பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

கவிதை2024 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை2024 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

டிசம்பர் 29, 2024

தீரா காதல்



 ஒரு நீண்ட கவிதை
யாரோ ஒருவரால் 
நினைக்கப்பட்டு
யாரோ ஒருவரால்
தொடங்கப்பட்டு
யாரோ ஒருவரால்
வாசிக்கப்பட்டு

ரசித்து
சிரித்து
அழுது
புலம்பி
ஆறுதல் தேடி
தோள் தட்டி
கண்ணீர் துடைத்து
மீண்டெழுந்து பின்

யாரோ ஒருவரால் 
தொடர்ந்து எழுதப்பட்டுக்கொண்டே
இருக்கிறது

இவ்வுலகில் எண்களுக்கு
வேண்டுமெனில்
முடிவின்மை இருக்கலாம்

ஆனால்
எவ்வுலகிலும் முற்றுபெறாமல்
தொடர்ந்து எழுதப்படுவது
தன்னைத்தானே வார்த்தெடுப்பது
எப்போழுதும் கவிதைகளே

தீரா நதியாய்ப்
பாய்ந்தோடும் 
தீரா கவிதையை
யாரால்தான் நிறுத்திவிட முடியும்

சுரக்கும் தாய்ப்பாலை
எந்தக் குழந்தைதான் மறுக்கும்....

டிசம்பர் 18, 2024

- பிரபலமற்ற வாசகன் -

 

- பிரபலமற்ற வாசகன் - 


உங்கள் புத்தகங்கள் 

பிரபலமானவர்கள் 

கைகளில் இருக்க வேண்டும்.


உங்கள் புத்தகங்களைப் பிரபலமானவர்கள் 

பேச வேண்டும்.


உங்கள் புத்தகங்களுடன்

பிரபலமானவர்கள் படம் பிடிக்க வேண்டும்.


உங்கள் புத்தகங்களுக்கு

பிரபலமானவர்கள் குரல் கொடுக்க வேண்டும்.


உங்கள் புத்தகங்களை

பிரபலமானவர்கள் இரசித்து லயிக்க வேண்டும்.


உங்கள் புத்தகங்களைவிடவும்

பிரபலமானவர்களே உங்களுடன் நிற்க வேண்டும்.


சரிதான்


ஆனால் 

உங்கள் புத்தகங்களை

வாங்குவதற்கு மட்டும்

ஏன் 

வாசகனை அழைக்கின்றீர்கள்


நீங்கள் 

உங்கள் புத்தகங்களை

பிரபலமானவர்களுக்கு 

அன்பளிப்பாக கொடுத்துவிடுவதாலா?


பரவாயில்லை


வாசகனுக்கு ஒருபோதும்

பிரபலமும் தேவைப்படாது

பிறர் பலமும் தேவைப்படாது...


#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

நவம்பர் 11, 2024

ஆச்சரியங்களுக்கு இனி அனுமதியில்லை

 


ஆச்சரியங்களைப் பார்த்து
ஆச்சரியப்படாமல் இருப்பதுதான்
இப்போதெல்லாம்
ஆச்சரியமாகத் தெரிகிறது !

வயதாகிவிட்டதா?

இல்லை

பார்த்திருந்த
ஆச்சரியங்கள் எல்லாம்
வலியாகிவிட்டதால்...

#தயாஜி

நவம்பர் 10, 2024

- ஃ -


அவர்களின்
எல்லா கேள்விகளுக்கும்
நாம் பதில் சொல்கிறோம்

அவர்களின்
எல்லா செயல்களுக்கும்
நாம் பதில் சொல்கிறோம்

அவர்களின்
எல்லா வாக்குறுதிகளுக்கும்
நாம் பதில் சொல்கிறோம்

அவர்களின்
தோற்கும் தருவாயில்

" உன் மாத சம்பளம் எவ்வளவு? "
என கேட்கிறார்கள்

நம்மால்
பதில் சொல்ல முடிவதில்லை
நாம் தோற்கிறோமாம்.
அவர்கள் ஜெயிக்கிறார்களாம்.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

நவம்பர் 05, 2024

வாழ்வோம் தொலைவோம்

 


உறவுகளில் உறவாடுவது 
அவ்வளவு எளிதல்ல
உறவுகளால் உயிர்வாடுவது
அத்தனை புதிதல்ல


மெல்லமெல்ல
எதுவொன்றும் நம்மை 
கொல்லத்தான் செய்யும்


உடனே சாகும் வரம்
எல்லோருக்குமே கிடைப்பதில்லை


மறக்கக்கூடாதவற்றில் 
சிலர் ஆடுகிறார்கள்
கொண்டாடுகிறார்கள்
மறக்க முடியாமலேயே
சிலர் வாடுகிறார்கள்
திண்டாடுகிறார்கள்


நாமுமே
மெல்லமெல்ல
சோகத்தில் நனைந்து
துக்கத்தில் கரைந்து
வலியில் வாழ்ந்துதான்
தொலைக்கவேண்டியுள்ளது


வாழ்வோம் தொலைவோம்...


ஆகஸ்ட் 11, 2024

காரணம் போதும் !

 


ஒரு கொலையை நியாயப்படுத்த
அந்தப் பிணத்திற்கு
மதத்தின் அடையாளத்தையோ
இனத்தின் அடையாளத்தையோ
ஜாதியின் அடையாளத்தையோ
மொழியின் அடையாளத்தையோ
சொல்லிவிட்டால் போதும்

என்கிற மனநிலைக்கு
மெல்ல மெல்ல
நம்மை நகர்த்தி
தோழமையோடு தள்ளிவிட்டு
நம்மையும் நம்ப வைத்துவிடுகிறார்கள்...

#தயாஜி 


மார்ச் 19, 2024

குரலற்ற கடலலை




உன்னோடு பேசுவதற்கு

என்

எல்லா வார்த்தைகளும்

ஏங்குகின்றன

எம்பி குதிக்கின்றன


நீ சொன்ன

ஒற்றைச் சொல்லின்

போதாமையால்

அவை

தினம் தினம் 

மௌனத்தற்கொலை

செய்கின்றன


நான் ஒருவனே

அந்த மரணங்களுக்கு

ஓசையற்ற ஓலம்


உன் பேரிரைச்சல்

என்றாவது ஒரு நாள்

என் நிசப்தத்தின்

வெறுமைக்கு முன்

மண்டியிடும்

தலைவணங்கும்....

பிப்ரவரி 22, 2024

உனக்கென்னதான் வேண்டும்?

 

உனக்கு என்ன வேண்டும்
உனக்கு என்னதான் வேண்டும்
என என்னை
எண்ண வைக்கிறாயே
சொல்லேன் உனக்கு
எது வேண்டும்
என்னதான் வேண்டும்

என்னிடமிருந்து உறவா
என்றைக்கும் சேரா பிரிவா

என்னதான் முடிவுடன்
நீ என்னுடன் நெருங்குகின்றாய்
என்னதான் எதிர்ப்பார்க்கிறாய்

நாள் முழுக்கப் பேசுகிறாய்
நாள் முழுக்க மௌனத்தில் நிலைக்கிறாய்

திடீரென ஒருநாள்
நம்மால் இனியெப்போதும்
சேர முடியாது என்கிறாய்
அடுத்த நாளே
நானின்றி வாழ முடியாதெனவும்
அழுகிறாய்

புலனச்செய்திகளில் வெறும் புள்ளிகளாகவே பதிலிடுகிறாய்
ஒரு முறையே பார்க்கும்படி
உன் புன்னகையை அனுப்பி மறைக்கிறாய்

என்னிடம் சேமிக்க எதையுமே கொடுக்காமல்
என்னிடமிருந்து எதைத்தான் நீ கேட்கிறாய்

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்


பிப்ரவரி 16, 2024

வசிகராக்கள்

 

அழகாய்த் தெரிகிறது
ஆனால் அத்தனையும்
பொய்யாக இருக்கிறதே

அதனால் என்ன
அழகாய்த் தெரிகிறது

உன் உண்மைகளை
நீயே வைத்துக்கொள்
அதனால் இங்கு
யாருக்கு என்ன லாபம்

அதோ
அழகாய்த் தெரிகிறது...


பிப்ரவரி 14, 2024

- சேராவரம்போல் -

 - சேராவரம்போல்


இங்கு எல்லார்க்குள்ளுமே

ஒரு காதல் கதை உண்டு

இங்கு எல்லோருக்குமே

ஒரு காதல் தோல்வி உண்டு


இங்கு யாரோ ஒருவர்தான்

காதலில் வெற்றியடைகிறார் 


ஆனால் ஏனோ

எல்லா தேசத்திலும்

தோல்வியடைந்த காதல் கதைகள்

மட்டுமே 

காலத்திற்கும் உயிர்ப்போடு இருக்கின்றன


சாகாவரம்போல் சோகமும் இருப்பதில்லை

சேராவரம்போல தீரா காதலும் மரிப்பதில்லை


அது சிரஞ்சீவிய காமம்.....


#தயாஜி 

பிப்ரவரி 12, 2024

முகங்களை சேமிப்பவர்கள்

 


என்னிடம்

பழைய முகம் ஒன்று

கொஞ்ச காலமாக 

இருக்கிறது


என்றாவது ஒரு நாள் 

தேவையிருப்பின் 

கொஞ்சமாய்

எடுத்துப் பார்த்துக்கொள்வேன்


பின் மீண்டும் பத்திரப்படுத்திக்

கொள்வேன்


மனம் கொஞ்சம் ஆசுவாசமாகும்


குறிப்பாக 

எப்போதெல்லாம் கண்களை மீறி

கண்ணீர் வருகிறதோ

அப்போதெல்லாம்

அந்த முகம்தான் ஒரே ஆறுதல்


எத்தனையோ முறை

காயப்பட்டவனின் 

முகம் அது


ஆனாலும் மீண்டும் மீண்டும்

வலி தாங்கவே விரும்புகிறது


என்ன செய்ய

அன்பென்பது அன்பாகவே அமைவதுமில்லை

நட்பெண்பது நட்பாகவே

அமைவதுமில்லை


ஒருவேளை உங்களுக்கு 

அப்படியொன்று அமைந்துவிட்டால்

உண்மையில் நீங்கள் 

கொடுத்து வைத்தவர்கள்


உங்களுக்கு கூடுதல் முகங்கள்

தேவைப்படாது....


பிப்ரவரி 11, 2024

பிழைத்துக்கொள்




நான் 
உன்னைத் தேடுவதை
நிறுத்திவிட்டேன்
நான்
உன்னை நினைப்பதை
மறந்துவிட்டேன்

நீ என்
ஒவ்வொரு சொல்லிலும்
உன்னைப் பொருத்திப் பார்க்கிறாய்

நீ என்
ஒவ்வொரு செயலிலும்
உன்னைப் போட்டியாளராகக் கற்பிதம் கொள்கிறாய்

என் இலக்கு 
ஒருபோதும் நீயல்ல

உன் இலக்காய் என்னை நீ
கற்பனைச் செய்து
கற்பாறையில் மோதி நிற்கிறாய்

எழுதுவதைத் தவிர
எனக்கு 
வேறெதுவும் தெரியாது
எழுதுவதைத் தவிர 
உனக்கு
வேறெல்லாமே தெரிகிறது

பிழைத்துக்கொள்ளேன்..

ஜனவரி 30, 2024

உதவி செய்

 


நான் உனக்கு
பரிசளித்தது
எனக்கு ரொம்பவும்
பிடித்தமான புத்தகம்

கொஞ்சம் அரிய
புத்தகம்தான்

இதுவரை அதனை
நான் யாருக்கும்
இரவலாகக் கூட கொடுத்ததில்லை

என்னளவிலுமே
அது ரொம்பவும் நெருக்கமான
புத்தகம்

அதைத்தான் நான் உனக்கென
பரிசளித்தேன்

ஆம் அதுதான்
அதேதான்
அந்தப் புத்தகம்தான்

என்னை வெறுத்ததால்
நீ
கிழித்து வீசினாயே
அதே புத்தகம்தான்

பரவாயில்லை

நீ
கிழித்தெறிந்ததில்
ஏதோ ஒரு காகிதத்தில்தான்
அந்த எழுத்தாளரின்
கையொப்பம் இருக்கிறது

அதைமட்டுமாவது
தேடியெடுக்க எனக்கு
உதவி செய்வாயா

அதையாவது நான்
பத்திரப்படுத்திக் கொள்கிறேன்...

#தயாஜி 


ஜனவரி 24, 2024

மணற்படுக்கை

 


சந்திக்கின்றோம்
நாம் சந்திக்கின்றோம்
மீண்டும் நாம் சந்திக்கின்றோம்

பலநூறு ஆண்டுகளுக்கு
ஒருமுறை
இங்கு மீண்டும்  நாம் சந்திக்கின்றோம்

ஆனாலும் அத்தனையும்
நேற்று போல
இன்று போல
இப்பொழுது போல
இந்நொடி போல
அத்தனையும் நெருக்கமாக இருக்கிறது
அத்தனை நெருக்கமாக அணைக்கிறது

நீ அதே காதலோடுதான்
இருக்கிறாயா
நீ இன்னமும் அதே காதலோடுதான் இருக்கிறாயா
சொல்

உன் பதிலில்தான்
என் பதிலையும் வைக்க
நினைக்கிறேன்

எல்லையற்ற மணற்படுக்கையில்
என்னை நானே புதைத்துக் கொள்கிறேன்
காணா தூரம் நீ
செல்வதற்கு முன்பாக
வாயேன்
என்னுடன்
கொஞ்ச நேரம்
புதைந்து கொள்வோம்

ஜென்ம ஜென்மமாய்ப்
பிரிவதற்கே சந்திக்கும்
சாபம் பெற்றவர்கள் நாம்
நம்மால் வேறென்ன செய்ய முடியும்

#தயாஜி 

ஜனவரி 22, 2024

மன்றாடல்

 

இன்றோடு முடிந்தது
என்று அறிவித்து
நடந்தார்கள்

அடுக்கி வைத்தவற்றை
எடுத்து வைக்க
நேரம் இருக்கிறது
உதவிக்கு ஆட்களும்
இருக்கிறார்கள்

கணக்கு வழக்குகளை
எல்லாம்
தனித்தனியாய்ப் பார்த்துக்கொள்வார்கள்

யாருக்கும் எந்தச்
சிக்கலும் இல்லை

நான் மட்டும் ஏனோ
தனியே அமர்ந்திருக்கின்றேன்

இல்லை
இதுவரை விற்ற புத்தகங்களின்
நினைவில் அமர்ந்திருக்கின்றேன்

இதுநாள்வரை
இங்கிருந்தவை இனி
எங்கெங்கோ செல்லப்போகின்றன

புதிய ஸ்பரிசங்களை
அனுபவிக்கப்போகின்றன
ஏதோ ஓர் உள்ளங்கை வியர்வையில் வெட்கப்படப்போகின்றன
நிச்சயம் யாரோ
ஒருவரைத் தாலாட்டப்போகின்றன
யாரோ ஒருவரின் துக்கத்தைக் கெடுக்கப்போகின்றன

எல்லாவற்றையும்
தாங்கதான் வேண்டியுள்ளது

உங்களிடம் மன்றாடியொன்றைக் கேட்கிறேன்

புத்தகங்களை கவனமாகக் கையாளுங்கள் நண்பர்களே

அதுவும் எங்களுக்கு குழந்தைகளே....


ஜனவரி 04, 2024

செல்லுமிடம் தூரமில்லை

 


நீண்ட நாட்களுக்கு பிறகு

நாங்கள் சந்தித்தோம்

உணவருந்தினோம்

பேசினோம்


எங்கள் இருவரில்

யார் சொன்னாரோ தெரியவில்லை


சட்டென ஒரு வார்த்தை 

எங்கள் இருவரின் 

காதிலும் ஒரே நேரத்தில்

விழுந்தது


நாங்கள் அதிர்ச்சியானோம்


அந்த வார்த்தை 

மெல்ல மெல்ல

கீழிறங்கி இதயம் வரை

எட்டிப்பார்த்தது


அது எங்களுக்கு நாங்களே

சொல்லிக்கொள்ளும்

வார்த்தையாகவே

தன்னைக் கற்பிதம் செய்தது


எங்கள் உரையாடல் நின்றது

வாயிலிருந்து வெளிவரவேண்டிய

வார்த்தைகளையும் கேள்விகளையும்

எங்களுக்குள் நாங்கள் 

அனுப்பிக்கொண்டோம்


அது எங்களுக்கான

உரையாடலாய் மாறி

இன்னொரு பரிணாமம்

அடைய முற்பட்டது


நாங்கள்

மீண்டும் ஒருவரையொருவர்

பார்க்கலானோம்

மீண்டும் அந்த வார்த்தைகள் 

எங்கிருந்தோ வந்தன..


"இங்கு யாருக்கும் எதுவும் தெரியாமலில்லை... 

அவரவர் தேவைக்கு ஏற்றார்போலவே அவரவர் பழக்கத்தை வைத்துக்கொள்கிறார்கள்.... அவர்களுக்காக வருத்தப்பட என்ன இருக்கிறது... 

நீ உன் வேலையை செய்தாலே போதும்.. நீ அதற்காகப் பிறந்தவன் தானே அதை மட்டும் செய்.... அவரவர்க்கு தெளிவு  பிறப்பின் அவர்கள் தானாய் வருவார்கள்.. 

வழி அறிவார்கள்.."


அந்த அசரீரி 

எங்கிருந்து வந்ததென

தெரியவில்லை

ஆனால் அது

எங்குச் செல்லவேண்டுமென

தெரிகிறது....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்