பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

மார்ச் 03, 2026

- ஆகக்கடைசியாய் ஓர் அதிசயம் -


எது அதிசயம் ?
கடலை பிளந்து நடப்பதா
தூணை உடைத்து தோன்றுவதா
அசரீரியாய் அழைப்பதா

இல்லை
எதுவும் இல்லை

குழந்தைகளைச் சுடாத
துப்பாக்கிகளும்
குழந்தைகளை கொல்லாத
வெடிகுண்டுகளுமே

இவ்வுலகில்
தோன்ற வேண்டிய
ஒரேயொரு
அதிசயம்

எந்தக் கடவுளாலும்
நிகழ்த்த முடியாத
ஆகக்கடைசியான
அதிசயம்
இது ஒன்றுதான்....

#தயாஜி

- உலகின் ஓயாத ஒப்பாரி -


இவ்வளவு
சின்னச்சின்ன குழிகளைத்
தோண்டுவதற்கு
ஏன் 
இத்தனை இத்தனை
துயரை 
நாம் சுமக்க வேண்டியுள்ளது

வெடித்து சிதறியது
அவர்களின் சின்னஞ்சிறு
உடல்கள்தானே
என 
கடந்துவிடுகிறார்கள்
அதிகாரங்களை ஆள்கிறவர்கள்
 
இந்த உலகை
தன் தூய 
அன்பின் குதூகலத்தில்
பார்த்தக் குழந்தைகளின்
கனவுகள் 
எவ்வளவு பெரியது
எதுவரை பறந்தது

ஒருபோதும் 
ஓயாத இந்த ஒப்பாரிகள் 
ஏன் 
நம் காதுகளுக்கு மட்டுமே 
கேட்கிறது

#தயாஜி

- வண்ணம் மாறாத இரத்தம் -


அந்தப் 
பள்ளிக்கூட வாசலில்
ஏதோ ஒரு குழந்தையின்
புத்தகப்பை மட்டும்
தனித்திருக்கிறது
பல நாட்களாக

தனித்திருக்கும்
அந்தப் புத்தகப்பையில்
வழிந்து 
பின் காய்ந்து போயிருப்பது
 
தன் சக நண்பர்களின்  
பெயர் கூட 
இன்னும் 
முழுதாய் மனப்பாடம் ஆகாத 
குழந்தைகளின்

என்றுமே வண்ணம்
மாறாத இரத்தம்

#தயாஜி

மார்ச் 01, 2026

புத்தகச்சிறகுகள் - தொடர் 3

நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 3' வெளிவந்துள்ளது.

புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.

இந்தத் தொடரில் எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான அரு.சு.ஜீவானந்தனின் சிறுகதைகள் குறித்து எழுதியுள்ளேன். கட்டுரையின் முதற்பகுதி இத்தொடரில் வெளிவந்துள்ளது.

இனி ஒவ்வொரு வாரமும் புத்தகங்கள் குறித்த 'புத்தகச்சிறகுகள்' எனும் எனது தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.

வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த,
ஞாயிறு நண்பன் ஆசிரியர் மற்றும் அவர் குழுவினர்க்கு நன்றி.

வாசிப்போம்...
நேசிப்போம்...
வளர்வோம்...

அன்புடன் #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


பிப்ரவரி 27, 2026

- இந்தப் பதிவரும் ஒருவர் -


- இந்தப் பதிவரும் ஒருவர் -

'முதல் முறை தோற்கும்போதே
மரணித்துவிட வேண்டும்.
தொடர் தோல்விகள்
மரணத்தைத் தோற்கடிக்கக்
கற்றுக்கொடுத்து விடுகின்றன'
- கவிஞர் யோகி

வாசித்து முடித்தது, கவிஞர் யோகியின் 'எனும் போது' கவிதைத் தொகுப்பு.

வாசித்து முடித்த கையோடு என் வாசிப்பனுபவத்தையும் எழுதிவிட்டேன். இரண்டொரு நாட்களில் பகிர்கிறேன். நீங்களும் வாசித்து சொல்லலாம்.

நான் எழுதவந்த காலகட்டத்தில் சிலரின் படைப்புகளை வாசித்து அதன்பால் ஈர்க்கப்பட்டு  நம்பிக்கையோடு அவர்களின் கைகளைப் பிடித்து நடந்தவர்களில் கவிஞர் யோகியும் ஒருவர். 

வாசிப்பை அடிப்படையாக வைத்து அன்று தொடங்கிய அந்தப் பயணம்தான் எனது இன்றைய எழுத்துக்கான அஸ்திவாரம்.

இன்றைய தலைமுறையில் புதிதாக எழுத வந்திருக்கும் எழுத்தாளர்களுக்கு
கிடைக்காத ஒரு வாய்ப்பு எனக்கும் என்னுடைய காலகட்டத்தில் எழுத வந்தவர்களுக்கும் இருந்தது.

என்ன தெரியுமா.?

யார் என்று அறியாமலேயே அவர்கள் எழுதியதை வாசித்து பழகினோம்.
எழுதியவர் எப்படி இருப்பார் என்றுகூட சரியாக தெரியாது. ஏதாவது ஒரு வார மாத இதழிலோ பத்திரிகைகளிலோ இருக்கும் அவர்களின் படைப்பும் அதன் கீழ் இருக்கும் அவர்களின் பெயருமே அவர்களுக்கான அடையாளம். அதுவே எங்கள் வாசிப்பிற்கான பயிற்சி .

அதை வைத்துதான் எங்கள்
வாசிப்பை வழி நடத்தினோம்.

சமூக ஊடகங்களில் இருக்கும் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை வைத்து அவர்களை வாசிக்கவில்லை. ஊடக வெளிச்சம் அதிகம் உள்ளதாலேயே அவர்கள் எழுதியது சிறந்த எழுத்து என எங்களை நாங்களே ஏமாற்றிக்கொள்ளவில்லை. யாராவது நமக்கும் புத்தகம் போட்டு கொடுப்பார்கள் என்று அவர்களை எங்கள் தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொள்ளவில்லை.

இன்னும் குறிப்பாக சொல்வதென்றால் எந்த ஒரு எழுத்தாளரையும் அவரின் படைப்புகளை வாசிக்காமல் அவர் குறித்த மாய பிம்பத்தை ஏற்படுத்திக்கொண்டு நாங்களும் வாசிப்பதாக எங்களையே ஏமாற்றிக்கொள்ளவில்லை.

ஒருவேளை இன்று எழுதவந்திருக்கும் நீங்கள் இப்படியெல்லாம் இல்லை என்று நினைத்தால்; உங்களுக்கும் ஒன்றைச் சொல்லவேண்டியுள்ளது. நீங்கள் தனியாக இல்லை நண்பர்களே உங்கள் பின்னால் ஒரு பெரிய, வாசிப்பின் வரலாறே இருக்கிறது...

இன்னொன்றையும் சொல்லலாம், அப்படியென்றால் அன்றைய காலகடத்தில் எழுதிய எல்லாருமே சிறந்த எழுத்தாளர்களா? எல்லா படைப்புகளுமே சிறந்த படைப்புகளா?
அப்படியொன்றும் பெருமைபட ஒன்றுமில்லை.

இன்று தங்களையும் நவீன எழுத்தாளர்கள் எனச் சொல்லிக்கொள்ள நவீன எழுத்தாளர்களுக்கு நண்பர்களாக இருந்தாலே போதும் எதையும் வாசிக்கவோ எழுதவோ பேசவோ தேவையில்லை என்ற கவனிக்கப்படாத  சிக்கல் இருப்பது போலவே எல்லா காலகட்டத்திலும் ஏதோ ஒரு சிக்கல் இருக்கத்தானே செய்கிறது.

வாசிப்போம் அதுதான் எல்லாம்.

இந்தப்பதிவின் தொடக்கத்தில் யோகியின் கவிதையை வாசித்தீர்களே, அந்தக் கவிதையில் வரும் மரணத்தைத் தோற்கடிக்க கற்றுக் கொண்டவர்களில் உங்களைப் போலவே இந்தப் பதிவரும் ஒருவர்.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


பிப்ரவரி 24, 2026

வாசிப்பில்


அழும் குழந்தைக்கு
மிட்டாய் தருவதுபோல
விலக நினைக்கும் 
ஒவ்வொரு முறையும்
முத்தங்களைப் பரிசளிக்கிறாய்....
- Ganga Baskaran 

வாசிப்பில், கவிஞர் கங்கா பாஸ்கரனின் 'நீராம்பல்' கவிதைத் தொகுப்பு....
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

பிப்ரவரி 23, 2026

சின்னச்சின்ன கனவுகள்


பெரிய பெரிய
கனவுகளில் அவர்கள்
தொலைந்து போகிறார்கள்

சின்னச் சின்ன
கனவுகளில் நாம்
வாழ்ந்துவிட்டு போவேமே

என்ன குறைந்துவிடப் போகிறது
நம்மை தவிர
யாருக்கு நிறைந்துவிடப் போகிறது

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்