பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

அக்டோபர் 12, 2025

- பத்து லட்சம் பட்டங்கள் -



வாசிப்பில், பத்து லட்சம் பட்டங்கள்.
(காசா குழந்தைகளின் வாக்குமூலங்களும் கவிதைகளும் 2023-2024)

புத்தகத்தைத் திறப்பதாக நினைத்தை பெருந்துயரத்தை திறந்துவிட்டேன்.
நாம் எவ்வளவு பலவீனமானவர்கள் என்பதனை இப்புத்தகம் சில பக்களிலேயே நமக்கு அடையாளம் காட்டிவிடுகிறது.

வாசிக்க வாசிக்க குழந்தைகளின் விசும்பலும் அலறலும் கேட்க ஆரம்பித்துவிடுகிறது.
பிஞ்சுகளின் பெருந்துயரின் பேரிழப்பின் முன் நம் துயரமெல்லாம் தூசுகளாகி வெட்கி தலைகுனித்துவிடுகின்றன.

வாழ்க்கை என்றால் என்னவென்றே புரியாத வயதில் அவர்கள் நம்மிடம் கேட்கும் கேள்விகள் நம் மனதை உடைத்துவிடுகின்றன.

இதனை எழுதும்போதும் அந்தக் கண்ணீர் வழிந்தபடியேதான் இருக்கின்றன.

மஹ்முத் என்னும் 11 வயது குழந்தையொன்று இப்படி எழுதியிருக்கிறது.

'பயணஞ் செல்ல வேண்டும்.
பயணஞ் செய்து மருத்துவமனைக்குச் செல்ல
வேண்டும்.
செயற்கைக் கைகள் பொருத்துவதற்காக.
அப்பொழுதுதான் பந்துகளை ஏந்தி விளையாட முடியும்.
எழுத முடியும்.
சாப்பிட முடியும்.

பத்து வயது குழந்தையொன்று 'ஏன் அழுகின்றாய்?' என கேட்டதற்கு;

'என் உணவுத் தட்டினை எங்கோ தொலைத்துவிட்டேன்.
அதனால் எனக்கு உணவு கிடைக்கவில்லை.'

என்கிறது. போரில் இருந்து உயிரோடு தப்பித்து வந்தக் குழந்தைகளின் வயிறு முழுக்க பசியின் கோரத்தாண்டவம். தனக்கு ஏன் உணவு கிடைக்கவில்லை என்கிற கேள்விக்கே விடை தெரியாத குழந்தைகளை எப்படி நம்ம கடந்து வர முடியும்.

இப்படி புத்தகம் முழுக்க காசா குழந்தைகளின் வாக்குமூலங்களும் கவிதைகளும் இருக்கின்றன. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம் மீதான நமது இயலாமையை இம்சிக்கிறது.

எதார்த்தம் புனைவுகளைவிட மோசமானவை என்பதில் மாற்றுக்கருத்தி இல்லை. இந்த எதார்த்தம் பலவித புனைவுகளை நம்முள் இருந்து தோண்டி எடுக்கின்றது. உயிரை அசைக்கும் அந்த வேலை என் காதுகளுக்கு அருகில் துப்பாக்கி சூடுகளையும் குண்டு வெடிப்புகளையும் குழந்தைகளின் அலறலையும் மீளுருவாக்கம் செய்கிறது.


ஆங்கிலத்தில் இருந்தும் அரபு மொழியில் இருந்தும் இந்தக் கவிதைகளை தமிழாக்கம் செய்திருக்கிறார்கள். விடியல் பதிப்பகம் வெளியீடு செய்திருக்கிறார்கள்.

இந்தப் புத்தக விற்பனையில் பெறப்படும் பணம், காசா குழைந்தைகளின் நிவாரண நிதிக்கு அளிக்கபடுவதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அது என் கண்ணீரைக் கொஞ்சம் துடைத்தது. விடியல் பதிப்பகத்திற்கும் , தொகுப்பும் மொழியாக்கமும் செய்த லெய்லா பொகரிமிற்கும் படங்களையும் வடிவமைப்பையும் செய்த ஆசஃப் லுசானுக்கும் இவற்றை தமிழாக்கம் செய்த க.வி.இலக்கியாவிற்கும் என் அன்பு.

உலகில் துயருரும் குழந்தைகளுக்கு என் கண்ணீரும் பிரார்த்தனைகளும்....

அக்டோபர் 05, 2025

- 2025-ல் நான்கில் மூன்று -


- 2025-இன் நான்கில் மூன்று -
 
2025-ஆம் ஆண்டின் நான்கின் இரண்டாம் பகுதியைக் கடந்துவிட்டோம். இந்த ஆண்டில் நமக்கு கொடுக்கப்பட்ட நாட்களில் நான்கில் மூன்று பகுதிகள் செப்டம்பரில் முடிந்தன. வந்ததும் தெரியாமல் போனதும் சொல்லாமல் என்று நம்மை புலம்ப வைத்து; இயற்கை அதனதன் வேலைகளை எந்தத் தடையும் இன்றி யாருக்கான காத்திருப்புக்கும் நில்லாமல் செய்துக்கொண்டே இருக்கின்றன.

இவ்வாண்டின் வாசிப்பிற்கான திட்டமிடலாக, 12 மாதங்களையும் முறையே மூன்று மூன்று மாதங்களாக பிரித்தேன் நான்கு பகுதிகளாக பிரித்தேன்.. ஜனவரி முதல் மார்ச் வரை, ஏப்ரல் முதல் ஜூன் வரை, ஜூலை முதல் செப்டம்பர் வரை. முதல் இரண்டு பிரிவுகளில் வாசித்ததை எழுதிவிட்டேன். அவை மொத்தம் 27 புத்தகங்களாய் அமைந்தன. 

இந்தப் பட்டியலில் மாதம் ஒரு நாவல் வாசிக்கலாம் என இன்னொரு திட்டத்தையும் இணைத்திருந்தேன். ஒன்பது நாவல்கள் வரவேண்டிய இடத்தில் ஏழு நாவல்களே சாத்தியமாகின. கடந்த இரண்டு மாதங்களாக உடல் நலமில்லை. நினைவில் வைத்துக்கொண்டு நாவலைத் தொடர்ந்து வாசிக்கும் சூழல் அமையவில்லை. அதனை கவிதை புத்தகங்கள் நிரப்பின.

இனி ஜூலை முதல் ஆகஸ்ட் வரை வாசித்த புத்தகங்களைப் பார்க்கலாம்;

நாவல்

28. சோளகர் தொட்டி
- ச.பாலமுருகன் நாவல்
- நாவல் பல இடங்களில் மனதை கலங்கடித்ததும், ஜீரணிக்க சிரமத்தைக் கொடுக்கும் மனிதர்களின் வாழ்க்கை.

கவிதைகள்

29. இறகிசைப் பிரவாகம்
- கவிதைத் தொகுப்பு
- 130 கவிஞர்களின் பறவைகள் குறித்த கவிதைகள் அடங்கியவை.
- மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டிய புத்தகமாய் இதனை சேர்த்துக்கொண்டேன்

30. கவிதைக் கென்ன வேலி
- இந்தியப் பிறமொழி கவிதைகள்
- கவிஞர் புவிரசுவின் தமிழாக்கம்
- குறிப்பாக கன்னடம் மற்றும் தெலுங்கு கவிதைகளின் மொழியாக்கம் இரசிக்கும்படியும் ஆச்சர்யத்தைக் கொடுக்கும்படியும் அமைந்தன.

31. அவிழும் சொற்கள்.
- கவிஞர் ரவிக்குமார் கவிதைகள்
- அங்கொன்றும்  இங்கொன்றுமாக வாசித்தவரின் கவிதைகளை புத்தகத்தில் வாசித்து மகிழ்ந்தேன்.
- இருவரிகளில் கூட ஆழமான கவிதைகளைக் கொடுத்திருக்கின்றார்.

32. நீரின்றி அமையாது உலகு.
- கவிஞர் மாலதி மைத்ரி கவிதைகள்
- 2013-ஆம் ஆண்டு, கவிஞர் பூங்குழலி இந்தத் தொகுப்பை எனக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்தார். 
- இந்தத் தொகுப்பு கவிஞரின் கவிதைகள் மீது ஆர்வத்தைக் கொடுத்தது. 
- கவிஞரின் பிற கவிதைப் புத்தகங்களையும் வாங்கிவிட்டேன்.

33. உடலாடும் நதி
-  கவிஞர் லதா அருணாச்சலம் கவிதைகள்
- எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வாசித்தேன். 
- அலட்டிக்கொள்ளாத கவிதைகள்; தனித்து இரசிக்கும்படியும் பல நினைவுகளை நினைக்கவும் வைக்கும் கவிதைகள்

34. நாளை பிறந்து இன்று வளர்ந்தவள்
- கவிஞர் மாதங்கி கவிதைகள் (சிங்கப்பூர்)
- சிங்கப்பூர் கவிஞரின் கவிதைகள் என்பதால் சில கவிதைகளோடு நேரடி  தொடர்பை உணர முடிந்தது.

35. கருநீல முக்காடிட்ட புகைப்படம்
- கவிஞர்  மனுஷி கவிதைகள்
- மாயாவை வட்டமிடும் கவிதைகளில் நம்மை உடன் அழைத்துச் செல்கிறார் கவிஞர்.

36. தூவிகளின் நிகண்டு
- இனிதி கவிதைகள்
- அன்றாடங்களை எளிமையாக கவிதைகளில் புகுத்த முயல்கிறார் கவிஞர். 
- சில இடங்களில் இரசிக்கும்படியும் சில இடங்களில் வெறுமனே கடந்து போகும்படி ஆகின்றன.

37. என்றுதானே சொன்னார்கள்
- கவிஞர் சாம்ராஜ் கவிதைகள்
- ரொம்ப நாளாய்த் தேடிய தொகுப்பு இது.
- கவிஞரின் பல முக்கியமான கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. 
- அவை வாசித்து கடக்க முடியாத அவஸ்தைகள் கொடுக்கின்றன.

கதைகள்/சிறுகதைகள்/குறுங்கதைகள்

38. அசைவற்று மிதக்கும் நிழல்
- உதயசங்கர் குறுங்கதைகள்
- குறுங்கதைகள் எழுதவும் சரி வாசிக்கவும் சரி; பெரிய உழைப்பு தேவைப்படும் என சொல்லும் தொகுப்பு.
- குறுங்கதைகள் சோம்பேறிகளின் வேலை எனச் சொல்லி சும்மா  இருப்பவர்கள் கட்டாயம் இந்தத் தொகுப்பை வாசித்துவிடுங்கள்
- உங்கள் முடிவை மாற்ற சிறந்து புத்தகம் இது.

39. சூஃபி ஆகும் கலை
- நஸீமா ரஸாக் எழுதியது.
- 50 கதைகள் கொண்ட தொகுப்பு
- வாசிக்க மட்டுமல்லாது மாணவர்களுக்கு நாம் பகிர்ந்து கொள்ளக்கூடிய கதைகள்

40. மக்தூப்
- பாலோ கொயலோவின் எழுத்து
- ரசவாதி என்னும் நாவலுக்கான துணை நூலாகச் சொல்லப்படுகிறது.
- 200 கதைகள் கொண்ட தொகுப்பு
- முன்னமே நாம் வாசித்த் கேள்விபட்ட கதைகளை பாலோ கொயலோ அவரது பாணியில் சொல்லியிருக்கிறார்.

41. நான் யார் ? – தேடலும் வீடுபேறு அடைதலும்
- who Am I ? என்ற புத்தகத்தின் தமிழாக்கம்.
- 173 ஜென் கதைகள் கொண்ட புத்தகம்.

42. ரூமியின் வாழ்வில் ஞானக் கதைகள் நூறு
- எழுத்து இத்ரீஸ் ஷாஹ்
- ரமீஸ் பிலாலியின் தமிழாக்கம்.
- ஆன்மீக சிந்தனைக்கு ஏற்ற ரூமியின் கதைகள்

இதர வாசிப்பு

43. கவிஞனும் கவிதையும்
- எழுத்து எஸ்.ராமகிருஷ்ணன்
- கவிதைகள் பற்றிய கட்டுரைகள்
- கவிதைகளை வாசிக்கவும் எழுதவும் விரும்புகின்றவர்களுக்கு ஏற்ற புத்தகங்களில் ஒன்று.

44. ஜென் தத்துவமும் மகிழ்ச்சியான வாழ்க்கையும்
- ஜென் மீதான புரிதலுக்கு உதவும்.

45. ஜென் – எளிமையாக வாழும் கலை
- 100 நாட்களுக்கு தினமும் வாசிக்க ஏற்ற புத்தகம்.
- நேரம் கிடைக்கும் போதெல்லாம் திரும்பத்திரும்ப வாசிக்கலாம்.

46.  வாபி சாபி – கச்சிதமின்மையிலுள்ள ஞானம்
- ஒவ்வொன்றும் அதற்கே உரிய தனித்தன்மையில்தான் இயங்குகிறது என்பதைச் சொல்லும் புத்தகம்.

47. நேரத்தை வெற்றி கொள்.
- 14 வியாபார ஆளுமைகளின் நேரம் குறித்தான பார்வையும் அவர்கள் நேரத்தைப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

48. விமானத்தின் பயணத்திட்டம் 
- பிரையன் டிரேசி 
- விமானப்பயணத்திற்கு இணையாக தன்முனைப்பைச் சொல்லும் புத்தகம்.

49. ஆல்ஃபா அப்பா’ ஒமேகா அம்மா
- எழுத்து நியாண்டர் செல்வன்
- வாசிக்க ரொம்பவும் சுவாரஸ்யமான புத்தகம்
- எதார்த்த சூழலுக்கு ஏற்றபடி கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கும்

50. As a Man Thinketh
- Book by James Allen
- Help to understand our basic thought
 

அடுத்து நடுகல்.காம் இணைய இதழுக்கு எழுதிக்கொண்டிருக்கும் 'மாதம் ஒரு மலேசிய புத்தகம்' தொடருக்காக வாசித்தவை (மூன்றும் மீள்வாசிப்பு)

51. கையறு 
- கோ.புண்ணியவானின் நாவல்

52. நிலங்களின் நெடுங்கணக்கு
- மதியழகனின் நாவல்

53. நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்
- கவிஞர் பூங்குழலி வீரனின் கவிதைகள்
 
இந்த மூன்று புத்தகங்கள் குறித்தும் விரிவான அறிமுகத்தை நடுகல்.காமில் எழுதியுள்ளேன். நண்பர்கள் அங்கு சென்று வாசிக்கலாம்.

இந்த ஆண்டின் மூன்றாம் பகுதியை முடித்து நான்காம் பகுதிக்குள் நுழைகின்றோம். அடுத்ததாய் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வாசிப்பு என்னவாக அமைகிறது என பின்னர்தான் தெரியவரும். வாசிப்போம்.

அதற்கான முன்னெடுப்பாக; வீட்டு நூலகத்தை நேற்று இரவு முழுக்க ஆராய்ந்தும் சுத்தமும் செய்துக்கொண்டிருந்தேன். அடுத்த மூன்று மாதத்தில் வாசிக்கலாம் என தோன்றும் ஒவ்வொரு புத்தகத்தையும் எடுத்து பெட்டியில் அடுக்கினேன்.

காலை விடிந்ததும்; பேட்டி நிறைய புத்தகங்களாக இருந்ததைக் கண்டேன். நான் தூங்கி எழுந்த பின்னும் என்னுள் தூங்கும் புத்தகப்பிசாசு இன்னும் கண்விழிக்கவில்லை. அதனால் கொஞ்சம் அதிர்ச்சி கொஞ்சம் குழப்பம்.

இனி பெட்டியில் உள்ளவற்றை எடுத்து வாசிக்கலாம். அல்லது வழக்கம் போல பெட்டியில் சேராமல் நேராக கைக்கு கிட்டும் புத்தகங்களை வாசிக்கலாம்.  வாசிப்போம் நண்பர்களே…

உங்களுக்கு எப்போதும் என் அன்பு..

- அன்பின் ஊற்று -

இன்று ஆசிரியை விக்னேஸ்வரி மணியத்தை சந்தித்தேன்.
'அன்பின் ஊற்று' எனும் அவரது முதல் கவிதை தொகுப்பினைக் கொடுத்தார்.
இயல் பதிப்பகம் வெளியிட்டிருந்தார்கள்.

புத்தகங்கள் பரிசாகக் கொடுப்பதைக் குறித்து ஒருமுறை பேசும்போது, நான் பலருக்கு புத்தகங்களைப் பரிசாக கொடுத்துள்ளேன். ஆனால் எனக்கு புத்தகங்கள் அரிதாகவே பரிசாக கிடைக்கும் என்றேன். உடனே அவர் ஒரு புத்தகத்தைப் பரிசாக கொடுப்பதாகச் சொன்னார்.

அது அவரது முதல் கவிதை தொகுப்பாக அமைந்ததில் இருவருக்கும் மகிழ்ச்சி. நமக்கு புத்தகத்தை பரிசளித்தவரை எப்படி
வெறும்கையுடன் அனுப்புவது?

அதுதான், எப்போதும் எனக்கு பிடித்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் 'கற்பனை அலைகள்' என்னும் உலக இலக்கியக் கட்டுரைத் தொகுப்பைக் கொடுத்தேன்.

எழுத ஆர்வம் உள்ளவர்கள், தனது முன்னோடிகளின் வாழ்வைக் குறித்தும் அவர்களின் படைப்புகள் குறித்தும் இந்தப் புத்தகத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆசிரியைக்கு நிச்சயம் உதவும் புத்தகமாக இது அமையும்.

அவரின் குடும்பத்துடன் சந்தித்தது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது. பல சமயங்கள் எழுத்தாளர்கள் குடும்பத்தில் இருந்து அந்நியர்களாகவே நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எழுதுவது குடும்பத்திற்கு பிடிக்கவில்லையா அல்லது எழுதுகிறவருக்கு தன் குடும்பத்தைப் பிடிக்கவில்லையா என தெரியவில்லை.

எழுத்தாளர் விக்னேஸ்வரி மணியத்தின் குடும்பத்தினருக்கு வாழ்த்துகளும் நன்றியும்.

கிடைத்த கொஞ்ச நேரத்தில், முதல் புத்தகத்தில் தொடங்கி அவரின் சொந்த அனுபவங்கள் அதில் மறைந்திருக்கும் கதைகள் என எங்கள் உரையாடல் பல்வேறு தளங்களுக்குச் சென்றது.



குறிப்பாக அவர், தன் தாத்தாவைப் பற்றி சொன்னது நிச்சயம் சிறுகதைகளாக பரிணமிக்க வேண்டியவை. அம்மாக்களும் அப்பாக்களுமே குழந்தைகளிடம் இருந்து அந்நியமாகிவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் தாத்தாவுடன் எத்தனைக் குழந்தைகள் நெருக்கமாக உணர்ந்திருக்கிறார்கள் என்பது கேள்விக்கு உட்பட்டதுதானே. இவரின் தாத்தாவுடனான, அதுவும் வாழும் இறுதி காலம்வரை புத்தகங்களுடனே நேரத்தை செலவிட்ட ஒரு வாசகருடனான அவரின் தாத்தாவிற்கும் அவருக்குமான அந்தக் கதைகளை இந்தத் தலைமுறைக்கு அவர் எழுதிக் கொடுக்கத்தான் வேண்டும். அதற்கு அவரின் நேரத்திற்கு 'நேரம் கூடட்டும்'.

முகநூல் தோழியான, நமது புத்தகச்சிதகுகள் புத்தகக்கடையின் ஆதரவாளரான விக்னேஸ்வரி மணியத்தை இன்றுதான் முதன் முதலாக சந்தித்தேன். எந்தத் தயக்கமும் இன்றி எங்கள் உரையாடல் நடக்க நாங்கள் நம்பும் இந்த எழுத்துகள்தான் காரணம்.

மீண்டும் ஒருமுறை எழுத்தாளர்,கவிஞர் விக்னேஸ்வரி மணியத்திற்கு வாழ்த்துகள் கூறிக்கொள்வதோடு 'தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து எழுதுங்கள் மனத்தடையின்றி உரையாடுங்கள்' என்று வழக்கமான நிறைவோடு விடைபெற்றோம்.



- உங்களில் யாரும் -


மன்னிக்கவும்

இன்னும்
அவ்வளவு தூரத்திற்கு
என்னால் வரமுடியாது

உங்களில் யாரும்

என் துயரங்களைத்
தூக்கிச் செல்லுங்களேன்

நான் கொஞ்சம்
ஆசுவாசப்படுத்திக்
கொள்கிறேன்

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

அக்டோபர் 04, 2025

- சாத்தானின் கன்னுக்குட்டி -


கடவுளால் மட்டுமே
காப்பாற்ற முடிந்த
இடத்திற்கு
எங்களைத்
தள்ளிவிடுகிறீர்கள்

நாங்கள்
கடவுளின்
செல்லப்பிள்ளையாகவும்
மாறுவோம்

சாத்தானின்
கன்னுக்குட்டியாகவும்
மாறுவோம்

அக்டோபர் 01, 2025

- கரையறியா கண்ணீர் -


யாரோ ஒருவரின்
முன்னால் அமர்ந்து
உங்களால்
இப்படி அழமுடிகிறதே
அது போதாதா

இங்கு
அழவும் முடியாதவர்களே
அதிகம்

குறைந்தபட்சம்
அவர்களால்
சேர்ந்தும் சேர்த்தும்
வாழ முடிந்தது
அந்தக் கண்ணீரைத்தான்

ஒருபோதும் அது
கண்களை விட்டு
தவறியும்
வழிந்தது இல்லை
அதற்கான
வழி
அறிந்ததும் இல்லை

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

செப்டம்பர் 11, 2025

- ஊழல் வினை -


ஊழல்வாதிகளுக்கு
எடுக்கவும் பதுக்கவும் தெரிகிறது
அனுபவிக்க வாய்ப்பதில்லை...

உணர்ந்த மக்களுக்கு
எதிர்க்கவும் எரிக்கவும் வாய்க்கிறது
பயன்படுத்த தெரிவதில்லை....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்