பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஒளி புகா இடங்களின் ஒலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒளி புகா இடங்களின் ஒலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஏப்ரல் 21, 2017

அரு.சு.ஜீவானந்தனும் நானும்

எப்போதோ கேள்விப்பட்ட நாவல். ராஜ்கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம். புத்தகத்தின் முகப்பை விளம்பரமொன்றின் பார்த்த போதே மனதில் பதிந்தது.
யார் சொன்ன நாவல் என்ன உள்ளடக்கம் போன்றவை நிழலாக தெரிந்தாலும் புத்தகம் தேடிக்கண்டடைய முடியவில்லை.
சமீபத்தில் எழுத்தாளர் அரு.சு.ஜீவானந்தனை பணி நிமித்தமாக சந்திந்தேன். அவர் குறித்து கொஞ்சம் பகிர வேண்டும்.

இயல்பாகவே அவர் மீது எனக்கு ஈர்ப்பு இருந்தது. அவர் நடவடிக்கையில் ஒரு தோரணை இருக்கும். மிடுக்காக தெரிவார்.
இருவருமே வானொலி (ஆர்.டி.எம்) பணியைச் சார்த்தவர்களாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.

அவர் எனக்கு அறிமுகமானதே சுவாரஷ்யமான ஒன்று.
எனது பதின்ம வயதில் கெடா சுங்கை பட்டாணியில் இருந்தேன். அப்பாவும் எழுத்தாளர் என்பதால் பல புத்தகங்களை அலமாரியில் அடுக்கி வைத்து சிலவற்றை அவ்வபோது கொடுத்து படிக்கச்சொல்வார். இப்போது எழுத்தாளராக நினைப்பவர் தான் எழுதியதையே படிக்க நேரமில்லாமல் இருக்கிறார்கள் என்பது வேறு கதை.

அப்படி அப்பா படிக்கச்சொல்லிக் கொடுத்த ஒரு புத்தகம் 'ஜீவானந்தன் கதைகள்'.
முகப்பில் மீசைக்கார எழுத்தாளரின் வரைந்த முக ஓவியம். சில கதைகளைப் படிக்கையில் தமிழக எழுத்தாளர் எனதான் நினைத்திருந்தேன். முழுமையாக புத்தகத்தை படிக்க முடியாதபடி பரிட்சை வந்தது. சில கதைகளிலேயே புத்தகத்தை அப்பாவின் அலமாரியில் வைத்துவிட்டேன்.

மிக சமீபத்தில்தான் அந்த எழுத்தாளர் அரு.சு.ஜீவானந்தன் என்றும் அவர் மலேசியர் என்றும் வல்லினம் எழுத்தாளர் கலந்துரையாடலில் தெருந்தது. வானொலி பணியில் உள்ளவரென்பதும் அப்போதுதான் தெரிந்துக்கொண்டேன்.
முதலில் அவருடன் பேசுவதில் ஏனோ தயக்கம் இருந்தது, பின்னர் "தயா..." என அவர் குரலில் அழைத்துப்பேசும் மிடுக்கு அவருடன் கொஞ்சம் நெருக்கத்தைக் கொடுத்தது.

சிலரின் முகமோ, குரலோ, குறுஞ்செய்தியோ , பேச்சோ , எனக்கு உள்ளுக்குள் ஒரு உந்துதலைக் கொடுக்கும். அரு.சு.ஜீவானந்தனையும் அந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். அவரின் ஆரம்பகால புகைப்படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்து. இன்றைய இளைஞர்கள் கொடுக்கக்கூட புகைப்பட போஸ்களை அப்போதே கொடுத்திருப்பது எனக்குள் குதூகலத்தைக் கொடுத்தது.

அந்த புகைப்படங்களில் ஒன்று ஷேப்பியரின் வீட்டின் முன்பு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம். வழக்கமாக எழுத்தாளர் வீட்டில் படமெடுப்பவர்கள் அவரது படிக்கும் மேஜை, புத்தக அலமாரி, நாற்காலி போன்றவற்றிக்கு அருகில் நின்று படமெடுப்பார்கள். இவரோ அந்த காலத்திலேயே ஷேஸ்பியரின் கட்டிலின் அருகில் படமெடுத்திருக்கின்றார். இதை குறித்து அவரிடம் கேட்டுவிட்டு இருவரும் வெகுளியாய் சிரித்தோம். எழுத்தாளனை நமக்குள்ளாக சிரிக்க வைத்தால்தான் உண்டு போல என்ற எண்ணம் பகீரென மனதை உலுக்கியது.

அதையடுத்து எங்களின் உரையாடல் எழுத்தாளன் குறித்தும் அவனது குடும்பம் குறித்தும் விரிந்தது.  என் வாசிப்புகளைக் கேட்டுவிட்டு எழுந்துச்சென்றவர் எனக்கு அவரின் பரிசாக 'சிலுவைராஜ் சரித்திரம்' நாவலைக் கொடுத்தார். அவரின் கையொப்பத்தை கேட்டு வாங்கிக்கொண்டேன்.

அன்று தேடிய புத்தகம் இன்று கிடைத்ததில் மகிழ்ச்சி அதோடு அரு.சு.ஜீவானந்தன் கைகளில் கிடைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி. கூடவே அவர் கலக்கிக் கொடுத்த தேநீரும் தனி ருசியாகவே தெரிந்தது. நல்லவேளையாக எனது பையில் நான் எழுதிய , ' ஒளிபுகா இடங்களின் ஒலி' என்ற பத்திகள் தொகுப்பு நூல் இருந்தது. அவரிடம் கொடுத்தேன். தற்போது மீண்டும் அவர் சிறுகதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார் என்பதையும் உடன் பகிர்கின்றேன்.

இருவருக்கும் வயதில் வித்தியாசம் இருந்தாலும் இளமை ததும்ப விடைபெற்றேன் .

ஜனவரி 02, 2016

கலை இலக்கிய விழாவில் ஆற்றிய உரை (2015)

கலை இலக்கிய விழாவில் ஆற்றிய உரை

(வல்லினம் கலை இலக்கிய விழா 7-லில் எனது புத்தகமான ஒளி புகா இடங்களின் ஒலி குறித்து எழுத்தாளர் ஸ்ரீதர் ஆற்றிய உரை)
எழுத்தாளர் ஸ்ரீதர்

இந்தப்பொழுதில் உங்கள் அனைவரையும் சந்திப்பதிலும், உங்களோடு எழுத்து குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதிலும் மகிழ்ச்சி. வானொலி அறிவிப்பாளர், எழுத்தாளர், பேச்சாளர் தயாஜி அவர்கள் எழுதிய ‘ஒளிபுகா இடங்களின் ஒலி’ – கவித்துவமான தலைப்பு – வல்லினம் இணைய இதழில் அவர் தொடர்ந்து எழுதிவந்த பத்திகளில் சிறந்தவற்றைத் தொகுத்துப் புத்தகமாக்கியிருக்கிறார்கள். இது அவருடைய முதல் புத்தகம், பொதுவாக முதல் முயற்சி என்கிறபோது அதன் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் பாராட்டுவதே வழக்கம். என்றாலும் இவர் எழுத்துக்குப் புதியவரல்ல என்பதாலும் விமர்சனங்களை வரவேற்பவர் என்பதாலும் அதுகுறித்து சில விஷயங்கள் பேசலாம் என்று நினைக்கிறேன்.

பத்தி எழுத்துகளை நானும் விரும்பிப் படிப்பவன்தான். காரணம் அது சுருக்கமாக மற்றும் சுவாரசியமாக ஒரு விஷயத்தைச் சொல்கிறது. இன்று பத்திரிகைகளில் கட்டுரை என்று குறிப்பிடப்படுபவற்றில் பெரும்பாலானவை பத்திகள்தான். ஆனால் அதைப் ’பத்தி’ என்று குறிப்பிட மாட்டார்கள். அப்படிச் சொல்வதற்கு ஏன் தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை. கட்டுரையாளர் என்று சொல்லிக் கொள்வதில் இருக்கும் மரியாதை பத்தி எழுத்தாளர் என்று சொல்வதில் இல்லை என்று நினைக்கிறார்களோ என்னவோ. ஆனால் உண்மையில் பத்தி எழுதுவதற்கு அதிகம் உழைப்பு தேவை. ஏனெனில் கட்டுரையை நீங்கள் எத்தனை பக்கம் வேண்டுமானாலும் நீட்டிக்கலாம், ஆனால் பத்திகளுக்கு மிகவும் குறைவான இடமே ஒதுக்கப்படும் என்கிறபோது அதற்குள் விஷயத்தைச் சொல்லிமுடிக்க நீங்கள் அதிகம் யோசிக்கவேண்டிய தேவையுள்ளது. எனவே பத்தி எழுத்துகளின் வீச்சு குறித்து உணர்ந்திருப்பவர்கள், அது என்னவென்று தெரிந்தவர்கள் தம்மைப் பெருமையாகத்தான் சொல்லிக் கொள்வார்கள். ஆங்கிலத்தில் Columnist என்ற சொல்வது இழிவானதல்ல. ஆனால் தமிழ் இலக்கியச்சூழலில் யாரையாவது நீங்கள் பத்தி எழுத்தாளர் என்று சொன்னால்… அதை அவர்கள் விரும்புவதில்லை. எழுத்தாளர், கட்டுரையாளர் என்று திருத்துவார்கள். அல்லது குறைந்தபட்சம் இன்னாருடைய Non-Ffiction writing என்று சொல்லச்சொல்வார்கள். இந்தப் புத்தகத்துக்கான முன்னுரை எழுதும்போது, இந்தப் பத்தியெழுத்து என்பதற்கு இலக்கணம், வரைமுறை என்று ஏதாவது உண்டா என சிறிது ஆராய்ச்சியில் இறங்க வேண்டியதாயிற்று.

அந்தவகையில் இதன் வரலாறு 1920-களில் தொடங்குகிறது. இன்றைக்கு, பத்தி எழுத்து என்ற இந்த எழுத்துவகைதான், ஊடக உலகில் மிக முக்கியமான அரசியல் மற்றும் சமுதாய விஷயங்களைப் பேசுகிற, குரல் கொடுக்கிற எழுத்தாக உலகெங்கும் மாறியுள்ளது. பத்திகள் எழுத்தாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களிலும் பத்திகள் உண்டு என்ற நிலைக்கு முன்னேறியுள்ளது. மேலைநாடுகளில் பத்தி எழுதுபவர்களை Columnist என்பார்கள். அவர்களை
  • Advice columnist
  • Critic
  • Editorial opinion columnist
  • Gossip columnist
  • Humor columnist
  • Food columnist
என்று பிரிப்பது வழக்கம்
Advice columnist – என்பது கேள்வி பதில்களாக சமகால வாழ்வில் உண்டாகும் உளவியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்பவர்கள். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இது பிரசித்தமான ஒரு எழுத்துமுறை. உங்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சினையை நீங்கள் கடிதமாக எழுதினால் தீர்வு சொல்வார்கள்.

Critic – என்பவர்கள் விமர்சகர்கள், கலை, இலக்கியம், கட்டுமானம், உணவு போன்ற துறைகளில் விமர்சிப்பவர்கள்.

Editorial opinion columnist – சமகால அரசியல் சமூக நிகழ்வுகளைப் பற்றிய விமர்சனம் அடங்கிய பத்திரிக்கைத் தலையங்கம் எழுதுபவர்கள்.

Gossip columnist – பிரபலங்களைப் பற்றி, அவர்களது படைப்புகள் குறித்த விமர்சனங்களை பெயர் குறிப்பிடாமல் எழுதுபவர்கள். (கிசுகிசு)

Humor columnist – சமகால நிகழ்வுகளை, அரசியலை, நபர்களை பகடியாக விமர்சிப்பது. இதில் நகைச்சுவை ஒரு முக்கியமான அங்கமாக இருக்கும்.

Food columnist – உணவகங்கள், உணவுமுறைகள் குறித்த எழுத்து.

இதுபோக இன்று பங்குவர்த்தகம் மற்றும் அதன் போக்கு குறித்த பத்திகளும் வெளிவருகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரையில் குஷ்வந்த் சிங், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, குல்தீப் நாயர், ஷோபா டே, கன்வால் பார்தி போன்றவர்கள் பத்தி எழுத்துகளில் உலகளவில் அறியப்படுகிறவர்களாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாமரன், ஞாநிசங்கரன் போன்றவர்களைப் பத்தி எழுத்தாளர்களாகக் குறிப்பிடலாம். சாரு நிவேதிதா, எஸ்.ரா, சுஜாதா போன்ற எழுத்தாளர்களும் கூடப் பத்திகளை எழுதியிருக்கிறார்கள். இன்றைக்கு இணையத்தில் Blog, Facebook போன்றவற்றில் எழுதப்படுகிற எழுத்துகளைக்கூடப் பத்தி எழுத்துகளாகவே அடையாளம் காட்டுகிறார்கள்.

பத்தி என்பதன் விளக்கம் என்னவென்று பார்ப்போமானால்:
An article on a particular subject or by a particular writer that appears regularly in a newspaper or magazine. அதாவது ஒரு குறிப்பிட்ட பொருள் சார்ந்து அல்லது ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரால் செய்தித்தாள் அல்லது பத்திரிகையில் தொடர்ந்து எழுதப்படும் எழுத்து. அந்த வகையில் யோசிக்கும்போது பத்தி எழுத்து என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கணத்துக்குள் இல்லாமல் free form போலத் தோன்றினாலும் ஒரு எளிமையான Formula பத்திகளுக்கு உண்டு. அதை 4S என்று சொல்வார்கள்.
  1. Make it short – அளவு – பொதுவாக ஒரு 1000 வார்த்தைகளுக்குள் சொல்லி முடிக்கவேண்டும். அதற்குக் குறைவாக இருந்தால் இன்னமும் சிறப்பு.
  2. Make it simple – எளிமை – வாசகனின் அறிவுப்பரப்பு குறித்த தெளிவுடன் இருத்தல், அவனுக்குப் புரிகிற மொழியில், புரியக்கூடிய விஷயங்களை மட்டுமே பேசுவது.
  3. Make it sound – தெளிவு – உங்கள் எழுத்து உங்களுடைய தரப்பைத் தெளிவாகப் பேசவேண்டும். உங்களுடைய கருத்துகளை தெளிவாக எடுத்து வையுங்கள்.
  4. Make it sing – தனித்தன்மை – பொருத்தமான சொற்களைப் பயன்படுத்துவது, தனித்தன்மையான வாக்கிய அமைப்புகளை உருவாக்குவது. உங்கள் எழுத்து மற்றவர்களிடமிருந்து தனியாகத் தெரியும்படி அமைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு நல்ல பத்தியை எழுதவும் அடையாளம் காணவும் இக்குறிப்புகள் உதவும். பத்திகள் கட்டுரையைப் போலவே ஒரு ஆரம்பம் அதாவது முன்னுரை மற்றும் உடல்பகுதி, முடிவுரை என்று மூன்று விதமாக பகுக்கக் கூடியதாக இருக்கும். பத்திகளில் தன்னிலை வாக்கியங்கள் குறைவாக இருக்கவேண்டும், அடிக்கடி எழுதப்படக்கூடாது, அப்படி எழுதினால் அது சுயஅனுபவக் கட்டுரைகள் அதாவது Anecdote என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள், அந்த வகைமைக்குள் வந்துவிடும். எனவே சுய அனுபவங்களைத் தொடர்ந்து எழுதுவோமானால் அதைப் பத்திகள் என்று சொல்லக்கூடாது. ஒரு நிகழ்வில் ஏதேனும் ஒரு சார்புநிலையில் இருந்து எழுதப்பட வேண்டும். இவ்வளவுதான் பத்தி என்பதன் இலக்கணம்.

மேலும் பத்தி எழுதுபவர்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்…
  1. பத்தி எழுதுபவர்கள் ஒரு நிகழ்வில் ஏதேனும் தரப்பைத் தேர்ந்தெடுத்து   எழுதுவது அவசியம், மதில்மேல் பூனை நிலை உதவாது.
  2. தம்முடைய தரப்பில் கவனம் செலுத்தவேண்டும்.
  3. அதேசமயம் எதிர்தரப்பினர் வைக்கக்கூடிய வாதங்கள் குறித்தும் யோசிக்க வேண்டும்.
  4. ஒப்பீடுகளோடு கருத்தை விளக்குவது எளிதில் புரியவைக்கும்.
  5. தனி மனிதரையோ, அரசியல் சமூக நிகழ்வுகளையோ அல்லது சூழலையோ   விமர்சிப்பதில் தவறில்லை, தைரியமாக விமர்சிக்கவேண்டும்.
  6. எழுத்தில் எப்போதேனும் சுய அனுபவம் சேர்வதும், உள்ளூர் சமாச்சாரங்களும் பத்தியை சுவாரசியமாக்கும்.
  7. உங்கள் வாதத்திற்கு வலுச்சேர்க்கும் உண்மை நிகழ்வுகளைக் குறிப்பிடுங்கள்.
  8. களத்தில் இறங்கிச் செய்திகளை சேகரித்து அவற்றைத் தெரியப்படுத்துவது நல்ல உத்தி.
  9. உங்கள் கருத்தில் அழுத்தம் திருத்தமாக இருங்கள், மேம்போக்கான கருத்துகளை யாரும் ஒருபோதும் விரும்புவதில்லை.
  10. ஒரு சிக்கலில் வெறுமனே அதைக்குறை சொல்வதை விட்டுவிட்டு அதற்குத் தீர்வு சொல்ல முயலுங்கள். அதுதான் தேவை, குறை சொல்வது என்பது யாராலும் முடியக்கூடியதே.
இப்போது இந்த நூலைப்பற்றி…

உள்ளே இருப்பதைப் பேசுவதற்குமுன், வெளித்தோற்றத்தைப் பற்றிச் சில விஷயங்களைக் குறிப்பிட வேண்டும். வல்லினம் பதிப்பகத்தின் புத்தகங்கள் அனைத்தும் 70-80 பக்கங்கள் மட்டுமே இருப்பது என்னைப் போன்ற கனத்த புத்தகங்களைப் பார்த்தவுடன் ஆயாசமடைபவர்களுக்கு மகிழ்ச்சிதரக்கூடிய விஷயம், சிறந்த கட்டுமானத்தோடு புத்தகங்களை பதிப்பிக்கிறார்கள், முன்னட்டை ஓவியங்கள் ஆகட்டும், பெரிய எழுத்துருவாகட்டும், இது வல்லினத்தின் புத்தகம் என்று தனித்த அடையாளத்துடன் பதிப்பிக்கிறார்கள். அது பாராட்டப்படவேண்டிய விஷயம்தான். வல்லினம் தொடர்ந்து இதேபோன்று தனித்தன்மையுடன் இப்பணியை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மலேசிய இலக்கியத்தில் பத்தி எழுத்துகளை முன்பே ரெ.கார்த்திகேசு எழுதியிருப்பதாக அறிகிறேன், நான் அதை வாசித்ததில்லை. வல்லினம் வெளியீடாக வந்துள்ள, ம.நவீனின் ‘கடக்க முடியாத காலம்’, யோகியின் ‘துடைக்கப்படாத ரத்தக்கறைகள்’ ஆகிய தொகுப்புகளை வாசிக்க முடிந்தது. அடுத்ததாக, தற்போது தயாஜியின் இந்தத் தொகுப்பு.

தயாஜியின் இந்தத் தொகுப்பிற்கான முன்னுரையில் சொன்னது போல இத்தொகுப்பின் மொழி, ஒரு கிராமத்துச் சொலவடை போல எளிமையைத் தன்னுள்ளே வைத்திருக்கிற மொழி. அது அவருடைய இயல்பும் கூட. அவரோடு பழகியவர்களுக்கு அது தெரியும். ஒரு கிராமத்திலிருந்து பெருநகரத்திற்கு வரநேர்ந்த சிறுவன் ஒருவனின் குதூகலமும், ஆச்சரியமும், பயமும் ஒருங்கே கலந்த அந்த உணர்வு அவருடைய மொழியில் தெரியும். கூடவே ஒரு மெல்லிய அங்கதமும் அவருடைய மொழியில் இழையோடியிருப்பது சிறப்பானது.

நகரத்திற்கு வந்து இத்தனை வருடங்களாகியும், இந்நகரத்தோடு பல தளங்களில் தொழிற்பட்டும் தயாஜி தன்னுள் இருக்கும் அச்சிறுவனை இன்னமும் தொலைக்காமல் இருப்பதை அவருடைய அனுபவங்களை அவர் விவரிக்கும்போது தெரிந்து கொள்ளமுடிகிறது. அவருடைய எழுத்துகளை வாசிக்கையில் முதல் ஈர்ப்பு இதுவாகத்தான் இருக்கும். வெள்ளந்தியான மனதுடன் அதாவது வெகுளித்தனமாகக் கேட்கப்படும் எளிமையான கேள்விகளே எப்போதும், பதிலளிக்க முடியாத கேள்விகளாக இருக்கும். ஒரு குழந்தையின் எல்லாக் கேள்விகளுக்கும் உங்களால் நேர்மையாகப் பதிலளித்துவிட முடியாது. தயாஜியின் கேள்விகளும் அத்தகையதுதான்.

ஊரிலிருந்து வந்து உங்களுக்காக உழைக்கிற தமிழர்களை வெறுத்து ஒதுக்குகிறீர்கள், ஆனால் ஊரிலிருக்கிற, உங்களுக்காக எதுவுமே செய்யாத நடிகர்களை மட்டும் உறவென்று கொண்டாடுகிறீர்களே, ஏன்?

ஏன் இன்றைய வீடுகள் முதுபெற்றோர்கள் இல்லாமல் ஆகிவிட்டன? அவ்வீட்டிலுள்ள குழந்தைகளுக்கெல்லாம் யார் கதை சொல்வார்கள்?

விவேகானந்தரைப் பார்த்து வணங்குகின்ற உங்கள் கண்களுக்கு அதனை அடுத்துள்ள ஒரு பிரதேசமும் அங்கு போராடிக்கொண்டிருக்கும் மக்களின் நிலையும் தெரிவதில்லையே ஏன்?

வெட்டி வீசப்படும் முடியைத் திருத்திக் கொள்வதில்கூட சாதி பார்க்கும் நீங்கள் அது இல்லாதது போல் நடிக்கிறீர்களே ஏன்?

இந்தக் கேள்விகளை நமக்குள் கேட்டுக்கொள்வதை மறந்து நாம் ஒரு சௌகரியமான மனநிலையில் இருக்கிறோம். அவர் அதை ஞாபகப்படுத்தும் விதமும் அதிலிருக்கும் நியாயமும் நமக்குச் சற்று எரிச்சலூட்டும் என்றாலும் அவை கேட்கப்படவேண்டிய கேள்விகள்தான். வெளியிலிருந்து நகரங்களுக்குப் பெயர்பவர்கள் வெகுசீக்கிரமே ஒரு மனிதமற்ற விநோத குணத்துக்குள் தங்களைத் திணித்துக் கொள்வதும் – ஒட்டுமொத்த நகரமும் ஒரு கூட்டுமனம் போல ஒரேமாதிரி சிந்திப்பதையும் கவனித்து வியந்திருக்கிறேன். நகரம் மனிதர்களை இப்படி ஆக்குகிறதா? இல்லை மனிதர்கள்தான் நகரத்தை இப்படியாக்கி விட்டார்களா? எனக்குத் தெரியவில்லை. நான் நகரங்களிலிருந்து வீடு திரும்புகையில் நினைத்துக்கொள்வது; நகரம் என்பது ஒரு தனி உயிரி. அவ்விலங்கிடம் சிலரால் இணக்கமாக முடிகிறது, சிலர் வெருண்டு ஒதுங்குகிறார்கள், சிலர் வேறு வழியில்லாமல் அதனோடு உண்டு உறங்குகிறார்கள். தயாஜியும் அப்படியான சிந்தனைகளைத்தான் இக்கட்டுரைகள் மூலமாக முன்வைக்கிறார். ஒரு கிராமத்து இளைஞனான அவரால் இந்நகரத்து நியாங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தயாஜியைப் போன்ற இன்னமும் மனிதம் மிச்சமுள்ள இளைஞர்களாலேயே நகரம் முழுமையாக நரகமாகாமல் இருக்கிறது என்பேன்.

இந்தத் தொகுப்பில் சில பெண்கள் வருகிறார்கள். ‘ஊர்க்காரர்கள்’ கட்டுரையில் வரும் பூக்காரப்பெண், சன்னிலியோன் கட்டுரையில் வரும் குழந்தைகளின் தாய், பாவக்கணக்கு என்ற தலைப்பில் ஒரு திருமணமான ஆணை நம்பி வரும் விடலைப்பெண், வாசனையுள்ள அறைகள் தலைப்பில் வரும் விலைமாது. இவர்களிடத்தில் என்னால் ஒரு ஒற்றுமையைப் பார்க்க முடிந்தது. எல்லோருமே நகரத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது கையறுநிலையில் உள்ளவர்கள். நகரம்தான் அவர்களை மறைமுகமாக ஆட்டுவிக்கிறது. உங்களால் ஒருபோதும் நகரத்தை ஜெயிக்க முடியாது. இதுதான் நகரங்களுக்கான நியாயம்.

தொகுப்பிலுள்ள முக்கியமான கட்டுரையாக ‘ஒளிபுகா இடங்களின் ஒலி,’ ‘விவேகானந்தரும் விலைமாதர்களும்,’ ‘கேலிச்சித்திரமெனும் ஆயுதம்,’ ஆகிய கட்டுரைகளைக் குறிப்பிடலாம். குறிப்பாக விவேகானந்தரும் விலைமாதர்களும் என்கிற அக்கட்டுரையும் அதன் தொடர்ச்சியாக வரும் கடைசிக்கட்டுரையும் ஒரு சிறுகதைக்குண்டான சுவாரசியத்துடன் உள்ளதைக் கவனிக்க முடிகிறது. அவர் சிறுகதை எழுதக்கூடியவர் என்பது அறிந்த ஒன்றே. கல்குதிரையில் அவர் எழுதிய ’இன்னொரு கிளை முளைக்கிறது’ என்ற சிறுகதை நிச்சயமாக மலேசிய இலக்கியத்தில் எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகளில் ஒன்று. அந்தவகையில் அவர் Onetime wonder ஆக இல்லாமல் அதுமாதிரியான சிறுகதைகளைத் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதே என் ஆசை.

சாமி யார்? என்ற கட்டுரையில் சிறு வயதில் அவர் சாமியாராக ஆசைப்பட்ட விஷயத்தைக் குறிப்பிடுகிறார். இன்றைய தேதியில் மரத்தடி முதல் கார்ப்பரேட் வரை சாமியார்களுக்கு இருக்கக்கூடிய செல்வாக்கும் சொல்வாக்கும் நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை. இதை 15-20 வருடங்களுக்கு முன்பே உணர்ந்திருக்கும் தயாஜியிடம் ஏதோவொரு சக்தி இருக்க வாய்ப்பிருக்கிறது என்றே எனக்கும் தோன்றுகிறது. எனக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்று தெரிந்துகொள்ள எனக்கும் ஆசைதான். அதேசமயம் ’வெறும் செருப்பு’ சொல்லும் தத்துவார்த்தநிலை, அதாவது மாளாத சோகத்திலும் ‘மர்லின் மன்றோ’வை நினைக்கும் அந்தத் தத்துவார்த்த மனநிலை எத்தனை பேருக்கு வாய்க்கும் என்ற கேள்வியும் எனக்கு வருகிறது. துறவறம் மேற்கொள்வதற்கான அடிப்படைத்தகுதி அவரிடம் வந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

தொகுப்பில் வெகுசில இடங்களில் தயாஜியின் எளிமையான மொழி ஒரு போதாமையாக இருக்கிறது. அதாவது அவருடைய பலமே பலவீனமாகவும் இருக்கிறது. தொடர்ந்து ஒரேகுரலில் ஒரேவிதமாக விஷயங்களைச் சொல்லிக்கொண்டு போவது Monotonous ஆகத்தோன்றுகிறதுதான். குறிப்பாக பண இலை, சாதி மயிர், கலீல் ஜிப்ரான் போன்ற கட்டுரைகளில். ஆனால் நிச்சயமாக அடுத்த தொகுப்பில் அது மாறுமென்பதும் எனக்குத் தெரியும். ஏனென்றால் தொடர்ந்து வாசித்து, தொடர்ந்து எழுதுகிறார். ஆரோக்கியமான விவாதங்களில் பங்கெடுக்கிறார் என்பதால், விரைவில் அவர் மொழி இன்னமும் வலுவானதாக மாறும். அதற்கு கல்குதிரையில் வந்த சிறுகதையே ஒரு உதாரணம். முன்னம் சொன்னது போல சொலவடை போன்ற அவருடைய எளியமொழி அதைப்போன்றே புரிந்துகொள்ள பல திறப்புகள் உள்ளதாகவும் மாறும்நாள் வெகு தொலைவில் இல்லை.


நன்றி வல்லினம் ஜனவரி 2015
வாசிக்க ; http://vallinam.com.my/version2/?p=2547

வல்லினம் நேர்காணல்

“என்னையடுத்து வேறோரு வாசகனுக்காக சில புத்தகங்களை முன்னமே நான் வாங்கி வைத்திருக்கிறேன்.” – தயாஜி 


 கேள்வி : சிறுகதை, கவிதை, தொடர்கதை என எழுதிக்கொண்டிருந்த நீங்கள், உங்களின் முதல் நூலாகப் பத்திகளின் தொகுப்பை வெளியிடக்காரணம் என்ன?


தயாஜி : மிகச்சரியாக நான் சொல்லவந்ததை எந்த வடிவத்தில் சொல்ல முடியுமோ, என் சக வாசகனுடன் என்னால் சுலபமாக பேச முடியுமோ அந்த வடிவில்தான் என் முதல் நூல் வரவேண்டும் என நினைக்கிறேன். பத்திகள் மூலம் என்னை அடையாளம் காட்ட நான் ஆசைப்படுகிறேன். நம் நாட்டு தமிழ்ச்சூழலில் பத்திகள் எழுதுவது குறைவு. முதன்முதலாக, பத்திகள் தொகுப்பு நூலாக வந்தது ம.நவீன் எழுதிய ‘கடக்க முடியாத காலம்’, அதனைத் தொடர்ந்து யோகியின் ‘துடைக்கப்படாத ரத்தக்கறைகள்’ தொகுப்பைச் சொல்லலாம்.

கேள்வி :  இந்நூல் குறித்து கொஞ்சம் கூறுங்கள்.

தயாஜி : தொடர்ந்து ஐந்தாண்டுகள் வல்லினம் இணைய இதழில் எழுதிய எனது பத்திகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். ஒருவேளை புத்தகத்தில் உள்ளதை இணையத்திலேயே படித்துக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டால், அது சாத்தியமில்லை. ஐந்தாண்டுகளில் எழுதிய 60 பத்திகளுக்குள் தேர்ந்தெடுத்ததைச் செறிவு செய்த பிறகே புத்தகமாக்குகிறோம். சில சமயம் நமது கருத்து காலத்தைத் தாண்டி நிற்பதில்லை. எழுதப்பட்ட காலத்தில் சிலாகிக்கப்பட்ட பத்திகள் இப்போது நீர்த்துப் போயுள்ளதைப் பார்க்கையில் அப்போதைக்கான மிகை உணர்ச்சி மட்டுமே அதில் இருந்தததாக உணர்கிறேன். இது தோல்வி என்றாலும் அதனைப் புரிந்து ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்தான் இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. தேர்ந்தெடுந்த பத்திகளைச் செம்மைப்படுத்த வல்லினம் ஆசிரியர் ம.நவீன் பெரிதும் உதவினார். எழுதுகிறவருக்கு இணையாக அதனை செறிவாக்குகிறவர் உழைக்க வேண்டியுள்ளதை உணர்ந்தேன். ஒரு கருத்தை இன்னும் எவ்வளவு துல்லியமாக்கலாம்; எதனை இக்கருத்துடன் இணைத்தால் எளிமையாகும் என்பது போன்ற விபரங்களை, பத்திகளைச் செறிவாக்கும் போது கற்றுக்கொண்டேன்.

மனிதர்களை எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஒவ்வொரு மனிதரிடம் பழகுவது எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும். என்னைப் பொருத்தவரை, என்னுடைய உலகம் என் வீட்டு வாசலைத் தாண்டியே இருக்கிறது. அந்த இயல்புடையவன் என்பதால்தான் நான் கலையைத் தேர்ந்தெடுக்கும்படி ஆனது. என் வயது நண்பர்களைவிட, என் வயதுக்கு மீறிய நண்பர்கள்தான் எனது பட்டியலில் அதிகம். பி.எம்.டபள்யு-க்களில் போகின்றவர்களைவிட சாலையோரத்தில் சோர்ந்துபோய் நடந்து போகிறவர்கள்தான் எனக்கு நெருக்கமானவர்களாகத் தெரிந்தார்கள். என்னால் மிகவும் சகஜமாக அவர்களுடன் பழக முடிந்தது. அவர்களுக்காகப் பேசுவதும் அவர்களிடம் பேசுவதும்தான் கலையின் வெளிப்பாடாக இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

ஐந்தாண்டுகள் மின்னல் பண்பலையில் அறிவிப்பாளராகப் பணியாற்றினேன். அப்போது எனது தொடர்புகள் இன்னும்  அதிகமானது. போதைப் பித்தர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள், சிவப்பு விளக்குப் பெண்கள், கொலைக் குற்றவாளிகள் என சமூகக் கட்டமைப்பால் ஒதுக்கப்பட்டவர்களுடன் உரையாடும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டேன். அவர்களின் வாழ்வு குறித்துப் பதிவு செய்யவே வானொலியில் ’கண்ணாடித்துண்டுகள்’ என்ற நிகழ்ச்சியைத் தயாரித்து ஒலிபரப்பினேன். அதற்காக என்மீது காவல்துறையில் புகார்கூடக் கொடுத்தார்கள். இருப்பினும் சரியான நோக்கமும் தெளிவான விளக்கமும் இருந்ததாலும், வானொலி நிர்வாகத்தின் துணையிருந்ததாலும் அதனைச் சமாளிக்க முடிந்தது. அரசாங்க வானொலிக்கு என சில வரையறைகளும் விதிமுறைகளும் உண்டு. அதற்கேற்றவாறு சிலவற்றைக் குறைத்தும் சிலவற்றைச் சொல்லாமலும் விட்டோம். பின்னர் அதனை எழுதும் சூழலை உருவாக்கி மீண்டும் அந்த அனுபவத்தைப் பெற்று எழுதிய பத்திகள் இந்நூலில் உள்ளன.

நாம் வாழும் சமூகத்தில் இருட்டான பகுதிகளைப் பார்க்காமல் கண்களை மூடிக்கொள்வது போல பாசாங்கு செய்வதால் நிலமை ஒரு போதும் மாறப்போவதில்லை. அதற்கான காரணத்தைக் கண்டறிவதும் அதனோடு விவாதிப்பதும் அதைப் பதிவு செய்வதுமே எழுத்தாளனின் பணி.




கேள்வி :  ஓர் எழுத்தாளராக உங்களுக்கு உவப்பான வடிவம் எது?

தயாஜி : எனக்கு உவப்பான வடிவம் எதுவென்று என்னால் கூறிவிட முடியாது. ஏனெனில் சிறுகதை என நினைத்து எழுத ஆரம்பித்து கவிதையில் முடிந்துள்ளன. கவிதை என நினைத்து ஆரம்பித்தவை சிறுகதையில் முடிந்துள்ளன. நகைச்சுவைத் துணுக்காக நினைத்தவை பத்திகளாக வளர்ந்துள்ளன. இப்படி, வடிவங்களை முன்னமே முடிவு செய்து எழுதும் வழக்கத்தின் மீது எனக்கு நூறு சதவிகிதம் நம்பிக்கை இல்லை. ஏதோ ஒன்றுதான் முன்முடிவுக்கு ஏற்றார்போல அமைகிறது.

கேள்வி : துடிப்பான இளம் எழுத்தாளர்கள் பலர் வல்லினத்தில் இணைந்து பயணிக்கின்றனர். நீங்கள் வல்லினத்துடன் இணைந்து செயல்பட காரணம் என்ன?


தயாஜி : இளம் எழுத்தாளர் பழம் எழுத்தாளர் என்கிற பேதமெல்லாம் வல்லினத்தில் இல்லை. இது ஓர் இயக்கமோ நிறுவனமோ அல்ல; ஒரு குழு அவ்வளவே. அதிலும் வயதை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. அ.பாண்டியன், சந்துரு, சரவண தீர்த்தா, ஸ்ரீதர்ரங்கராஜ் போன்றவர்கள் நடுத்தர வயதுள்ளவர்கள் என்றாலும் அவர்களின் சிந்தனையாற்றல் தற்போதைய இளம் சமூகத்தைவிட துடிப்பாக இருக்கிறது. எழுதுகிறவர்கள் மட்டுமின்றி, மாற்றுச்சிந்தனையின் தேவை உணர்ந்தவர்கள் அனைவருமே வல்லினத்தில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். சமீபத்தில் எண்பது வயதை நெருங்கும் ஒருவர் என்னை அழைத்திருந்தார். அம்மாத வல்லின இணையப் பக்கத்தில் வந்திருக்கும் கட்டுரைகள் நன்றாக இருப்பதைக் குறித்துப் பேசினார். தொடர்ந்து, வல்லினம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்குத் தவறாது கலந்துகொள்ளப் போவதாகவும் கூறினார். வல்லினம் வயது பேதங்களுக்கு அப்பால் சென்று நாட்களாகிவிட்டது.
ூலை பெற்றுக்கொள்கிறார் எழத்ாளர் ஸ்ரீதர்

என்னிடம் சில கேள்விகளும் சில குழப்பங்களும் இருக்கின்றன. நான் வாழ்ந்துக் கொண்டிருக்கும் சமூகம் எனக்கு ஒரு விதத்தில் அச்சமூட்டுவதாக இருக்கிறது. அதிகாரத்தின் கால்கள் எப்போது வேண்டுமானாலும் சாமான்யனின் தலையை அழுத்தலாம். ஊடகங்கள் நினைத்தால், ஒன்றை சாகும்வரை நம்பவைக்கலாம். பத்திரிகைகள் நடப்புச் சூழலை மறைத்துவிடலாம். இப்படி என்னை சுற்றிலும் நடந்துக் கொண்டிருக்கும் குழப்பங்களுக்குக் கேட்கவேண்டிய கேள்விகளிலிருந்து என் குரல் ஒரு எல்லையைத் தாண்டி செல்லவில்லை. காரணம் என்னமோ எளிமையானதுதான். ஆடையற்றவன் ஊரில் ஆடையணிந்தவன் பைத்தியம். அப்படி, ஒற்றை மனிதனாகக் குரலெழுப்பி, விரக்திக்குட்பட்டு ஊமையானவர்களின் எண்ணிக்கை எனக்கும் நன்றாகவே தெரியும். ‘அட போப்பா நம்ம சொன்னா எவன் கேட்கறான், பட்டாதான் திருந்துவானுங்க நம்ம செத்த பிறகுதான் அன்னிக்கே சொன்னாரேன்னு வருந்துவானுங்க..’ இப்படி நானும் விரக்தியிலேயே மடிந்து போக விரும்பவில்லை. என்னுடைய கேள்விகளுக்கு அறிவு சார்ந்த பதில்கள் போதவில்லை. என் குழப்பங்களுக்கு என் படிப்பறிவில் இருந்தும் என் அனுபவங்களில் இருந்தும் தெளிவு சரியாக அமையவில்லை. குழு என்பதன் பலம் அப்போதுதான் புரிந்தது. வெவ்வேறு துறை சார்த்தவர்கள். வெவ்வேறு அனுபவங்கள் கொண்டவர்கள். அவர்களின் வெவ்வேறான பார்வை. ஆனாலும் அவர்கள் நேர்மையும் மாற்றுசிந்தனையும் என்னை அவர்களுடன் இணைக்க வழிவகுத்தது.

கேள்வி : உங்கள் நூல் தமிழகப் பதிப்பகத்துடன் இணைந்து உருவாகியுள்ளதாக அறிகிறோம். ஏன் இந்த முயற்சி?

தயாஜி : இதுபோன்ற முயற்சிகள் முக்கியமானவை. எத்தனை நாள்தான் தமிழகத்தில் இருந்து இலக்கியங்களை இறக்குமதி மட்டும் செய்வது. ஏற்றுமதிகளைச் செய்ய வேண்டாமா? நம் நாட்டிலும் கலைஞர்கள் இருக்கிறார்கள். இங்கும் படைப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதனை நாம்தான் வெளிக்கொணர வேண்டும். ஒரு சமயத்தில் அம்மாவின் கைபிடித்து நடந்த நாம், பின் நமக்கான நடையைக் கண்டறிந்து  நடந்துகாட்டுவது போலத்தான். ஒரு சமயத்தில் நமக்கு தமிழகத்தில் இருந்து இறக்குமதிகள் தேவையாக இருந்தன. இப்போது நாம் நமக்கான நடையைக் கற்றுக்கொண்டு விட்டோம். நாம் நடந்து காட்டவேண்டும். உடனே தமிழகத்தையோ அங்கிருக்கும் படைப்பாளர்களையோ குறைத்துப் பேசுவதாகப் பொருள் கொள்ளக்கூடாது. தமிழகப் பதிப்பகத்துடன் இணைந்து, புத்தகம் வெளியிடப்படுவதால், தமிழகத்தில் இருக்கும் வாசகர்களுக்கும் நமது புத்தகம் சென்று சேர்வதற்கான சூழல் அமைகிறது. இப்பகிர்வு இப்போது அவசியம் எனக் கருதுகிறேன். இந்த இணைவால் வல்லினம் பதிப்பக நூல்கள் அங்கு நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளிலும் இடம்பெறும். பரந்த வாசகப் பரப்பை அடைவதற்கான வல்லினத்தின் முயற்சி இது.


கேள்வி : தொடர்ந்து எவ்வகையான ஆக்கங்களைத் தர ஆர்வம் கொண்டுள்ளீர்கள்?

தயாஜி : புத்தகம் வெளியீடு செய்வது எனது நீண்ட நாளைய கனவு. காந்தி சொன்னதாகச் சொல்லுவார்கள். இவ்வுலகில் நிலைத்து நிற்க வேண்டுமானால், மூன்று காரியங்களைச் செய்ய வேண்டும். ஒன்று, வீடு கட்டிவைப்பது. இரண்டு, வாரிசுகளை உருவாக்கிவிடுவது. மூன்று, புத்தகம் எழுதுவது. முதல் இரண்டின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.  அவ்வப்போது செத்துவிடுவோமா என்ற பயம் இருந்தாலும், நான் சாகாமல் இருக்கவே விரும்புகிறேன். அதற்கும் சேர்த்துதான் எழுதுகிறேன். என்னிடம் சொல்லவேண்டிய கதைகள் ஏராளமாக உள்ளன. இம்முறை நாவல் ஒன்றை முயற்சிக்கலாம் என ஆசை உள்ளது. அதனுடன் இங்குள்ள திரைப்படங்களுக்குக் கதை வசனம், பாடல் எழுதுவதும் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கிறது.

கேள்வி : இன்று உங்கள் வாசிப்பு எவ்வகையில் உள்ளது. அதன் பரிணாமம் குறித்துக் கொஞ்சம் சொல்லுங்கள்?

தயாஜி : ஆச்சர்யமாக உள்ளது. எப்படியெல்லாம் கதைகள் சொல்லப்படுகின்றன. எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள். எதையெல்லாம் சகித்து, சக மனிதனால் மிதிபட்டு வாழவேண்டியுள்ளது என்பதை தெரிந்துக்கொள்ள முதல் படியாக இருப்பது வாசிப்புதான். தொடக்கத்தில் என் தனிமையின் சுவாரஷ்யத்துக்காகப் படிக்கத்தொடங்கியவன் இன்று என் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகவே வாசிப்பை ஏற்றுக்கொண்டேன். நல்ல புத்தகமாக படுவதை உடனே வாங்கி வைத்துவிடுவது பழக்கமாகிவிட்டது. என்னால் வாசித்து முடிக்கமுடியாமல் போகலாம். என்னையடுத்து வேறோரு வாசகனுக்காகவாவது சில புத்தகங்களை முன்னமே நான் வாங்கி வைத்திருக்கிறேன்.

கேள்வி : அறிவிப்பாளர் தயாஜி; எழுத்தாளர் தயாஜி யார் உங்களுக்குப் பிடித்தவர்?

யாழின் இரண்டாவது வெளியீடு 2016
தயாஜி : இன்னும் நினைவு இருக்கிறது. ஒருமுறை இப்படி எழுதியிருந்தேன். ’அறிவிப்பு பணத்திற்கு; எழுத்து மனத்திற்கு’; உடனே விசாரிக்கப்பட்டேன். தொழில் என்பது வேறு. விருப்பம் என்பது வேறு. அறிவிப்புத் துறை எனக்குப் பிடித்தமான துறையாக இருந்தாலும் அப்போதைக்கு எனக்கு வாழ்வாதாரமாக இருந்தது அறிவிப்பு ஒன்றுதான். அதன் மூலம்தான் வருவாய் வந்தது. இப்படி நினைத்துப் பார்க்கிறேன். அறிவிப்பாளர் தயாஜியை எல்லோருக்கும் பிடிக்கும். எழுத்தாளர் தயாஜியை பலருக்கும் பிடிப்பதில்லை. அறிவிப்பாளர் சமூகம் விரும்புவதைப் பேசுபவர். எழுத்தாளர் தான் விரும்புவதைப் பேசுபவர்.

கேள்வி : செயல்பாட்டு ரீதியில் உங்கள் அடுத்தடுத்த முயற்சிகள் என்ன?
 

யாழின் மல் வெளியு 2015

 
தயாஜி :’யாழ்’ பதிப்பகத்தின் மூலம் மாணவ சமூகத்துடனான தொடர்பை ஏற்படுத்தியுள்ளோம். இப்போதைய சூழலில், தமிழ்ப்பள்ளி மாணவர்களிடம் இருந்துதான் எதையும் ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அவர்கள்தான் நாளை வாசகர்களாக எழுத்தாளர்களாக சிந்தனையாளர்களாக இச்சமூகத்தில் வெளிவரப்போகிறார்கள். அவர்களை கவனிக்கவேண்டும். அவர்களுடன் உரையாட வேண்டும், அவர்களைத் தொடர்ந்து தமிழ்ச்சூழலைப் புரிந்துக்கொள்ள வைக்கவேண்டும். வல்லினத்தின் இணை நிறுவனமாக ‘யாழ் பதிப்பகம்’ தொடங்கப்பட்டுள்ளது. அது வல்லினத்தின், மாணவர்களுக்கான முயற்சி.. அதில் நானும் ஒருவனாக இணைந்து என் பங்குக்குச் செய்யவேண்டியதை செய்வதையே எனது செயல்பாடாக நினைக்கிறேன். மிக விரைவில் அதன் புதிய திட்டங்களை அறிவிப்பேன்.

ன்றி 2016 ஜி வல்லினம் 

http://vallinam.com.my/version2/?p=2479

 

 

டிசம்பர் 20, 2015

வாசனைபூசிய வாழ்வு



மொழிப்பெயர்ப்பாளர் எழுத்தாளர் ஸ்ரீதர் ரங்கராஜன்


   இந்தக் கட்டுரைத்தொகுப்பில் என்னை மட்டுமன்றி எவரையும் முதலில் ஈர்க்கக் கூடியது அதன் பாசாங்கற்ற குரல்தான். வலிந்து சொற்களைத் தேடி அலங்காரமாக எந்த விஷயத்தையும் சொல்வதில்லை. தனக்கு நடந்த சம்பவங்களை, தனக்குள் எழுந்த கேள்விகளை, நிகழ்ந்த புரிதல்களை அதிகம் மெனக்கெடாமல் செய்தபதிவு இக்கட்டுரைகள். குறிப்பாக, ‘ஊர்க்காரர்கள்’, ‘ஒளிபுகா இடங்களின் ஒலி’, ‘பொம்மைகளின் வன்முறை’ போன்ற கட்டுரைகளைக் குறிப்பிடலாம். ‘பாட்டியில்லா வீடுகள்’ மலேசிய மண்ணுக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கும் பொருந்தக்கூடியது. தயாஜியின் கேள்விகள் எளிமையானவை, இயல்பானவை, உள்ளார்ந்த அக்கறையிலிருந்து எழுபவை. ஆனாலும் சிலசமயங்களில் எளிமை, சொல்லவந்த விஷயத்துக்கு ஈடுகொடுக்கவில்லை என்பதும் உண்மை, உதாரணமாக சாதிமயிர், விவேகானந்தரும் விலைமாதர்களும் போன்ற கட்டுரைகளைக் குறிப்பிடலாம். 

  சிலவிஷயங்களைப் பேசும்போது மொழியில் வேகமும் அழுத்தமும் தேவைப்படுகிறது என்பதை தயாஜி கவனிக்கவேண்டும்.
ஒரு சமூகத்தின் நம்பிக்கைகளை, அது நடித்துக் கொண்டிருக்கின்ற இடங்களை,
புத்தகத்தின் பின் அட்டை
வாசனைபூசி மறைத்து வைத்துள்ள விஷயங்களை கேள்விக்கு உட்படுத்துவதே இலக்கியத்தின் வேலை. தயாஜி அப்படிப்பட்ட கேள்விகளைத்தான் முன்வைக்கிறார். சமூகம் என்கிற இக்கட்டமைப்புக்குள் இருந்துகொண்டு அதைக் கேள்விக்குட்படுத்துவது மட்டுமல்லாது தன்னையும் சுயவிசாரணை செய்துகொள்கிற எழுத்துகளே உண்மையில் ‘படைப்பு’ எனப்படும். அதுதான் ஒரு எழுத்தாளனின் எழுத்து நேர்மைக்கான சாட்சியமும் கூட. எழுத்தாளன் என்பவன் பீடத்தில் அமர்ந்து பரிபாலன நோக்கோடு ஆசிர்வதிப்பவனாகவோ அல்லது சமூகம் ’இதுதான் ஒழுங்கு’ என்று சொல்வதை ஏற்று, மந்தையாடு போலப் பின்சென்று, யாருக்கும் வலிக்காமல் எழுதி, கால் கழுவியதற்காகக் கழுத்தில் இடப்படும் மாலையைப் பெருமையாகப் பல்லிளித்துத் தாங்கியபடி இருப்பவனாகவோ இருக்க முடியாது.
எனது பெற்றோர் நூலை வெளியிட ஸ்ரீதர் பெற்றுக்கொள்கிறார்
   ஒரு நல்ல எழுத்தாளன் உங்கள் மனசாட்சியைப் போல, நீங்கள் அவனிடமிருந்து தப்பிக்கவே விரும்புவீர்கள். நல்ல எழுத்தாளனின் படைப்பு (மேற்சொன்னது போன்ற)  ஒரு சமூகத்துக்கு எரிச்சலையும் கோபத்தையும் கொடுக்கும். ஆடைகழற்றிப் பொதுவில் நிற்கவைத்த பதைப்பை ஏற்படுத்தும். அவன் இருப்பும் கேள்விகளும் உங்களின் பண்பட்ட, நாகரீகமான, வேறுபாடுகளற்ற, இணக்கமான, பரிபூரணமான, தேவைகளற்ற சமூகம் என்ற ஆழ்ந்த, சுகமான நித்திரைக் கனவுகளை உங்களிடமிருந்து பிடுங்கிக்கொள்ளும். அது எவ்வளவு கொடூரமானது என்று எனக்குத் தெரியும். உங்களின் ஆழ்மனதிலிருந்து அவன்மீதான வெறுப்பு அவ்வளவு கசப்போடு வழியும், இன்னும் ஒருவீச்சு, பலமான, முடித்துவிடக் கூடியதான வீச்சு, நீங்கள் அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி கைகளைப் பின்னுக்கு மறைத்து, முகத்தில் புன்னகையோடு விரும்பிக் காத்திருப்பீர்கள். 

நூல்

    அதையும் என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. சொல்லப்போனால் அது அவ்வளவு சரியானதும் கூட. அது கிடைத்தபின் நீங்கள் மீண்டும், அவன் கேள்விகளால் எழுந்த இப்போது உங்களை அரித்துக் கொண்டிருக்கும் இக்குற்றவுணர்வின்றி, பல்லிளித்தபடி மாலையணிந்து, வாசனைபூசி மறைத்துக்கொண்டு உங்கள் ஆழ்ந்த, நம்பிக்கையான கனவுகளைக் காணத் தொடங்கலாம். அப்போதுதான் உங்கள் உலகம் சமநிலையில் இயங்க ஆரம்பிக்கும்.

தயாஜி,
நூல் குறித்து பேசும் போது
இது நல்லதொரு ஆரம்பம், வாழ்த்துகள் உங்களுக்கு. இன்னுமின்னும் உங்களை மெருகேற்றிக் கொள்ளுங்கள், வாசியுங்கள், கேள்வி கேளுங்கள், எழுதுங்கள் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல…
உங்களுக்கும் வல்லினத்திற்கும் என் அன்பு.

(1.11.2015-ல் வல்லினம் பதிப்பகம்  வெளியீடு செய்த ‘ஒளி புகா இடங்களின் ஒலி’ என்ற எனது முதல் நூலுக்கு நண்பர், மொழிப்பெயர்ப்பாளர், எழுத்தாளர் ஸ்ரீதர் ரங்கராஜன் கொடுத்த நூல் முன்னுரை)


வல்லினத்தில் வாசிக்க இங்கு சொடுக்கவும்
http://vallinam.com.my/version2/?p=2401

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்