எண்ணங்கள் போல மார்க்வெஸ் எழுதுவதற்கு முன்னமே 'ஆதாரம் இருக்கின்றதா' என்ற கதையுள் ஒரு பிரச்சனையின் மையத்தில் பல்வேறுபட்ட மானிட எண்ண ஓட்டங்களின் ஊற்றுக் கண்களைத் திறந்துவிட்டிருக்கிறார்', என கட்டுரையாளர் சொல்லும் போது இக்கட்டுரைக்கான அவரது உழைப்பும் தேர்வும் நம்மை வியக்க வைக்கிறது.
    கு.அழகிரிசாமியின் பல கதைகளை, அது எப்படி முக்கியமான கதைகளாகிறது என கட்டுரையாளர் சொல்வது புதியவர்களுக்கு பாடமாகவும் வாசகர்களுக்கு மீள்வாசிப்பிற்கும் வழியையும் சமைக்கின்றது.

'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' - ஆறாவது கட்டுரையை முன்வைத்து

 

(ஆறாவது கட்டுரையை முன்வைத்து...)

    தற்போது சு.வேணுகோபால் அவர்கள் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் 13 படைப்பாளர்களின் படைப்புகளையும் அதன் உள் வெளி பரப்புகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து உணர்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
    *ஆறாவது கட்டுரையாக 'லா.ச.ராமாமிர்தம் : மனவுணர்வுகளைத் ததும்ப வைத்தவர்' என்கிற கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர்.*
    இதற்கு முன்பாக லா.ச.ராவின் 'அபிதா' நாவலை வாசித்துக்ளேன். ஆங்கில படைப்பான 'லோலொட்டா'வை மையப்படுத்திய தமிழ் நாவல் என்று அறிய வந்தது. அது என் ஆரவத்தைத் தூண்டியதற்கு முதல் காரணம்.
    'அபிதா' நாவலை லா.ச.ரா எழுதியிருந்த விதம் எனக்கு பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்ததது. உணர்ச்சிகளை சில இடங்களில் அவர் சொல்லிச்செல்லும் விதம் பிடிபட சிரமத்தைக் கொடுத்தது. மீண்டும் வாசிக்கையில் அதன் ஆழம் பிடிபட்டது.
    அந்நாவலில் எனக்கு ஏற்பட்ட பல உணர்வுகளை அதற்கான காரணங்களையும் இக்கட்டுரையில் ஆசிரியர் சு.வேணுகோபால் நேர்த்தியாக கோடிட்டுக் காட்டியுள்ளார்.
    நமது முந்தைய தலைமுறை படைப்பாளிகளின் படைப்புகளை இன்றைய சூழலோடு ஒப்பிட்டு வாசிப்பதால் இழப்பு நமக்குத்தான் என்பதை புரியும்படி கட்டுரைதை எழுதியுள்ளார்.
    அவர்களின் படைப்புகளை வாசிக்க, எழுதப்பட்ட காலச்சூழலை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதை தெளிவாக்கியுள்ளார்.
    கட்டுகளை உடைத்து எழுதி, நிலை பெற்ற படைப்பாளர்களும் உண்டு, உடைப்பதில் கவனமின்றி அந்த கட்டுக்குள் வாழும் மனிதர்களில் உணர்வுகளை எழுத்தாக்கி நிலைபெறும் படைப்பாளர்களும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
    அதனை கட்டுரையாளர் ' புதுமைப்பித்தன் மரபின் இறுக்கத்தை சிறையாகப் பார்த்தார். உடைப்பதிலேயே தீவிரமாக இருந்தார். லா.ச.ரா மரபின் இறுக்கத்தையும் அழுத்தத்தையும் காயத்தையும் ஏற்று நகரும் வாழ்க்கையை ஏற்றுக்கொண்டார். '
    அதோடு, ' லா.ச.ரா ஆண்களையோ பெண்களையோ குற்றவாளிகளாகப் பார்ப்பதில்லை. துன்பமும் இன்பமும் விதிக்கப்பட்ட சமூகவாழ்வின் ஒரு இயல்பாகக் காணுகிறார். பிரச்சனைகளின் வேர் அவருக்கு இரண்டாம்பட்சம்தான்' என்கிறார்.
    கைகொண்ட கருவை விட அதனை கையாண்ட மொழியில் லா.ச.ரா தனித்து நிற்கிறார் என்பதற்கான பல கதைகளை கட்டுரையாளர் அறிமுகம் செய்கிறார். லா.ச.ரா வின் எழுத்துகளைப் புரிந்துக்கொள்ள அந்த அறிமுகக்கதைகள் உதவும்.
    முந்தைய தலைமுறை படைப்பாளிகளின் குறைகளை பெரிதாக்கி ஒதுக்கி வைக்காமலும் நிறைகளை பெரிதாக்கி தூக்கி வைக்காமலும் இரண்டிற்கும் இடையில் உள்ள இலக்கியத்தை அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் இக்கட்டுரைகள் மிக முக்கியமான முன்னெடுப்பு.

'தமிழ்ச்சிறுகதையின் பெருவெளி' - ஐந்தாவது கட்டுரையை முன்வைத்து


(ஐந்தாவது கட்டுரையை முன்வைத்து...)

    தற்போது சு.வேணுகோபால் அவர்கள் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் 13 படைப்பாளர்களின் படைப்புகளையும் அதன் உள் வெளி பரப்புகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து உணர்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
    *ஐந்தாவது கட்டுரையாக 'சி.சு.செல்லப்பா : காலத்தின் ஆவணங்களைக் கதைகளில் பிடித்து வைத்தவர்' என்கிற கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர்.*
    இக்கட்டுரையில் தலைப்பே இதன் உள்ளடக்கத்தைச் சொல்லிவிட்டது. ஆனால் அதனைப் புரிந்துக்கொள்ள கட்டுரையைக் கடைசி வரை வாசித்தாக வேண்டியுள்ளது. அதுதான் கட்டுரையாளரின் தெளிந்தப்பார்வை.
    இதுவரை பலரும் சி.சு.செல்லப்பாவை பற்றி எழுதியிருக்கிறார்கள். சிலர் அவரை புறக்கணிக்கவும் செய்திருக்கிறார்கள். ஆனால் இக்கட்டுரையில் இரண்டிற்கும் இடையில் ஊடாடும் இலக்கியத்தின் தேவையை ஆழமாகச் சொல்லியுள்ளார் கட்டுரையாளர்.
    சி.சு.செ-வின் ஆக்கங்களில் ஆகச்சிறந்த படைப்பாக இன்றளவும் பேசப்படுவது 'வாடிவாசல்' நாவல். ஆனால் 'வாடிவாசல்' குறுநாவலுக்கு அருகில் வைத்து எண்ணத்தக்க அளவிற்கு குறைந்தது 10 சிறுகதைகளையாவது சொல்லலாம் என்கிறார் ஆசிரியர்.
    சிறந்த சிறுகதை என சொல்லத்தக்க கதைகளாக இல்லாவிட்டாலும், வரலாற்று நூலை விடவும் சி.சு.செல்லப்பாவின் கதைகளில் உள்ள வாழ்க்கை முறைதான் சிறந்த சமூக வரலாறாகத் தெரிவிதை கட்டுரையில் கோடிட்டுக் காட்டியுள்ளார். காலம் கடக்க கடக்க இக்கதைகளில் இருக்கும் இத்தகைய அம்சமே இக்கதைகளின் முக்கியத்துவத்தை கூட்டிவிடும்.
    சி.சு.செல்லப்பாவின் கதைகளில் இன்றைய முக்கியத்துவம் என்பது அதனுள் பரவிக் கிடக்கும் பண்பட்டுக் கூறுகள் எனக்கூறும் ஆசிரியர் அதனைத் தொடர்ந்து "வீரபாண்டித் திருவிழாவை ஒட்டி மாட்டுத்தாவணி எட்டு நாட்கள் நடக்கும். இன்று வீரப்பாண்டித் திருவிழா இருக்கிறது. மாட்டுத்திருவிழா இல்லை. தாவணி அழிந்துவிட்டது. செல்லப்பாவின் கதைதான் சாட்சியாக இருக்கிறது.
    தொடர்ந்து சி.சு.செ-வின் முக்கியமான கதைகளையும் அக்கதைகளை எதனால் தான் தேர்ந்தெடுத்தேன் என்பதையும் கட்டுரையில் சொல்வதன் வழி நம்மையும் அக்கதைகளை வாசிக்க வைக்கின்றார்.
    மற்ற எழுத்தாளர்களால் எழுதிவிடாத கதைகளை எவ்வாறு சி.சு.செல்லப்பாவால் எழுத முடிந்தது என தெளிவான பார்வையில் சொல்கிறார். இருப்பினும் சி.சு.செல்லப்பாவின் கதைகள் மீது ஏன் வெளிச்சம் வரவில்லை என்பதனை ' நவீன இலக்கிய விமர்சகர்களுக்கு சி.சு.செ காட்டும் உலகுடன் ஒரு தொடர்பும் இல்லை என்பதாலேயே அவர்களை அக்கதைகள் கவரவில்லை' என தன் அனுமானத்தை சொல்லி இக்கட்டுரை முடிக்கின்றார்.
    இக்கட்டுரையை வாசிக்கும் பொழுது, நம் எழுத்துகளில் நாம் காட்டும் நம்பிக்கையும் அன்பும் அக்கதைகளை காலம் தாண்டியும் ஏதோ ஒரு வகையில் காப்பாற்றிவிடுகிறது என்பதை அறிய முடிகிறது.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்