பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 07, 2025

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 7/20


-மலேசியா வருகிறார் பெருமாள்முருகன்-

பெருமாள்முருகன் சிறுகதை 7/20

முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.
****************************

ரொம்பவும் சுவாரஸ்யமானவர்கள் என்றால் நண்பர்களைச் சொல்லலாம். அவர் ஒன்று சேர்ந்தால் என்ன செய்வார்கள் ஏது செய்வார்கள் என்று அவர்களாலேயே கணிக்க முடியாது. ஒரே ஒரு நண்பனை வைத்து சிரமப்படும் நபர்களும் இருக்கிறார்கள். அதிகமான நண்பர்களை வைத்துகொண்டு சிரமமே இல்லாமல் வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள்.

'உன் நண்பன் யாரென்று சொல், நீ யாரென்று சொல்கிறேன்' என்பதை வெறுமனே யாரும் சொல்லவில்லைம். அதற்கும் ஆயிரம் மர்மங்கள் அடங்கியிருக்கின்றன. நம்மை அதிகம் காப்பாற்றுவதும் நட்பியான் நம்மை அதிகம் காயப்படுத்துவதும் நட்புதான்.

நட்பு என்ற பெயரில் எந்த ஒழுக்கக்கேடுகளை செய்யவும் துணிகிறார்கள். ஒருபோதும் நட்பிற்கு 'கெட்ட பெயர்' வரகூடாது என காக்கின்றவர்களும் இருக்கிறார்கள்.

இவ்வளவு சொன்ன பிறகு இன்றைய கதைக்கரு என்னவென்று உங்களுக்கும் தெரிந்திருக்கும்.


இன்றைய சிறுகதை, பெருமாள்முருகனின் 'பந்தயம்'.

முருகேசும் வீரேஷும் நண்பர்கள். பலமுறை கொடுக்கல் வாங்கள் எல்லாம் செய்தவர்கள். திடீரென்று ஒருநாள், விரேஷ் அழைத்து தனக்கு அவசரமாக பத்தாயிரம் ருபாய் தேவைப்படுவதாக சொல்லி உடனே பணம் போட சொல்கிறான். எந்தக் காரணத்தை அவன் சொல்லவில்லை.

முருகேசுவிற்கு ஒரே குழப்பம். திடீரென எதற்கு இவ்வளவு பணம் கேட்கிறான். வழக்கமாக நூறு இருநூறுதான் கேட்பாம். அதுவும் வீட்டிலிருந்து பணம் போட்டதும், திருப்பி கொடுத்துவிடுவான். இப்படி அவசரமாக கேட்க என்ன காரணம். ஏதும் சிக்கலில் மாட்டிகொண்டானா, தவறான காரியத்திற்கு கேட்கிறானா, சூதாட்டத்தில் சிக்கி கொண்டானா என பலவாறு குழம்புகிறான் முருகேசு. விரோஷின் அப்பாவிடம் இதுபற்றி சொல்லலாமா, அப்படி சொன்னால் அவன் சங்கடப்படுவானோ, அல்லது அவனிடமே காரணம் கேட்டுவிடலாம், பணம் இல்லை என்று சொல்லிவிடலான் என மேலும் மேலும் தன்னை குழப்பிக்கொள்கிறான்.

குழப்பத்தை மேலும் அதிகப்படுத்தாமல், நண்பன் கேட்ட பணத்தை கொடுக்க முடிவு செய்கிறான். திருப்பி கொடுத்தாலும் சரி கொடுக்காவிட்டாலும் சரி. அந்தப் பணத்தை திரும்பி கொடுக்கும் வரையும் அவனும் பணம் கேட்க மாட்டான். இனியும் கொடுக்கலமா வேண்டாமா என யோசித்தால் மனம் இங்கும் அங்கும் தாவிக்கொண்டிருக்கும். அது நட்பையும் கெடுத்துவிடக்கூடும்
என முடிவெடுத்து அவன் கேட்ட பணத்தை கொடுக்கிறான்.

நண்பனுக்கு பணம் அனுப்பிய சில நிமிடங்களில் தன் வங்கிக்கே பணம் வந்துவிட்டதாக கைப்பேசியில் குறுஞ்செய்தி வரவும், குமரேசுவிற்கு ஒன்றும் புரவில்லை. ஒருவேளை பணம் போகவில்லையோ என நினைத்து நண்பனை அழைக்கின்றான்.

அப்போதுதான் அந்தப் பந்தயத்தைப் பற்றி நண்பன் சொல்கிறான். தனது பயிற்சி மையத்தில் உள்ள ஒருவனோடு நட்பு குறித்த பேச்சு எழுந்து அது விவாதமாக மாறி பந்தத்திற்கு இழுத்துவிட்டதாம். நண்பனிடம் காரணம் சொல்லாமல் பத்தாயிரம் ருபாய் கேட்கவேண்டும். நண்பன் கொடுக்கிறானா இல்லையா என்பதுதான் பந்தயம். முருகேசு கொடுத்த பணத்தால் பந்தயத்தில் நண்பன் வென்றுவிட்டான். அதுதான் பணத்தை திரும்ப கொடுத்துவிட்டேன் என்பதோடு பந்தயத்தில் கிடைத்த ஐநூறு ருபாயையும் சேர்த்து அனுப்பியுள்ளதான சொல்ல கதை முடிகிறது.

இது சாதாரண கதை போலத்தானே இருக்கிறது. நண்பன் ஒருவனிடம் பந்தயம் கட்டுகிறான். ஒரு சோதனையைச் செய்கிறான். கடைசியில் பந்தயத்தில் நண்பன் ஜெயிக்கிறான் அவ்வளவுதானே.

இல்லை இந்தக் கதையில் 'அந்த அவ்வளவு' இல்லை. இன்னொரு அளவு இருக்கிறது.

இந்தப் பந்தயம் வீரேஷ் தன் நண்பன் முருகேசுவிற்கு வைத்தது அல்ல. முருகேசு தன் நண்பன் வீரேஷ் மீதும் அவனது நட்பின் மீதும் தனக்கு இருக்கும் நட்பு எப்படிபட்டது எனக்கு தனக்குத்தானே நிரூபிக்க நடந்த பந்தயம்.

இதில் வென்றது வீரேஷ்தான் என்றாலும் உண்மையில் வென்றது முருகேசுதான். அதனால்தான் என்னவோ பந்தயத்தில் வென்ற பணம் முருகேசுவிற்கு வந்து சேர்ந்திருக்கிறது.

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 6/20


-மலேசியா வருகிறார் பெருமாள்முருகன்-

பெருமாள்முருகன் சிறுகதை 6/20
 
முன்குறிப்பு:  டிசம்பர் 21-ம்  நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு

இன்றைய ஆறாவது சிறுகதை 'நாய்'.

'தவறான இரயிலில் ஏறிவிட்டோம் என தெரிந்ததும்  நாம் செய்யவேண்டிய அடுத்த நிறுத்தத்தில் இறங்கவேண்டியதுதான்'. ஐயோ தவறான இரயிலில் ஏறிவிட்டோமே என புலம்புவதாலும் இந்த இரயில் எங்கே போனாலும் நல்ல இடமாகத்தான் இருக்கும் என நம்பும் குருட்டு நம்பிக்கையும்ல்லா நேரங்களிலும் நமக்கு சாதமாக அமைந்துவிடு்வது அல்ல.

அப்படித்தான் இங்கு ஒரு பெண். வாழ்க்கையென்னும் நெடும்பயணத்தில் தப்பான நபருடன் பயணிக்க தொடங்குகின்றாள். அது சரிவராது என தெரிந்ததும் அவள் எடுக்கும் முடிவுதான் பெருமாள்முருகன் எழுதியிருக்கும் 'நாய்' என்னும் சிறுகதையின் கரு.

ரொம்பவும் அலட்டிக்கொள்ளாத ஒரு துண்டு சீட்டில் சொல்லிவிடக்கூடிய கதைதான். பத்திரிகை செய்தியாக கூட இக்கதையை நாம் வாசித்திருக்கலாம். ஆனால் அதனை ஒரு கதையாக எடுத்து வாசகர் முன் காரண காரியத்தோடு வைத்திருக்கின்றார் எழுத்தாளர்.

ஓடிப்போகும் பெண்களின் கதைகளை நாம் எவ்வளவோ பார்த்திருப்போம் எவ்வளவோ கேள்விபட்டிருப்போம். ஓடிப்போய் ஏமாற்றப்பட்டு அவமானத்துடன் வீட்டிற்கு வந்த பெண்களைப் பற்றியும் நமக்கு தெரியும். 

'நாய்' சிறுகதையில் ஒரு பெண் வருகின்றாள். தன் காதலை தன் காதலனை நம்பி அவனுடன் ஓடிப்போகின்றாள். அவனது நண்பன் வீட்டில் அவர்கள் தங்குகிறார்கள். 

மறுநாள் அவள் காதலனை காணவில்லை. முதல் நாள் தன் அம்மாவிடம் பேசியவன்; என்ன பேசினானோ தெரியவில்லை. நம்பி வந்தவளை விட்டுவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் சொந்த வீட்டுக்கே போய்விட்டான். 

நண்பன் விசாரிக்கவும் விபரம் தெரிகிறது. தன் அம்மா தற்கொலை செய்துவிடுவேன் என சொல்லி பயம் காட்டியதால் கிளம்பிவிட்டான். ஆனாலும் பெண் வீட்டில் விசயம் தெரிந்து சண்டை சச்சரவுகள் முடிந்து அவர்கள் இருவருக்குமே திருமணம் நடத்த முடிவாகிறது. 

தன் வீட்டில் இருக்கும் பெண்ணை நண்பன் அவளது காதலன் வீட்டிற்கு அழைத்து செல்கிறான். காதலனோ தான் செய்தது தவறு என்றும் அம்மா அப்படி சொன்னதும் அவனுக்கு வேறு வழி தெரியவில்லை என்றும் கூறி நண்பனிடம் மன்னிப்பு கேட்கிறான்.

அங்குதான் எழுத்தாளர் அந்தப் பெண்ணை ஒரு காரியம் செய்யவைக்கிறார். எந்தக் காதலனை நம்பி போனாளோ அந்தக் காதலனை திட்டிவிட்டு, அவனை நம்பி திருமணம் செய்ய முடியாது என்று கூறுகிறாள். அதோடு நிற்காது. இவனோடு தான் ஓடிப்போகவில்லை. தன் அண்ணன் வீட்டிற்குதான் சென்று வந்தேன் என்றும் கூறுகிறாள். அந்தப் பெண் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துவிட்டாள். இனி யார் என்ன சொன்னாலும் அவள் அவற்றை பொருட்படுத்தப் போவதில்லை.

அந்தப் பெண் தான் நம்பி ஏறிய இரயில் தவறான பாதைக்கு செல்கிறது என தெரிந்ததும் உடனே இறங்கிவிட்டாள். அதோடு இனி ஒருபோதும் தவறான இரயிலை தேர்ந்தெடுக்கவும்ாட்டாள்.

பெருமாள்முருகனின் சிறுகதைகளில் காட்டப்படும் பெண்கள் பலவீனமாக இருப்பதுபோல தெரிந்தாலும் நம்மால் அந்தப் பெண்களைக் குறைத்து மதிப்பிட முடியாதபடிக்கு பெண்களை எழுதி அவர்களின் கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்துவிடுகின்றார்.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

டிசம்பர் 06, 2025

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 5/20


பெருமாள்முருகன் சிறுகதை – அருவி 5/20

முன்குறிப்பு:  டிசம்பர் 21-ம்  நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு. 

இப்போது இன்றைய 5வது கதைக்கு போவோம்.

         எப்போது கடைசியாக அழுதீர்கள் என்று யாரையும்  கேட்க முடிவதில்லை. எது கடைசி என சொல்ல முடியாத அளவிற்கு ஆளுக்கு ஆள் அழுது கொண்டிருக்கிறோம். அவ்வப்போது அழுவதும் மன அழுத்தத்திற்கு நல்லது என சொல்லவும் ஆரம்பித்துவிட்டோம். அதற்கு ஏற்றார்ப்போல அழுது முடித்தபின் கோவமும் கவலையும் அதன் சதவிதத்தைக் குறைத்து கொள்கிறது. மனதில் தேத்தி வைத்திருக்கும் சோகமெல்லாம் அழுவதால் கொஞ்சம் குறையுமென்றால் அட்டவணை போட்டும் அழலாம் தவறில்லை என்றே தோன்றுகிறது.

         சோகத்தில் அழுவதும் மனதில் இருக்கும் சோகத்தை வெளியேற்ற அழுவதும் ஒன்றல்ல  வெவ்வேறானது. அழுவதற்கு என்றே கலை இலக்கியத்தில் தன்னை ஈடுபடுத்தி கொள்பவர்களை நாம் பார்க்கிறோம். தத்தம் துயரத்தை தான் வாசிக்கும் கதைகளில் தான் கேட்கும் பாடல்களில் தான் பார்க்கும் சினிமாக்களில் வைத்து அழுது தங்கள் மனதை தேற்றிக்கொள்கிறவர்கள் ஏராளம்.

          இன்று வாசித்த பெருமாள்முருகனின் சிறுகதை, ஏனோ என்னை அழ வைத்தது. உணவகத்தில் எனக்கு பிடித்த இஞ்சி டீயைக் குடித்துக்கொண்டே படித்துக்கொண்டிருந்தேன். கதையின் முடிவை நெருங்கவும் கண்கள் கலங்கிவிட்டன. கலங்கிய நீர் வெளியேவும் வந்துவிட்டது.

கடையில் வேலை செய்கிற அண்ணன் வந்து விசாரித்தார். வாசித்த கதையை அவரிடம் சொன்னேன். அவரும் அவரது பழைய நண்பர்களும் அவர்களின் குடும்பமும் நினைவுக்கு வந்துவிட்டதாய்ச் சொன்னார். மீண்டும் அந்தக் காலமும் அந்த அன்பும் கிடைக்காது என்றவர் அவர் வேலையைப் பார்க்கச் சென்றார்.

அப்படியென்றால்  இது யாரும் சொல்லாத கதையா என்று கேட்டால்; பதில் இல்லை. பலர் சொன்ன இனியும் சொல்லப்போகிற கதைக்கருதான். அதனை எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய விதம் நமக்கு அந்தக் கதையை நெருக்கமாக்கிவிட்டது.

நான்கு நண்பர்களை மையப்படுத்திய கதை. நான்கில் ஒருவருவருக்கு மட்டும் முதலில் வேலை கிடைக்கிறது. நண்பர்கள் நால்வரும் அருவிக்கு செல்கிறார்கள். சொல்லி வைத்தார்போல முதலில் வேலை கிடைத்த நண்பன் அருவியில் தவறி விழுந்து இறக்கின்றான். மற்ற மூவருக்கும் சிறுசிறு காயங்களே. இவர்கள்தான் பொறாமையில் சூழ்ச்சி செய்து நண்பனைக் கொன்றுவிட்டார்கள் என ஊரும் இறந்தவனின் உறவுகளும் பேசுகின்றன. இவர்களையும் ஏதாவது செய்துவிடுவார்களோ என மற்ற மூவரும் பயப்படுகின்றார்கள். எல்லாவற்றையும் மீறி என்ன நடந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து மூன்று நண்பர்களும் இறப்பு நடந்த வீட்டிற்கு செல்கிறார்கள்.

நம்மால் அங்கு அடுத்ததாய் நடக்கவிருப்பதை ஓரளவிற்கு யூகிக்க முடிந்தாலும் நம்மையும் கலங்கடிக்கும் வகையில் இந்தச் சிறுகதையை எழுத்தாளர் முடித்திருப்பார்.

இறந்தவனின்  தாயார் தன் மகனின் இறப்பை எப்படி எடுத்துக்கொண்டார். இந்த மூவறையும் எப்படி பார்க்கிறார் என கதை சொல்லப்பட்டவிதம் நன்றாக இருந்தது. சில சாதாரண விடயங்கள் கூட சொல்லும் முறையில் அசாதாரணமாக மாறிவிடுகின்றன.

பொருமாள்முருகனின் ‘அருவி’ சிறுகதையை நீங்கள் வாசிக்கும் போது உங்களை அழ வைக்கிறதோ இல்லை; உங்களின் நண்பர்களையும் அவர்களுடன் இருந்த நேரத்தையும் நினைத்துப் பார்க்க வைக்கும். முடிந்தவர்களை மீண்டும் தொடர்பு கொள்

நம்மை அழவைக்க பெருந்துயரங்களால் மட்டுமல்ல சிறுசிறு மன்னிப்புகளாலும் முடியும்தானே..

டிசம்பர் 05, 2025

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 4/20


'மலேசியா வருகிறார் பெருமாள்முருகன்'

‘தினம் ஒரு பெருமாள்முருகன் சிறுகதை –  4/20

முன்குறிப்பு டிசம்பர் 21-ம்  நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு. 

இப்போது இன்றைய 4வது கதைக்கு போவோம்.

         ஒரு சிறுகதையை வாசிக்கின்றோம். அதை அப்படியே புரிந்து கொள்ளவேண்டுமா? அல்லது நமக்கு ஏற்றார் போல மாற்றிக்கொள்ள வேண்டுமா? ஒருவேளை இந்தக்கதையில் இவர் பக்கம் இருக்கும் நியாயத்தை சொல்லியிருக்கலாமோ என யோசிப்போமா? அல்லது கதையில் ஆணாய் உள்ளவரை பெண்ணாகவும் பெண்ணாய் உள்ளவரை ஆணாகவும் மாற்றிக் கொண்டு அப்படி இருந்திருந்தால் என்ன நடந்திருக்கக்கூடும் என சிந்திப்பது நாம் வாசித்த சிறுகதையையும் தாண்டி வாழ்க்கைக்கு பயன்படலாம் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?

    இப்படி பலவகையான கேள்விகளுக்கு காரணமாக அமைந்தது பெருமாள்முருகன் எழுதிய ‘பசி’ என்னும் சிறுகதை.

      புதிதாக திருமணம் ஆன தம்பதிகள், வேலை நிமித்தம் ஆளுக்கு ஓரிடத்தில் இருக்கின்றார்கள். கணவன் தன்னுடைய கிராமத்தில் விவசாயத்தைப் பார்த்துக் கொள்கிறார்.  மனைவி பல மைல் தூரத்தில் வேலை என்பதால் அங்கேயே தங்கி வேலைக்குச் செல்கிறார். அதுவும் திருமணம் முடிந்த பின்னர்தான் மனைவிக்கு வேலை கிடைத்திருக்கிறது. இப்போதைக்கும் வேலையிடத்தை மற்றுவதற்கான சூழல் இல்லை. ஆகவே இப்படியே விடுமுறைக்கு மட்டுமே வீட்டிற்கு வருவதும் போவதுமாக இருக்கிறார்.

      கிடைக்கும் விடுமுறைக்கு வீட்டிற்கு வரும் மருமகளுக்கு ஓய்வே இல்லாத வேலையைத்தான் மாமியாரும் எடுத்துவைக்கின்றார். ஓய்வெடுக்கவோ கணவனுடன் கலந்து பேசவோகூட போதுமான அவகாசம் பல சமயங்களில் கிடைக்கவில்லை. ஆனாலும் கல்யாணமாகி ஓராண்டு ஆகியும் குழந்தை இல்லாததை அம்மா மகனிடம் புகார் சொல்வதை மறக்கவில்லை.

        இதற்கிடையில்தான் இருவருக்கும் பக்கமாக இருக்கும் ஓர் ஊரில் உறவினர் திருமணம் நடக்கவிருக்கிறது. உடனே அங்கு சந்திக்கலாம். அங்கு தங்கிக்கொள்ள நமக்கென்றும் தனியாக அறை ஏற்பாடு செய்யலாம் என மனைவியையும் அங்கு வர சொல்கிறார் கணவன்.

       மனைவியும் அங்கு வருகின்றார். கணவன் வர தாமதமாகிறது. கணவன் வரும்வரை மனைவியை சாப்பிடாமல் காத்திருக்கச் சொல்கிறார். மனைவிக்கோ நல்ல பசி. கணவன் வந்து சேர்ந்ததும் மனைவியிடம் தங்களுக்கான தனி அறை எங்கே என கேட்டு முதல் வேலையாக அறையைத் தேடுகிறார். அவர்களுக்கு என்று தனியே அறை சாத்தியமற்றதாகிறது. கணவனுக்கு அதனால் கோவம் வர, ஏற்பாடு செய்ய சொன்னவரிடம் பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று தங்களுக்கான அறையைக் கேட்கிறார்.    
   
            மீண்டும் முயற்சிப்பதாக சொல்லி முதலில் இருவரையும் சாப்பிடச் சொல்கிறார் ஏற்பாடு செய்பவர். கணவன் சாப்பிட மனைவிக்கு பசியே இல்லாமல் போனது. கணவனுக்கு கவனமோ சாப்பாட்டில் இல்லை. தனி அறை சாவி வாங்குவதில்தான் இருக்கிறது. குனிந்த தலை நிமிராது மனைவியும் சாப்பிட்டு முடிக்கிறார்.

       ஒருவழியாக அறை கிடைக்கிறது. 
மணமக்களைகூட நாளை காலையில் சந்தித்துக் கொள்ளலாம் என்று அவசர அவசரமாக விடுதி அறைக்கு மனைவியை அழைத்துச் செல்கிறார் கணவன். அறைக்கு வந்ததும் கதவைச் சாத்திவிட்டு மனைவியின் இடுப்பில் கைகளை வளையமிட்டு கட்டியணைக்கின்றார்.

    அவளோ ‘சீ..போ’ என்று அவனை தள்ளிவிட்டு கட்டிலில் குப்புற விழுந்து அழ ஆரம்பிக்கின்றாள் என்று கதை முடிகிறது.

     எல்லாமே சுமூகமாக நடந்திருந்தால் மனைவி அழுதிருப்பாரா என முதல் கேள்வி எழுகிறது. இருவருமேதான் பிரிந்து வாழ்கிறார்கள். இருவருமேதான் சேர்ந்திட விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள். ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வரும்போது ஏன் மனைவியால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருவேளை இதுபோன்று ஒரு பெண் தன் கணவனை இப்படி அவசரப்படுத்தினால் நம்மால் அதனை ஏற்றுக்கொள்ள முடியுமா? இப்படி பல கேள்விகளை நம்மால் அடுக்கிக் கொண்டே போக முடியும்.

    இதில் இன்னொரு விடயமுமே இருக்கிறது. கணவன் மனைவி உறவு வெறும் தனி அறையில் மட்டுமே நெருக்கமாவது இல்லை. பொதுவெளியில் இருவரும் ஒருவருக்கொருவரை எப்படி நடத்துகிறார்கள் என்பது அடிப்படையான கேள்வி. 

     மனைவியை கணவன் வெறும் உடலாகப் பார்த்து பாவிக்க நினைப்பதுதான் மனைவியை அழ வைத்திருக்க வேண்டும். இங்கு வந்ததும் மனைவியைப் பார்த்து சிரித்தபடி முதலில் ‘ரூம் எங்க?’ என்று கணவன் கேட்டதுமே மனைவி உள்ளுக்குள்ளே அழத் தொடங்கியிருப்பாள். ஒருவேளை இருவருக்கும் இடையில் புரிந்துணர்வும் அன்பும் காதலும் முதன்மையாக இருந்திருந்தால் கணவனின் கேள்விக்கு மனைவி வெட்கப்பட்டிருக்கலாமோ என்னவோ.

   ஒருவேளை நீங்கள் இந்தக் கதையை வாசிக்கும்போது கணவனின் செயலில் உங்களுக்கு நியாயம் இருப்பதாகவும் தோன்றலாம். ஆக பெருமாள்முருகனின் ‘பசி’ சிறுகதையை வாசித்துவிடுங்கள்.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

டிசம்பர் 04, 2025

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் 3/20 -

 

தினம் ஒரு பெருமாள் முருகன் சிறுகதை – மாயம் 3/20
👉முன்குறிப்பு டிசம்பர் 21-ம் நான் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.
இப்போது இன்றைய மூன்றாவது சிறுகதைக்கு போவோம்.

    மாயங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? அல்லது உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒருவகையில் ஏதாவது மாயம் நடத்திருக்கலாம் என எதிர்ப்பாத்திருக்கிறீர்களா? அப்படியெனில் இந்தக் கதை உங்களுக்கான கதை. சர்வ சாதாரணமாக இக்கதையின் முடிவிற்குள் நீங்கள் எந்தக் கேள்வியும் இன்று சென்றுவிடுவீர்கள். மற்றவர்களுக்கு அது சாத்தியமா என வாசித்துதான் சொல்லவேண்டும். அப்படித்தான் எழுத்தாளர் மாயம் என்கிற சிறுகதையை எழுதியிருக்கின்றார்.
    கல்லூரி விடுமுறையில் நாயகன் வீட்டிற்கு வருகின்றான். வந்த சில நாட்களில் தோழி கைப்பேசியில் அழைத்து இரண்டு நாட்களில் அவனது ஊரில் இருக்கும் தங்களின் குலதெய்வத்தை வழிபட வரவிருப்பதாகவும் அவன் வீட்டிற்கும் வந்து விட்டு போகவுள்ளதாகவும் சொல்கிறாள். பேசி முடித்ததும்தான் கதையில் நமக்கும் பிடி கிடைக்கிறது.
    தான் வாழும் சூழலை; உள்ளது உள்ளபடி சொல்லாமல் கொஞ்சம் மேம்பட்ட வாழ்க்கையை வாழ்வதாகவே அவன் தன் கல்லூரி நண்பர்களிடம் சொல்லியிருக்கின்றான். இப்போது தோழி வீட்டிற்கு வந்தாள் என்றால் அவன் சொன்னது எல்லாம் பொய் என தெரிந்துவிடும். அவனுக்கு அது பெரிய அவமானமாக இருக்கும்.
    தோழி வர இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது. அதற்குள் என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என முட்டிமோதுகிறான் நாயகன்.
    அதே சமயம் அம்மாவின் மேல் அவனுக்கு கோவமும் வருகிறது. அதிலும் குறிப்பாக அம்மா மீது அருள் வருவதும் அதனால் அம்மாவிடம் ஏற்படும் மாற்றங்களுமே பேச்சு பொருளாகிறது ஆனால் அம்மாவோ தனக்கு வரும் அருளை கடவுளின் ஆசீர்வாதமாகவே பார்க்கிறார். தோழி வருவதற்கு முன், உடனடியாக வீட்டில் செய்யவேண்டியதை செய்தபடி அசதியில் உறங்கிவிடுகிறான்.
        தூங்கி எழுந்தவன் கண்ணுக்கு எல்லாமே அதிசயமாக இருக்கிறது. அவன் முன் அவனது அம்மா அருள் வந்த நிலையில் அமர்ந்திருக்கின்றார். அம்மா தன் கையில் விபூதியை எடுத்து வீடு முழுக்க ஊதுகிறார். அவன் எதிர்ப்பார்த்ததைவிடவும் வீடு அழகாகிறது. வீட்டில் எல்லாமே மாறுகிறது. கடைசியில் அந்த வீடே மாளிகையாகவும் மாறுகின்றது. அவன் தன் தோழியை வரவேற்கத் தயாரானான் என கதையை முடிக்கின்றார் எழுத்தாளர்.
    மாயம் சிறுகதையின் கடைசியில் மாயம் நிகழ்ந்திருக்கிறது. அது உண்மையில் மாயம்தானா அல்லது அந்த இளைஞனின் கனவு காட்சிகளா என நம் வாசிப்பின் வழி ஒரு முடிவிற்கு வரலாம்.

    நடுத்தர வயது இளைஞர்கள் தங்களின் கனவுகளைத்தான் பொய்களாக சொல்லி தங்களின் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்கிறார்களா என்கிற கேள்வியுமே எழுகிறது. என்றாவது ஒருநாள் அந்த மாயங்கள் அவரவர் வாழ்வில் நிஜமாகவே நடப்பதற்கான ஒத்திகைகளை கனவில் காண்கிறார்கள் போல.
     அந்த இளைஞனின் கனவை இன்னும் கொஞ்சம் ஆழமாக பேசவேண்டியுள்ளது. அம்மாவிற்கு அருள் வருவது அவனுக்கு பிடிக்கவில்லை. அவ்வபோது அது ஏமாற்று வேலை என அம்மாவை கடிந்தும் கொள்கிறான்.
    ஆனால் எதை அவன் நம்பவில்லையோ எதை அவன் ஒதுக்க நினைத்தானோ அதுதான் அவனது எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காய் அவனது கனவில் வருகிறது. உண்மையில் அவன் அதை வெறுக்கின்றானா நேசிக்கின்றான. இம்மாதிரி கனவிற்கும் நினைவிற்குமான இளைஞனின் போராட்டங்களை கடந்துவரும் இளைஞர்களில் நாயகனையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம்.


- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் 2/20 -


‘தினம் ஒரு பெருமாள்முருகன் சிறுகதை – பொண்டாட்டி 2/20

பெருமாள்முருகனின் ‘பொண்டாட்டி’ சிறுகதை, கொஞ்சம் கிலுகிலுப்பான கதை என்று சொல்லலாம். ஆனால் கதையின் போக்கில் கிலுகிலுப்பைவிடவும் இன்னொன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கும். அதனை வாசிக்கும் வரை அப்படியொன்று நடக்கும் என நம்மால் யூகித்திருக்க முடியாது.

ஒரு சிறுகதையில் அதன் எழுத்தாளர் ‘எழுதுகிற இடம்’ எவ்வளவு முக்கியமோ அதே போல அல்லது அதைவிட ஒருபடி மேலேயே அந்த எழுத்தாளர் ‘எழுதாமல் விட்ட இடமும்’ முக்கியத்துவம்  பெறுகிறது என்பதற்கு இச்சிறுகதை ஒரு சான்று.

கதையின் நாயகன் முருகேசுவிற்கு காதலியிடமிருந்து குறுஞ்செய்தி வருகிறது. அவனுக்கு தலைகால் புரியவில்லை. இதற்குத்தான் இத்தனை நாட்களாய் ஏங்கியிருந்தான். பலமுறை முயன்றும் சாத்தியப்படுத்த முடியவில்லை. இன்று மதியம் வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள்; மதிய உணவை சாப்பிட தன் வீட்டிற்கு அவனை அழைத்திருந்தாள் காதலி. முதலிரவுக்கு தயாராகும் மாப்பிள்ளை போல தயாராகிறான்.

சீக்கிரமே காதலியின் வீட்டை அடைந்துவிட்டான். அவள் கேட்டுகொண்டதன்படி யார் கண்ணிலும் படவில்லை. அவளும் ஆசையாக அவனை வரவேற்று இனிதான் சமைக்க வேண்டும் என்கிறாள். இருவரும் சமையல் அறைக்கு செல்கிறார்கள். அவள் அவனை ‘புருசா’ என அழைக்கவும் அவன் அவளை ‘பொண்டாட்டி’ என அழைக்கவும் இருவருக்குமெ இனம்புரியாத இன்பம். 

அவன் இறுக்கமாக இருப்பதை உணர்ந்த அவள் அவளின் தந்தையின் கைலியை எடுத்து கட்டிக்கொள்ள சொல்கிறாள். அவளும் குளித்துவிட்டு வருவதாய்ச் சொல்கிறாள். இருவருமே அறைக்குள் நுழைகிறாகள். 

இத்தனை நாட்களாய்க் காத்திருந்த இரு உள்ளங்களும் மெல்ல மெல்ல இணையப்போகும் அந்தத் தறுவாயில்தான் யாரும் எதிர்ப்பாராத ஒரு சம்பவம் நடக்கின்றது. அவளது அக்கா அறைக்கு முன் நின்று கத்துகின்றாள். தன் தங்கையை அறையில் இருந்து இழுத்துப் போட்டு அடைக்கவும் செய்கிறாள். 

முருகேசனுக்கு காதலியின் அக்காவை முன்னமே தெரியும். அது அவனது காதலிக்கும் தெரியும். சொல்லபோனால் அவளைத்தான் முதன்முதலாகப் பார்த்தான். 

கொஞ்சம் சிரிக்காத அவளின் முகம் அவனை கவர்ந்தது. அவளை பின் தொடர்ந்தவன் ஒருநாள் அவளிடம் பேச முயன்றான். அவளோ “மூடிகிட்டு போ… இந்த வேலையை என்கிட்ட வச்சிக்காத...” என்று திட்டிவிட்டு சென்றிருக்கிறாள். இதுபற்றி தன் நண்பனிடம் சொல்லும் போது நடக்கும் உரையாடலை எழுத்தாளர் நாம் சிரிக்கும்படி எழுதியிருப்பார்.

அந்தச் சம்பவம் நடந்து ஆறேழு மாதங்கள் கழித்துதான் அவளது தங்கை என்று தெரியாமலேயே  இவளுடம் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது. அவர்கள் இருவரையும் சந்தித்த அக்கா; அவன் தன்னிடம் செருப்படி வாங்கி சென்றவன் என்றும் இவளை கர்ப்பமாக்கிவிட்டு ஓடப்போகிறான் என்றும் சொல்லி தட்டிக்கழிக்கின்றாள். ஆனாலும் தந்தைக்கு அந்த வார்த்தைகளின் மீது நம்பிக்கை இல்லை. நேரடியாக காதலனிடம் அதுபற்றி கேட்கிறாள். நடந்ததை சொல்கிறான். இருந்தும் அவனுடம் பழகுவதை அவன் கை தன் மீது படுவதை எச்சரிக்கையாகவே கையாண்டாள்.

இதற்கிடையில் இருவருக்குள்ளும் பூத்த காதல் அடுத்த கட்டத்திற்கு நகர தயாரானது. யாருமில்லாத சமயம் வீட்டிற்கு அழைத்து அக்காவிடம் இப்போது அடி வாங்கி கொண்டிருக்கின்றாள். 

காதலி அடி வாங்குவதை தாங்காது அங்கிருந்து ஓடக்கூடாது என்று நினைத்து அக்காவை தடுக்கின்றான். அவள் என் பொண்டாட்டி என்றும் சொல்லி காதலியை தன்பக்கம் இழுக்கின்றான். 

அது அக்காவை மேலும் கோவப்படுத்தியிருக்கக்கூடும். அவனையும் கன்னத்தில் பளார் என்று அறைகிறாள். இதுவரை அக்காவிடம் அடிவாங்கி காதலனுக்கு பின்னால் மறைந்து கொண்ட காதலிக்கு சட்டென ஆவேசம் வந்துவிட்டது. ‘புருசா…புருசா..’ என மந்திரத்தை உச்சரித்தபடி அக்காவை பிடித்து இழுத்து தள்ளுகிறாள். அக்காவோ சுவரில் மோதி இரத்தம் ஒழுக கீழே விழுகிறாள் என கதை முடிகின்றது.

இச்சிறுகதையை வாசித்து முடித்தபின் மீண்டும் சிலவற்றை நினைத்துப் பார்த்தேன். தன் காதலன் தன்னை விட்டு தப்பித்து ஓடாமல் ‘அவ என் பொண்டாட்டி’ என சொன்ன பிறகுதான் அவளுக்கும் அந்தச் சூழலை எதிர்கொள்ள துணிச்சல் வந்திருக்கிறது. அங்கு இருவரையும் காதல் காப்பாற்றியது என்றும் சொல்லலாம்தான்.

ஆனால்; இன்னொன்றையும் யோசிக்கும் போதும் மனம் ஏனோ பதட்டமடைகிறது. காதலி வீட்டிற்கு அழைத்திருக்கிறாள். சமையல் அறைக்கு வரவும் அப்பாவின் கைலியைக் கட்டும் அளவிற்கு விடுகிறாள் என்றால் வீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள் என உறுதியாய்த் தெரிந்து வைத்திருப்பாள். அப்படி இருந்தும் அக்கா அங்கு எப்படி சரியான நேரத்திற்கு வந்தார். 

அதுவும் அதுவரை அக்கா எங்கிருந்திருப்பாள். ஏன் அக்கா அத்தனை ஆவேசம் வந்தவளாய் தங்கையைப் போட்டு அடிக்கின்றாள் என யோசிக்கும் போது; கிலுகிலுப்பு என நினைத்த கதை அதையும் தாண்டி இன்னொரு இடத்திற்கு செல்லத் தொடங்குகிறது.

 அது நாயகன் தன்னிடம் பேச வந்த முதல் நாளுக்கு பின் அவன் வராத நாட்களை நினைத்து அக்கா ஏங்கிய நாட்களாக இருக்கலாமோ என நமக்கு தோன்ற வைக்கிறது.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

டிசம்பர் 03, 2025

மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 1/20

தினம் ஒரு பெருமாள் முருகன் சிறுகதை - ஆட்டம் 1/20


முன்குறிப்பு – வரும் டிசம்பர் 21ம் நாள், ‘வல்லினம் விருது விழா’ நடைபெறுகின்றது. மலேசிய கல்விச் சூழலில் நவீன இலக்கியத்தை வலுபடுத்தியதோடு சிறுவர் இலக்கியத்தை மலேசியாவில் வளர பங்காற்றிய பி.எம்.மூர்த்தி அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது. அந்நிகழ்ச்சியில் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள். இம்முறை தமிழகத்தில் இருந்து சிறப்பு வருகையளிப்பதுடன் சிறப்புரையை வழங்கவுள்ளார் எழுத்தாளர் பெருமாள் முருகன்.

டிசம்பர் 1 முதல் டிசம்பர் 20 வரை ‘தினம் ஒரு பெருமாள் முருகன் சிறுகதை’ என வாசிப்பு அனுபவத்தை எழுதவுள்ளேன். எழுத்தாளர்களைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து புலங்காகிதம் அடைவதற்கு முன் அவரின் எழுத்துகளை வாசித்திருக்க வேண்டும் என்கிற பாலபாடத்தை இன்றளவும் கடைபிடித்து வருகிறேன். குறைந்தபட்சம் அவர்களது ஒரு கதையையாவது வாசித்திருக்க வேண்டியது எழுத்தாளர் என நாம் சொல்லிக்கொள்வதற்கு நியாயம் சேர்க்க கூடியது.

அதோடு; நாம் செய்ய நினைப்பதை முன்னமே செய்து அடுத்ததாய் நாம் செய்யவேண்டியதை நமக்கு வழிகாட்டும் ‘விதி சமைப்பவர்களுக்கு’ நாம் செலுத்தும் நன்றி இதுதான்.

பெருமாள் முருகன் சிறுகதைத் தொகுப்புகளில் இருந்து ஏதோ ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து வாசித்து அதுபற்றிய வாசிப்பு அனுபவத்தை இந்த இருபது நாட்களுக்கு எழுதுவேன்.

அவரது சிறந்த கதை என சொல்லப்பட்டதையும் அவரது சுமாரான கதை என சொல்லப்பட்டதையும் இந்த வாசிப்பு பயணத்தில் சேர்க்கவில்லை. தன்னிச்சையாக வாசிக்க கிடைக்கும் சிறுகதையில் எனக்கான கண்டடைதல் என்ன என்பதுதான் இதில் நமக்கு மறைந்திருக்கும் சூட்சுமம்.

 

பெருமாள் முருகன் சிறுகதை 1 – ஆட்டம்

 

உறவுகளை வைத்து நாம் கதையெழுத தொடங்கினால் அதில் பொறாமை என்னும் வலையில் எல்லா உறவுகளையுமே தள்ளிவிட முடியும். இன்னும் சொல்லப் போனால் ஒட்டுமொத்த எல்லா சிக்கல்களுக்குமே இந்தப் பொறாமை என்னும் சிறு பொறிதான் காரண கர்த்தாவாக இருக்க முடியும்.

மாமியார் மருமகளை பேசிய அளவிற்கு மாமனார் மருமகன்கள் பேசப்படவில்லை. அவர்கள் இருவருக்குமான நெருக்கமும் விலகளும் அதிகம் வெளிச்சத்திற்கு வரவில்லை.

அதற்கு இணையாக இன்னொன்றையும் சொல்லலாம். அம்மாக்களையும் மகன்களையும் பேசிய அளவிற்கு அப்பாக்களையும் மகன்களையும் பேசவில்லை. பேசியவரை அதிகமாய் இருப்பது அப்பா கண்டிப்பானவர் மகன் ஊதாறி. அப்பா குடிகாரர் மகன் பொறுப்பானவன். அதைத்தாண்டி அவர்களில் ஆண்களுக்கே உரிய ‘ஈகோ’ சீண்டப்படும் போது எப்படி எதிர்கொள்கிறார்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் யூகிக்க முடியாமல் போகிறது.

 அப்பாவிற்கும் மகனுக்கும் ஏற்படும் இம்மாதிரி சிக்கல்கள் அம்மாக்களுக்கும் மகள்களுக்குமே இருக்குமா என எப்படி தெரிந்து கொள்வது எதை வசிப்பது. இன்னமும் நாம் உறவு முறைகளில் புனிதத்தைக் காப்பாற்றி கொண்டு நடைமுறை வாழ்வில் அதற்கு எதிரான சம்பவங்களையே பார்த்தும் கேட்டும் வருகின்றோம்.

சமீபத்தில் ஒரு செய்தி. தன் மகள் விளையாட்டிலும் சமூக ஊடகங்களிலும் புகழோடும்  பிரபலத்தோடும் இருக்கிறாள் என்பதற்காக தன் மகளையே துப்பாக்கியால் சுட்டு கொன்றிருக்கிறார் ஒரு தந்தை.

பெருமாள் முருகனின் ‘ஆட்டம்’ சிறுகதை அப்பா மகனுக்கு இடையே தொடங்கும் ‘ஈகோ’ சிக்கலைக் காட்டுவதாகப் படுகிறது. அதிலும் குறிப்பாக தன் மனைவி எப்போது மகனுக்கு ஆதரவாக; அது நகைச்சுவையாக இருந்தாலும்  அப்போதே கணவனின் ஈகோ விழித்துக் கொள்கிறது. அந்தப் பதட்டத்தை இச்சிறுகதை இயல்பாகச் சொல்லியுள்ளது.

கொரானா காலகட்டம்.  பொறியியல் படிப்பில் கணினி அறிவியல் எடுத்துப் படிக்கும் மகன்,  அப்பா அம்மாவுடன் வீட்டில் இருந்து படிக்கும்படி  ஆகிறது.

மகன் அதிக நேரம் தூங்குவதையும், தங்களுடன் சேர்ந்து சாப்பிடாததையும் அப்பா ஒரு குறையாகவே சொல்கிறார். மகனுக்கு ஆலோசனையும் அறிவுரையும் சொல்லும் அதே சமயம் திட்டவும் செய்கிறார்.

ஒரு சமயம் மூவரும் ஒன்றாக அமர்ந்து தாயம் விளையாடும் வாய்ப்பு ஏற்படுகிறது. முதன் முதலாக விளையாடுவதால் மகனுக்கு விளையாட்டு பிடிபடவில்லை. அப்பா அவனை வழக்கம் போல வழி நடத்திச் செல்கிறார். மெல்ல மெல்ல மகனுக்கு ஒவ்வொன்றாக பிடிபடுகிறது. விளையாடும் சமயத்திலேயே இந்த விளையாட்டுக்கு எப்படி எப்படியெல்லாம் புரோகிராம் எழுதலாம் என யோசிக்கவும் செய்கிறான். அப்பாவிடம் தோற்கவும் செய்கிறான்.

மறுநாள் மகனின் ஆட்டம் சூடு பிடிக்கிறது. மெல்ல மெல்ல முன்னேறுகின்றான். அப்பா எதிர்ப்பாக்காதபடிக்கு மகன் வென்றுவிடுகின்றான். மகனின் வெற்றியால் அம்மாவும் மகிழ்கின்றார். அப்போதே வீட்டில் மீதமிருக்கும் மாவில் குலோப்ஜாமுன் செய்து கொடுக்கின்றான். மகன் சாப்பிட அப்பா தவிர்க்கின்றார்.

நகைச்சுவையான அவர்களின் உரையாடல் அப்பாவை உள்ளுக்குள் ஏதோ செய்திருக்க வேண்டும்.

மறுநாளும் வழக்கம் போல மகன் தூங்கி கொண்டிருக்க; “அவனை எழப்பி சாப்பிட சொல்லுங்க.. நீங்களும் விளையாடனும்ல..?” என சொல்கிறார் அம்மா. அம்மாவின் குரல் அரை தூக்கத்தில் இருந்த மகனுக்கும் கேட்கிறது. உடனே எழுந்து போய் அப்பாவுடன் விளையாட ஆர்வம் ஏற்படுகிறது மகனுக்கு.

இதுநாள் வரை மகனின் நீண்ட நேர தூக்கத்தை ஒரு குறையாக பார்த்த அப்பா; அவனை எழுப்ப வேண்டாம். அசந்து தூங்குகிறான். இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும் என்றவர் “விளையாட்டுக்கு என்ன  நாளைக்கு ஆடினாப் போவுது” என்கிறார்.

அப்பா சொல்வது மகனுக்கும் கேட்பதாக கதை முடிகிறது.

இச்சிறுகதை தொடங்கும் இடமும் முடியும் இடமும் ஒரே இடம்தான். அது மகன் நீண்ட நேரம் தூங்கிகொண்டிருப்பது ஆனால் இரு இடங்களும் ஒருமாதிரியான முடிவைச் சொல்லவில்லை. அப்பாவின் மனதில் மகன் தன்னை வென்றுவிட்டான் என்பதைவிடவும்; தனக்கு இந்த வீட்டில் இனி முதலிடம் இல்லை என்கிற பதட்டமே அதிகம் இருக்கும்’ அப்பாவிற்கும் மகனுக்குமான ‘ஈகோ’ போராட்டம் இனிதான் தொடங்குமோ என தோன்றுகிறது.

 

 

  

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்