பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

ஆகஸ்ட் 18, 2025

அல்பம்


எவ்வளவோ 

பொய்கள் சொல்லியிருக்கலாம்

எவ்வளவோ 

நாம் ஏமாற்றியுமிருக்கலாம்


அல்பம் 

ஒரு மிட்டாயை 

திருட்டுத்தனமாய்

வாயில் போட்டு

சாப்பிட முடியவில்லை


உச்சிமுடியைப்

பிடித்து இழுத்து

வாயைத் தானாய்த் 

திறக்கவைத்து

மிட்டாயைக் கண்டுபிடித்து


அவள் பங்கை 

கடித்தெடித்து

மிச்சத்தை என் வாயிலேயே  போட்டுவிடுகிறாள் 

பொம்மி

அந்த 

அல்ப மிட்டாய்

அற்புதமாய் ருசிக்கிறது...


#பொம்மி #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஆகஸ்ட் 17, 2025

முடியாது என் கதை 4


நாங்கள் ஏழாம் எண் அறையில் இருந்து நான்காம் எண் அறைக்கு சென்றோம். அதுவரை அங்கிருந்த ஒரு மருத்துவர் வெளியேறினார். இன்னொரு பெண் மருத்துவர் எங்களுக்கு முதுகாட்டி அமர்ந்திருந்தார். 

வாசலில் சட்டென பரபரப்பு. இன்னொருவரை கட்டிலில் படுக்கவைத்து தள்ளிக்கொண்டு போனார்கள். இது எத்தனையாவது விபத்து என தெரியவில்லை. நாங்கள் வந்ததில் இருந்து பலரை இரத்தக் காயங்களுடன் பார்த்து கொண்டிருக்கிறோம்.

புதிய நோயாளிகள் வரவர; பழைய நோயாளிகள் அதிகமாகி கொண்டே இருந்தார்கள். பெயரை பதிந்து கட்டணம் செலுத்த தாமதம். கட்டணம் கட்டிய பின் மருத்துவரை சந்திக்க தாமதத்திலும் தாமதம். மருத்துவரை சந்தித்தபின் மருந்து எடுக்க வேண்டிய மருந்தகத்தையும் மூடிவிட்டார்கள்; ஒருவேளை ஓய்வுக்கு போயிருக்கிறார்களா அல்லது விடிந்ததும்தான்  திறப்பார்களா என தெரியவில்லை.

நாங்கள் நிற்கும் இடத்தில் கூட ஆங்காங்கே இரத்தத்துளிகள் சிறிதும் தெரிதுமாக இருக்கின்றன. அதில் சில இன்னும் காயவும் இல்லை. 

போதாக்குறைக்கு அதன் மேலேயே சிலர் நடந்தும் போயிருக்கிறார்கள் போல. காலணி அச்சில் இரத்தக்கறையைப் பார்க்கவே பயமாக இருந்தது. அதைப் பார்க்கவே எனக்கு மயக்கம் வருவதுபோல் இருந்தது. எப்போதுமே இப்படி இருக்காது. நான் எனக்காகவும் மற்றவர்களுக்காகவும் பலமுறை இங்கு வந்திருக்கிறேன். வழக்கமாக அடிக்கடி சுத்தம் செய்து கொண்டே இருப்பார்கள். 

ஆனால் இன்று இப்படி இருப்பதற்கு; எதிர்ப்பாராத அதிக நோயாளிகள் காரணமா அல்லது குறைவாக இருக்கும் மருத்துவர்களும் பணியாளர்களும் காரணமா என தெரியவில்லை. தெரிந்து கொள்ள வேண்டிய மனநிலையிலும் இல்லை.

நாங்கள் இவ்வளவு நேரம் காத்திருக்கும் இதே நேரத்தில்தான் ரொம்பவும் ஆபத்தான நிலையில் வருகிறவர்கள் கவனிக்கப்படுகின்றார்கள். நமக்கு எப்போதும் நம் வலியும் நம் வேதனையும் மட்டுமேதானே தெரியும்.

நாங்கள் நான்காம் எண் அறைக்கு செல்லவும் அங்கே இருவர் வந்து அமரவும் சரியாக இருந்தது. வந்திருந்தவர்களை அப்படியே அமரவைத்துவிட்டு அந்த மருத்துவர் தன்னிடம் உள்ள மற்ற கோப்புகளில் எதையோ எழுதிக்கொண்டிருந்தார். பின் அந்த இருவரில் ஒருவரை விசாரித்துவிட்டு பேச ஆரம்பித்தார்.

அவர்கள் பேசி முடிக்கும்வரை காத்திருக்கலாம் என இல்லாள் சொல்லிவிட நாங்கள் அங்கேயே காத்திருந்தோம். இல்லாளுக்கும் காய்ச்சல் வந்துவிட்டது. வீட்டில் பொம்மி விடாது அழுது கொண்டிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

மருத்துவர் பேசி முடித்ததும், சட்டென இல்லாள் அவருடன் சென்று நாங்கள் பல மணி நேரமாய்க் காத்திருக்கிறோம். கூப்பிடவேயில்லை. நாங்கள் சென்று; நாளை காலை வருகிறோம் எங்களின் பரிந்துரை கடிதத்தை கொடுங்கள், என சொல்லிவிட்டார். 

மருத்துவரோ எந்தக் காரணத்தையும் கேட்கவில்லை. அந்தப் பரிந்துரை கடிதத்தை படித்துக்கூட பார்க்கவில்லை. எங்களிடம் கொடுத்துவிட்டார். நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம்.

மருத்துவமனைக்கு வரும்போது எனக்கு மட்டுமே உடல் நலமில்லை. இப்போது வீட்டிற்கு திரும்பும்போது எங்கள் இருவருக்குமே உடல் நலமில்லை. எப்படியோ அந்த விடிகாலை நேரத்தில் வாகனங்கள் அதிகம் இல்லாததால் ஒருவழியாக காரை ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்தோம்.

மறுநாள் காலை மீண்டும் மருத்துவமனை செல்லலாம் என முடிவானது. இம்முறை பரிந்துரை கடிதத்தை வழக்கமான மருத்துவ பரிசோதனையிலேயே காட்டி பதிவு செய்து கொள்ளலாம் என நினைத்தோம்.

ஆனால் அந்தப் பரிந்துரை கடிதத்தில் மறைந்திருந்த வெடிகுண்டை நாங்கள் அறிந்து கொள்ளவில்லை……

ஆகஸ்ட் 15, 2025

முடியாது என் கதை 3


(This is my personal story. You may read it if you wish)

இரவு மணி 8க்கு பொது மருத்துவமனையை அடைந்தோம். காரை அதற்கான இடத்தில் நிறுத்திவிட்டு அவசர சிகிச்சை பிரிவிற்கு வந்து சேர 8.30 ஆனது.

கிளினிக்கிள் கொடுத்திருந்த பரிந்துரை கடிதத்தையும் எனது அடையாள அட்டையையும்  சம்பந்தப்பட்டவரிடம் கொடுத்து பதிந்து கொண்டேன்.
 
அதற்கிடையில் மூன்று வாகன விபத்துகளில் காயப்பட்ட நான்கு பேர் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருந்தார்கள். காத்திருப்போர் இடம் முழுக்க நோயாளிகள் நிறைந்திருந்தார்கள்.

என் பெயரை பதிந்து கொண்டவர், என்னிடம் என்னால் நாற்காலியில் அமர முடியுமா? இன்னமும் மயக்கம் வருகிறதா? உங்களால் சமாளிக்க முடிகிறதா? என கேட்டார்.

நானும் , சுற்றி என்னைவிட அவசர சிகிச்சைக்கு சிலர் இருப்பதை புரிந்து கொண்டு என்னால் காத்திருக்க முடியும் என்றேன். அதுதான் நான் செய்த தவறு என பின்னர் புரிந்தது. அது புரிய எனக்கு ஐந்து மணிநேரம் ஆனது.

அவசர சிகிச்சைக்கு இரு இடங்களில் காத்திருப்பார்கள். ஒன்று பச்சை பகுதி. இங்கு இருப்பவர்கள் கொஞ்சம் காத்திருக்கும்படி ஆகும். அடுத்தது சிவப்பு பகுதி. இங்கு ரொம்பவும் அவசர சிகிச்சை தேவைப்படுவோர் இருப்பார்கள். 

விஷம் குடித்தவர்கள், வலிப்பு வந்தவர்கள், மூச்சு தினறல் உள்ளவர்கள், விபத்தில் அதிகம் காயப்பட்டவர்கள், மாரடைப்பு வந்தவர்கள் என காத்திருத்தல் அதன் அபாயத்தை கூட்டிவிடக்கூடியவர்கள் இந்த சிவப்பு பகுதியில் இருப்பார்கள்.

எந்த நேரத்தில் என்னால் காத்திருக்க முடியும் என சொன்னேனோ தெரியவில்லை. அவரிடம் பெயரை பதிந்து பதிவு கட்டணத்தை இன்னொரு இடத்தில் கட்டுவதற்கு ஏறக்குறைய ஒரு மணி நேரம் ஆனது.

எனக்கு அடுத்ததும் உடனடி சிகிச்சை தேவைப்படுவோர் வந்து கொண்டே இருந்தார்கள். தொழிற்சாலை விபத்தில் சிக்கிய வெளிநாட்டுக்காரர். பள்ளிக்கூட விளையாட்டு சீருடையுடன் மூக்கு உடைந்து இரத்தம் கொட்டிக் கொண்டிருக்கும் சீன மாணவி. 
இரண்டாம் முறையாக மாரடைப்பு வந்த தமிழர். விஷத்தை கிடைத்த விட்ட தமிழ்ப்பெண்ணும் அவளது பெரிய குடும்பமும். சுவாசிக்க சிரமப்பட்டு கொண்டிருந்த சில வயோதிகர்களும் அவர்களது குடும்பமும் என எந்த நாற்காலியும் காலியில்லாதபடிக்கு ஆட்கள் நிறைந்திருந்தார்கள்.

நானும் இல்லாளும் மற்றவர்களுடன் சாலைக்கு அருகில் இருக்கும் சாக்கடைக்கு பக்கத்தில் (சாக்கடையை கம்பி போட்டு மூடியிருப்பார்கள்) அமர்ந்திருந்தோம்.

எனக்கு கொடுக்கப்பட்ட எண்ணை அழைத்தார்கள். உள்ளே சென்று மீண்டும் எனக்கு என்ன பிரச்சனை என சொல்லி பதிவிற்கான ஒரு ரிங்கிட்டை  கட்டினேன்.  அங்கு எனக்கு ஏழாம் அறையில் இருக்கும் மருத்துவரை சந்திக்க வேண்டும் எனச் சொல்லி அதே எண்ணை மீண்டும் அழைக்கும்வரை காத்திருக்க சொன்னார்கள்.

இதற்கிடையில் மணி பத்தை தாண்டியது. மதியம் நானும் இல்லாளும் சாப்பிடாததால் பசி எங்களை மேலும் சோர்வாக்கியது. பக்கத்தில் அங்காடி திறந்திருந்ததால் அப்போதைக்கு ரொட்டிகளை வாங்கி சாப்பிட்டோம்.

 நேரம் ஆகிறது. நோயாளிகள் கூடுகிறார்களே தவிர எனக்கு கொடுக்கப்பட்ட எண்ணை அழைக்கவேயில்லை. அதிலும் குறிப்பாக ஏழாம் எண் அறையில் இருக்கும் மருத்துவரை சந்திக்க எந்த நோயாளியும் அழைக்கப்படவில்லை.

வெளியில் லேசாக மழை தூறல் போட்டது. கொஞ்ச நேரத்தில் உடன் வந்திருந்த இல்லாளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு தலைவலியும் வந்துவிட்டது. அவரால் அங்கு உட்காரவும் முடியவில்லை. வாந்தி வருவதாகக் கூறினார்.

அவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனை கழிவறைக்குச் சென்றேன். நான் வாசலில் நின்று அவரை பார்த்து கொண்டிருந்தேன். உண்மையாகவே வாந்தி எடுத்தார். அந்தச் சத்தத்தில் எனக்கும் வாந்தி வந்தது. அவர் வந்ததும் பக்கத்து கழிவறைக்கு செல்ல நினைத்தேன்.
நான் நினைக்கவும் அவர் உள்ளிருந்து என்னைப் பார்க்கவும் சரியாக இருந்தது. மீண்டும் கண்ணாடி பக்கம் திரும்பி வாயைக் கொப்பளித்துக் கொண்டார்.

குடுகுடுவென என்னிடம் வந்தார். எனக்கு வாந்தியுடன் சேர்ந்து வயிறும் கலக்கியது. வந்தவரிடம் சொல்லிவிட்டு பக்கத்து கழிவறைக்கு செல்ல நினைத்தேன். வந்தவர் உடனே, "நீங்க அதைப் பார்த்தீங்களா?" என்றார். 

எனக்கு புரியவில்லை. "யாரை?" என்றேன்.

"அதான் நான் வாந்தி எடுக்கும்போது என் பின்னால நின்னாளே அந்த மலாய்க்கார பொண்ணுதான்..."

"என்னம்மா சொல்ற....!!!!"

"அங்கதான் நின்னுகிட்டு இருந்தா டக்குன்னு காணோம்.. அதான் வெளியே வந்தாளான்னு கேட்கறேன்..."

எனக்கு வாந்தியும் நின்றது வயிறும் சரியானது. இல்லாளை அழைத்துக்கொண்டு மறுபடியில் சாக்கடை கல் மீது அமர சென்றேன். மழையில் எல்லாம் நனைந்திருந்தன. கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டோம்.

மணி பன்னிரெண்டை நெருங்கியது. வீட்டில் இருந்து மனைவியின் அப்பா அழைத்தார். திடீரென பொம்மி அழத்தொடங்கிவிட்டாள் என கூறினார். வீடியோ காலில் இருவரும் பேசி சமாதானம் செய்தோம். ஏனோ அவள் சமாதானம் ஆகவில்லை. அழுகை அதிகமானது.

எனக்கும் இல்லாளுக்கும் மனசு சரியில்லை.  நான் பணம் கட்டியதில் இருந்து ஏழாம் எண் அறைக்கு எந்த எண்ணையும் அவர்கள் அழைக்கவில்லை. கூட்டம் கூடிக்கொண்டே போனது. எண்ணை அழைக்காவிட்டாலும் நாமே சென்று மருத்துவரைப் பார்க்கலாம் என்று இல்லாள் என்னை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.

வரிசையாக இருந்த அறைகளில் இரண்டில் மட்டுமே மருத்துவர்கள் இருந்தார்கள். ஏழாம் எண் அறையில் ஒரு மலாய் இளைஞன் கையொடிந்த நிலையில் கட்டு போட்டு அமர்ந்திருந்தான். 

அந்த இளைஞனிடம் மருத்துவரைப் பார்த்தாரா என கேட்டேன். வெளியில் நாற்காலி இல்லாததால் தான் இங்கே அமர்ந்திருப்பதாக சொன்னவர். தனக்கும் இந்த அறை எண் தான் கொடுத்த்தார்கள். அதான் முன்னமே வந்ததாகவும் ஒரு மணிநேரத்திற்கு மேலாக இந்த அறைக்கு யாரும் வரவில்லை என்றார்.

அந்த நேரம் என் பெயரை பதிவு செய்த பணியாளர் குறுக்கே நடந்தார். இந்த அறைக்கு மருத்துவர் வரவே இல்லையாம் என்றேன்.

ஒருகணம் நின்றவர் எங்களைப் பார்த்துவிட்டு நகர்ந்தார். செல்லும் வழியில் நான்காம் எண் அறையில் இருக்கும் மருத்துவரைக் காட்டி இதோ இவர்தான் ஏழாம் அறைக்கான மருத்துவர் என்றார்.

அந்த நான்காம் எண் அறையில் இரு மருத்துவர்களின் சிரிப்பு சத்தம் கேட்டு கொண்டிருக்க, ஒரு நோயாளி அந்த அறைக்கு நுழைந்தார்.

என்னைவிடவும் இல்லாளுக்கு கோவம் வந்துவிட்டது. உடனே என்னை இழுத்துக்கொண்டு நான்காம் என் அறைக்கு செல்கிறார்......

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஆகஸ்ட் 13, 2025

முடியாது என் கதை 2

(This is my personal story. You may read it if you wish)

தலையில் பட்ட அடி, பழைய வலியையும் அதனுடன் பழைய சிக்கல்களையும் கொண்டு வந்தது. புதிய வலி மறைய மறைய பழைய வலியும் வேதனையும் மெல்ல மெல்ல உள்ளே நுழைந்தன.

இரண்டாம் நாள் நடமாட முடியாத அளவிற்கு மயக்கம் அதிகமானதால் முதலில் வீட்டிற்கு அருகில் இருக்கும் தனியார் கிளினிக்கிற்கு சென்றோம்.

மருத்துவரிடம் என் பழைய மருத்துவ குறிப்புகளை இல்லாள் ஒவ்வொன்றாகச் சொன்னார்.

அதில் பலவற்றை நானே இன்று மறந்திருந்தேன்!

'இது கொஞ்சம் சிக்கலான கேஸ்... நீங்கள் மீண்டும் மருத்துவமனைக்கு தான் செல்லவேண்டும்' என்றவர், அவரின் கிளினிக் சார்பில் பரிந்துரை கடிதம் (referral letter) ஒன்றைக் கொடுத்தார். உடனே அரசாங்க மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவிற்கு செல்லும்படி கூறினார்.

வீட்டிற்கு வந்ததும் கொஞ்சம் ஓய்வெடுக்கும்படி ஆனது. உடல் ரொம்பவும் சோர்ந்திருந்தது. பொம்மிக்கு தேவையான உணவை தயார் செய்து சாப்பிட வைத்தோம்.

பின் பொம்மியின் தாத்தாவிடம் குழந்தையைக் கொஞ்ச நேரம் பார்த்துக்கொள்ளச் சொல்லி மருத்துவமனைக்கு புறப்பட்டோம்.

காரை ஓட்டுவதில் சிரமம் இருந்தது. இருந்தும், இல்லாளை பக்கத்தில் அமர வைத்து நானே காரை ஓட்டினேன்.

என்னிடம் இருந்து எல்லாமும் பறிபோயிருந்த காலகட்டத்தில் இருந்து இன்றுவரை என்னுடன் பயணித்து கொண்டிருக்கும் கார் அது. பலமுறை என்னைக் காப்பாற்றியுள்ளது. கோவிட் காலக்கட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க அந்தக் காரை தெரிந்த ஒருவருக்கு கொடுத்திருந்தோம். ஐந்து மாதங்கள் வரை பயன்படுத்தினார். மூன்று மாதங்களுக்கு மட்டும் கார் லோனை கட்டினார்.

பள்ளி பயிற்சி புத்தக விற்பனையாளராக இருந்த சமயத்தில் மலேசியாவில் உள்ள பெரும்பாலான தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கு ஏறக்குறைய ஐநூறு முதல் ஆயிரம் புத்தகங்கள்வரை இந்தக் காரிலேயே கொண்டு சென்றிருக்கிறேன்.

என் தூக்கமின்மைக்கு பல நாட்கள் தாலாட்டு பாடித நாற்காலிகள் அந்தக் காரில்தான் உள்ளன. எத்தனை நாட்கள் அந்தக் காரிலேயே கதறி அழுதிருப்பேன் என்பது எனக்கும் அந்தக் காருக்கும் மட்டுமே தெரியும்.

வேலை நிமித்தமாக இங்கிருந்து பல கிலோ மீட்டருக்கு சென்று தூக்க கலக்கத்தில் திரும்பும் போது பல தடவை அரை தூக்கத்தில் வந்திருக்கிறேன். சில சமயங்களில் எப்படி காரை ஓட்டினேன் என்று தெரியாத அளவிற்கு வீட்டிற்கு வந்திருக்கிறேன்.

அது இரும்போ இயந்திரமோ அல்ல என்னுடைய உண்மையான 'சகா'.

இப்போது கூட அந்தக் கார் கண்டிப்பாக ரிப்பேர் செய்யவேண்டிய நிலையில்தான் இருக்கிறது. ஆனாலும் செய்யவில்லை. கையில் காசிருக்கும் நேரத்திற்கு நானும் காத்திருக்கிறேன். நான்சொல்லும்வரை என் காரும் உயிரை பிடித்து உருண்டு கொண்டிருக்கிறது.

என்னைப்போலவே என் காரும் உள்ளுக்குள் உடைந்திருந்தாலும் உழைக்க தயாராய் இருக்கிறது. ஆனால் இப்படி சொல்வதை விடவும், 'உள்ளுக்குள் ஏதேதோ உடைந்திருந்தாலும் எப்போதும் உழைக்க தயாராய் இருக்கும் இந்தக் கார் போலத்தான் நானுமே இருக்கிறேன்' எனவே சொல்ல விரும்புகிறேன்.

இந்த நிலையில் மட்டுமல்ல வேறெந்த நிலையிலும் என் காரை இன்னொருவர் ஓட்டுவதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். என் அனுமதியை விட என் காரின் அனுமதிதான் இதற்கு முக்கியம்.

ஆகவே இல்லாளை அழைத்துக்கொண்டு என் சகாவுடன் பொது மருத்துவமனைக்குச் சென்றேன்.

ஆனால் அங்கு நடந்தது கொஞ்சமும் நாங்கள் எதிர்பார்க்காதது......


முடியாது என் கதை !


(This is my personal story. You may read it if you wish)


சில நாட்களுக்கு முன் கழிவறையில் மயங்கி விழுந்துவிட்டேன். தலையிலும் தோள்பட்டையிலும் அடி. இடது கண்ணில் இரத்தக்கட்டு வீக்கம்.


ஏறக்குறைய 3-4 நிமிடங்களில் நினைவு திரும்பி நானே எழுந்துவிட்டேன். அன்று முழுக்க ஒருவித மயக்கத்திலேயே இருந்தேன். அடிபட்ட இடத்தில் மட்டுமே வலித்ததால் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.


இரண்டாம் நாளில் அடிபட்ட வலி குறையவும்தான் இன்னொரு விபரீதம் புரிந்தது.

ஐந்தாண்டுகளுக்கு முன் விபத்தில்! தலையில் ஏற்பட்ட காயம் கொடுத்த அதே வலி மறுபடியும் வந்துவிட்டது.


அந்த வலி ரொம்பவும் மோசமானது, சட்டென எல்லாவற்றையும் மறக்கடிக்கும், உடல் அசைவுகளையும் பேச்சையும் மந்தமாக்கும். நேராக நடக்கவோ ஒரு பொருளை எடுக்கவோ முடியாது.

இன்னமும் அதன் சிக்கல்கள் அதிகம் இருக்கின்றன.


நேற்று விடியவிடிய அரசாங்க மருத்துவமனை அவசரப் பிரிவில் இருந்து வீடு திரும்பினேன்.

அங்குமே இதுவரை சந்திக்காத அனுபவமே ஏற்பட்டது.


இன்று காலையும் மருத்துவமனை சென்று பழைய, ஐந்தாண்டு மருத்துவ சிகிச்சை விவர குறிப்புகளை மீண்டும் எடுத்தோம்.

அந்தக் குறிப்புகளைப் பார்த்தவர் சட்டென என்னைப் பார்க்கலானார் 'நீ இன்னும் இருக்கியா..? ' என்பது போல இருந்தது.

அடுத்த சந்திப்பு இரண்டு வாரத்தில் அதற்கிடையில் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்கிற எச்சரிக்கையுடன் வீட்டிற்கு அனுப்பினார்கள்.


மனதில் பல குழப்பங்களுடன் வீட்டிற்கு வந்தேன். பொம்மி ஓடி வந்து கால்களைக் கட்டிக்கொண்டு கொண்டாடினாள்.

இன்று அப்பா என்ன கொண்டு வந்திருக்கிறார் என்கிற எதிர்பார்ப்பில் என் கைகளைப் பார்த்தாள்.


அப்பா இன்று பழைய நோயுடன் தான் வந்திருக்கிறேன் என எப்படி சொல்ல முடியும்!


அவளை வாரி அணைத்துக் கொண்டேன். கண்கள் கலங்கின. பால்கனிக்கு வந்து நின்றேன். சூரியன் உச்சந்தலையில் சுட்டது. என் முடிவு ஒரு போதும் இப்படியாக முடியவே முடியாது என்று சத்தமாகச் சொன்னேன். எங்கோ பறந்த பறவையின் நிழல் எங்கள் மீது பட்டுவிட்டு போனது.


சூரியன் கொடுத்த உஷ்ணத்துடன் பொம்மிக்கு மீண்டும் ஒரு முறை முத்தமிட்டேன்.


"என் கதை ஒருபோதும் இப்படியாக முடியாது. முடியவே முடியாது..." என்று எனக்கு நானே உறுதி எடுத்து கொண்டேன்


இயற்கை காரணமின்றி ஒருவனைக் காப்பாற்றிவிடாது.

அதே போல என்னைக் காப்பாற்றுவதற்கு இயற்கைக்கு ஒரு காரணத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே எழுதும் பேனாவை இன்னும் நெருக்கமாகப் பிடித்துக்கொள்கிறேன்.


தொடருமான்னு தெரியல, தொடர்ந்தால் எழுதுகிறேன்....


- அதிகம் எழுத முடியவில்லை. நினைவில் பிழை வருவதற்குள் எழுதியுள்ளேன்.

- அதே போல நடந்த எல்லாவற்றையும் எழுதவில்லை.


















ஜூலை 15, 2025

- மனம் பிரார்த்தனை மறதி -



நாங்கள் வேண்டுவதை

கொடுக்கிறாயோ இல்லையோ

இன்னும்கூட

வேண்டுவதற்காக எங்களை

விட்டுவைத்திருக்கிறாயே


அதற்காகவாவது

இரவு

தூங்கும் முன்

ஒரு முறையும்

காலை

விழித்த பின்

ஒரு முறையும்

உன்னிடம்

வேண்டிகொள்கிறோம்


தவிர

எங்களின்

மற்ற வேண்டுதல்கள் எல்லாம்

எங்களுக்கு

மறந்தே போனது


இறைவா....



ஜூலை 07, 2025

- 2025-இன் நான்கில் இரண்டு -


2025-ஆம் ஆண்டின்  நான்கின் இரண்டாம் பகுதியைக்  கடந்துவிட்டோம். இந்த ஆண்டில் நமக்கு கொடுக்கப்பட்ட நாட்களில் நான்கில் இரு பகுதிகள் முடிந்தன. 

முதற்பகுதியில் நான் வாசித்தவைக் குறித்து முன்னமே எழுதியிருந்தேன்; இது அதன் இரண்டாம் பகுதி. மார்ச் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை வாசித்த புத்தகங்களைக் குறித்த சிறு பகிர்வு. 

சமீபத்திய இணைய நிகழ்ச்சி ஒன்றில் எழுத்தாளரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இளம் வாசகர் ஒருவர் அந்த எழுத்தாளர் என்ன வாசிக்கின்றார் என கேட்டார். சற்று யோசித்த எழுத்தாளர் இப்படியாக பதில் சொன்னார்.
“நான் பல வேளைகளில் பல புத்தகங்கள் வாசிப்பேன். கழிவறையில் கூட நான் புத்தகம் வைக்கிறதுக்கு இடம் வச்சிருக்கேன்…” இந்தப் பதில் அந்த இளம் வாசகருக்கு மேலும் ஆர்வத்தைத் தூண்டியிருக்க வேண்டும். அவர் திரும்பவும் கேட்டார், “சிறப்பு ஐயா.. என்னென்ன புத்தகங்கள் வாசிக்கிறீங்க..?”

அந்த எழுத்தாளரின் பதில், “அதேன் சொன்னேன்ல… இதைதான் வாசிக்கிறென்னு இல்ல..  பல புத்தகங்களைப் பல சமயத்தில் வாசிக்கிறேன்.. ஏன்னே அப்பதான் நம்மால தொடர்ந்து இந்த எழுத்துத்துறையில் இயங்க முடியும்.. இல்லைன்னா கஷ்டமாகிடும்..”
கடைசிவரை தான் என்ன வாசிக்கிறேன் என்பதை அந்த எழுத்தாளர் சொல்லவேயில்லை. 

அவருக்கு அந்தத் தயக்கம்  வர என்ன காரணமாக இருக்க வேண்டும் என்பதை தொடர்ந்து பல நாட்களாக யோசித்தேன். இதற்கெல்லாம பல நாட்கள் யோசிப்பீங்க..? என நீங்கள் கேட்கபது எனக்கும் விளங்கியது.

வாசிப்பென்பது தனிமனித செயல்பாடு. ஒரே புத்தகத்தை இருவர் வாசித்தால் இருமாதிரியான அனுபவத்தைதான் அது அவர்களுக்கு கொடுக்கும். கூட்டு வாசிப்பிலும்கூட ஒரே புத்தகம் பலருக்கு பல வித வாசிப்பு அனுபவங்களைக் கொடுக்கின்றன. அதன் இலக்கு ஒன்றை நோக்கியதாக இருந்தாலும் அதில் செல்லும் வழிகள் வெவ்வேறானவை.

தான் வாசித்ததை இன்னொருவனும் வாசித்துவிட்டால் அவனுக்கும் நமக்குமான இடைவெளி குறைந்துவிடுமே என அச்சப்படும் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் அதன் சதவீதம் குறைவுதான். அதைத்தவிர்த்து பலரும் தனித்தனியாகவோ குழுக்களாகவோ தாங்கள் வாசித்த புத்தகங்களை தொடர்ந்து பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நானும் அவர்களில் ஒருவன்தான். 

வாசித்த புத்தகங்களைக் குறித்து பேசுவதும் பகிர்வதும் வாசிப்பின் சுவையை இரட்டிப்பாக்குகிறது. அதோடு அதைப் பற்றி பேசும்போது அது மேலும் சுவையாகிறது.
இவ்வருடம் தொடர்ங்கி மார்ச் மாதம் வரை 17 புத்தகங்களை வாசித்திருந்தேன். அதுபற்றியப் பகிர்வை சிறு குறிப்புடன் எழுதியிருந்தான். 

இப்பதிவு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை வாசித்த புத்தகங்கள் பற்றியதாக இருக்கும்.
நாவல்கள். மாதம் ஒரு நாவல் என்கிற எனது திட்டமிடலில் வந்திருக்கும் மூன்று நாவல்கள்.

18. அஹில்லா – நிலவின் 28 தோற்றங்கள்

- இது சூஃபி நாவல். முஅதஸ் மத்தர் எழுதி ரமீஸ் பிலாலி தமிழாக்கம் செய்திருந்தார். அருங்காட்சியகத்தில் வேலை செய்யும் வாய் பேச முடியாத மனிதனி எதிர்கொள்ளும் சிக்கலைச் சொல்லும் நாவல். ஒருபக்கம் அங்குள்ள ஒரு பொக்கிஷயத்தை திருடவேண்டிய நிர்பந்தம் இன்னொரு பக்கம் அங்கு அவனுக்கு ஏற்படும் காதல். அந்த பொக்கிஷயம் என்ன என்பது நாவலில் இன்னொரு பகுதியாக விரிந்து செல்லும். துப்பறியும் நாவலை வாசிக்க விருப்பம் உள்ளவர்கள் இந்நாவலை வாசிக்கலாம். அவர்களுக்கு ஒரு மாறுபட்ட வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும். ஆனால் இந்நாவலின் முடிவை என்னை ஈர்க்கவில்லை.

19. சித்தார்த்தன்

- ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய திருலோக சீதாராம் தமிழாக்கம் செய்திருக்கும் நாவல். நீங்கள் ஒருமுறையேனும் இந்நாவலை வாசித்துவிடுங்கள். தாமதமாக இந்த நாவலை வாசித்துவிட்ட உணர்வை இந்நாவல் எனக்கு கொடுத்தது. வாழ்வின் அர்த்தம் எப்படி ஆளுக்கு ஆள் மாறுபடுகின்றது என்பதைத் தொடர்ந்து மனித மனம் எப்படியெல்லாம் நம்மை அலைக்கழிக்கும் என்பதை ரொம்பவும் ஆழகமாக இந்நாவலில் சொல்லப்பட்டிருக்கும்.

20. ஆலிஸின் அற்புத உலகம்

- லூயி கரோல் எழுதிய இந்நாவலை எஸ்.ராமகிருஷ்ணன் தமிழாக்கம் செய்திருக்கிறார். உலக புகழ்பெற்ற இந்நாவல் திரைப்படமாகவும் வந்திருக்கிறது. கற்பனையின் ஆழம் எதுவரை செல்லும் என நமக்கு காட்டும் நாவல்களில் இதுவும் ஒன்று.
கவிதைகள்

21. காட்டோவியம்

- ஜீ.முருகனின் கவிதைத்தொகுப்பு. எனக்கு அவரது சிறுகதைகளைப் பிடிக்கும் பல கதைகளை வாசித்து நண்பர்களுடன் உரையாடியுள்ளேன். முதன் முறையாக அவரது கவிதைகளை வாசிக்கின்றேன். பெரும்பாலான கவிதைகள் வாசகனோடு உரையாடுவதாக அமைந்திருந்தன.

சிறுகதைகள்/குறுங்கதைகள்

22. தீர்மானம்

- எழுத்தாளர் ரிஸ்வான் ராஜாவின் சிறுகதைகள். 11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. இதில் சில கதைகளைக் குறித்து விரிவாக பேச வேண்டும் என விரும்புகின்றேன். முழுமையான ஒரு கட்டுரையுடன் வருகிறேன்.

23.  ஆப்பிள் துப்பாக்கி பெட்ரோல் நிலையம்

- த. அரவிந்தனின் குறுங்கதைகள். 64 குறுங்கதைகள் அடங்கிய தொகுப்பு. சில கதைகளை இருமுறைக்கும் அதிகமாக வாசித்த பின்னரே புலப்பட்டது. ஏமாற்றாத குறுங்கதைகள் இவை. பலவிதமான குறுங்கதைகளை வாசித்த அனுபவத்தைக் கொடுத்தது.

கட்டுரைகள்

24. புனைநிலை உரைத்தல்

- மலேசிய எழுத்தாளர்கள் 4 பேரின் படைப்புலகம் பற்றிய விமர்சனக்கட்டுரை தொகுப்பு.

அடுத்து 'மாதம் ஒரு மலேசிய புத்தகம்' தொடருக்காக வாசித்தவை (சில மீள்வாசிப்பு)

25. நாகம்மாளின் மனக்குறிப்புகள்
- மனோகரன் கிருஷ்ணன் சிறுகதைகள்

26. மா.சண்முகசிவா சிறுகதைகள்
- எழுத்தாளரும் மருத்துவருமான மா.சண்முகசிவாவின் சிறுகதைகள்

27. மண்புழுக்கள்
- சீ.முத்துசாமியின் நாவல்

இந்த மூன்று புத்தகங்கள் குறித்தும் விரிவான அறிமுகத்தை நடுகல்.காமில் எழுதியுள்ளேன். நண்பர்கள் அங்கு சென்று வாசிக்கலாம்.

ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை வாசித்த புத்தகங்கள் இவை. வாசிப்பில் எத்தனை புத்தகங்களை வாசிக்கின்றோம் என்பதை விட 'வாசிக்கிறோமா?' என்கிற கேள்விதான் முக்கியம் என நம்புகின்றவன் நான். தினம் ஒரு பக்கத்தை புரிந்து ரசித்து வாசித்தாலும் கூட நாம் வாசகர்கள்தான்.   

இந்த ஆண்டின் இரண்டாம் பகுதியை முடித்து மூன்றாம் பகுதிக்குள் நுழைகின்றோம். அடுத்ததாய் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர்  மாதங்களில் வாசிப்பின் ருசி என்னவாக அமைகிறது என பின்னர்தான் தெரியவரும். வாசிப்போம்.

உங்களுக்கு எப்போதும் என் அன்பு..

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்