பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 17, 2016

கதை வாசிப்பு -15 ' திருநங்கையின் மகள்'

கதை வாசிப்பு -15 ' திருநங்கையின் மகள்'

     ஜூலை மாத (2016) உயிர்மையில் இந்து மேனன் எழுதிய சிறுகதையை ஸ்ரீபதி பத்மா 'திருநங்கையின் மகள்' என்று மொழிப்பெயர்த்துள்ளார்.
சீக்கிரத்தில் கதைக்குள்ளே செல்ல முடியவில்லை. கவனமாக படிக்கவேண்டியுள்ளது. பெண்ணின் மன உணர்வில் இருந்து கதை தொடங்கி தொடங்கிய இடத்தில் முடிகிறது. அதற்குள்ளாக ஒருத்தியில் வாழ்க்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

   திருநங்கையால் காப்பாற்றபடும் சிறுமி எந்த நொடியில் தன்னை திருநங்கையின் மகள் என அறிவிக்கிறாள் என்பதுதான் கதை நிறைவு பெறும் இடம். ஆனாலும் கதை அங்கிருந்து பின் வழியாக கதையின் தொடக்கதை நோக்கி வாசகரை அழைத்து செல்கிறது.

   கதையின் நடை அவளின் மனவோட்டம் போல பிடிகொடுக்காமல் முன்னோக்கி போய்க்கொண்டே இருக்கிறது. இதுதான் கரு இதுதான் கதை என வாசகரை முடிவெடுக்க இக்கதை சிரமப்பட்டுத்துகிறது. அதுவே இக்கதையின் சுருக்கத்தை எழுத தடையாக அமைந்துள்ளது. மீண்டும் கதையை படித்தாலன்றி அது பிடிகொடுக்காது.

    ஏன் அப்படி செய்தாள், எதனை அவள் நிரூபிக்க தன் உடலையே ஆயுதமாக்குகிறாள் என வாசகரை சிந்திக்க வைப்பதில் கதை தன்னை காப்பாற்ற எத்தனிக்கிறது.

- தயாஜி

கதை வாசிப்பு 18 –ம் ‘கெத்துவா கம்போங் முனுசாமி’



கதை வாசிப்பு 18 –ம்கெத்துவா கம்போங் முனுசாமி


    இவ்வார மக்கள் ஓசையில் (17 ஜூலை 2016) எம் கருணாகரனின்கெத்துவா கம்போங் முனுசாமிஎன்னும் சிறுகதை இடம்பெற்றுள்ளது.
 கதைக்குச்செல்வதற்கு முன்பாக;

   கெத்துவா கம்பங் முனுசாமி என்பது மலாய்ச்சொல், தமிழில் கிராமத்தலைவர் முனுசாமி என்று கொள்ளலாம். கதையின் தலைப்பை பார்த்ததும் மகிழ்ச்சியும் பதட்டமும் ஒருங்கே தோன்றிவிட்டது. அதனை தவிர்க்க இயலவில்லை.

     இத்தலைப்பை படிக்கையில் இயல்பாகவே கிராம தலைவர் குறித்து ஏதோ இருப்பதாக தோன்றி கவனம் பெற்றதில் மகிழ்ச்சி. இதென்ன தமிழ் நாளேட்டில், தமிழ் சிறுகதையில் இப்படி மலாய் மொழியை தமிழில் எழுதி தமிழை கொலை செய்கிறாரே இந்த எழுத்தாளர் என எந்த முகநூல் போராளியாவது கிளப்பிவிடுவாரோ எந்த வீடியோவிலாவது கிளம்பி வருவாரோ என்ற பதட்டம் இன்னமும் எனக்கு இருக்கிறது. அதற்கான சாத்தியங்கள் குறைவுதான் என்பதை சிறிது நேர யோசனையில் கண்டுகொண்டேன்

      இங்கு தமிழ்ச்சார்ந்த இயக்கங்கள் பல உள்ளன, நல்ல தமிழை நடைமுறை படுத்த அவர்களும் அதன் அங்கத்தினரும் தொடர்ந்து செயல்பட்டுவருவது நாம் அறிந்ததுதான். பாராட்டத்தக்க ஒன்றாகவே இதனை பார்க்கிறேன். ஆனால் அவர்களில் செயல்கள் மீதான நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் சிதைப்பதற்காவே ஓர் கூட்டம் அங்கொன்றும் இங்கொன்றும் இருப்பதை காணவே முடிகின்றது. அதில் பெரும்பாலும் முகநூல் போராளிகளாக இருப்பது அவர்களை அடையாளப்படுத்த நமக்கு கிடைத்திருக்கும் நல்லதொரு சாதனம்.

    தமிழ்ச்சார்ந்த எந்த நிகழ்ச்சிகளிலும் அவர்களை காணவியலாது, எந்த தமிழ்ப்பத்திரிக்கையும் அவர்களின் முகவரிக்கு வந்து சேராது. தமிழ்ச்சமூகம் முன்னெடுக்கும் எந்த ஆரோக்கிய நடவடிக்கைகளிலும் அவர்களை கண்டு கலந்தாலோசிக்க முடியாது.

     ஆனால், அவர்களுக்கு நம் நாட்டில் வெளிவரும் மலேசிய திரைப்படங்களுக்கு தமிழ் பெயரை வைக்காதது மட்டும்தான் மாபெரும் போராட்ட தூண்டுதலாக அமையும். உதாரணமாக சமீபத்தில் திரை கண்ட ஜகாட்என்ற மலேசிய திரைப்படத்தை சொல்லலாம்.

     ’என்னப்பா ஆளுக்கு ஆள் படம் நல்லாருக்கு, தமிழர்களோட வன்முறை கலாச்சாரத்தின் தொடக்கத்தை காட்டிருக்காங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்கிங்கமுதல்ல அதுக்கு தமிழ்ல பேரு வைக்க சொல்லுங்கப்பாஎன்று புலனத்துக்கு அனுப்பி தங்களில் தமிழ் பற்றை காட்டினார்கள். முகநூலிலும் அதற்காக ஒரு பெரிய கருத்துக்களமே வந்திருந்தது.

      தலைப்பு என்பது எதற்கு ? கதைக்கு ஏற்றார் போலவா இல்லை இம்மாதிரி போலி போராட்டவாதிகளுக்கு கிச்சிகிச்சி மூட்டவா.? என்றாவது இவர்கள் திரைப்பட விவகாரங்களை விட்டு இதர தமிழ்ச்சார்ந்த அமைப்புகளுக்கு உதவி செய்திருப்பார்களா என்றால் இல்லையென்றே நினைக்கத்தோன்றுகிறது.

     சரி மலேசிய படங்களுக்கு தமிழில் பெயர் வைக்காத்தால புறக்கணிக்கிறோம் என வீட்டுக்குள்ளேயோ கைபேசிக்குள்ளேயோ முகநூல் வழி போராட்டம் செய்கின்றவர்களை பார்த்து நாம் தாரளமாக ஒன்றை கேட்கலாம்.

 “சரிங்க பாஸ்…! படத்துக்கு தமிழ்ல பெயர் வைக்கல அதனால போய் பாக்கலஆனா இங்குள்ள எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் (எல்லோருமே என்றும் சொல்லிக்கொள்ளலாம்) அவர்கள் வெளியிடும் புத்தகங்களுக்கு தமிழில்தானே தலைப்பு வைக்கிறார்கள். தமிழ் கதைகள்தானே எழுதுகிறார்கள்இதுவரை எந்தெந்த புத்த வெளியீட்டுக்கு சென்றுள்ளீர்கள்…. அட எத்தனை புத்தகங்களை வாங்கியுள்ளீர்கள்…. அடடே எத்தனை பேருக்கு நம்மவர்களில் புத்தகங்களை வாங்கிக்  கொடுத்திருப்பீர்கள் ”  என்றால் முறைத்துப்பார்த்து முனகுவார்களே தவிர இதோ அதோ என ஆதாரம் காட்டமாட்டார்கள்

      ஏனெனில் முகநூலின் பகிர்வுக்கு அரை நொடி போதும். மற்ற எல்லாவற்றுக்கும் கொஞ்சமேனும் உழைப்பு தேவை. முகப்பூச்சு மனிதர்கள் எப்போது குளிர்சாதனத்தை முகர்ந்துக்கொண்டிருப்பார்கள்தவறியும் வெளியேறினால்  அவர்களில் முகப்பூச்சு கரைந்து மறைந்து நிஜ முகம் தெரிந்து விடும். ஏற்கனவே இருக்கும் தமிழ்ச்சார்ந்த இயக்கங்களிடமாவது இவர்கள் கொஞ்சமாவது சமூக பொறுப்பைக் கற்றுக்கொள்ளலாம்.

இப்போது கதை சுருக்கத்துக்கு போகலாம்

கம்போங் கெத்துவா முனுசாமி இறந்துவிட்டார். அவர் ரொம்ப நல்லவர். அவரின் இறப்புக்கு மலாய் சீன இனத்தவர்களும் வந்திருக்கிறார்கள். முப்பது வருடங்களுக்கு முன்னமே மலாய் பெண்ணுக்கு உதவியிருக்கிறார். அவரின் பையன் இப்போது மகட்பேறு மருத்தவராக  உள்ளார். கம்பத்துக்கு வரும்போதெல்லாம் முனுசாமியை பார்க்க தவற மாட்டார். தன் கம்பம் தவிர மற்ற கம்பங்களுக்கு உதவியுள்ளார். அப்படி விரட்டியடிக்கப்பட இருந்த ஒரு கம்பத்தை காப்பாற்றி அந்நிலங்களை அவர்களுக்கே பட்டாபோட்டு கொடுத்திருக்கிறார். அவர்கள் இவரின் பெயரை கம்பத்துக்கு வைக்க கேட்டும் இவர் அதனை தவிர்த்துவிட்டார். யாருக்கெல்லாம் என்னென்ன உதவிகள் தேவையோ அதையெல்லாம் அரசாங்கத்திடம் இருந்தோ மற்றவர்களிடம் இருந்தோ வாங்கிகொடுத்துவிடுவார். சில மாதங்களாக அங்கு பரவியிருந்த காய்ச்சலில் சில பலியாக பலரை முனுசாமி காப்பாற்றி கடைசியில் அவர் அவ்வியாதிக்கு பலியாகிவிட்டார். இங்கு தமிழர்கள் மட்டும் இருப்பதால்தான் அரசாங்கம் நோய் பரவியும் கண்டுகொள்ளவில்லை என சந்தானம் புலம்புக்கிறார். அதோடு இப்போது சுற்றுவட்டாரத்தில் குடியேறியிருக்கும் சட்டவிரோத குடியேறிகள் சொந்த நாடு போல நடந்துக்கொள்ப்கிறார்கள், அடிதடி கொலை வரை போகிறார்கள், அவர்கள்தான் வியாதிக்கு காரணம் என்கிறார். அப்போதுதான் கம்போங்க் கெத்துவா அவ்விடத்தில் மண்டபம் கட்ட வட்டிக்கு பணம் வாங்கியது தெரியவந்தது. அமைச்சர் சொன்னது போல பணம் கொடுக்கவில்லைஅந்த மண்டபம் குறித்து சொல்கிறார் கதைச்சொல்லி. தன்னையும் அங்கு வகுப்பு நடத்த சொல்ல கேட்டதை நினைவுகூருகிறார். ஆனால் வெளியில் வகுப்பு எடுத்தால் பணம் கிடைக்குமே என இதுவரை தவிர்த்து வந்திருக்கிறார். இனி கதைச்சொல்லி இலவசமாக அங்கு வகுப்பு எடுக்க முடிவெடுக்கிறார். இறப்பு வீட்டில் நடக்கவிருப்பதை சில பத்திகளில் சொல்லி, முனுசாமியின் பிள்ளைகள் குறித்து சொல்கிறார். ஐந்து பெண்கள். மூத்தவருக்கு நாற்பது வயது. யாருக்கும் திருமணம் ஆகியிருக்கவில்லை. அப்போது பக்கத்தில் டத்தோ சுரேந்திரன்  நிற்கிறார். கதைச்சொல்லியின் பால்ய நண்பன். இக்குடும்பத்துக்கு தான் கடமைப்பட்டிருப்பதாக சொல்கிறார். கதைச்சொல்லி அவரைப்பார்த்து இறுகக் கைபிடிக்கிறார். கதை முடிகிறது.

கதை குறித்து;

    கதை முழுக்க சவப்பெட்டியில் இருக்கும் முனுசாமியை பார்க்க வருகின்றவர்களுக்கு எப்போதோ முனுசாமி செய்த உதவிகளை கதைச்சொல்லி சொல்லிக்கொண்டே வருகிறார். நம் காதுகளில் சோக இசையும் கண்களில் அனுதாப கண்ணீரும் வராத்துதான் மிச்சம். நல்லவன் ஒருவன் வாழ்ந்தான். அவன் நல்லவனாகவே வாழ்ந்தான். அவனின் இறப்பு இன்னும் சிலரை நல்லவனாக்கியுள்ளது

    உண்மையில்  அதுவல்ல கதை, சிறுகதை அப்படியாக வந்திருக்க கூடாது. இங்கு பல இடங்களில் முக்கியமான சிறுகதைகள் வெளிவர முயன்று முடியாமல் போய்விடுகின்றன.
உதாரணமாக;

1.        1.   எப்படி கிராம மக்களுக்கு நிலப்பட்டா கொடுத்தார். ஏனெனில் அங்குதான் சதி செய்து நிலங்களை பெற்று தந்தார் என கதைச்சொல்லி சொல்கிறார். நல்லவனாக இருக்கும் ஒருவர் எப்படி சதி செய்து நல்லது நடந்தும் அதன் உளச்சிக்கலில் மாட்டிகொள்கிறார் என்பதை சொல்லியிருக்கலாம்.

2.       2.    தமிழர்கள் அதிகம் இருப்பதால் நோய் பரவியும் அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என சந்தானம் சொல்வதை கதையாகியிருக்கலாம்.


3.         3.  கள்ளக்குடியேரிகளாக நாட்டிற்கு வந்தவர்கள் காட்டில் மறைந்து வாழ்ந்த காலம் மாறீ  இப்போது இந்நாட்டை சொந்தம் கொண்டாடும்விதமாக வியாபரங்கள் செய்வது  சாலையோரமாக அனுமதியின்றி உணவு கடைகள் நடத்துவது இங்குள்ளவர்களுடன் சண்டையிட்டு கொலை, வழிப்பறிகளில் ஈடுபடுவதை போன்றவற்றை கதையாக்கியிருந்தால் இக்கதை முக்கிய கதையாக கவனம் பெற்றிருக்கும். இக்காலத்துக்கு இது குறித்தான விழிப்புணர்வுக்கு இக்கதை மூலமாகியிருக்கும்.

4.        4.   எப்போதும் நல்லவராக இருக்கும் கெத்துவா கம்போங் முனுசாமிக்கும், அதற்கு எதிராக இருக்கும் சந்தானத்துக்குமான முரன்களை கதையாக்கியிருக்கலாம். அது இச்சிறுகதை வேறொரு தளத்திற்கு கொண்டிவிட்டிருக்கும்.


5.       5.    எல்லாவற்றுக்கும் மேலாக ஊருக்கெல்லாம் நல்லது செய்தவர் தன் வீட்டில் இருக்கும் ஐந்து பெண்களுக்கு திருமணம் செய்ய முடியாமல் இருப்பது குறித்து பேசியிருக்கலாம். நாற்பது வயதான மகளை வீட்டில் வைத்துக்கொண்டு அவரும் படும் மன அழுத்தமோ அல்லது மகளின் மனமாகவோ கதை வெளிவந்திருக்கலாம்.



கதையின் சிக்கல்;

   காரியம் செய்ய வரும் சாங்கியக்காரின் தொந்தியைப்பார்த்து தனது தொந்தியை தடவி , வயிறை குறைக்க வேண்டும் என சொல்லும் கதைச்சொல்லியைக்கூட நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இவ்வளவு நடந்தும் இன்னமும்  டத்தோவை நம்புவதாக கதைச்சொல்லி தன்னை அடையாளம் காட்டுவது அபத்தம். இதற்கு பதிலாக இறந்த கெத்துவா கம்போங்க் முனுசாமி எந்த  மாயமந்திரம் செய்தாவது பிழைத்து வந்திருக்கலாம்.

-          தயாஜி

கதை வாசிப்பு - 17 ' ராணி '

கதை வாசிப்பு - 17 ' ராணி '

    ஜூலை மாத காலச்சுவடு (2016) இதழில் சக்கரியாவின்  'ராணி' சிறுகதை இடம்பெற்றுள்ளது. மலையாளத்திலிருந்து சுகுமாரன் தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார்.

   பொதுவாக சிறுகதைகள் ஒரு சிக்கலை நோக்கி நகர்ந்துக்கொண்டே இருக்கும். அச்சிக்கலுக்கான தீர்வைதான் நாமும் தெரிந்துக்கொள்ள ஆவல் கொள்வோம். ஆனால் நவீன சிறுகதைகள் சிக்கல் இல்லாமல் கூட வாசகருடன் சேர்ந்து தன்னை நகர்த்திக்கொள்கிறது. மையங்கள் அற்ற நவீன சிறுகதைகளின் அடர்த்தியில் வாசகரும் சிக்கிக்கொள்கிறார் பின்னர் தன் மனநிலையை பொறுத்து அச்சிறுகதைக்கு ஓர் புரிதலைக் கொடுத்து, தன் வாழ்வின் சிக்கலை கண்டுகொள்ள எத்தனிக்கிறார்.
புறவய சிக்கலில் இருந்து அகவய சிக்கலை நோக்கி வாசகர் நகரத்தொடங்குகின்றார். அத்தகைய சாயலைத்தான் இக்கதையில் உணர முடிகின்றது.

கதை,

   ராணி, 24 வயதிலெயே குழந்தை பெற்று சீக்காளி ஆகிவிடுகிறாள். அப்போது தோன்றிய முதுகு வலி கணவன் கட்டியணைக்கும் போதும் தடையாகிறது. அதற்கு வைத்தியம் பார்க்க வீட்டிற்கே மருத்துவரை அழைத்துவருகிறான்.
ராணி ஆடைகள் கழற்றப்பட கூச்சப்படுகிறார், ஆடைகள் கழற்றப்பட்டால்தான் உடல் நோயை தீர்க்க தைலம் உடல் முழுக்க தடவ முடியும் என கணவன் அவளை சமாதானம் செய்கிறான். ஆனாலும் ஒரு கையால் மார்புகளையும் மறு கையால் நாணமுள்ள இடத்தையும் மூடிக்கொள்கிறாள்.

   கணவனுக்கே அவளை அப்படி பார்க்கையில் ஏதோ பெண்ணென் தோன்றி ஆசை வருகிறது. அந்நேரம் பார்த்து மருத்துவர் மூலிகை இலை தேவைப்படுகிறதாக சொல்கிறார். தான் வழக்கமாக கொண்டு வந்தது எதிர்பாரா விதமாத தீர்ந்துவிட்டதை நினைத்து நொந்துக்கொள்கிறார்.

   கணவன் அந்த மூலிகை இலை பக்கத்தில் கிடைக்கும், தான் கொண்டுவருவதாக கூறி செல்கிறார் .தூரத்தில் இருக்கும் நண்பனின் பழைய வீட்டு பின்புறம் மூலிகை இலைகளை பறித்துவிட்டு திரும்பும்போது புதர் மண்டிய அவ்விடம் அவருக்கு பழைய நினைவுகளை கொடுக்கிறது.  பழைய வரந்தாவில் கொஞ்சம் அமர ஆசை வர அமர்கிறார். எதிர்பாராத விதமாக எண்ண ஓட்டத்தினால் உறங்கிவிடுகிறார். நினைவுகளை அவரை எங்கெங்கோ அழைத்து செல்ல விழித்துவிடுகிறார். கையில் வைத்திருக்கும் மூலிகை இலைகள் வாடி கிடக்கின்றன. அவசர அவசரமாக சாலைக்கு சென்று ஆட்டோ மூலம் வீடு செல்கிறார். வீட்டுக்கதவை ராணிதான் திறக்கிறாள். தாமதத்தின் காரண கேட்க எதும் சொல்லாமல் மருத்துவத்தை குறித்து கேட்கிறார்.

   மருத்துவர் அவருக்காக காத்திருந்ததையும் அதோடு நடுவில் எழுந்து போய் மருத்துவருக்கு தெநீர் கொடுத்தது வரை சொல்கிறாள்.

   அப்போதுதான் கணவனுக்கு நினைவுக்கு வருகிறது, "இப்போ உன் வலி எப்படியிருக்கு?" என்கிறார். ராணி கிறக்கம் நிறைந்த கண்களுடன் "ஓ அது காணாமப் போயிடுச்சு" என சொல்ல கதை அவ்விடத்தில் முடிகிறது.

நிறைவாக,

   வீட்டுக்கு தாமதமாக வந்த கணவனும் மனைவியும் உரையாடுவது இக்கதைக்கு அவசியமானதாக உள்ளது. ஏனெனில் அவ்விடம்தான் வாசகருக்கான வேலையை சக்கரியா கோடுத்துள்ளார்.
உதாரணமாக, மூலிகை இலை இல்லாம என்ன செய்தாரு என கணவன் கேட்க, இருக்கிறதை வச்சி காரியத்தை நடத்தலாம்னு வைத்தியர் சொன்னாரு என மனைவி கூறுகிறார்.

   ஆனால் கதையின் முடிவில் ஒரு நொடி யோசித்து மீண்டும் மேற் சொன்ன உரையாடல் முதல் அக்கடைசி உரையாடல்களை திரும்ப படிக்க வைக்கிறார்.

   என்ன நடந்திருக்கும் என யூகிக்க இடத்தையும் கொடுத்து அப்படி நடந்திருக்க கூடாது என வாசகரை எண்ணத் தூண்டுவதுதான் இக்கதையின் வெற்றி.

- தயாஜி

ஜூலை 16, 2016

கதை வாசிப்பு -16 ' ரூஹாணிகள்

கதை வாசிப்பு -16 ' ரூஹாணிகள் '

   உயிர்மை ஜூலை (2016) இதழில் 'ரூஹாணிகள்' என்னும் சிறுகதையை ஃபீர்தவ்ஸ் ராஜகுமாரன் எழுதியுள்ளார்.

   இக்கதையை குறித்து பேசுவதற்கு முன்பு சிலவற்றை பகிரலாம் என நினைக்கின்றேன். என்வரையில் எல்லா கதைகளும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன. காலாகாலத்துக்கும் அக்கதைகள்  சொல்லப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். ஆனால் எப்படி அக்கதைகள் சொல்லப்படுகின்றன எந்த அரசியலை அக்கதைகள் பேசுகின்றன என்பதைத்தான் இப்போது எழுதுகின்றவர்கள் கையாளுகிறார்கள். கவனம் கொடுக்க வைக்கிறார்கள்.

வேண்டுமெனில் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் எல்லா கதைகளுக்குமான ஒரு வரி வாக்கியத்தை கண்டடைந்து விடலாம்.

- நல்லவன் வாழ்வான், தாமதமாகும்

- உண்மையும் நேர்மையும் வெல்லும்

- மன்னிப்பு பெரிய தண்டனை

- அம்மாவான அப்பா

- அப்பாவான அம்மா

- குடும்பத்தின் தேவை

- குடும்பத்தின் தேவையின்மை

- அவளின் பார்வை , உளவியல்

- அவனது பார்வை , உளவியல்

- மூட நம்பிக்கையின் விளைவு

- நம்பிக்கை தந்த வாழ்வு

இவை ரொம்ப மேலோட்டமான
வைதான். இன்னும் ஆழமான பார்வையில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அனைத்தையும் ஒற்றை வாக்கியத்துக்குள்ளாக அடைத்துவிடலாம்.

இவை எல்லாம் கதைகள், கதைகளுக்கான ஆதார விவரங்கள். ஆனால் இவை சிறுகதைகள் ஆவது எழுதப்படும் விதத்தை பொறுத்தது. தொடர்ந்து வாசிப்பதன் மூலம் சில எழுத்தாளர்களின் கதை சொல்லும் விதம் நமக்கு நெருக்கமாகிவிடும். நம் யூகம் போலவே கதை செல்லும் அல்லது நம் யூகத்துக்கு அப்படியே மாற்றாக கதையின் முடிவு அமர்ந்திருக்கும்.

சுஜாதாவின் எழுத்துகளை தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்த சமயம் நான் எழுதியிருந்த சிறுகதை ஒன்று சுஜாதாவின் பாணியில் இருப்பதாக எங்கள் ஊரின் பிரபலமான வானொலி நாடக ஆசிரியர் என்னை தேடி வந்து பாட்டினார்.

  அதுவெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் இப்போது 'ரூஹாணிகள்'க்கு போவோம். ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரனை இக்கதை மூலமே அறிகிறேன். இதற்கு முன் அவரிடன் இதர படைப்புகளை படித்திருக்கவில்லை. ஆக இக்கதை குறித்து மட்டுமே பேச முடியும்.

கதை.
இஸ்லாமிய குடும்பம். அவர்களிம் பெண்ணுக்கு எந்தோ சிக்கல் ஏற்படுகிறது. தானாக சிரிக்கிறாள் எதையோ கண்டு பயப்படுகிறாள். அவளை குணமாக்க மந்திரவாதிகளை நாடுகிறார்கள். தந்தைக்கு அதில் உடன்பாடு இல்லையென்றாலும் தாய்க்கு அவ்வழியே சிறந்ததாக தெரிகிறது. முதலில் இஸ்லாமிய முறைப்படி மந்திரிக்கிறார்கள். பலன் இல்லை. பின்னர் தெரிந்தவர் மூலம் மலையாள மந்திரவாதியிடம் மந்திரிக்கிறார்கள்.  தாய்க்கு இப்படி இந்திய முறைப்படி மாந்திரீகம் பார்ப்பது நெருடலை கொடுக்கிறது. இரண்டாயிரம் செலவு செய்கிறார்கள். சில நாட்களில் மகள் மீண்டும் அதே தொல்லைகளுக்கு ஆளாகிறாள். இப்போது அவ்வூரில் பிரபலமான இஸ்லாமிய மாந்திரீகரிடம் போகிறார்கள். ஏழாயிரம் செலவாகும் என அவர்கள் சொல்ல தாயும் தந்தையும் விழிக்கிறார்கள். பின்னர் முதலில் மூன்றாயிரமாவது கட்டணம் கேட்கிறார்கள். மந்திரவாதியின் முன் அமர்ந்திருக்கும் மகளை அப்பசியே விட்டுவிட்டு தாயும் தந்தையும் பணம் குறித்த வாக்குவாதம்

செய்துக்கொண்டிருக்கிறார்கள். உள்ளே மகள் தன்னை நோக்கி ஏதோ கை வருவதை உணர்கிறாள். அது அந்த மந்திரவாதியின் கை போல இருக்கிறது. சத்தமிட முடியாமல் மகள் அப்படியே உறைந்து போகிறாள் என கதை முடிகிறது.

இக்கதையை குறித்து,
கதையின் தொடக்கம் ஈர்க்கும்படி இருக்கவில்லை. மகளில் பயத்தில் இருந்து இக்கதையை தொடங்கியிருக்கலாம். கதை போக்கும் முடியவேண்டிய இடத்தில் முடியாமல் நீண்டுக்கொண்டே போகிறது.

வாசகரை அந்நீளம் சோர்வடைய வைக்கிறது. கதையை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு சரியான யுக்திமுறை பயன்படுத்தப்படவில்லை.
இக்கதை எல்லா காலத்திலும் செவி வழியாகவும் புனைவாகவும் உண்மையாகவும் சொல்லப்பட்டு பகிரப்பட்டு வந்திருக்கும் கதை. இதனை சிறுகதையாக்க எத்தனை சிரத்தை கொண்டிருக்க வேண்டும்.
 மகளின் உளவியல் ஆழமாக சொல்லப்பட்டிருக்கவேண்டிய இடங்கள் எல்லாம் காலியாக உள்ளன. மேலோட்டமாக சொல்லப்பட்டதாலேயே இக்கதை வாசகரை கவருவதில் சிக்கலை சந்தித்துள்ளது.

இதன் அரசியல்
இக்கதையில் ஓர் அரசியல் சிக்கல் இருப்பதை கவனிக்கிறேன். கதையின் முடிவில் அப்பெண்ணை இஸ்லாமிய மந்திரவாதி தொடுவதுபோல இருக்கிறது. அப்பெண் அங்கு பாலியில் தொல்லைக்கு ஆளாகப்போகிறார் என்று வாசகர்கள் கணித்திருப்பார்கள். கதை சொல்லியும் அதற்கான இடைவெளியைத்தான் கொடுத்துள்ளார்.

இந்திய மந்திரவாதி பணம் வாங்கி ஏமாற்றுவதாகவும் இஸ்லாமிய மந்திரவாதி பணமும் வாங்கி பாலியல் தொல்லை தருவதாகவும் காட்டியிருப்பது என்ன மாதிரியான அரசியல் பார்வை.

இம்மாதிரி கதைகளை எழுதுகின்றவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டாமா? கதையை வாசித்த வாசகர்கள் மீண்டும்.ஒரு முறை கதையை எழுதியவரின் பெயரை பார்க்க நேரும் நெருக்கடி நிகழ்கிறது.

மருத்துவரையோ, மனோவியல் நிபுணரையோ நாடாமல் இன்னமும் மந்திரவாதிகளை நம்பும் மனநிலையை சொல்ல முயன்று சரியான அரசியல் இல்லாமல் கதை அதன் தன்மையை இழக்கிறது.

மந்திரவாதி அப்படி பாலியல் தொல்லை கொடுப்பதாக நான் எழுதவில்லை நீங்களே அப்படி முடிவு செய்தால் என் தவறல்ல என எழுதியவர் கேட்டால்;  ஒன்றும் சொல்வதற்கில்லை. அடுத்த கதையில் பாக்கலாம்.நன்றி

- தயாஜி

ஜூலை 15, 2016

கதை வாசிப்பு 14 – ‘அறியப்படாத தீவின் கதை’ (குறுநாவல்)

கதை வாசிப்பு 14 – ‘அறியப்படாத தீவின் கதை’


     தடித்த புத்தகங்களில் இருக்கும் ஒரு வகை அச்சம் மெலிந்த புத்தகங்களில் இருப்பதில்லை. சட்டென எடுத்து சடாரென படித்து முடித்துவிடலாம் என்கிற கொஞ்சூண்டு ஆணவத்தையும் இந்நாவலில் இழந்துவிட்டேன். வெறும் 56 பக்கங்கள் உள்ள நாவல்தான் . அமர்ந்த இடத்திலேயே எந்த தொல்லைகளும் இன்றி இரண்டு மணிநேரத்தில் படித்துவிடலாம். 

     தொல்லைகளுக்கு மத்தியில் மூன்றில் இருந்து நான்கு மணிநேரத்தில் படித்துவிடலாம். ஆனால் இக்குறுநாவல் அப்படியான வாய்ப்பை எனக்கு கொடுக்கவில்லை. நாட்கணக்கில் இந்நாவலில் சிக்கிக்கிடந்தேன். வாசித்து முடித்த பின் ஏற்படும் சிக்கல் ஒருவகையானது என்றால் வாசிக்கும் போதே ஏற்படும் சிக்கல் வேறுவகையானது. 

     வாசிப்பை ஒருவன் கையில் எடுக்க என்ன காரணம் என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். நான் ஏன் வாசிக்க விரும்புகிறேன். வாசிப்பின் வழி எதனை கண்டறிய முயல்கிறேன். வாசிப்பதின் மூலமும் வாசித்தது குறித்து பேசுவது எழுதுவது மூலமும் எதனை முன்னெடுக்கிறேன். உண்மையில் நான் நோய்வாய்ப்பட்டிருக்கிறேன். மனதளவிலும் உடல் அளவிலும் பெயர் குறிப்பிட முடியாத நோயால்  தினம் சித்திரவதை அனுபவிக்கிறேன். பெயரற்ற நோயென்றாலும் வாசிப்பென்னும் மருந்தை கொண்டிருக்கிறது. 

     பெயர் அறிந்திடாத இந்நோயில் இருந்தும் என் சதைகளை நானே தின்று தீர்ப்பது மாதிரியான அவஸ்த்தையில் இருந்தும் என்னை காப்பாற்றிக்கொள்ளவே வாசிக்கிறேன். நான் முன்னேடுப்பது என்னைத்தானே தவிர வேறொன்றும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் இம்முன்னெடுப்பு இவ்வுல அடுக்குகளில் இதே போன்று பெயர் குறிப்பிட முடியாத நோயால் பீடிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அவர்களுக்கான மருந்தை காட்டிக்கொடுக்கும் என நம்புகின்றேன்.

    அதன் வழி நான் வாசிப்பதில் ஏதோ ஒரு மூலையில் என்னை கண்டடைகிறேன். படித்ததை குறித்து எழுதும் போதும் மற்றவர் போல தள்ளி நின்று பார்க்க என்னால் முடியவில்லை. 

இந்நாவல்;

     அறியப்படாத தீவின் கதை’ நாவலை ஜோஸே ஸ்ரமாகோ எழுதியிருக்கிறார். மீண்டும் மீண்டும் முதலில் இருந்தே இந்நாவலை வாசிக்க வேண்டியிருந்தது. சில பக்கங்களை தாண்டிய பின் எதையோ தவற விட்டுவிட்டதாக மனம் பதட்டமடைந்தது. மறுபடியும் நாவலில் தொடக்கத்துக்கு செல்ல வேண்டியிருந்தது. வழக்கமாக புத்தகங்களை வாசிக்கும் போது முன்னுரை மற்றும் பின்குறிப்புகள் ஏதேனும் இருந்தால் வாசிப்பது வழக்கம். சில தடவை அப்படி செய்வதால் 

    ஏற்கனவே சொல்லப்பட்டதை நினைத்தே நானும் வாசிப்பில் ஆழ்ந்துவிடுகிறேன். தட்டுத்தடுமாறினாலும் தனியான வழி கண்டறியாமல் ஏற்கனவே போடப்பட்டிருக்கும் பாதையில் போய்விடுகிறேன். இப்போதெல்லாம் நாவலோ சிறுகதை தொகுப்போ வாசிக்கத்தொடங்கும் போது, நேரடியாக கதைக்குள்ளே சென்றுவிடுகிறேன். எல்லாம் முடிந்த பின்னர்தான் முன்னுரையில் நாவல் குறித்தும் சிறுகதைகள் குறித்தும் வாசித்து நான் கண்டறித்த பாதை குறித்து சிந்திக்கிறேன். இந்நாவலை அவ்வாறுதான் முன் அநுமானங்களை தவிர்க்க நாவலுக்கு சென்றுவிட்டேன்.


நாவல்

    அறியப்படாத தீவு என்ற ஒன்று இருப்பதாக நம்புகின்றவன் மன்னரை சந்திக்கச்செல்கிறான். தான் நம்பிக்கொண்டிருக்கும் அறியப்படாத தீவினை கண்டுபிடிக்க கடல்வழி பயணம் செய்ய நினைக்கிறான். அதற்கு தனக்கு ஒரு படகு தேவை. அதனை பெறுவதற்காகவே மன்னரிடம் செல்கிறான். மன்னரின் அரண்மனை விசித்திரமாக இருக்கிறது. பல கதவுகள் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கதவுகளும் ஒவ்வொரு காரணங்கள் இருக்கின்றன. படகுக்காக சென்றவன் விண்ணப்பங்களுக்காக கதவின் அருகில் இருக்கிறான். அரசனோ சலுகைகளுக்காக கதவுக்குள்ளே இருக்கிறான். அதிலும் அச்சலுகைகள் அரசுனுக்கு கிடைக்கும் சலுகைகள்.

     படகு வேண்டி வந்தவன் தொடர்ந்து அக்கதவை தட்டுகிறான். இறுதியில் அவனுக்கான காரணத்தை கேட்டறிய அரசன் தன் முதல் செயலாளருக்கு சொல்ல, அவர் இரண்டாவது செயலாளருக்கு சொல்ல, அவர் மூன்றாமவருக்கு சொல்ல, அவர் முதல் உதவியாளருக்கு சொல்ல, அவர் இரண்டாம் உதவியாளருக்கு சொல்ல இப்படி ஒவ்வொரு படியாக சென்று கடைசியில் சுத்தம் செய்யும் பெண்ணிடம் சொல்லப்படுகிறது காரணத்தை வேலைக்கார பெண் வினவுகிறாள். பட வேண்டி வந்தவனோ தான் அரசரிடம் மட்டுமே அது குறித்து பேச வேண்டும் என தீர்மானமாக சொல்லிவிடுகிறான். அவன் சொன்னது வேலைக்கார பெண்ணின் மூலமா வந்த வழியே ஒவ்வொரு படியா கடந்துக்கடந்து அரசனிடம் செல்கிறது. 

     அரசன் அவனிடம் வருகிறான். அவனுக்கும் விண்ணப்பிக்க வந்தவனுக்குமான உரையாடல் கவனிக்கத்தக்கதாக அமைந்திருக்கிறது. ”நீ யார் . நான் ஏன் உனக்கு படகு கொடுக்க வேண்டும் . நான் இந்நாட்டின் அரசன் இந்நாட்டில் இருக்கும் படகுகள் அனைத்தும் எனக்குச் சொந்தமானது.” என்ற அரசனுக்கு விண்ணப்பித்தவன் இப்படி பதில் கொடுக்கிறான், “அவை உங்களுக்கு சொந்தம் என்பதைவிட நீங்கள் அவைகளுக்கு சொந்தம், அவை இல்லாமல் நீங்கள் இல்லை ஆனால் நீங்கள் இல்லாமலும் அவை கடலில் பயணம் செய்யும்”

     ஒருவழியாக அறியப்படாத தீவை கண்டறிய அவனுக்கு படகு கொடுக்க அரசன் சம்பதித்து மாலுமியை சந்திக்கச்சொல்லி குறிப்பு ஒன்றை கொடுக்கிறான். விண்ணப்பித்தவன் புறப்படுகின்றான். அவன் செல்வதை பார்த்து அவனிடம் முன்பு விசாரித்த வேலைக்கார பெண்ணும் அவனை தொடர்கிறால். இனியும் அரண்மனையில் தான் வேலை செய்ய முடியாது எனது முடிவெடுத்து முடிவென்னும் கதவின் வழி வெளியேறுகிறாள்.

    படகு கேட்டவன் மாலுமியை சந்தித்து உரையாடுகிறான். அறியப்படாத தீவு குறித்து அங்கும் யாருக்கும் புலப்படவில்லை. ஆனாலும் அப்படியொரு தீவை கண்டறிவதில் தனக்கிருக்கும் பேராசையை முன் வைக்கிறான் படகு கேட்டவன். அவன் கேட்டது  போல கடல் பயணத்துக்கு ஏற்ற கப்பல் கிடைக்கிறது. அதனை மறைந்திருந்து பார்த்த வேலைக்கார பெண் உணர்ச்சிவசப்பட்டு தன்னை வெளிப்படுத்துகிறாள். பின்னர் அவளும் தன்னுடன் சேர்ந்துக்கொள்ளலாம் என படகு கேட்டவன் சொல்கிறான்.

     கப்பலை அவள் சுத்தம் செய்கிறாள். உதவிக்கு யாரேனும் வருகிறார்களா என தேடிச்சென்றவன் யாருமின்று உணவு பொட்டலத்துடன் வருகிறான்.  அவளுக்கும் அவனுக்குமான உரையாடல் அங்கே கதையை வேறொரு இடத்துக்கு இட்டுச்செல்கிறது. 

    கனவுவென்னும் பெருங்கடலில் அன்றைய இரவை அவன் கடக்கிறான். அக்கனவு அவனை பயமூட்டுகின்றது. விடிகிறது. அவனும் அவள அவனை கட்டியணைத்தும் அவள் அவனை கட்டியணைத்தும் இருக்கிறார்கள். பின்னர் விழித்துவிட்ட இருவரும் அப்படகுக்கு அதுவரை பெயரற்று இருந்த கப்பலுக்கு இருவரும் பெயரிடுகிறார்கள். இப்போது அந்த கப்பல் அறியப்படாத தீவு கடலை நோக்கி கிளம்பியது தன்னை தேடிக்கொண்டு என நாவல் முடிகிறது.

   இங்கு அரசன் , அரண்மனை , மாலுமி போன்றோர் ஒரு பரிணாமத்தை கொடுக்கிறார்கள். ஆனாலும் யாருக்கும் தெரிந்திடாத அறியப்படாத தீவுக்குச்செல்ல படகு கேட்டு வந்தவன், அவனை அறிந்திடாவிட்டாலும் அவன் போகவிருக்கும் அறியப்படாத தீவுக்கு தானும் செல்ல ஆயுத்தமானவள் மற்றும் அறியப்படாத தீவுதான் இக்குறுநாவலில் என்னை பாதிக்கிறது.

எது இந்த அறியப்படாத தீவு.?

   ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணுமா? தாம்பத்தியமா? தன்  ஆசையா ? எதிர்பார்ப்பா? இலட்சியமா ? என சிந்தித்துகொண்டிருக்கிறேன்.

   படிமமாக சொல்லப்படுவது அதனை வாசிக்கின்றவர்களின் அறிவும் அனுபவமும் சார்ந்து ஒரு உருவகத்தை கொடுக்கிறது. அப்படிப்பார்க்கையில் எனக்கு, நான் நம்பும் அறியப்படாத தீவாக இருப்பது என் எழுத்துதான். அதை நோக்கித்தான் செல்ல எத்தனிக்கிறேன். ஏன் எதற்கு எப்படி என என்னை நோக்கி ஊரும் உலகும்  உறவுகளும் கேட்கின்ற கேள்விகளுக்கு இந்நாவலில் சொல்லியிருப்பது போல அதனை யாரும் அறிந்திருக்கவில்லை அதனை கண்டறியவே நான் போகிறேன்.

-       -   தயாஜி



அறியப்படாத தீவின் கதை’
- காலச்சுவடு , உலக கிளாசிக் குறுநாவல்
புத்தகங்களை வாங்குவதற்கு ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’.
தொடர்புக்கு 016 - 473 4794, 014 - 900 5447




Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்