பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

அக்டோபர் 23, 2022

பூட்டப்படாதக் கதவுகள்

"இவருக்கு கொஞ்சம் கூட பயமே இல்ல.. காலம் எப்படி கெட்டுக்கிடக்கு வாசல் கதவை லாக் பண்ணாமலேயே வச்சிருக்காரு...." என புலம்பிக்கொண்டே நுழைந்தான். 

"அப்பா... அப்பா... எங்க இருக்கீங்க...?" என அதிகம் தேடாமல், வரவேற்பறை நாற்காலியில் அமர்கிறான். வாங்கி வந்திருந்த சமையல் பொருட்களை கீழே வைக்கிறான். 

எப்படியும் ஒரு மாதத்திற்கான சமையல் பொருட்கள் அதில் இருக்கும். அதற்குள் அவை முடிந்துவிட்டால் ஓரிரு நாட்கள் அப்பா எப்படியும் சமாளித்துக்கொள்வார். ஒத்தையாளுக்கு ஒரு டம்ளர் டீயும் ஒரு ரொட்டிபன்னும் போதாதா என தன்னைத் தானே கேட்டுக்கொள்வான். 

அதுவுமில்லாமல் ஒரு மாதத்திற்கு ஒருமுறை இப்படி வருவதற்கே அவனுக்கு நேரம் சரியாக இருக்கிறது.

"குளிச்சிகிட்டு இருக்கேன் பா.. தோ வந்துடறேன்...." குளியல் அறையில் இருந்து சத்தம் வந்தது. குளித்துவிட்டார்.

"வா.. மாதவா.. வா எப்படி இருக்க பொண்டாட்டி புள்ளைங்க எப்படி இருக்காங்க..."

"நாங்க இருக்கிறது இருக்கட்டும் நீங்க ஏன் பா இப்படி இருக்கீங்க..?" என கோவப்பட்டான்.

"எப்படி இருக்கேன். நானும் நல்லாத்தான மாதவா இருக்கேன்..."

"நான் அதைக் கேட்கல.. ஏன் எப்பவும் வாசல் கதவை உள்ள லாக் பண்ணாமலேயே இருக்கீங்க... எத்தனை தடவை சொல்லிருக்கேன்..."

"ஓ அதுவா... நான் குளிக்கும் போது கூடதான் பாத்ரூம் கதவை உள்பக்கம் லாக் பண்ண மாட்டேன்.." என்றவாறு சிரிக்கலானார். வாய்விட்டு சிரித்ததில் வாயில் பல்லில்லாதது அப்படியே தெரிந்தது.

"செய்யறது எல்லாம் கிறுக்குத்தனமான வேல... இதுல சிரிப்பு வேற..."

அப்பா நிதானமானார், "என்னப்பா செய்றது. நானோ ஒண்டிகட்ட, நீயோ மாசத்துக்கு ஒரு தடவைதான் வந்து பாக்கற..... ஒருவேளை நான் வீட்டுலயோ பாத்ரூம்பலயோ விழுந்து செத்துட்டா.... யார் உனக்கு கதவை திறந்துவிடுவா... அதும் இந்த வாசல் கதவை அவ்வளவு சீக்கிரத்தில் ஒடைக்க முடியாதுன்னு நீதான சொன்ன. என்னைய பார்த்துக்கவே நீ ரொம்ப கஷ்டப்படற அதுல நான் செத்தும் உனக்கு சிரமத்தைக் கொடுக்கனுமா சொல்லு...."

"இல்லப்பா அது வந்து...." அவன் மனம் ஏதோ செய்தது.

"அதான் வந்துட்டயே... இதோட அடுத்த மாசம்தான வருவ...." அப்பா இப்போதும் நிதானமாகவே இருக்கிறார்.

அக்டோபர் 22, 2022

சொல்லுதற்சுலபம்

" ஏன் சார் கோவிலுக்கு வரமாட்டறீங்க...?"

"சாமியே இல்லைன்றவனைப் போய் கோவிலுக்கு கூப்டற...?"

"சாமி இல்ல... அதனால கோவிலுக்கு வர மாட்டேன்னு சொல்லத் தெரிஞ்ச உங்களுக்கு..."

"சொல்லத் தெரிஞ்ச எங்களுக்கு...?"

"சாதி இல்லைன்னு சொல்லி, எந்தச் சாதி நிகழ்ச்சிக்கும் போகாம இருக்க முடியலையே... போதாக்குறைக்கு சாதி சங்க தலைவர்களுக்கு உங்க சார்பா மாலையெல்லாம் போடறீங்க.."

"அது வந்து......"

"அது அப்பறம் வரட்டும்.. இதுவாச்சும் பரவால... தாழ்ந்த சாதியெல்லாம் இல்லைன்னு கோஷம் போடுற நீங்க... உயர்ந்த சாதிகளும் இல்லைன்னு கோஷம் போடலாம் தான....."

"சொல்றதுக்கு எல்லாம் ரொம்ப சுலபமாதான் இருக்கும்....."

"அதான் சார், சொல்றதுக்கு எல்லாமே சுலபமாதான் இருக்கும்...."

அக்டோபர் 21, 2022

- God No Where vs God Now Here -

"கடவுள் இல்லை என்பதை என்னால் நிரூபிக்க முடியும் பார்க்கறியா?"

"அப்படியா...?"

"நிரூபிக்க முடியும்ன்றேன்... அப்படியான்னு கேட்கற..."

"சரி நிரூபி. பாக்கலாம்..."

அதற்காகவே காத்திருந்தவர், தன் முகநூலில் 'கடவுள் இல்லை' என எழுதி பகிர்ந்தார். பார்த்தவருக்கு ஒரே குழப்பம். இதில் கடவுள் இல்லையென்று எங்கே நிரூபிக்கப்பட்டுள்ளது. கேட்டேவிட்டார்.

"இதில் கடவுள் இல்லைன்னு எப்படி நிரூபிச்சிருக்க...?"

"ஹஹஹ... அதான் நிரூபனம். இப்ப கடவுள் இல்லைன்னு எழுதி போட்டிருக்கேனா...?"

"ஆமா... போட்டிருக்க.. நீ அதை மட்டும்தான போட்டிருக்க...."

"கடவுள் இல்லைன்னு நான் போட்டதை, கடவுள்னு ஒருத்தர் இருந்தார்னா வந்து நான் இருக்கேன்னு எழுதிருக்கனும் தான..... அப்ப எதுவும் வரல.. ஆக கடவுள்னு ஒருத்தர் இல்ல.. எப்படி நிரூபிச்சேன் பார்த்தியா...?? "

"அதைவிடு காலம்காலமா இந்த குழப்பம் இருந்துகிட்டுதான் இருக்கு... ஆனா லஞ்சம் ஊழல்  இல்லாத இந்த நாட்டுல நாம் இருக்கறது எவ்வளவு சந்தோஷமா இருக்கு..."

"என்னது லஞ்சம் ஊழல் இல்லையா.. என்ன கனவு காண்றயா....?"

"கனவா... நானும் நிரூபிக்கிறேன் பாக்கறியா...?"

"எப்படி..?"

"தோ... இப்படி..."
என்றவர் தன் முகநூலில்  ஊழலும் லஞ்சமும் இல்லை. இல்லவேயில்லைன்னு எழுதி பகிர்ந்தார். பார்த்தவரின் கண்கள் சுருங்கின,

"என்னதிது..?"

"ஆமா பின்ன... லஞ்சம் ஊழன்னு ஒன்னு இருந்திருந்தா நான் சொன்னதுக்கு வந்து 'உள்ளேன் ஐயா'னு எழுதிருக்கனும் தான...."

"இதுக்கு இது பதில் இல்லையே...?"

"அதுக்கும் அது பதிலில்லையே...?"

அக்டோபர் 09, 2022

- 42 குறுங்கதைகள் -

- 42 குறுங்கதைகள் -

இயல் பதிப்பகத்தின் நூலிழை குழு சந்திப்பின் மூலமாக ஆசிரியர் ப.பத்மநாதனை தெரியும். அவருக்கும் என்னை அப்போதுதான் தெரியும் என நினைக்கிறேன். கதைகள் குறித்த காலந்துரையாடல் வழியும் கதைகள் குறித்து நான் முன்வைக்கும் கருத்துகள் வழியும் இருவரும் நட்பானோம். 

ஒவ்வொரு முறையும் அழைத்து பேசும் போது ஒவ்வொரு கதைகள் குறித்து பேசுவார். கதைகளுக்கான கருவைப் பகிர்ந்துகொள்வார். சிறுகதைகளை எழுதி அது பற்றிய உரையாடலை திறந்த மனதுடன் எதிர்க்கொள்வார். 

இவ்வாண்டு சிறுகதை தொகுப்பு கொண்டுவர திட்டம் வைத்திருந்தார். அதையொட்டிய முன் வேலைப்பாடுகளையும் செய்யத்தொடங்கியிருந்தார். அப்போதுதான் குறுங்கதை பயிலரங்கத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதுவரை சிறுகதைகள் குறித்த கலந்துரையாடலில் பங்கெடுத்த நான் குறுங்கதை பயிற்றுனராக ஆனேன். தொடர்ந்து குறுங்கதைகளின் சாத்தியக்கூறுகளை முயல்வதாலும் ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல;101 குறுங்கதைகள்’ என்ற குறுங்கதைத் தொகுப்பை நான் வெளியிட்டிருந்ததும் இதற்கான ஆதாரக்காரணங்கள்.


இவர் மட்டுமின்றி குறுங்கதை பட்டறையில் மேலும் சிலர் பங்கெடுத்துக்கொண்டார்கள். குறிப்பாக ஆசிரியர் உமா தேவியையும் சொல்லலாம்; ஏனெனில் அவரும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட திட்டமிட்டு பின்னர் குறுங்கதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். அவர் குறித்து அடுத்த முறை பேசுகிறேன்.

குறுங்கதைகள் பட்டறையில், குறுங்கதைகள் எழுத பயிற்சி கொடுப்பதற்கு முன்பாக அதிலிருக்கும் சுதந்திரத்தைப்பற்றி பேசினேன். அதோடு முக்கியமான எழுத்தாளர்களின் முக்கியமான குறுங்கதைகள் குறித்தும் அது எந்த இடத்தில் குறுங்கதையாக மாறுகிறது என பேசுவேன். அவை; பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கு உற்சாகத்தையும் எழுத வேண்டும் என்ற ஆரவத்தையும் கொடுத்தது.

பலர் எழுதினார்கள். பலவிதமான குறுங்கதைகள் வந்தன. வழக்கம் போலவே ‘கதைகள்’ தவிர்த்து தங்களின் அனுபவங்கள், அறிவுரைகள், சம்பவங்கள் என வந்தன. அதிலிருந்து மெல்ல மெல்ல குறுங்கதைக்குள் அவர்களை அழைத்து வந்தோம். 

குறுங்கதைகளில் இருக்கும் பலமும் பலவீனமும் அது கொடுக்கும் சுதந்திரம்தான். என்னவெல்லாம் எழுதலாம் என்கிற கேள்வியும், என்னவெல்லாம் எழுத முடியும் என்கிற பதிலும் குறுங்கதை எழுத ரொம்பவும் அவசியம். அதற்கு குறுங்கதைகளைத் தொடர்ந்து வாசிக்க வேண்டும். ‘சின்ன கதைதானே அதிலென்னத்தை சொல்லிடப் போறாங்க’ என மேம்போக்காக நினைப்பவர்களைக் குறுங்கதைகள் ஏமாற்றிவிடுகின்றன. ஒரு சொல், ஒரு வரி, கதைகள் மீதான முழு பார்வையையும் மாற்றிவிடும் என்பதில் எச்சரிக்கை வேண்டும். அதே போல வெறும் அதிர்ச்சி மதிப்பீடுகள் மட்டுமே குறுங்கதைகளைக் காப்பாற்றிவிடாது.

ஆசிரியர் ப.பதமநாதனின் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. ஆசிரியர் பணிகளுக்கு இடையே எழுதினார் என்றெல்லாம் அவரை என்னால் பாராட்ட முடியாது. ஆனால் தொடர்ந்து எழுதினார், விமர்சனங்களை எதிர்க்கொண்டார், வாசித்தார். சில சமயங்களில் பின்னிரவுக்கெல்லாம் புலனத்தில் செய்தி வரும். “கதையை அனுப்பியிருக்கேன் வாசிக்கவும்..”. 
கதைகளில் விமர்சனங்கள் வழி நான் கொடுக்கும் சில மாற்றங்களை அவரால் பகுத்துப்பார்த்து ஏற்றுக்கொள்ள முடிந்தது. தன்னை ஓர் ஆசிரியர் என்கிற இடத்தில் வைக்காமல், எழுத்தாளர் என்ற இடத்தில் வைத்து உரையாடுவார். அவரிடம் கேள்விகள் இருந்தன, குழப்பங்கள்  இருந்தன, தேடல்கள் இருந்தன. எல்லாவற்றும் மேலாக “நான் நல்லா எழுதறேனா?” என்கிற பொறுப்பும் இருக்கவே செய்தது.

எழுத்தில் நகைச்சுவைகளைக் கொண்டு வந்து வாசிப்பாவர்களை சிரிக்க வைப்பது அத்தனை எளிதல்ல. தொலைக்காட்சியில் நாம் பார்த்து சிரிக்கும் நகைச்சுவைக் காட்சிகளைப் போல புத்தகத்தில் வாசிப்பின் வழி நம்மை சிரிக்க வைப்பது இயலாது. முன்னதில் காட்சிகள் நகர்கின்றன, பின்னணி இசை, நடிகர்களின் பாவணை என பல அம்சங்கள் உள்ளன.
ப.பத்மநாதனின் குறுங்கதைகளில் நகைச்சுவைகளைப் பல இடங்களில் கையாண்டும் வெற்றியையும் நெருங்கியிருக்கிறார். சில தலைப்புகள் நமக்கு எதிர்ப்ப்பார்ப்பைக் கொடுக்கின்றன. அதோடு நாம் ஏமாந்துவிடாமல் நிற்கின்றன.

இது ப.பத்மநாதனின் ’42 குறுங்கதைகள்’ புத்தகம் குறித்த விமர்சனம் அல்ல; ஓர் எளிய அறிமுகம் மட்டுமே. 

ஏனெனில்;

இன்று (09/10/2022) ஶ்ரீ ஞானானந்த புரம், தெலுக் இந்தானின் அவரது நூல் வெளியீடு உள்ளது. வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். அதோடு இயல் பதிப்பகம் வெளியிட்ட ஆசிரியர் ப.பத்மநாதனின் ‘42 குறுங்கதைகள்’, ஆசிரியர் உமாதேவியின் ‘அப்பாவின் கைக்கடிகாரம் – குறுங்கதைத் தொகுப்பு, சமூக & சமய ஆர்வளர் ஏ.கே. ரமேஷின் ‘தீக்ஷா’ சிறுகதைகள், ஆசிரியர் சுமத்ரா அபிமன்னனின் ‘அப்பாவின் அம்மா’ சிறுகதைகள், இளம் எழுத்தாளர் யோகாம்பிகையின் ‘கரு’ சிறுகதைகள் அடங்கிய ஐந்து புத்தகங்களையும் குறைந்த விலையில் வாங்கலாம்.

விரைவில் ஐவரின் புத்தகங்கள் குறித்த என பார்வையையும் பகிர்வேன்; அதற்கு முன் நீங்கள் இவர்களின் படைப்புகளை வாசித்திருந்தால் அது பற்றிய உரையாடலுக்கு அது வழிவகுக்கும்.

இவை நல்ல கதைகளா இல்லையா என்பதை நாம்தான் வாசித்து உரையாடி கண்டுகொள்ள வேண்டும்.

அக்டோபர் 07, 2022

கண்ணீர்க்குடி நாகங்கள்


கண்ணீரைச் சுமக்க கைக்குட்டையொன்று எப்போதும் வேண்டுமோ நமக்கு

இங்கு காரணங்களின்றி கண்ணீர் வருவதில்லை
சிலரின் காரியங்களில்லாமல் நாம் அழுதிடுவதுமில்லை

நம்மை அழவைப்பதில் அப்படியென்ன ஆனந்தத்தைக் கண்டிடப்போகிறார்கள்
சொல்ல முடியாது
அவர்கள் தின்ற சோறு செரிக்க
யாரும் அழத்தான் வேண்டும் போல

கண்களில் என்ன அட்ச்சயப்பாதிரத்தையா வைத்திருக்கிறோம்
அழ அழ கண்ணீர் வர வர
வறட்சியின்றி வருகை தருகிறது த(க)ண்ணீர்

ஒருத்தனுக்கு அழது சாவதா
இல்லை
ஒவ்வொருவருக்குமாகச் சிரித்து வாழ்வதா என்ற
சுயவிசாரனையே நம் சுயத்தின் விசாரணை

கண்ணீர்ப்பட்ட ஈர
கைக்குட்டையைப்
புன்னகையென்னும் குளிர்நெருப்பில் உலர வைப்போம்
கண்ணீரை விட பலம் கொண்ட ஆயுதம்
புன்னகை என
உணர வைப்போம்

கண்ணீர்க்குடி நாகங்களை இன்றுமுதல்
பசியில் வைப்போம்....

#தயாஜி

செப்டம்பர் 29, 2022

- நட்ட கல்லும் ஊற்றும் பாலும் –

 

“கல்லுக்கு ஊத்தற பாலை… பசிக்கு அழும் குழந்தைக்குக் கொடுக்கலாமே..?” ரொம்பவும் பழைய பழகிப்போன கேள்வியை இங்கு விடாது கேட்டுக்கொண்டே இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். வழக்கமாகத் தைப்பூச தினத்தன்றும் அல்லது இதர விழாக்காலங்களில் மட்டுமே இந்தக் கேள்வி பெருமளவு படையெடுக்கும். மற்ற நாட்களில் அதன் வீரியம் குறைவாகவோ அல்லது பெரிதாக அலட்டிக்கொள்ளாதவாரோ இருக்கும்.

இந்த நாட்களில் மட்டும் ஏன் வறுமையில் சிக்கிய மனிதர்கள் மீது இன்னொரு மனிதனுக்கு அத்துணைப் பெரிய கருணை! மற்ற நாட்களில் அம்மனிதன் வயிறார சாப்பிட்டுக்கொண்டா இருக்கிறான்.

பசி கொண்டவனுக்குப் புசி கொள்ள ஏதும் கொடுக்க நினைப்பதே ஆதார நினைப்பு/தேவை என்றால், நாள் கிழமை பார்த்து பசிக்கு பால் கொடுக்க யாரும் சொல்ல மாட்டார்கள். இங்குச் சிக்கல் பசியும் பசிக்கின்ற மனிதனும் அல்ல. நம்பிக்கை;கொள்கை.

“கல்லுக்கு ஊத்தற பாலை…!” என்று தொடங்கும் அதே வார்த்தையின் சாயலில், “பத்து பேருக்கு மாலையும் பொன்னாடையும் வாங்கிப் போடற காசையும் ஒரு குடும்பத்துக்குச் சாப்பிட கொடுக்கலாமே?”, “இவ்வளவு செலவு செய்து மேடை நிகழ்ச்சி செய்றதுக்குப் பதிலா கஷ்டப்படுற பிள்ளைங்களுக்குப் புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கலாமே?” என யாரும் கேட்கிறார்களா எனத் தெரியவில்லை. அப்படிக் கேட்கத்தான் வேண்டும் போல. ஏனெனில் இங்கு எல்லோருக்கும் இன்னொரு மனிதன் இடர்பாடுகளில் இருந்து வெளிவர வேண்டும் என்றுதானே எண்ணுகிறோம்.

ஆனால் அதனை ஏன் நேரடியாகச் செய்யாமல் இன்னொருவன் செய்வதில் இருந்து அதற்குப் பதிலாக இதனைச் செய்யவேண்டும் என அவனுக்கு அறிவுரைகளைச் சொல்லிகொண்டிருக்கிறோம். செய்கின்றவன் பேச மாட்டான் ஏனெனில் அவனுக்கு அதற்கான நேரம் இருக்காது; என என் பள்ளி ஆசிரியர் ஒரு முறை சொன்னதை நினைத்துப்பார்க்கிறேன்.

 

“நட்ட கல்லைத் தெய்வமென்று காலுபுட்பம் சாத்தியே

சுற்றி வந்து மொண் மொணென்று சொல்லு மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?’’

(சிவ வாக்கியர் பாடல்-5)


கல்லில் என்ன இருக்கிறது எனக் கேட்ட சிவ வாக்கியரை விடவா ஒருவர் கேள்வி எழுப்பிட முடியும். ஆனால் இதனை எப்போதும் பேச்சிற்கிடையில் கொண்டுவர மாட்டார்கள். கொண்டு வந்தால்; ‘நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?’ என்ற கேள்விக்குப் பதில் தரவேண்டிவரும். கல்லும் இல்லை கடவுளும் (நாதனும்) இல்லை என்ற கொள்கை உள்ளவர்களுக்குச் சிவ வாக்கியர் எப்படி உதவுவார்.

உண்மையில் கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்களாலேயே சிவ வாக்கியரின் கேள்வியை ஆழந்து யோசித்துப் பதில் காண முடியவில்லையே. இதனைப் புரிந்து கொண்டிருந்தால் கோவில்களில் நடக்கும் உள்ளரசியல் இல்லாமலேயே இருந்திருக்கும். வீட்டுக்கு ஒரு கோவில் அதற்கொரு தலைவர் என்கிற குழப்பங்கள் இருந்திருக்காது. மரங்களுக்கு மத்தியிலும், தகரக் கொட்டகைக்குள், அடுத்தவர் நிலத்தில் எனத் தோன்றும் கடவுள்கள் யாரும் உள்ளிருக்கும் நாதனாய் உருமாற முடியவில்லையே.

ஒரு முறை இயல் பதிப்பக நிகழ்ச்சியில் மீதமான உணவு பொட்டலங்களை யாருக்காவது கொடுக்கலாம் எனப் புக்கிட் பிந்தாங் வட்டாரத்திற்கு வண்டியை விட்டோம். வெளியில் இருந்து பார்க்க பணக்காரர்கள் அதிகம் உலாவும் இடமாகத் தெரியும். ஆனால் அன்று நான் பார்த்தது இன்று கூட நினைவில் இருக்கிறது. மலாய்க்காரர், சீனர், இந்தியர், வெளிநாட்டவர் என எந்தப் பாகுபாடும் இன்றியும் கடையோரங்களிலும் சாலையோரங்களிலும் அட்டைப்பெட்டியைப் போட்டு அதில் படுத்திருக்கிறார்கள். சிலருக்கு அதுகூட இல்லை. வெறும் சிமெண்டு தரையில் நாளிதழ்களை விரித்துப் படுத்திருக்கிறார்கள்.

நாங்கள் எங்கள் வண்டியை நிறுத்தி உணவு பொட்டலங்களை வெளியில் எடுக்கவும், பசியில் ஒவ்வொருவரும் ஓடி வந்ததைப் பார்க்கையில் மனம் உடைந்துவிட்டது. உணவு பொட்டலங்கள் முடிந்து வண்டியில் ஏறும் சமயத்தில் ஒரு பாட்டி தாமதமாக வந்து சாப்பிட ஏதும் இருக்கா எனக் கேட்டார். அந்தக் கண்கள் பசியில் பெரிய எதிர்ப்பார்ர்ப்புடன் இருந்தது. சட்டெனப் பாக்கெட்டில் இருந்த பத்துவெள்ளியை எடுத்து கொடுத்துவிட்டு அவர் முகத்தை மேற்கொண்டு பார்க்க இயலாமல் வண்டியில் ஏறிவிட்டேன். ஏதோ ஒரு மன உளைச்சல் கொஞ்ச நேரம் என்னை அமைதியாக வைத்திருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன் நான் நண்பர்களுடன் இணைந்து பள்ளிகளுக்கான புத்தக விற்பனையைச் செய்தேன். அப்போதுதான் ஆரம்பித்தோம் என்பதால் எதிர்கால வருமானத்தைக் கணக்கில் கொண்டு எனக்கான சம்பளத்தைக் குறைவாகவே பெற்றுக்கொண்டேன். அப்போதும் கடன்களைக் கட்டுவதற்கும் குடும்பச் செலவுக்குமே அது கைகடிக்கும்படி இருக்கும். ஒரு ரொட்டி துண்டையும் ஒரு பாட்டிலில் தண்ணீரையும் பிடித்துக் கொண்டு வேலைக்குக் கிளம்புவேன். அந்த ரொட்டியை இரண்டு வேலையாகப் பிரித்துக் காலை உணவாகவும் நண்பகல் உணவாகவும் சாப்பிட்டுக்கொள்வேன்.

அப்போதுதான் நண்பர் மூலமாகச் சாய் பாபா செண்டர் குறித்துத் தெரிய வந்தது. தினமும் அங்கு உணவு இருக்கும். யார் வேண்டுமானாலும் சென்று சாப்பிடலாம் என்றார். அதுவரையில் எனக்கு அது தோன்றவில்லை. அவ்வப்போது சாய் பாபா செண்டருக்கு சென்றாலும் அங்குள்ள உணவை கவனிக்கவில்லை. அப்போது அது எனக்கு தேவையாகவும் இல்லை.

பின்னர் தொடர்ந்து, என் வீட்டிற்கு அருகில் இருக்கும் சாய் பாபா செண்டரில் சாப்பிட ஆரம்பித்தேன். வேலை முடிந்ததும் நேராக அங்குச் சென்று பாபாவிற்கு ஒரு வணக்கத்தைக் போட்டுவிட்டு வயிறார சாப்பிட்டு கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்துவிட்டுதான் திரும்புவேன்.

யாரோ ஒருவர் கொடுக்கும் அரிசியிலும் காய்கறிகளிலும் அவருக்கு நேரடியாகத் தொடர்பில்லாத எனக்குத் தினமும் உணவு கிடைத்தது. இப்போது கூட நான் அங்குச் சென்று சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.

ஒவ்வொரு மாதமும் என் கையிருப்புக்கு தகுந்த மாதிரி சில காய்கறிகளையோ அரிசி பைகளையோ வாங்கிகொண்டு சாய் பாபா செண்டரில் கொடுக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் இப்போது ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணையப் புத்தக அங்காடியை நடத்தி வருகிறேன். என்னிடம் புத்தகம் வாங்குகின்றவர்களின் மூலம் எனக்குக் கிடைக்கும் வருவாயில் ஒரு சிறு பகுதியில் அதனைச் செய்து வருகிறேன்.

யாரோ ஒருவரின் பிரார்த்தனையிலும் நம்பிக்கையிலும் என் வயிறு நிறைந்தது போல, என்னால் முடிந்ததை நான் செய்யும் போது அது இன்னொரு மனிதனின் வயிறை நிறைக்கிறது என்பது எனக்குள் சக மனிதன் மீதான அன்பை அதிகப்படுத்துவதாகப் பார்க்கிறேன்.

சிலர் தெருவோரங்களில் இருப்பவர்களுக்கு உணவுகளைத் தினமும் கொடுக்கிறார்கள். ஆதரவற்ற கால்நடைகளுக்கு மருத்துவம் முதல் உணவுகள் வரை பல தொண்டூழியர்கள் கொடுத்துக்கொண்டும் செய்துக்கொண்டும் இருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோருமே ‘உள்ளிருக்கும் நாதனை’ உணவுகள் கொடுப்பதன் மூலமாகக் கண்டுகொள்கிறார்கள் தானே.

அது கடவுள் ! அது கல் ! என்கிற சண்டைகளுக்கு மத்தியில் அந்த மனிதன் பசியோடு இருக்கிறான், கல்வி இன்றி இருக்கிறான்… என்பதே முதலில் பதிலளிக்க வேண்டிய கேள்வி.

செப்டம்பர் 28, 2022

TikTok பேய்கள்

"அதான இப்ப டிரெண்டு...." என தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள் கோமதி. டிக்டாக்கில் வந்திருந்த சமீபத்திய விளையாட்டுதான் அது. 

கைப்பேசியில் வீடியோவைத் திறந்து வைக்க வேண்டும். அதனை தனி அறையில் வைத்து நடப்பதை பதிவு செய்ய வேண்டும். அந்த அறையில் நம் வீட்டு சின்ன பையனை வைத்துவிட்டு விளக்கை அணைத்துவிட்டு கதவையும் சாத்திவிட்டு ஓடிவிட வேண்டும். அப்போது கைப்பேசி பின்னணியில் மெல்லிய இசையும் அதையடுத்து பயங்கரமான சிரிப்பு சத்தமும் தோன்றும். 

அப்பொழுது தனியாக அறையில் இருக்கும் பையன் பயந்துபோய் கைப்பேசியின் முகப்பில் வீடியோவைப் பார்க்க அதன் தானும் தனக்கு பின்னால் அந்தரத்தில் ஒரு பேய் பறப்பது போலவும் இருக்கும். பயந்து அலறும் பையனின் வீடியோவைப் பிறகு பார்க்கும் போதும் பொதுவில் பகிரும் போதும் பார்ப்பவர்களுக்கு ஒரே ஜாலியாக இருக்கும். 

எல்லாவற்றையும் நேர்த்தியாகத் தயார் செய்துவிட்டாள் கோமதி. தன் பையனை நாசுக்காக அறையில் இருக்க வைக்கிறார். அதற்கு முன்னமே கைப்பேசி தயார் நிலையில் இருக்கிறது. சரியான நேரம் பார்த்து விளக்கை அணைத்துவிட்டு கதவைச் சாத்திவிட்டார்.

உள்ளே பையன் அலறத்தொடங்கிவிட்டான். தனக்கு பின்னால் அந்தரத்தில் பேய் மிதந்துகொண்டிருந்தால் யார்தான் சும்மா இருப்பார்கள். சட்டென பையனின் சத்தம் கேட்கவில்லை. ஒரே அமைதி. பையனுக்கு ஏதும் ஆகிவிட்டதோ என்று பயந்துவிட்டாள் கோமதி. விளையாட்டு வினையாகிவிட்டதோ என்னவோ?

அவசரமாகக் கதவை திறக்கிறாள். உள்ளே பையனைக் காணவில்லை. அறைமுழுக்கத் தேடிவிட்டாள். என்ன செய்வது என தெரியவில்லை. ஏதோ நினைவுக்கு வந்தவர் ஓடிச்சென்று கைப்பேசியைப் பார்க்கலானார்.

கைப்பேசி ஸ்கீரினுக்குள்ளே , பையன் இருந்து செய்வதறியாது துடித்துக் கொண்டுக்கிறான்.

கைப்பேசிக்குள்ளே பையனும் கைப்பெசிக்கு வெளியே கோமதியும் அதிர்ச்சியில் நிற்கிறார்கள். இருவருக்கும் ஒன்றும் பிடிபடவில்லை....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்