பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

ஜூலை 05, 2026

- வரப்புயர .... -


வாசிப்பில்,
'அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்' கட்டுரைத் தொகுப்பு....
*******
இன்று வேலையில் கொஞ்சம் பாரம் அதிகமாகிவிட்டது. பல பெட்டிகளில் உள்ள பொருட்களை ஒரே ஆளாய் வண்டியில் ஏற்ற வேண்டியிருந்தது.

அது போதாதென்று கஸ்டமரின் வீட்டை தேடி கண்டுபிடிக்க படாத பாடு படவேண்டியதாய்ப் போயிற்று.

அவர்கள் சரியான முகவரியைக் கொடுக்கவில்லை. அதோடு அவர்கள் வெளிநாட்டினர். அவர்கள் ஒரு இடத்தில் இருக்க அவகளுக்கு நேர் எதிரான இடத்தின் முகவரியை அனுப்பியிருந்தனர். எப்படியோ பேசி அவர்களையும் அவர்களின் இடத்தையும் கண்டுபிடித்து பொருட்களை ஒப்படைத்துவிட்டேன்.

அடுத்த ஆடருக்கு ஆர்வமாய் காத்திருந்த சமயம்;

"நீ மட்டுமா வேலை செய்கிறாய் இதோ நானும் வந்துவிட்டேன் என் வேலையைச் செய்ய..." என்று வந்து பெய்த மழையில் என் வேலை அப்படியே நின்றது.

இன்றைய 'தார்கெட்' பாதிகூட அதன் இலக்கை அடையவில்லை.
சோர்ந்து போய் வீடு திரும்பினேன்.
மனைவி சூடா தேநீரை கலக்கி கொடுத்தார்.

சாப்பிட்டுவிட்டு, நேநீரைக் குடித்து கொண்டே என் அறைக்குள் நுழைந்தேன்.

மனதில் ஏதோ ஒரு சோகம் தொற்றிக்கொண்டது. அதை உற்சகப்படுத்த வேண்டுமே. உடனே புத்தக அலமாரியில் என் கைக்கு எட்டிய இடத்தில் இருந்த புத்தகங்களில் ஒவ்வொன்றாக எடுத்து பார்த்தேன்.

என் உலகத்திற்கு என்ன ஆனது ஏன் இப்படியானது என யோசித்தபடி ஒரு புத்தகத்தை எடுத்தேன்.
'அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்' புத்தகம் கிடைத்தது.

அ.முத்துலிங்கம் படைப்புலகம் குறித்து 14 எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சுப்ரபாரதிமணியன் தொகுத்திருந்தார். நற்றிணை பதிப்பகம் வெளியிட்டிருந்தார்கள்.

என் வாசிப்பின் ஆரம்பத்தில் சுஜாதாவிற்கு பின் அதே சுவாரஸ்யத்தோடு வாசித்த படைப்புகள் அ.முத்துலிங்கத்தின் படைப்புகள்தான். அவரின் எழுத்துகள் அவ்வளவு பிடிக்கும் எனக்கு.

கதைக்கும் கட்டுரைக்கும் இடையில் அவர் எதையும் எடுத்து சொல்லும் விதம் அபாரமாக இருக்கும். வாசித்து முடிக்கும் வரை அது எந்த வடிவத்தில் சொல்லப்பட்டிருக்கும் என யூகிக்க முடியாது.

இத்தனை அனுபங்கள் அவருக்கு கிடைத்திருக்கிறதே என்கிற ஆச்சர்யப்படுவதைவிட, ஒவ்வொன்றையும் எழுத்துகளாக எழுத்து வைக்கின்றாரே என்கிற பிரமிப்பு இருக்கவே செய்கிறது.

நான் என் அன்றாடங்களை பதிவுகளாக எழுதுவதற்கு அவருமே ஒரு காரணம்தான்.

அவரின் கதைகள் எப்போதுமே வாசிக்க ஏற்றவை. அது வாசகனுக்கான செய்தியைச் சொல்லுபவை. அழுவதற்கு முன் நம்மை அறியாமலேயே நம்மை சிரிக்க வைப்பார். அழு கண்ணீர் வெளியில் வந்து விழுவதற்கு முன்னே நம்மை சிரிக்க வைப்பார்.


இன்று வேலையில் எனக்கு கிடைத்த அனுபவத்தில் இருந்து கற்க வேண்டிய பாடத்தை என்றோ ஒருநாள் அவர் கதையில் வாசித்திருந்தேன். அவரின் முழு தொகுப்பில் தேடலானேன்.

ஆரம்பத்தில் வாங்கிய அவரது தனித்தனி சிறுகதைத் தொகுப்புகளை நண்பர்களுக்கு கொடுத்து விட்டு முழு தொகுப்பையும் (சிறுகதைகள்)/வாங்கியிருந்தேன். அதில் நான் வாசித்து எழுதிய குறிப்புகள் இருக்காது. பழைய தனித்தனி தொகுப்புகளில்தான் குறிப்புகள் இருக்கும்.

சரி வாசித்தது மனதில்தானே இருக்கும் என்ற பேராசையில் முழு தொகுப்பில் ஒவ்வொரு கதையாக ஒரு பார்வை பார்த்தேன்.

கிடைத்தது. அந்தச் சிறுகதையின் தலைப்பு 'ஒரு சாதம்'.

இன்று மீண்டும் வாசிக்கையில் முன்னமே வாசித்த அனுபவத்தைத் தள்ளி வைத்தே வாசிக்க முயன்றேன். தலைப்பே வித்தியாசமாக இருப்பதாக உணர்த்திய முதல் வாசிப்பின் மனநிலையை மீண்டும் உருவாக்கி கொண்டேன்.

சிறுகதையில் ஓரிடத்தில் அ.முத்துலிங்கம் சொல்வார், அரசனை வாழ்த்த நினைத்த ஔவை இப்படி சொல்லுவார்;

வரப்புயர, நீர் உயரும்
நீர் உயர, நெல் உயரும்
நெல் உயர, குட் உயரும்
குடி உயர, கோல் உயரும்
கோல் உயர, கோன் உயர்வான்'

'ஒருதுளி காரியம் எப்படிப் பிரமாண்டமான தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதற்கு இது சான்று.

'கேயாஸ் தியரிக்கும்' இதற்குமான தொடர்பையும் எழுத்தாளர் இணைத்து இலகுவாக புரியும்படி கதையில் சொல்லியிருப்பார்.

இப்போது மனதில் பளீர் என படுகிறது. சமீப காலமாக 'கோன் உயரவேண்டும்' என்றே அதிகம் சிந்தித்திருக்கிறேன். அதாவது விளைவுகளைப் பற்றியே சிந்தித்திருக்கிறேன்.

ஆனால் எல்லாவற்றுக்கும் 'வரப்புயர' வேண்டுமே என்கிற பளீர்தான் அது. மனம் இப்போது இன்னொரு கோணத்தில் சிந்திக்கிறது.

'ஒரு சாதம்' என்கிற கதையில் அதன் தலைப்பு தரும் அதிர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் உழைக்க தயாராய் இருக்கும் மனிதனுக்கான இடம் உயர்ந்து கொண்டே போகும் என்கிற நம்பிக்கையையும் கொடுக்கும் சுவாரஸ்யமான கதைதான்.

இந்தச் சனிக்கிழமை இரவை நீளமாக்க கையில் எடுத்த அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள் தொகுப்பை எடுத்திருக்கிறேன். மொத்தம் 14 எழுத்தாளர்கள் அ.முத்துலிங்கத்தின் படைப்புலகம் குறித்து எழுதிய கட்டுரைத் தொகுப்பு என குறைவாகச் சொல்லிவிட்டேன்.

மொத்தம் 15 கட்டுரைகள் உள்ளது. புத்தகத்தில் இல்லாத அந்தப் பதினைந்தாவது கட்டுரையைத்தான் நீங்கள் இப்போது வாசித்து முடித்தீர்கள். என்னவொன்று இது அவரது படைப்புலகில் இருந்து என்னைப் பார்க்கவில்லை. என்னுலகில் இருந்து அவரைப் பார்த்திருக்கிறது.


ஜூலை 02, 2026

2026-ம் ஆண்டில் நான்கில் இரண்டு (4/2)


2026-ம் ஆண்டில் நான்கில் இரண்டு (4/2)

ஒவ்வொரு மூன்று மாதங்களாக நான் வாசிக்கும் புத்தகங்களைப் பிரித்து கொள்கிறேன்; அல்லது இப்படி சொல்ல விரும்புகிறேன் நான் என் புத்தக வாசிப்பை ஒவ்வொரு மூன்று மாதங்களாக பிரித்து கொள்கிறேன். இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை  16 புத்தகங்களை வாசித்திருந்தேன். 

எனது வலைப்பூவிலும் எனது சமூக ஊடகங்களிலும் அதனை பகிர்ந்திருந்தேன். 

அப்படி பகுதி பகுதியாக புத்தகங்களை பிரித்து வாசிப்பது ஒரு வகையில் நமக்கு உதவியாகத்தான் இருக்கின்றது. அதோடு மாதம் ஒரு நாவல் வாசிப்பு திட்டத்திலும் மாதம் ஒரு நாவல் என  வாசித்து வருகின்றேன். ஒவ்வொரு முன்று மாதத்திற்கு வாசிக்க வேண்டிய புத்தகங்களைத் தனியே எடுத்து ஒரு பெட்டியில் வைத்து என் வாசிப்பு மேஜைக்கு அருகில் வைத்து கொள்வேன். புத்தகத்தை வாசித்து முடித்து அடுத்த புத்தகமாக எதை வாசிக்கலாம் என்று புத்தக அலமாரி முழுக்க தேடும் மன உளைச்சலைத் தவிர்த்துவிடுகிறேன். 

ஆனாலும் பெட்டியில் இருக்1கும் அனைத்து புத்தகங்களையும் திட்டமிட்டபடி வாசித்து முடிக்க முடியாமல் அவ் 21வப்போது சில புது புத்தகங்கள் நுழைந்து தங்களை வாசிக்க வைத்துவிடுகின்றன. அது அப்படித்தான் நடக்கும். வாசிக்க வேண்டும் என்கிற முடிவையும் அதற்கான நேரத்தை உருவாக்கினால் போதும் வாசிக்க வேண்டியவைத் தானாய் வந்து நம் காதுகளைத் தட்டும். அப்படி என் காதுகளைத் தட்டிய புத்தகங்களை எப்படியாவது வாங்கிவிடுவது என்னிடமே நான் அதிசயக்கும் ஒன்று.

இப்போது மார்ச் முதல்  ஜூன் வரை வாசித்த புத்தகங்களை எழுதுகிறேன்

நாவல்கள்

17. சுமித்ரா 
- கல்பற்றா நாராயணன் (தமிழாக்கம் கே.வி.ஷைலஜா)
18. அந்த மரத்தையும் மறந்தேன், மறந்தேன் நான்
- கே.ஆர்.மீரா (தமிழாக்கம் சிற்பி பாலசுப்பிரமணியம்)
19. தண்ணீர் (அசோகமித்திரன்)
20. கரிப்புத் துளிகள் 
- அ.பாண்டியன் (மீள் வாசிப்பி)

கவிதைகள்

21. மரணம் முற்றுப்புள்ளி அல்ல
- கவிக்கோ அப்துல் ரகுமான்
22. குளிர்மலை 
- ஹான்ஷான் (தமிழாக்கம் சசிகலா பாபு)
23. காற்றின் கைகள்
- அமுதபாரதி – ஹைக்கூ கவிதைகள்
24. மழை நின்ற வீதி
- மகேந்திரன் நவமணி – ஹைக்கூ கவிதைகள்
25. கள்ளிப்பழத்தால் தொய்யில் எழுதுவேன்
- மௌனன் யாத்ரிகா
26. காலாதீத இடைவெளியில்
- ரவிசுப்ரமணியன்
27. துந்தனா
- ஶ்ரீ ஷங்கர்
28. கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்
- மீரா
29. தொடுதிரை
- கல்பற்றா நாராயணன் (மலையாளத்தில் இருந்து தமிழுக்கு ஜெயமோகன்)
30. ஊர்க்காரி ஒருத்தியின் காதல்
- மௌனன் யாத்ரிகா
31. 360 இரவு
- கவிதைக்காரன் இளங்கோ
32. குமரகுருபரன் கவிதைகள்
- குமரகுருபரன்
33. விடாய்
- தில்லை
34. யாமக்கோடங்கி
- மதிக்குமார் தாயுமானவன்

சிறுகதைகள்/குறுங்கதைகள்

35. மில்லேனியல் அவ்வை 
- அழகுநிலா, குறுங்கதைகள்
36. இருபத்தாறு ஆண்களும் ஓர் இளம்பெண்ணும்
- நெடுங்கதை
- மாக்சிம் கார்க்கி (தமிழாக்கம் ஜான்சி ராணி)
37. சின்னச் சின்ன வெளிச்சங்கள்
- வெ.இறையன்பு – குட்டிக்கதைகள்
38. சாமி மூர்த்தி சிறுகதைகள்
- சாமி மூர்த்தி
39. சங் கன்ச்சில்
- அழகுநிலா
40. வெண்மையின் நிறங்கள்
- சித்ரா ரமேஷ்
41. பேரவைக் கதைகள் 6 (1991)

கட்டுரைகள்/பிற

42. வான் கேட்கிறது
- எஸ்.ராமகிருஷ்ணன்
43. கதைகளில் ஒளிரும் வாழ்க்கை
- சுகுமாரன்
44. விதியும் தன்னம்பிக்கையும்
- ரால்ஃப் வால்டோ எமர்சன் (தமிழாக்கம் வி.ஆர்.எம்.செட்டியார், சு.நடராஜன்)
45. குழந்தைகள்
- வெ.இறையன்பு

இவ்வாண்டு ஜனவரி தொடங்கி ஜூன் வரை 45 புத்தகங்களை வாசித்துள்ளேன். தனித்தனியாக வாசிக்கும் கவிதைகளையும் சிறுகதைகளியும் இதில் சேர்க்கவில்லை. முழுக்கவும் புத்தகங்களாக வாசித்தவற்றை மட்டுமே எழுதியுள்ளேன். 

இதிலிருந்து ஆறு மலேசிய புத்தகங்கள் குறித்தும் ஆறு சிங்கப்பூர் புத்தகங்கள் குறித்துய்ம் நடுகல்.காமிற்கு இரு மாதாந்திர தொடர்களாக எழுதியுள்ளேன். அதோடு மலேசிய நண்பன் ஞாயிறு மலரில் வாராந்திர தொடராக வாசித்த புத்தகங்கள் குறித்து எழுதி வருகின்றேன். 

இவை தவிர்த்து வாசித்த புத்தகங்கள் குறித்த சிறு வாசிப்பனுபவத்தையாவது எழுதிவிடுகிறேன்.
இனி 2026-ஆம் ஆண்டி நான்கில் மூன்றாவது பகுதிக்கு என்னென்ன புத்தகங்கள் வாசிக்க வருகின்றன என பார்ப்போம்.

அதேபோல நீங்கள் வாசித்த சிறந்த புத்தகமாக நீங்கள் நினைக்கும் புத்தகமொன்றை எனக்கு பரிந்துரைக்கவும்.
நன்றி.

அன்புடன் #தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜூலை 01, 2026

ஜூலை மாத நாவல் வாசிப்பு


ஜூலை மாத நாவல் வாசிப்பில்;
கரிச்சான்குஞ்சு எழுதிய 'பசித்த மானிடம்'

மாதம் ஒரு நாவல் வாசிப்பு திட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் வாசித்த நாவல்கள்

1. உபபாண்டவம்
- எஸ்.ராமகிருஷ்ணன்

2. ஆகம்
- மனுஷா ப்ரபானி திஸாநாயக்க (தமிழாக்கம் எம்.ரிஷான் ஷெரிப்

3. தேவமலர்
- ஸெல்மா லாகர் லெவ் (தமிழாக்கம் க.நா.சு)

4. அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்.
- கே.ஆர்.மீரா (தமிழாக்கம் சிற்பி பாலசுப்ரமணியம்)

5. சுமத்ரா
- கல்பட்டா நாராயணன் (தமிழாக்கன் கே.வி.ஷைலஜா)

6. தண்ணீர்
- அசோகமித்திரன்

திட்டமிட்டு மாதம் ஒரு நாவல் என வாசிப்பத்தில் ஒரு வசதி இருக்கிறது அது நம்மை நாமே கட்டாயப்படுத்தி நம் வாக்கை காப்பாற்றி கொள்ள உதவுகிறது.

அன்புடன்
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

மாதம் ஒரு மலேசிய புத்தகம் - 19



நண்பர்களே... ஜூலை மாத நடுகல்.காம் வெளிவந்துவிட்டது.

இம்மாத இணைய இதழில் எனது 'மாதம் ஒரு மலேசிய புத்தகம்' தொடரில் 19வது மலேசிய புத்தகம் குறித்து எழுதியுள்ளேன்

மலாயா பல்கலைக்கழகத்தின் 40வது பேரவைக் கதைப் போட்டி (2026) நடக்கவுள்ள இந்த நேரத்தில் 1991-ம் ஆண்டு வெளிவந்த 6வது பேரவைக் கதைகள் தொகுப்பு குறித்த என் பார்வையை எழுதியுள்ளேன்.

இன்று இலக்கிய ஆளுமைகளாக அடையாளப்படுத்தப்படும் எழுத்தாளர்களுடன் மொத்தம் பன்னிரெண்டு எழுத்தாளர்களின் சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் வெளிவந்திருக்கிறது.

35 ஆண்டுகளுக்கு முன் (1991) யார் பேரவைக் கதைப் போட்டியில் வெற்றிபெற்றார்கள். அது என்ன கதை. அந்தக் கதைகளுக்கு இன்றும் ஆயுள் இருக்கின்றதா? புதிய வாசகனுக்கு புதிதாக இந்தக் கதைகள் எதையும் சொல்கிறதா என இந்தக் கட்டுரையை வாசித்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

வாய்ப்புள்ளவர்கள் வாசித்து உங்கள் கருத்தினையும் பகிர்ந்து கொள்ளுங்கள். அதுதான் இலக்கியச் சூழலில் உரையாடலாக உருவெடுக்கும்.

வாய்ப்பளித்த நடுகல்.காமிற்கும் அதன் நண்பர்களுக்கும் என் அன்பு.

- காற்றிலாடும் இறகின் திசை -


பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சமீபத்தில் 'காற்றிலாடும் இறகின் திசை' என்னும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார்கள்.

பேராக் மாநில மூத்த எழுத்தாளர்கள் முதல் இளம் எழுத்தாளர்கள் வரையிலான பதிமூன்று பேரின் சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறார்கள்.

பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர், எழுத்தாளர் நண்பர் சிவாலெனின் அவர்களைத் தொடர்பு கொண்டு புத்தகம் கேட்டிருந்தேன்.

உடனே அந்தப் புத்தகத்தை அனுப்பியதோடு அவரது புத்தகங்களான 'மலாயா கணபதி', 'இரவைக் கிழிக்கும் ஓநாய்கள்', 'விரல் நுனியில்' போன்ற புத்தகங்களையும் எனக்கு அனுப்பினார்.

"சங்கத்தின் புத்தகத்திற்கு மட்டும் பணம் கொடுங்க நண்பா... என் புத்தகங்கள் உங்களுக்கான பரிசுகள்.... தொடர்ந்து பல புத்தகங்களை வாசித்து எழுதி அறிமுகம் செய்றீங்க... அதெல்லாம் ரொம்ப முக்கியமான காரியம்... தொடர்ந்து எழுதுங்க..."
என்றார் அன்பாகவும் உரிமையாகவும்.

தோழர் சிவாலெனின் அவர்களுக்கும் பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும் எனது அன்பும் நன்றியும்.

அவரின் தலைமையில் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் பல இலக்கிய முன்னெடுப்புகளை செய்துவருகிறது. அவருக்கும் சங்க உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகளை இதன் வழி சொல்லிக்கொள்கிறேன்.

ஜூன் 30, 2026

வாசிப்பில்


ஜூன் மாத புத்தக வாசிப்பை நிறைவு செய்யும் புத்தகம். சிங்கை எழுத்தாளர் அழகுநிலாவின் 'மில்லேனியல் அவ்வை'; 40 குறுங்கதைகள் அடங்கிய தொகுப்பு.

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வாசித்த புத்தகங்களை இன்று இரவு அடுக்கி வைக்க வேண்டும். ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் அதுவரை வாசித்த புத்தகங்களை அடுக்குவதோடு, அடுத்த மூன்று மாதங்களுக்கு வாசிக்க வேண்டிய புத்தகங்களை தனியே எடுத்து அடுக்க வேண்டும். அதுதான் வாசிக்க புத்தகங்களை எடுக்கும் போது 'புத்தகத் தேர்வு' ஏற்படுத்தும் உளைச்சலில் இருந்து ஓரளவிற்கு தப்பிக்க முடியும்.

நேரம் இருக்கும் போது ஜனவரி முதல் ஜூன் வரை வாசித்தவற்றை சிறிய குறிப்புகளுடன் குறித்து கொள்ள வேண்டும்.

அதோடு மாதம் ஒரு நாவல் வாசிப்பு திட்டத்திற்கான நாவலையும் கண்டறிய வேண்டும்.

இப்படி முன்னமே சில புத்தகங்களை வாசிப்பதற்கென எடுத்து வைத்தாலும் காலமே  அவற்றை எடுத்து வாசிப்பதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுக்கிறது.

எல்லாவற்றையும் வாசிக்கும் மனநிலையில் நான் இப்போது இல்லை. முடிந்தவரை தேர்வு செய்தே வாசிக்கின்றேன்.

அன்புடன் #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜூலை மாத தொடர்கள்

ஜூலை மாத நடுகல்.காமிற்கான இரு தொடர்கள்.


மாதம் ஒரு மலேசிய புத்தகம் தொடர் 19-ல் 1991 ஆண்டு வெளிவந்த 'பேரவைக் கதைகள் 6' சிறுகதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவத்தை எழுதியுள்ளேன்.
எழுதி 35 ஆண்டுகள் ஆன கதைகளில் எதுவெல்லாம் இன்றைக்கும் வாசிக்க பொருத்தமாக இருக்கிறது என தொடரை வாசித்து தெரிந்து கொள்ளலாம்.

மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் தொடர் 7-லில் சிங்கை எழுத்தாளர் சித்ரா ரமேஷின் 'வெண்மையின் நிறங்கள்' சிறுகதைத் தொகுப்பு
குறித்த வாசிப்பு அனுபவத்தை எழுதியுள்ளேன்.



இரண்டில் ஒரு கட்டுரை கொஞ்சம் காரம் தூக்கலாக இருப்பதாக தோன்றுகிறது. நீங்கள் வாசித்து பார்த்து சொல்லுங்கள்.

ஜூலை முதல் நாள், நடுகல்.காமை வாசிக்க மறவாதீர்கள்..

அன்புடன் 

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்