பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 31, 2021

அப்போதும் இப்போதும்

- அப்போதும் இப்போதும் -

அப்போது
அங்கு ஒரு குழந்தை
பால் குடித்துக் கொண்டிருந்தது

அப்போது
அங்கு ஒரு சிறுமி
படம் வரைந்துக் கொண்டிருந்தாள்

அப்போது
அங்கு ஒரு சிறுவன்
விளையாடிக் கொண்டிருந்தான்

அப்போது
அங்கு ஓர் அம்மா
சமைத்துக் கொண்டிருந்தார்

அப்போது
அங்கு ஓர் அப்பா
வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார்

அப்போது
அங்கு ஒரு பள்ளிக்கூடம்
நடந்துக் கொண்டிருந்தது

அப்போது
அங்கு ஒர் ஓடை
ஓடிக் கொண்டிருந்தது

அப்போது
அங்குச் சில பாட்டிகள்
வெற்றிலை இடித்துக் கொண்டிருந்தார்கள்

அப்போது
அங்குச் சில தாத்தாக்கள்
கலந்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்

இப்போது
இங்கு ஒரேயொரு
நட்சத்திர நீச்சல் குளம்
இருக்கிறது
டிக்கட் உள்ளவர்களுக்கு
அனுமதியுடன்


#தயாஜி

ஜூலை 30, 2021

- முகவரியற்ற கடிதம் -

 - முகவரியற்ற கடிதம் -


ஏன் எழுதுகிறேன்
என்கிற கேள்வியின்
நுனியில் அமர்ந்துக் கொண்டே
எழுதவேண்டி உள்ளது

பதில் கிடைக்காத
எத்தனையோ கேள்விகள்
இதனையும் இணைத்துவிட
தோன்றவில்லை
விட்டு விலகவும்
முடியவில்லை

உலகின் ஏதோ ஒரு
மூலையில்
அழுபவனுக்கு அருகில்
நானும்தான் அழுதேன்
என ஆறுதல் செல்வதற்கு

பெயர் தெரியாத
மனிதனொருவனின்
சொல்ல முடியாத துயரில்
பங்கு கொள்வதற்கு

அழுது அழுது
ஆவப்போவது ஒன்றுமில்லை
என்கிற அனுபவத்தைச்
சொல்லிச் செல்வதற்காவது
ஒருவன் எழுத வேண்டாமா
சொல்லுங்கள்

#தயாஜி

- யாராக பிறக்கலாம் -


- யாராக பிறக்கலாம் -

நிசப்தத்தின் பேரிரைச்சலைத் 
தனிமையில்
கேட்பதென்பது
கண்களைக் கட்டி கடலில்
தள்ளிவிடுவது போலானது

உதவிக்கு அழைக்கவும் முடியாது
உடன்
குதித்தவர்கள் யாரென்றும் தெரியாது

மங்கிப்போன மின்விளக்கின்
கீழ்
அழுவது
வேறு யாரோ அல்ல
நிச்சயம் என் கனவுதான்

அதோ நிழலாக தன்னை
நினைத்துக் கொண்ட
நாயின் வாலொன்று
வெளிச்சம் வரும் வரை
அசைமாட்டேன் என்கிறது

நீ நிழலல்ல
நிஜமென
யார்தான் சென்று சொல்வது

எதிர்கால ஆசை
தலைப்பில் எழுதிவைத்த நேரத்தில்
எதையாவது பூசி
தோளை வெளுத்திருந்தால்
கறுப்பாக இல்லாமல்
கல்லூரியில் இடம் பெற்றிருப்பேன்

படித்ததை
எழுதி பெற்ற
மதிப்பெண்களைவிட
யார் வீட்டில் என்னவாக பிறந்தோம்
என்ற அடையாளமே
போதுமானதாக இருக்கும் போது
எதற்கு இத்தனைச் சிரமங்களில்
பரிட்சைக்கு பழகுகின்றோம்

ஆனால் ஒன்று
நாயாகக்கூட பிறக்கலாம்
நாடற்வனாக பிறக்கவே கூடாது

- நேசத்திற்குரிய இரவுகளே -

 - நேசத்திற்குரிய இரவுகளே -


இரவுகள் சுதந்திரமானவை
கண்ணைச் சூழ்ந்த
இருளில் திரையில்
யாரை வேண்டுமானாலும்
வரச்சொல்லி அழைக்கலாம்
எந்த வாசத்தையும்
முகர்ந்துக் காட்டலாம்
எந்த உணர்விலும்
வாழ்ந்துப் பார்க்கலாம்

எப்போதோ செய்த தவறுக்கு
வருந்தி அழலாம்
நண்பர்கள் செய்த துரோகத்தை
மீண்டும் காணலாம்

அமைதியின் பேரிரைச்சல்
காதுகளை கிழித்தாலும்
சிரித்துக் கொள்ளலாம்

இரவுகள் எப்போதும்
தெய்வீகமானவை
அதன் ஆழம் அறிய
இருளின் இருளாக
கரையவேண்டும்
நம் நிழலாக நாமே
பிறக்க வேண்டும்
ஒட்டிக் கொண்டிருக்கும் உடலை
ஒதுக்கி
சுவர்களில் பிரதிபலிக்க வேண்டும்
நிழலானப் பின்பும்
நிச்சயம் நினைவுகள்
வந்தேத்தீரும்
சமாளிக்க கொஞ்சம்
தைரியமும் கொஞ்சமேனும்
அழுகையும்
வேண்டும்...

- தயாஜி

- பகல்கள் விற்பனைக்கு -

 - பகல்கள் விற்பனைக்கு -

உங்கள் இரவுகளை
எனக்களிக்க இயலுமா
பதிலாக என் பல பகல்களைத்
தந்துவிடுகிறேன்
எனக்கு இரவுகள் போதும்
எல்லார்க்கும் உறக்கம்
உண்டானப்பின்னேதான்
ஏதோ கொஞ்சம்
அழ முடிகிறது
அழ அழ மட்டுமே
மனம் லேசாகிறது
அழுதப்பின்னே அதன்
பாரம் இரட்டிப்பாகிவிடுகிறது
எத்தனைக் கனவுகளுடன்
கால்தடம் வைத்தோம்
அத்தனையுமா அடைந்துவிடுகிறோம்
பித்தனைப் போல் அலையவும்
முடியவில்லை
புத்தனைப் போல் அமரவும்
இயலவில்லை
அழும் கண்ணீரோசையில்
காதுகள் கொஞ்சமேனும்
அடைத்துக் கொள்கின்றன
தேம்பித் தேம்பி அழவும்
விம்மி விம்மி ஆழவும்
காரணங்களா இல்லை
ஏதோ ஒன்று
காத்திருப்பதாக
நமக்கு நாமே சொல்லிக்
கொள்ளும் ஆறுதல்களுக்கு
பஞ்சமில்லாத பகல்களை
எடுத்துக் கொண்டு
நிசப்தமான இரவுகளை
கொடுத்து உதவுங்கள்
தூரத்து நட்ச்சத்திரங்களுடனாவது
பேசிவிட்டு வருகிறேன்
அவை போலியாய் புன்னகிக்க
கற்றுக்கொள்ளாதவை....

- அத்தையை நம்புவோம் -

 #குறுங்கதை 2021 - 23

- அத்தையை நம்புவோம் -

காலையில் சீக்கிரம் எழுந்துவிட்டேன். காலைக்கடன்களை முடித்துவிட்டு வெளியேறினேன். வரவேற்பறையில் அத்தை அமர்ந்திருந்தார். வழக்கமான புன்னகை இருக்கவில்லை.

முகம் பீதியில் இருந்தது. என்னவென்று விசாரித்தேன்.

"அத்தை என்ன ஆச்சி..? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க.?"

"ஒன்னுமில்ல.."

"ஏதோ இருக்குன்னு தெரியிது அத்தை. சொல்லுங்க..."

"சொன்னாலும் நீங்க நம்பமாட்டீங்க.. விடுங்க.."

அத்தை இப்படி சொல்லிவிட்டால், அடுத்ததாய் நடந்ததைச் சொல்லப்போகிறார் என்று அர்த்தம். ஆரம்பித்தார்.

"விடியற்காலைல ஏதோ ஒன்னு என்னை அமுக்கிடுச்சி..!"

"அமுக்கிடிச்சா...?"

"ஆமா.. நல்லா தூங்கிட்டு இருந்தேன். கறுப்பா ஒன்னு முகம் கூட சரியா தெரியல.. என் காலை புடிச்சிருச்சி..."

"ஐயோ அப்பறம்!"

"என்னால கை காலை அசைக்க முடியல.. வாய்க்கு வந்த சாமிங்க பேரையெல்லாம் சொல்லிட்டு... காலை இழுத்துகிட்டேன்.."

"அப்பறம்....!"

"அப்பறம் என்ன அப்பறம்.. என்கிட்டயா விளையாடுதுனு சொல்லி.. இழுத்துகிட்ட காலிலேயே ஒரு எத்து விட்டேன்.. அப்படியே பறந்து போச்சி.. அப்பறம் காணல.."

சொல்லும் போதே அத்தையின் முகத்தில் ஏதேதோ தெரிந்தது. நம்புவதா வேண்டாமா என யோசிக்க முடியவில்லை.

அப்போதுதான் மாமா அறையை விட்டு வெளியில் வந்தார். முகம் வீங்கி இருந்தது. மூக்கு உடைந்து இரத்தம் காய்ந்திருந்தது. நடக்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்தார்.

சந்தேகமே இல்லை. அத்தையை நம்பிவிட்டேன்.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜூலை 11, 2021

- கத்தும் கிளிகள் -

 #குறுங்கதை 2021 - 22



         
               - கத்தும் கிளிகள் -


"காப்பாத்துங்க.... காப்பாத்துங்க..."

முனகல் சத்தம் பக்கத்து வீட்டுக்காரரை பதறச்செய்தது. ஏதோ ஒரு பெண்ணின் குரல். உயிருக்கு பயந்து கெஞ்சும் பலவீனமானக் குரல். என்ன செய்யலாம். யோசிக்கலானார்.


தாமதமின்றி சிலரை அழைத்துக் கொண்டு பக்கத்து வீட்டு வாசலில் நிற்கலானார். வீட்டில் உள்ளவர்களை அழைக்கவும் செய்தார். 


உள்ளிருந்து வெளியில் வந்த குமாருக்கு ஒன்றும் புரியவில்லை. தான் மாட்டிக்கொண்டதாக நினைத்தார். எதையும் காட்டிக்கொள்ளவில்லை.


 'என்ன?' என்பதாக தலையை ஆட்டினார்.


"சார் உங்க வீட்டுல இருந்து ஒரு பொண்ணு அழற சத்தம் கேட்குது... என்ன நடக்குது...?, நீங்க இங்க வந்து ஒரு மாசம் கூட ஆகல... அதுக்குள்ள என்ன இதெல்லாம்...?"


"பொண்ணு அழற சத்தமா? என் வீட்டுல இருந்தா..?"


"பின்ன யார் வீடு?..யாரோ ஒரு பொண்ணு காப்பாத்துங்க.. காப்பாத்துங்கனு கத்தற சத்தம் கேட்குது.... யாருன்னு எங்களுக்குத் தெரியனும். இல்லைன்னா போலிஸை கூப்டுவோம்.."


"இப்ப என்ன உங்களுக்கு? அந்த பெண்ணை பாக்கனும் அவ்வளவுதான...?"

சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் சென்றார்.  கொஞ்ச நேரத்தில் வெளியில் வந்தார். அவருடன்  'காப்பாத்துங்க.. காப்பாத்துங்க..' என முனகிக்கொண்டே ஒரு கிளியும் கூண்டுடன் வந்தது. பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் பயம் காட்டுவதாகவும் அந்தக் கிளி இருந்தது.


"சார் இது இந்த கிளியோட சத்தம் சார்... கூண்டை திறந்துவிட சொல்லுது.. பத்து வருசமா வளர்த்துகிட்டு இருக்கேன்.."


வந்திருந்தவர்கள் சிரிப்பதா அழுவதா எனத் தெரியாமல் அசடு வழிய அங்கிருந்து ஒருவர் பின் ஒருவராக கிளம்பினார்கள்.


அவர்களை நினைத்து சிரித்துக் கொண்டே கிளியுடன் வீட்டிற்குள் சென்றார் குமார். கதவை பூட்டினார். கிளியை அதற்குரிய இடத்தில் வைத்தார். அதற்கு ஒரு வெள்ளை எலியை தின்னக்கொடுத்தார்.


சமையல் அறைக்குச் சென்றார். கத்தியை எடுத்துக் கொண்டார். மறைவாக இருக்கும் கதவை திறந்தார். நடந்துக் கொண்டே

"நாக்கு இருந்தாதான காப்பாத்துங்கன்னு கத்துவ.....??"


#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்