பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மே 21, 2014

இன்னொரு கிளை முளைக்கிறது

           இன்னொரு கிளை முளைக்கிறது



    அது போன்ற மரத்தை நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள். நீங்கள் பார்த்த மரத்திற்கும் உங்களுக்கும் உள்ள இடைவெளியை என்னால் எளிதாக சொல்லிவிட முடியும். அப்படி சொல்லிச் செல்வதாலெல்லாம் ஏதும் நடந்துவிடாது என எனக்கு நன்றாகவேத் தெரியும். அந்த மரம் எப்போதும் தனித்தே தெரியும். அதன் தடிமனாகட்டும், இலைகளாகட்டும், அதில் தொங்கும் பிணங்களாகட்டும்.

   முதன் முதலாக தூக்கில் தொங்கியது ஒரு பெண்தானாம். அவளை தொடர்ந்து பலரும் மரக்கிளைகளில் ஆளுக்கு ஒன்றென தேர்ந்தெடுத்து தொங்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆச்சர்யம் என்னவென்றால்; முதல் நாள் சிரித்துப்பேசியவர்கள் கூட அந்த மரக்கிளையில் வெளிவந்த நாக்குடன் நாண்டுகிட்டதும் உண்டு.

   இன்னும் அந்த மரத்தை குறித்து பல கதைகள் எனக்கு தெரியும்.  யார் சொல்லியிருந்தாலும் நான் நம்பியிருக்கமாட்டேன். இக்கதைகளை எனக்கு சொன்னது அந்த மரம்தான். நம்புங்கள், கதைகளை சொன்னது அந்த மரமேதான். தன் கதைகளை என்னிடம் சொல்லும் அளவுக்கு மரமும் நானும் நெருங்க காரணமாக இருந்தவர் என் பாட்டிதான்.

பாட்டி.
  பார்ப்பதற்கு பாட்டி மாதிரியே இருக்காது. ஆனாலும் நாங்கள் பாட்டி என்று கூப்பிடுவதைதான் அவர் விரும்புவார். தாத்தாவும் அப்படித்தான் கூப்பிடுவார். இது எங்களுக்கு வேடிக்கையாகவே இருக்கும். வயதுக்கு ஏற்றார் போல கூன் வளைந்திருந்தாலும் தாத்தாவுக்கு என்னமோ இளமை ஊஞ்சலாடுவதாய் நினைப்பு. பாட்டிக்கு நிறைய கதைகள் தெரியும். தாத்தாவுக்கு தெரிந்தெல்லாம் ‘பாட்டி’, ‘பாட்டி’ மட்டும்தான். பாட்டியை இளமையாக வைத்திருப்பது அவர் வைத்திருக்கும் கதைகள்தான் என்று நினைத்துக்கொள்வேன்.

  தாத்தாவுக்கு போட்டி போடும் அளவுக்கு  பாட்டிக்கு நெருக்கமானது அந்த மரம். இன்னும் அந்த மரம் அப்படியே இருக்கிறது. கிளைகள் மட்டும் தூக்கில் தொங்குபவர்களுக்காக அவ்வபோது புதிது புதிதாக வந்துவிடும். தொங்கியவரை கீழே இறக்கும் போதே கிளையும் தானாக உடைந்துவிடும். அதுவரை தாங்கிய கிளை, முடிச்சினை அவிழ்க்கும் போது உடைவதன் காரணம் யாருக்கும் புரியவில்லை.
   இரவும் , விடியும் நேரமும் பாட்டி அந்த மரத்திடம் தனியேச் செல்வார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதைகளை பாட்டி சொல்வது அந்த மரத்திடம் இருந்து கேட்ட கதையாகத்தான் இருக்கும் என தோன்றியது எனக்கு. புத்தகங்களில் கூட படித்திருக்காத கதைகள் அவை.

பாட்டியின் கதைகளில், காடு, ஆதிவாசிகள், புலி, புல், மலை, மான் என இருக்கும். காடு மனிதர்களுடம் பேசும் .புலி இறகுகடன் பறந்துகொண்டே இறை தேடும். புல் நினைத்த நேரம் மரமாகும் பனி நேரம் புல்லாகும். மலை தன்னைத்தானே சுற்றிக்கொண்டிருக்கும். மான், பூமிக்கடியில் வாழ்ந்துக்கொண்டிருக்கும். இப்படி பல.

  தாத்தா தூங்கிய பிறகே பாட்டி மரத்திடம் செல்வது வழக்கம். அன்றைய தினம் நானும் தாத்தாவும் ஒரு விளையாட்டு விளையாடினோம். பாட்டிக்கு தெரியாமல் பின்னால் செல்லவேண்டும். ஏன் தாத்தாவுக்கு அப்படி ஒரு விளையாட்டு விளையாட தோன்றியது என தெரியவில்லை. இத்தனை நாளாய் ஏன் அந்த விளையாட்டை விளையாடவில்லை எனவும் தெரியவில்லை. எப்படியும் பாட்டிக்கும் மரத்திற்கும் இடையில் இருக்கும் ரகசியம் இன்று தெரியப்போகிறது என்ற நினைப்பே என்னை தூங்கவிடவில்லை. வழக்கத்துக்கு மாறாக தாத்தா அன்று அடிக்கடி சிரித்துகொண்டே இருந்தார். பாட்டியையும் கிண்டல் செய்துக்கொண்டே இருந்தார்.

   நாங்கள் தூங்குவதை பாட்டி உறுதி செய்தார். வீட்டின் பின்கதவு திறக்கும் சத்தம் கேட்டது. பாட்டி வெளியேறினார். தாத்தாவும் பாட்டி சென்றதை உறுதி செய்து, எழுந்தார். நானும் எழுந்துக்கொண்டேன்.

தாத்தா மெல்லியக்குரலில் “டேய் நீயும் தூங்கலையா..”

“பாட்டியை பாக்கலாம்னு சொன்னிங்க அதான் தூக்கமே வரல..”

“ச்சரி ச்சரி... சத்தம் போடாம என் பின்னாலயே வா...”

  தாத்தாவை பின் தொடர்ந்தேன். திறந்திருந்த பின்வாசக்கதவில் இருந்து தாத்தா எட்டி பார்த்தார். அடுத்து அவர் என்னை கூப்பிடுவார் என காத்திருந்தேன். தாத்தா கூப்பிடவில்லை. மெல்ல நானும் தாத்தாவுக்கு அருகில் சென்றேன். தாத்தா சிலை போல நின்றுக்கொண்டிருந்தார். தாத்தாவின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. வயதான பின்னர்கூட வந்திடாத நடுக்கம் அது. அது நடுக்கமா; பயமா.
மெதுவான குரலில் ‘தாத்தா..தாத்தா... என்ன பாக்கறிங்க.. நான் வரட்டா..?’
  
 தத்தாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. நடுக்கம் மட்டும் இருந்தது. இன்னும் அருகில் சென்றுவிட்டேன். தாத்தாவின் கையை பிடித்தேன். சுயநினைவு வந்தவராய் தாத்தா என்னைப் பார்த்தார். பார்த்தவர் திருப்பி மரத்தை பார்க்கவும். அவருக்கு எதிரில் பாட்டி நின்றுக் கொண்டிருந்ததும் தூக்கிவாரிப்போட்டது. அசாதாரண நடுக்கத்தை அவர் உடல் காட்டியது. அப்படியே என்னை பாட்டிக்கு தெரியாதது போல பக்கவாட்ட சுவரில் மறைத்தார்.

   விடிந்தது. தாத்தா இன்னமும் என் கையைத்தான் படித்துக்கொண்டே படுத்திருக்கிறார். எப்போதும் எழுப்பும் பாட்டியில் குரல் இன்று பல எதிரொலிகளாகக் கேட்டது. தாத்தாவும் பாட்டியும் பேசத்தொடங்கினர்.

“நீங்க கொடுத்த சத்தியத்தை மீறிட்டிங்க..”

“இல்ல பாட்டி, விளையாட்டுக்குத்தான்...”

“இதென்ன விளையாட்டு, சத்தியத்தை மீறிட்டு சாக்குபோக்கு சொல்றியா, நீ, விளையாட்டுன்னு...?”

முதன் முறையாக ஓர்மையில் அழைத்தார் பாட்டி.
“பாட்டி இதுவரைக்கும் நீ சொன்னதைதானே செய்தேன்..”

“போதும் போதும், நா அப்பவே உன்கிட்ட சொல்லிட்டேன்.... இதெல்லாம் நடக்கும்ன்னு, நீதான் சத்தியம் செய்றேன்...சாதித்துக் காட்டறேன்னு என்னை சம்ப்பதிக்கவச்ச..”

    பாட்டியின் குரல் கரகரத்தது. தங்க நிற முகம் நீல வண்ணமாகியது. அவளில் கண்களில் இதுவரை நான் பார்த்திடாத வன்மம் அரங்கேறியது. கண்கள் சிவந்தன. வானவில்லின் வண்ணங்கள் எல்லாம் அழிந்து , சிவந்த நிற கோடாய் மாறியது அவளது புருவம். கன்னங்கள் அதிர்ந்தன. அவள் உடல் உதரத்தொடங்கியது. தலையை ஆட்டவும் கழுத்துவரையிருந்த முடி பூமியைத்  தொடுமளவு வளர்ந்து கரு அலையென கூந்தல் பொங்கியது. நகங்கள் கூர்மையாகின. அவளின் உடல் வழக்கத்தைவிட பன்மடங்காகியது. உடுத்தியவைகள் கிழிந்தன. எப்படி, இத்தனை கரு நீலமாக இருக்க முடியும் உடல். நாக்கை அவள் நீட்டவும் அது, பூமிவரை வந்தது. நாக்கிலிரும்ந்து வழிந்துக் கொண்டிருக்கும் இரத்தம் அதன் வீச்சத்தை வீசியது.   கைகளை அகல நீட்டினாள். அவள் உஷ்ணமானாள். அது, பக்கத்திலிருப்பதையெல்லாம் பொசுக்குகிறது.

  தாத்தா தன் தவறை ஒப்புக்கொள்ளும் விதமாக மண்டியிட்டார். கைகளை கட்டிக்கொண்டு தலையை கவிழ்த்தார். எங்கிருந்து வந்ததென தெரியாமல் ஒரு கத்தி.. கத்திதான் என சொல்லிட முடியாது. மரத்தின் கிளை போலவும் இருந்தது. வலது கை உயர்ந்தது. மின்னலின் வேகமாய் தாத்தாவின் தலை துண்டிக்கப்பட்டது. தாத்தாவின் சுடு இரத்தம் என் முகத்தில் தெரித்தது.

   கூச்சல் சத்தம் திடுக்கிட வைத்தது.

  வீட்டிற்கு வெளியில்தான் கூட்டம் கூடியிருந்தது. தாத்தாவும் நானும் வியர்வையின் நனைந்துதான் எழுந்தோம். தலை இன்னமும் கழுத்தில் இருக்கிறதாவென தாத்தா தடவிப்பார்த்துக்கொண்டே எழுந்தார். நாங்கள் வாசல் கதவை திறந்தோம். கூட்டமாகத்தான் இருந்தார்கள். எங்களைப் பார்த்ததும் கூச்சல் சத்தம் ஒப்பாரியாக மாறியது. அவர்களின் பார்வை மரத்தை நோக்கியே இருந்தது. எந்த சலனமுமின்றி தாத்தாவும் மரத்தை நோக்கி நடக்கலானார். நானும்.
  
 மரத்தின் கிளையொன்றில் பாட்டி தொங்கிக்கொண்டிருந்தாள். அழகிய முகம் இன்னமும் அழகாக தெரிந்தது. சிரித்த முகமாய் செத்திருந்தாள் பாட்டி. எல்லோரும் பாட்டியையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். தாத்தா, பாட்டி தொங்கிகொண்டிருக்கும் கிளையையே பார்த்துக்கொண்டிருந்தார்.

  அந்த கிளை இதுவரை இங்கு இருந்ததில்லை. ஒரே நாளில் எப்படி முளைத்தது. அதும் பாட்டியின் உடலை தாங்கும் அளவுக்கு ஒரே நாளில் கிளை முளைத்ததா. தத்தாவின் கண்கள் இன்னும் அந்த கிளையிலேயே இருந்தது. அது பாட்டியல்ல, கிளையால் தாத்தாவின் தலையை வெட்டிய ஏதோ ஒன்று. அவருக்கு பித்து பிடித்ததாய் பேசிக்கொண்டார்கள். கைத்தாங்களாக சிலர் தாத்தாவை சிலர் அப்படியே நாற்காலியில் அமர செய்தார்கள். பாட்டி இன்னும் தொங்கிகொண்டுதான் இருக்கிறாள். அது தற்கொலையா இல்லை, மரத்தின் ஊஞ்சலாட்டமா என தெரியாதவாரு காற்றில் பாட்டி கயிற்றுடன் ஆடிக்கொண்டிருந்தாள்.

  சில நாட்களில் தாத்தாவும்  கிளையில் தொங்கினார். முகம் வீங்கி, நாக்கு வெளியே தள்ளியபடி பயங்கரமாக இருந்தார். பாட்டி தொங்கிய கிளைக்கு பக்கத்தில் ஒரு புது கிளை அது.

 கொஞ்ச நாள் , தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தார் தாத்தா. அவ்வபோது,
“இந்த சத்தியத்தை நான் காப்பாத்தியிருக்கனும்...நான் காப்பாத்தியிருக்கனும்... என்ன மன்னிச்சிடு”

   என்றே புலம்பலானார். தினம் இரவில் திடுக்கிட்டு எழுத்து தன் தலை, கழுத்தில் இன்னமும் இருக்கிறதாவென்று தடவிப்பார்ப்பதை அப்பாவும் கவனித்ததாய் சொல்லிக்கொண்டிருந்தார். பாட்டியின் இறப்புக்கு வந்திருந்த அம்மாவும் அப்பாவும், என்னை இனியும் அங்கு வைத்திருப்பது நல்லதல்லவென்று பள்ளி விடுமுறைக்கு முன்பே கூட்டிப்போவதாக சொல்லிக்கொண்டார்கள். தாத்தாதான்;

  “நான் இருக்கபோறது என்னமோ கொஞ்ச நாள்தான்.. அதுக்குள்ள ஸ்கூலு லீவு முடிஞ்சிடாது... மொல்லமாவே பேரனைக் கூட்டிப்போங்க” என்று என் கைகளை பிடித்துக்கொண்டு சொல்லுவார்.

   தாத்தாக்கும் பாட்டிக்கும் இடையில் என்ன சத்தியம் இருந்திருக்கும். பாட்டிக்கும் மரத்திற்கும் என்ன சம்பந்தம். அன்று, தாத்தா எதை பார்த்து ஸ்தம்பித்து நின்றார். என் கனவில் வந்தது போலவே அவர் கனவில் தலை துண்டிக்கப்படுப்வது வருகிறதா..? பாட்டியின் இறப்பை விட, பாட்டி தொங்கிய மரக்கிளை தாத்தாவிற்கு அதிர்ச்சியைக் கொடுத்தது ஏன். இப்படி கேள்விகளுக்கு மேல் கேள்விகள் உள்ளுக்குள் இருக்க. அப்பாவி முகத்துடன் தாத்தாவுடன் நேரத்தை கடத்தினேன்.

  அப்பா தனியே அழைத்து, “அய்யா, தாத்தாக்கும் மனசு சரியில்ல... கொஞ்சம் பார்த்துக்கோ நாளைக்கு நானும் அம்மாவும் போகனும்... ஸ்கூலு லீவு வரைக்கும் இங்க இருந்துக்கோ... அப்பறம் தாத்தாக்கு ஒரு வழியை ஏற்பாடு செய்துடறோம். என்ன பார்த்துக்கறயா...? பயமா இருக்கா..?”

     பதிலையும் அவராகவே நினைத்துக்கொண்டு; அம்மாவுடன் மறுநாள் புறப்பட்டார்.
..................................................................................................................................

கார் புறப்பட்டது.

   ‘என்னங்க... இந்த வயசுல போய் உங்கம்மா தூக்குமாட்டிருக்காங்களே... பையனை வேற அந்த வீட்டுலயே விட்டுடு வந்திருக்கோம்... உங்க அப்பாவை   நினைச்சா... ’

  “என்ன.. என்ன சொல்ல வர.. எங்க அப்பாவை நினைச்சா... பைத்தியம் மாதிரி தோணுதா... மணிக்கு எதும் ஆகிடும்ன்னு நினைக்கறியா...?”

“அதான் உங்களுக்கே தெரியுதே நான் வேற சொல்லனுமா..”

   “தோ பாரு, அம்மா செத்துட்டாங்க... விதி முடிஞ்சிபோச்சி... அது தூக்குல போனா என்ன எவனாவது தூக்கிட்டு போனா என்ன.. போற வயசுதானே...அப்பாவே சொல்ராரு இன்னும்   எவ்வளவு நாள் இருப்பேனோ தெரியலைன்னு.... மணி ஒன்னும் சின்ன பையன் இல்ல... அப்படி ஒன்னும் மணிக்கு நடந்திடாது...”

   “எனக்கு என்னமோ மனசே சரியில்லங்க... அந்த மரத்தை பார்த்தாலே பயமா இருக்கு... பெசாம அதை வெட்டிட வேண்டிதானே...?”

   நாகலெட்சுமி சொல்லி முடிக்கவும், கார் எதையோ மோதித்தள்ளவும் சரியாக இருந்தது. கார் டயர் தேயும் அளவு சத்தம் கேட்டு, நிறுத்தப்பட்டது. அவளும் குமாரும் அதிர்ச்சியில் கொஞ்ச நேரம் காரைவிட்டு இறங்கவில்லை. அந்த சாலையும் சரியான விளக்கொளி இல்லாமல் அனாதையாகிக்கிடக்கிறது. எதை மோதினோம் யார்..என்ன.. போன்ற குழப்பத்தில் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கிறார்கள். தைரியத்தை வரவைத்துக்கொண்டு குமார், காரைவிட்டு இறங்கினான். பின், திரும்பி;

   “பயப்படாம இரு, நான் என்னன்னு பார்த்து வந்திடறேன்... கதவை லாக் செய்துக்கோ... பயப்படாத”

   இறங்கியவன் சில நிமிடங்கள், வியர்த்த முகமாய் காரில் ஏறினான். காரின் குளிர்சாதன பட்டன் அதன் கடைசி எல்லையை தொட்டிருந்தாலும் இன்னமும் கழுத்தில் வியர்வை திட்டுகள் இருக்கின்றன.

  “என்னங்க எதை மோதிட்டிங்க... பூனையா நாயா..?”

  “ஏன் மோதினது மனுசனா இருக்ககூடாதா..” என்றே சர்வ சாதாரணமாய் கேட்டான் குமார். சில சமயம் இப்படி பேசி தன் பயத்தை மூடி மறைப்பதில் கைத்தேர்ந்தவன் அவன் என்பதை இன்னும் அவள் புரிந்துக்கொள்ளவில்லை.

  “நாய் மாதிரிதான் தெரியுது”

என்றவன், வானொலியை திறந்த சத்ததை அதிகமாவ வைத்தான். மனைவி எரிச்சலில் ஒரு முறை பார்த்துவிட்டு கண்களை மூடிக்கொண்டு, கைகுட்டையை முகத்தில் போர்த்திகொண்டாள். வானொலி சத்ததை குறைத்தவன், சில சம்வங்களை மனதில் நினைக்கலானான். இதன் காரணம் காரைவிட்டு இறங்கியவன் பார்த்த காட்சிதான்.

  இறங்கியவன், முதலில் காரின் முன் சக்கரத்தைதான் கவனித்தான் அப்படியொன்றும் இருப்பதாய் தெரியவில்லை. ஒரு முறை மனைவியைப் பார்த்துவிட்டு பின்னாள் சென்றான். அங்குதான் நின்றுக்கொண்டிருந்தது அந்த மரம். அம்மா அடிக்கடி போய் பேசும் அதே மரம்தான். குமாருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எப்படி அந்த மரம் இங்கு வந்திருக்கும். அம்மா தொங்கிய அதே கிளைதான் அவனைப் பார்த்து அசைந்தது. இல்லை அசைத்தது.
   அந்த மரமே மாபெரும் மாயையாக தெரிந்தது. மாயையை எப்படி வகைப்படுத்துவது. மாயமா, மர்மமா, மாபெரும் உண்மையா, நிலைத்தன்மையா , புதிர் பிம்பமா.
   இருட்டிலும் ,இருட்டிக்காமல் அந்த மரம் நின்றுக்கொண்டிருந்தது. ஜொலிக்கவில்லை. ஆனால் மற்ற எதையும் தவிர தன்னை மட்டும் ஒளியால் சூழ்ந்திருந்தது அந்த மரம். மாய மரம். அம்மா அப்படித்தான் சொல்லிச் சென்றால்.

  “அது மாய மரம் அதான்... போ போ போய் படிக்கற வேலையைப்பாரு... இனிமேலும் அந்த மரத்துகிட்ட போய் விளையாடாத...”

   சிரித்துக் கொண்டே அம்மா சொல்லிச் சென்றால். அப்பா அந்த வழியே வந்தாலும். காது கேட்காது போல வேறெங்கோ பார்த்துக் கொண்டுச் சென்றார். அம்மா அப்பா வெளியில் செல்லும் வரை அங்கேயே நின்றுகொண்டிருந்தாள். அம்மாவும் குசுனிக்கு சென்றாள்.

   இனிமேல் அந்த மரத்துக்கு அருகில் செல்வது என்ன.. அந்த மரத்தை பற்றி யாரிடமும் சொல்வதுமில்லை என முடிவெடுத்துக்கொண்டேன்.

   விளையாடிக்கொண்டிருந்தோம். ஓடிப்பிடித்து விளையாடுவது. போலிஸ் திருடன் என்பது அதன் பெயர். எங்கள் குழுவில் யாரும் விளையாட்டில் கூட போலிஸாக விரும்புவதில்லை. காளிதாஸின் அப்பாவை போலிஸ்காரர்கள் கூட்டிச்சென்று, கொன்று விட்டார்கள் என்றதும் அதன் காரணங்களில் ஒன்று. இன்னொன்று, போலிஸ்தான் பிடிக்கவேண்டும். திருடர்கள் ஓட வேண்டும். எங்களுக்கு எப்போதும் ஓடத்தான் பிடிக்கும். விசுவின் அம்மாவும் இந்தோநேசியக்காரனுடன் ஓடியிருக்கிறார். பல ஆண்கள் ஆகியும் பிடிபடவில்லை.
  
 ஆளுக்கொரு இடத்தில் மறைந்துக்கொண்டார்கள். எப்படியோ பேசிப்பேசி பாலாவை போலிஸாக்கிவிட்டோம். சீக்கிரத்தில் அவன் கையில் மாட்டி போலிஸாக விரும்பவில்லை. ஆகவேதான் அவன் யோசிக்காத இடமாக இருக்கும் மரத்திடம் சென்றேன். இயல்பாகவே எங்களுக்கு அந்த மரத்திடம் பயமிருப்பதால். நான் அங்குதான் மறைவேன் என பாலா யோசித்திருக்கமாட்டான். எனக்கே ஆச்சர்யமாக தோன்றிய ஐடியா அது.

   என்னைப்போல இரண்டு மூன்று பேராவது ஒரு புறம் நின்றால், மறுபுறம் தெரியாது. அவ்வளவு அடர்த்தி அந்த மரம். அப்படியிருந்தும், மறைந்தது போதாதென்று. மரத்தில் ஏறலாம் என நினைத்தேன். ஏறினேன். கடினமாகவேத் தெரியவில்லை. யாரும் பின்னால் இருந்து தள்ளினார்களா.. யாரும் முன்னால் இருந்து இழுத்தார்களா என்றெல்லாம் தெரியவில்லை. ஏறுவது அவ்வளவு இதமாக இருந்தது.

   இலைகளுக்கு நடுவில், பெருத்த கிளையொன்றின் வளைவில் அமர்ந்துக்கொண்டேன். கை சும்மா இருக்கவில்லை. கிளையின் காய்ந்த மட்டைகளை பிய்த்துக்கொண்டிருந்தது. மரம் சமபந்தம் இல்லாமல் குலுங்கும்போதே எச்சரிக்கையாகியிருக்கலாம். அமர்ந்திருந்த கிளை சட்டென முன்னோக்கி உருண்டது. அபப்டியே கீழே விழப்போனேன். தரைவரை போய்விட்டேன். இதயம் ஸ்தம்பிக்கும்படி இலைகளால் சூழப்பட்டேன். இறகு  முளைத்த இலைகள் அவை. அப்படியே என்னை தாங்கின. அப்படியே மேலே கிளைவரை கொண்டு போனது. நான் பிய்த்து போட்ட காய்ந்த மரப்பட்டைகள். நெளிந்துக்கொண்டு மீண்டும் மரத்திலேயே ஒட்டிக்கொண்டது. பாலாவின் குரல் கேட்டது. இறகு முளைத்த இலைகள் என்னை எந்த சேதமுமில்லாமல் கீழே இறக்கிவிட்டன.

   விளையாட முடியாமல். வீட்டிற்கு சென்று அம்மாவிடம் சொன்னதும்தான் அம்மா அப்படியொரு பதிலும் அப்பா கண்டுக்கொள்ளாமல் சென்றார். அந்த மரம் எங்களை காக்கும் தெய்வம் போல நினைத்தாலும். அதன் அருகில் செல்வதை தவிர்த்தேன்.

   அந்த நம்பிக்கையை அம்மாவின் தற்கொலை கொலை செய்தது.
“மணி... மணி...”

“என்னங்க தூங்கிட்டிங்களா... வந்து எவ்வளவு நேரம் ஆச்சோ....”

    கண்விழித்தவனுக்கு விடிந்தது அப்போதுதான் தெரிந்தது. எப்போது வந்தோம் எப்போது தூங்கினோம் என்றே தெரியவில்லை. வீட்டு வாசலிலிருந்த காரிலிருந்து இறங்கினார்கள்.

“ஆமா மணி எங்க...”

“என்ன விளையாடறிங்களா... நீங்கதானே மணி லீவு முடியர வரைக்கும் உங்க அப்பாகூட இருக்கட்டும்ன்னு சொன்னிங்க...”

“நானா சொன்ன..?”
“இல்ல... செத்துப்போன உங்க தாத்தா சொன்னாரு...”

   என்று தான்பட்டுக்கு, காரிலிருந்த பொருள்களுடன் வீட்டிற்கு சென்றாள். குமாருக்கு குழப்பமாகவே இருந்தது. சட்டென மாய மரம் கண்முன் தோன்றி மறைந்தது.

   அம்மா தொங்கிகொண்டிருக்கிறாள். மீண்டும் ஒரு கிளை முளைக்கிறது. அதிலிருந்து இலைகளே கயிறாக ஒன்றினைகிறது. அதன் நுனி மரத்தை ஒரு சுற்று சுற்றியப்பிறகு வீட்டிலுள் சென்றது.

   “என்னங்க.. என்ன செய்றிங்க.. சாமான்களை எடுத்துட்டு வரிங்களா..”

........................................................................................................

“நீங்க இனிமேல என்ன பாட்டின்னு கூப்பிடனும் சரியா..?”  

   “எனக்காக நீ வந்திருக்கும் போது உனக்காக நான் என்ன வேணும்னாலும் செய்யத் தயாரா இருக்கேன்...”

“ஏன்னு கேட்க மாட்டிங்களா...”

  “ஏன் கேட்கனும்... நீ யாரு... இந்த காட்டு ராணி. நீ மட்டுமில்லன்னா என்னை இதே இடத்துல கொன்னு, உங்க ஆளுங்க சாப்பிட்டிருப்பாங்க...”

  “வேணாம் அதை பத்தியும் இனிமேல பேச வேண்டாம். நாம் உடனே இங்கிருந்து போகனும். சொன்ன வாக்கை காப்பாத்துவிங்களா...?”

  “என்னோட தலை என் கழுத்துல இருக்கிற வரைக்கும்... எதைப்பத்தியும் உன்கிட்ட கேட்க மாட்டேன்..”

   பாட்டி, கையை நீட்டினாள். அவன் கையை பற்ற முயற்சிக்கும்போது. பக்கத்திலிருந்த மரம் தன் கிளையை அவள் கையுடன் வைத்து பற்றியது. அவள் அந்த கையை இறுக பற்றினாள். அந்த கிளை கொஞ்சம் கொஞ்சமாம அவள் கைப்பிடியளவு கிளையை விட்டு பாதியை தானே முறித்து, உடைத்து மீண்டும் மரத்துக்கே திரும்பியது.

   அவள் , தன்  மார்பை மறைந்திருந்த தடி இலையை கழுத்து வழியே வெளியேடுத்தாள். தங்கமென வர்ணிக்கும் வகையை சார்ந்த தங்கம் அது. மார்புக்கு மத்தியில் கையில் கிடைத்த கிளையை வைக்கிறாள். சதை பிளந்து கிளை மார்புக்கூண்டுக்குள் அடைக்களமாகியது.

..............................................................................................................................

     யாருக்கும் தெரிந்திருக்காத ரகசியம் அது. உங்களுக்கு மட்டும் சொல்ல நினைக்கிறேன். கேளுங்கள். அதற்கு முன் பாருங்கள் அந்த மாய மஹா மரத்தில் புது கிளை முளைக்கிறது. நம்மில் யார் நாக்கு தொங்கி சாகப்போகிறோம்.

   விட்டுவிடுங்கள் நாம் காத்துக்கொண்டிருக்கும், மறைத்துக் கொண்டிருக்கும். நினைத்து நினைத்து சிரித்தும் அழுதும் கொண்டிருக்கும் ரகசியங்களுடன் இதனையும் சேர்த்துக்கொண்டு நிம்மதியாக தூங்குங்கள். தொங்குவதற்கு முன்பாவது கொஞ்சம் தூங்கலாம்.






எழுத்து - தயாஜி  

மே 2014 'கல் குதிரை'யில் வெளிவந்த எனது சிறுகதை. 
நன்றி கோணங்கி, 
நன்றி நண்பர் லஷ்மி சரவணக்குமார்








பிப்ரவரி 18, 2014

கிடக்கும் மனிதனில் நடக்கும் பிணம் நான்






நடைப்பயணம்

வழி நெடுக்க
பிணங்கள்

நடமாடியும்

நடனமாடியும்

அறிமுகமற்ற

ஆடையற்ற

ஆட்கள் மன்னிக்கவும் பிணங்கள்

அக்குல்களில் வாடையுடன்
வரவேற்புக் கைகளுக்கு
இடையில்

நான்

ஆற்றைக் கடக்காமலே
முதலையின் முதுகில் கால் வழுக்கினேன்

காப்பாற்றி கரைசேர்க்கிறது
பிணம் ஒன்று

ஏறக்குறைய என் சாயல் கொண்ட
பிணமது

நானாகவும் இருக்கலாம்

நாங்கள் கைகுழுக்கினோம்

இந்த முறை அக்குல் வாடை
பழகிவிட்டது

எனக்கும் வாடை
வீசத் தொடங்கியது

நடந்துக் கொண்டிருக்கும்
பிணங்களின் வருசையில்

காலி இடமொன்றுத்
தெரிய...

பிணமான நானும்
இணை சேர்ந்தேன்

எல்லாம் சரி

எப்போது நான் பிணமானேன்

பயணத்தின் பொழுதா

முதலை மேல் வழுக்கிய பொழுதா

என்போல் பிணம் கைகொடுத்த பொழுதா

அக்குல் வாடையை ஏற்ற பொழுதா

காலி இடத்தில் இணைந்த பொழுதா

பதில் அல்லது பதில்கள்

தெரியும்வரை
விழித்தல் கூடாது

இடையில்
விழித்தாலோ

உடல்
அசைந்தாலோ

வாடை
மறைந்தாலோ

மீண்டும்
மனிதனாவேன்

பயமாய்
இருக்கிறார்கள்

மனிதர்கள் (மட்டுமே)

ரெண்டுகால் பூச்சியும் எட்டுகால் மனிதனும்

ரெண்டுகால் பூச்சியும் எட்டுகால் மனிதனும்

    அந்த எட்டுகால் பூச்சியை அப்போதே நசுக்கியிருக்க வேண்டும். செய்யவில்லை. தவறுதான். இனிமேலும் ஏதும் செய்ய இயலாது. கை வலிக்கிறது.
    படித்தும் வேலை இல்லாதவன் எங்கும் வேலை செய்வான் தானே. நானும் அப்படித்தான். ஒருவேளை நான் படித்தவன் என்பதால் கூட வேலையில்லாதவனாக இருக்கலாம்.  ஆனால் வேலை அவசியம். என் நிலை அப்படி. முன்பெல்லாம் கேள்விகளுக்கு பதில் சொன்னால்தானே வேலை கொடுப்பார்கள். இப்போதும் அப்படித்தான் என்கிறீர்களா. சரி சொல்லுங்கள் ஆக கடைசியாக நீங்கள் எப்போது வேலை கேட்டீர்கள். அதான் நேர்முகத் தேர்வுக்கு சென்றீர்கள். ஓராண்டுக்கு முன்பு? ஈராண்டுக்கு முன்பு? ஐந்தாண்டுக்கு முன்? இருக்கலாம். எப்படியும் ஐந்தாண்டுகளுக்கு மேலாகவும் இருக்கலாம். சரியா. என்னமோ நேற்று வேலைக்கு சென்று, பதிகளைச் சொல்லி, வேலை கிடைத்ததும், இன்று வேலைக்கு கிளம்பும் தோணியில் நீங்கள் பதில் சொல்லியிருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
   நான் இன்றைய நாளோடு இரண்டாவது ஆண்டாக நேர்முகத் தேர்வுக்கு செல்கிறேன். எப்படி அவ்வளவு துல்லியக் கணக்கு என்கிறீர்களா..? யோசிக்கிறீர்களா..? காலையில்தான் அப்பா பஜனை பாடினார். “இன்னையோடு ரெண்டு வருசமா தண்டச்சோறு சாப்டறடா..” என்றார். பதில் ஏதும் பேசவில்லை. கேள்வி மட்டும் கேட்க நினைத்தேன். வேலை இல்லாதவன் என்ற ஒரு காரணத்துக்காக, வாசலில் யாரும் வந்திருந்தால் நான் தான் போய் பார்க்கனும். தபாலைக் கூட நான் தான் வாங்கனும். கூரைக்கு கீழ் சுற்று காத்தாடி முதல், தரை மேல் தூசியிருந்தாலும் நான் தான் வசைப் பாடப்படுவேன்.
அப்பா,
“ஏண்டா சும்மாதானே இருக்கே , அந்தா காத்தாடியை சுத்தம் செய்யேன்”
அம்மா;
“ஐய்யா இப்பதான் பார்த்தேன், மிளகாய் முடிஞ்சிருச்சி.. பக்கத்து கடைக்கு போய் வாங்கிட்டு வந்திடறயா..? சமைக்கனும்... சீக்கிரம்ம் வந்திடு..” (பக்கத்து கடை என்பது, வீட்டில் இருந்து அரை மணிநேரம் நடக்கவேண்டும் அதிலும் நான் நடந்தே போகவேண்டும்)
அண்ணன்;
“இந்த இந்த சட்டையை அயன் செய்திடு, அன்னிக்கு மாதிரி அங்கொன்னும் இங்கொன்னும் மாதிரி செய்துடாத.. எனக்கு வேலைக்கு மணியாகுது..”
    இந்த அண்ணன்களே இப்படித்தான். அதிலும் எங்க அண்ணன் ஒரு படிமேல. எல்லாரும் ஏமாந்த மொளகா அரைப்பாங்கன்னுதானே  சொல்லுவாங்க, எங்க அண்ணன் மொளகா.. பருப்பு... காய்கறி... இப்படி எதுஎதையோ அரைச்சிடும். அப்படியே நங்கென தலையில் கொட்டதான் ஆசை. முடியாது. வேலை கிடைக்கும்வரைதான் அப்பு உனக்கு மரியாதை. வேலை மட்டும் கிடைக்கட்டும் அப்பு உனக்குதான் முதல் ஆப்பு. அடுத்த ஆப்பு எங்க அப்பாவுக்கு. என்னடா இவன் ஆப்பு கீப்புன்னு அசிங்கமா பேசரானேன்னு நெனைச்சிடாதிங்க. இதுக்கு என் மனசாட்சி. யார் மனசாட்சிதான் நாகரிகமா பேசியிருக்க சொல்லுங்க.
      இன்றும் வேலைக்கு சென்றேன். வேலைக்கு என்றால் வேலைக்கு அல்ல, வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு. எப்படியும் வேலை கிடைச்சிடும். எப்படின்னு கேட்கறிங்கலா? எல்லாமே நம்பிக்கைதான். இதை வச்சித்தானே தன்முனைப்பு அந்த முனைப்புன்னு நாட்டுல நிறைஅய் பேரு வேலை செய்ஞ்சு சம்பாதிக்கறாங்க. உடனே கோவப்பட்டு போய்டாதிங்க மீதி கதையை யார் படிப்பா..?
    வழக்கமான நடைபாதையில்தான் அன்றும் சென்றுக் கோண்டிருந்தேன். பாதைதான் பழையது. இங்கு காலை வேலையில் வந்தும் பறந்து இருக்கும் பறவைகள் ஒவ்வொன்றும் புதியவை. ஏன் முதல் பார்த்த பறகைளை மறுநாள் பார்க்க இயலவில்லை. ஒரு வெலை மனிதர்களை ஏமாற்ற பறவைகளும் மாறுநாள்களில் மாறுவேடம் போட்டு உலாவுகிறதோ. இருக்காது, பறவைகள் எல்லாம் நம்ம அளவுக்கு இல்லை. அவை இன்னமும் நல்லவையாகத்தான் இருக்கும் @ இருக்கனும். பறவைகள் என்றது ,எப்போதோ படித்த ஜோக் ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒருவர் மற்றொருவரைக் கேட்கிறார்,
“இந்த வேடந்தாங்களுக்கு வரக்கூடிய பறவைகள் எல்லாம் எங்கிருந்து வருது தெரியுமா..?”
“தெரியலையே..”
“இதுகூடவா தெரியலை, வேடந்தாங்களுக்கு வரக்கூடிய பறவைகள் மட்டும் இல்லை, எல்லா பறவைகளும் முட்டையில் இருந்தான் வருகின்றன...”
   படித்ததும் சிரிக்கவேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. ஆனாலும் நான் சிரித்து வைத்தேன். இல்லாவிட்டால் வேலையில்லாதர்கள் எப்போதுதான் சிரிப்பது. வீட்டில் சிரிக்கவிட்டால்தானே.
    புதிது புதியாய் வந்திருக்கும் பறவைகளை பார்த்துக் கொண்டே நடப்பதில்தான் எத்தனை சுகம். ஆனால் இன்று பார்வைக்கு அந்த சுகம் முழுமையாகக் கிடைக்கவில்லை.
     ஏதோ காகிதத்துண்டு என் காலடியில் விழுந்ததை எப்படித்தான் பார்த்தேன். தெரிடவில்லை. ஆனால் பார்த்தேன். கையில் எடுக்கும் முன் என் கையில் வைத்திருக்கும் என வண்ணவண்ண சான்றிழ்தல்களை இருக்கமாக பிடித்துக் கொண்டேன். நான் கீழே குணியும் போது என் சான்றிதழ்கள் எதிர்பாராவிதமாய் பறக்கவும், அதை எடுக்கவும், எனக்கு ஒரு பெண்ணின் உதவி கிடைக்கவும், நான் இளிக்கவும், பதிலுக்கு அவளும் சிரிக்கவும், எங்கள் காதல் முழைக்கவும் இப்படியெல்லாம் சினிமாவில்தான் நடக்கும் . ஒருவேளை என் போன்ற அழகான வாட்ட சாட்ட வாலிபனுக்கும் நடக்கலாம்தானே. அதான் ஒரு முன்னெச்சிரிக்கை. வேலை கிடைக்கும்வரை காதலும் வேண்டாம்... மோதலும் வேண்டாம்.
    நல்லவேலையாக என் சான்றிதழ்களை பிலாஸ்டிக்கில் கோப்பில் வைத்திருந்தேன். இல்லையென்றால் எப்போதோ என்  விரல் வியர்வை, சான்றிதழ்களை வீணாக்கியிருக்கும்.
   காலில் பட்ட காகித்தை எடுத்துப் பார்த்த்தில் இன்ப அதிர்ச்சி. ‘வேலைக்கு ஆள் தேவை’ எனும் விளம்பரம். யாரோ வெட்டியிருக்கிறார்கள் . ஆனால் தவறவிட்டுவிட்டார்களே. ஒருவேளை எனக்காகக் கூட வெட்டியவர்கள் இதனை தவறவிட்டிருக்கலாம்.
   என்ன வேலை, அட அறிவியல் கூடத்தில் வேலையா..? உடல் முழுக்க வெள்ளை அங்கியை போட்டுக் கொண்டு ஒரு மூக்கு கண்ணாடியை மாட்டிக் கொண்டு இரண்டு கைகளையும் கால்சட்டைப் பாக்கேட்டுக்குள் விட்டுக் கொண்டு கூன் விழுந்த மாதிரி வேலை செய்யவேண்டுமே. கண்ணாடியென்றது இன்னொரு ஜோக் நினைவுக்கு வருகிறது.
   ஒருத்தருக்கு காதை வெட்டினா கண்ணு தெரியாதாம் அது என்ன? தெரியலையா.. அதாங்க விடையை முதல்லயே சொல்லிட்டேனே.. நீங்க போய் முதல்ல எழுதன தலைப்படி படிச்சி அதான் விடைன்னு புரிஞ்சிக்காதிங்க. அவ்வளவௌ மேல எல்லாம் போக வேண்டாம். இந்து ஜோக்குக்கு மேல போய்  மூக்கு கண்ணாடின்னு இருக்கும் பாருங்க அதை படிச்சிட்டு வாங்க. அதான் விடை. அதுசரி இது என்ன விடுகதையா நகைச்சுவையா? தெரியலை வேலையில்லாததால எதுஎதையோ படிச்சி சிரிக்கும்படி என் நிலமை ஆகிடுச்சி பார்த்திங்கலா. இனியும் அது தொடராது. ஏன்னா எனக்குத்தான் வேலை கிடைக்கப் போகுதே. ஆனா அந்த வெள்ளை அங்கியும் மூக்கு கண்ணாடியும் இருக்கே.....
    அதிலும் எனக்கு வெள்ளையங்கியும் பழைய தாத்தா காலத்து மூக்கு கண்ணாடியையும் கொடுத்தால், பொறுத்தமாக இருக்கும்மோ இருக்காதோ.
     ஒன்னு செய்யலாம். அறிவியல்காரர்கள் எல்லாம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. இவர்கள் ஜீன்ஸ் டீ-சர்ட் எல்லாம் போட்டுக் கொண்டும் ஏன் பணியன் கூட போட்டு கொண்டு வேலை செய்யலாம் என புரட்சி செய்திடவேண்டியதுதான். என்ன ஒன்னு தனியா செய்தா எடுபடாது. கூடாவே ஐந்து பேரை சேர்த்துக்குவோம். அப்பறம் ஆளுக்கு ஒரு கட்சியா, என்ன சொன்னேன் ஆளுக்கு ஒரு கட்சியா சொன்னே..! அதை மறந்திடுங்க. ஆளுக்கு ஒரு காட்சியா பிரிஞ்சி போய்ருவாங்க. நேய் வருவதற்கு முன்பே பூனை ஒடிஞ்ச கதைதான். ஆமா பூனையா சொன்னேன் இல்லையில்லை, பூனையில்லை ஒடிஞ்சது பானை.
     அறிவியல் கூடத்தில் வேலை செய்வதில் சம்பளத்தையும் தாண்டிய லாபமும் இருக்கிறது. எனக்கும் எங்க குடும்பத்துக்கும் எந்த நோய் வந்தாலும் நானே மருந்து கொண்டுவந்து கொடுத்திடுவேன். அதிலும் எங்க அண்ணனுக்கும் எங்க அப்பாவுக்கும் வாயே திறக்க முடியாத அளவுக்கு ஏதாவது மருந்து இருக்கா பார்க்கனும். எனக்கும்கூட அடிக்கடி சளி பிடிச்சி ஒழுகுது . மூக்கு சளியை பற்றிகூட ஒரு ஜோக் படிச்சிருக்கேன். சொல்லவா..? வேணாம்ங்க. பாவம் நீங்க. ரொம்பதான் பாடாய் படுத்தறேன் போல. சரி ஜோக்கை விடுங்க. வேலைக்கு வருவோம். சாதாரண வேலையா இது; அறிவியல் கூடத்தில் வேலை.
    ஒருவேளை அறிவியல் கூடத்தில், குப்பை அள்ளும் வேலையோ...? ச்செ ச்சே அதெல்லாம் இருக்காது. இருந்துட்டா என்ன செய்றது? எங்க வேலைன்னு மட்டும் சொல்லுவோம். என்ன வேலைன்னு சும்மா எதையாவது சொல்லிவைப்போம். வந்து பாக்கவா போறாங்க. நாட்டுல அவங்கவுங்களுக்க அவுங்கவுங்க வேலை. அதுவும் இப்போ அங்கயும் இங்கயும் மாறிமாறி கூட்டம் போடறாங்க.. அதுவும் ஒரு வேலையாகிப் போச்சி இப்போ. அதுக்கும் பணமெல்லாம் கொடுக்கறாங்களாமே..? எனக்குத் தெரியலை.
      எப்படியும் இந்த வேலை எனக்குத்தான் என நான் முடிவு செய்துவிட்டேன். கடந்த இரண்டாண்டுகளும் ஒவ்வொரு நேர்முகத் தேர்வுக்கு இப்படித்தான் நினைத்துக் கொண்டு சென்றேன்.கிடைக்கவில்லை. இப்போது மட்டும் எப்படி கிடைக்கும் என நான் இப்படி நம்புகிறேன். ஏதாவது காரணம் இருக்குமோ?
    இருக்குமோ இருக்காதோ... நாம் முயலத்தானே வேணும்.
    அய்யோ, எங்கே இந்த கடித்தில் தொலைபேசி எண்களைக் காணவில்லையே. ஹப்பாடா.. இருக்கிறது ஆ... என்ன இது ஒரு எண் குறைகிறதே. ஏன்யா இந்த விளம்பரத்தை வெட்டின மூதேவி, ஒரு கடித்தையே உன்னால ஒழுங்கா வெட்ட முடியலையே, உன்னையெல்லாம் அறிவியல் கூடத்தில வேலை சேர்த்தா என்ன ஆகுமோ..  அதான் கடவுளா பார்த்து, இல்லையில்லை கடவுளைப் பற்றி பேசக்கூடாது. அறிவியலைப் பொருதவரை எதுவும் அவன் செயல் இல்லை, எல்லாமே அவனவன் செயல்தான்.
   யோசிப்போம்.
    அட ஆமாம்ல்ல, கடைசி எண்தானே இல்லை. ஒன்றில் இருந்து ஒன்பது வரை இருப்பதே ஒன்பது எண்கள்தானே . ஒவ்வொரு எண்ணையும் கடைசி எண்னாக வைத்து அழைத்துப் பார்க்கலாமே. யோசிக்கிறீர்கள்தானே ஒன்றில் இருந்து ஒன்பது வரை ஒன்பது எண்கள் இருந்தாலும், கடைசியாக இருக்கும் பூஜ்ஜியத்தையும் சேர்க்கவேண்டுமே. என்ன..? பூஜ்ஜியமா..! தமிழ்த்தாயே ஐ ம் சாரி, பூஜ்ஜியம் என சொல்லிவிட்டேன். நியாயமாக சுழியம் என்றுதானே சொல்லியிருக்கவேண்டும். ஒன்ஸ் எகைன், ஐ சாரி மை டியர் தமிழ்த்தாயே. 
   எப்படியும் உடனே அழைத்துப் பேச வேண்டும். வேலை கிடைப்பது என்ன சும்மாவா. அதுவும் அறிவியல் கூடத்தில் வேலை. இப்போதே கற்பழிக்காத பொது தொலைபேசியைத் தேடவேண்டும்.
    இவ்வளவு பேசறவன்கிட்ட போன் இல்லையான்னு யோசிக்காதிங்க. பழைய மோடல் நோக்கிய போன். இருக்கு. அதாங்க தரையில் விழுந்தாலும் தரையை சிமண்டை உடைத்து , அப்படியே இருக்குமே அந்த போன்தான். என்ன போனிருக்கு, பணமில்லை. வேலைவெட்டி இல்லதவனுக்கு சோறும் போனுமே தண்டம் எதுக்கு போன்ல காசு என சொல்லித்தான் போனை கொடுத்தார் அப்பா. அவர்கள்தான் தேவையென்றால் என்னை கூப்பிடுவார்கள். நான் யாரைக் கூப்பிட்டு வேலை சொல்வது..? என் பேச்சைத்தான் கேட்பார் யாருமில்லையே.
    கையில் இருக்கும் சில்லறைக் காசுகளை பயபத்திரமாக பயன்படுத்த நினைத்தேன்.
    அதிஸ்டம்தான் இரண்டாவது அழைப்பே கிடைத்துவிட்டது.
“ஹல்லோ”
    பெண்குரல் கேட்டது. பெண்ணாகவும் இருக்கலாம். சார் எனவும் கூப்பிடாமல் மேடம் எனவும் கூப்பிடாமல் சமாளிப்பது சிரமம்தான். குரலைக் கேட்டாலே தெரிந்திடுமே என்கிறீர்கள்தானே. அது சரி நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள். இப்போதெல்லாம் குரலுக்கும் உடலுக்கு சம்பந்தமில்லை. இதை வைத்துக் கூட நிறைய பட ஜோக்குகள் வருகின்றன. எனக்கு எழுதத் தெரிந்த அளவுக்கு படம் வரையத் தெரியாது. அதனால் அந்த பட ஜோக்கை உங்களுக்கு காட்ட இயலவில்லை.
    நாளைக்கே நேர்முகத் தேர்வுக்கு வரவேண்டுமாம். அவர்களே காரை அனுப்பிவைப்பார்களாம். மீண்டும் அவர்களே கொண்டு வந்து வீட்டில் இறக்கிவிடுவார்களாம். வேலை கிடைத்தாலும் வேலை கிடைக்காவிட்டாலும் இப்படி செய்வார்களா என கேட்டுத் தெளிந்துக் கொண்டேன். இல்லையென்றால், யார் நடந்து வருவார்கள். அவர்கள் சொல்ன்ன முகவரியே எனக்கு புதிதாக இருக்கிறது. எவ்வளவு தூரமோ என்னமோ.
    மறுநாள் காலை, மடிப்பான சட்டையின்றைப் போட்டுக் கொண்டேன். குறுக்கும் நெடுக்கும் வீட்டு வரவேற்பறையில் நடந்துக் கொண்டிருந்தேன்.
அம்மா;
“எங்கய்யா காலையிலேயே...?”
“வேலைக்கு”
அப்பா;
“எங்கடா..?”
“வேலைக்கு...”
அண்ணன்;
“என்ன சார் காலையிலேயே கலக்கலா இருக்கிங்க...”
“வேலைக்கு...”
    வேலைக்கு என்ற ஒன்றைத் தவிர வேறேதும் சொல்லத் தெரியவில்லை. சொல்லவும் தோணவில்லை.
   சொன்ன நேரத்தில் கார் வந்தது. எதிர்ப்பார்க்கவில்லை. உயர் ரக கார். வீட்டில் எல்லோரும் என்னையே வியந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். கம்பீரமா நடந்து காரின் பின் சீட்டில் ஏறினேன். அப்பதானே நமக்கு கௌரவம். நல்லவேலை டிரைவர் ஒன்னும் சொல்லவில்லை. வீட்டாரின் விரிந்த கண்களை இதுநாள் வரை நான் கவனித்திருக்கவே இல்லை. ஆமாம், அவர்களின் முகம் பார்த்து பேசினால்தானே கண்ணை பார்க்க முடியும். கார் சென்று மறையும் வரை அவர்களின் விரிந்தக் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். பெரிய கண்கள்தான். ஒன்னு தெரியுமா, நான் போட்டிருக்கும் சட்டை, என் அண்ணனுடையது. காலையில் நான் கொடுத்த அதிர்ச்சியில் அண்ணன் அதை கவனிக்கவில்லை. இதை கணித்திருந்தால் அவனுடைய கால்சட்டையையும் போட்டிருப்பேன். ஏமார்ந்தேன்.
     காரில் நான் மட்டும் இருப்பதை இப்போதுதான் உணர்ந்தேன். டிரைவர் எந்த ஒரு அசைவோ பேச்சோ இல்லாமல் காரை ஓட்டிக் கோண்டிருந்தான்.
     என்ன இது , டிரைவர் அல்ல இது டிரைவி.!
     பெண்தான் காரை ஓட்டுகிறாள். நல்லவேலையாக அவள் சட்டை பட்டன் திறந்திருந்ததைப் பார்த்துத் தெரிந்துக் கொண்டேன். அவளின் மூக்கை போலவே கண்ணும் கூர்மைதான். இல்லையென்றால் கண்ணாடியைப் பார்த்தே தன் சட்டையை சரி செய்துக் கொண்டாள்.
     ச்சே என்னை, என்ன நினைப்பாள் அவள். முதல் சந்திப்பிலேயே இப்படியே நடப்பது. இதில் என் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே. ஆமாம். எனக்கு நீல வண்ணம் மிகவும் பிடித்தமான ஒன்று. யார் அவளை அந்த வண்ணத்தில் உள்சட்டை போடச் சொன்னது. அதான் வண்ணம் என்னை இழுத்துவிட்டது.
     அது சரி, ஏன் பெண்னை அனுப்பியிருக்கிறார்கள். ஒருவேளை ஒழுக்கத்தை பரிசோதிக்கவா? இந்த பெண் இதை சொன்னால் எனக்கு அந்த அறிவியல் கூடத்தில் வேலை கிடைக்காமல் போய்விடுமே. என்ன செய்வது.  முதல் சோதனையிலேயே தோல்வியா எனக்கு. இந்த வேலையும் எனக்கு கிடைக்காதா.
    வேலை மட்டும் கிடைக்கவில்லையென்றால், இனி திரும்பி வீட்டிற்கு செல்லவேக் கூடாது.
     கார் அதன் வேகத்தை குறைக்காமல் சென்றவண்ணமே இருக்கிறது. அவள் சட்டையை சரி செய்ததோடு சரி, வேறெதையும் சட்டை செய்யவில்லை. அவள் என்ன இயந்திரமா..? ச்சே இது என்ன சுஜாதா கதையா, இயந்திர மனிதர்கள் வந்து போக.
    கார் நின்றது. அறிவியல் கூடமா இல்லை ஆவிகள் கூடமா எனத் தெரியவில்லை. தனியாக ஒரு தொழிற்சாலை. பக்கத்தில் வேறேதும் இல்லை. மருத்துக்கு மரங்கள் மட்டுமே. மரங்களா எனவும் என்னால் அதை உறுதியாக சொல்ல முடியவில்லை. மரங்கள் ஒவ்வொன்றும் விசித்திரமாக இருந்தன.
    இந்த இடம் குறித்து கேட்கலாம் என்றுதான் காரோட்டிய பெண்ணைத் தேடினேன். இல்லை. வந்திரங்கிய உயர் ரக கார். இல்லை. அதற்குள் எப்படி புறப்பட்டிருக்க முடியும். தெரியவில்லை. புரியவுமில்லை. தொழிற்சாலையின் நடைபாதை தெரிய நானாகவே நடந்துச் சென்றுக் கொண்டிருந்தேன். முழுவும் விளக்குகள். வெளியில் இருப்பதைவிட உள்ளே அதிக வெளிச்சமாக இருந்தது.
     அறைக்கதவின் மூன் வருசையின் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஒரு இளைஞன் மட்டும் உட்கார்ந்திருந்தான். அந்த நிசப்தத்தில் என காலடி ஓசை சத்தமாகக்  கேட்டது. அவன் கவனித்ததாகவே தெரியவில்லை. நிமிர்ந்து நிமிர்ந்து உட்கார்ந்தவாறு இருந்தான். எனக்கு கொஞ்சம் விசித்திரமாக இருந்தது.
    ஆனால் அவன் இப்படி நிமிர்ந்து நிமிர்ந்து உட்காரவேண்டிய அவசியம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அவனாக இதனை வேண்டுமென்று செய்வது போல உணர்கிறேன். அதான் சொல்லுவார்களே இம்மாதிரி நேர்முகத் தேர்வுக்கு செல்கிறவர்கள், நேரான பார்வையும் நிமிர்ந்து உட்காரும் பாணியும் அவர்களின் ஆளுமையைக் காட்டுமென; அதாகக் கூட இருக்கலாம். ஏன் இவன் அதையே இப்படி கோமாளித்தனமாகச் செய்கிறான்.
      அந்த நாற்காலிக்கு அருகில் இருக்கும் கதவை பற்றி ஏதும் சொன்னெனா..? இல்லையென்றால் இப்போது சொல்கிறேன். அந்த நாற்காலி அருகில் கதவு இருக்கின்றது. கதவின் மேல் கருப்பாய் ஏதோ பூச்சி இருக்கிறதே, என்ன பூச்சி அது. பல்லி இப்படி இருக்காதே, பட்டாம்பூச்சிக்கு சிறகு இருக்குமே.. அட இது சிலந்தி. உயிரோடு இருக்கிறதா இல்லையா. ஒருவேளை ஒட்டிகையோ.
     மணிசத்தம் கேட்டது. நிமிர்ந்து நிமிந்து உட்கார்ந்த மனிதன், அதான் அந்த கோமாளி மனிதன் உள்ளே சென்றான். அதில் பாருங்கள். மணி அடித்ததும் அவனாக எழாமல், யாரோ தள்ளியது போல முன்னோக்கி எழுந்தான்.
      தூரத்தில் மீன் தொட்டி இருப்பதை இப்போதுதான் பார்த்தேன். சரி வெறுமனே உடார்ந்திருக்காமல், எழுந்து அந்த மீன்களை பார்க்கலாம் என நடக்கத் தொடங்கினேன். அந்த இளைஞன் உடார்ந்திருந்த நாற்காலையைத் தாண்டித்தான் செல்லவேண்டும். ஆனால் செல்லவில்லை. நின்றுவிட்டேன். அடுத்த அடியை என்னால் வைக்க முடியவில்லை.
     சொன்னால் நம்புவீர்களாக் கூட தெரியவில்லை. நாற்காலி நடுவுல் குழியாக இருக்கிறது. இல்லை , இல்லை. இது குழியல்ல ஏதோ நூலால் மட்டுமே தைத்தது போல இருக்கிறதே. அதுவும் இல்லை இது சிலந்தி வலை. இந்த சிலந்தி வலை எப்படி அந்த இளைஞனின் பாரத்தைத் தாங்கியது.
     காரணமின்றியே கையை வைத்து அழுத்தினேன். ம்... தொடுதல் சிலந்தி வலையைப் போலத்தான் இருக்கிறது. ஆனால் வலை கிழியவில்லையே. எப்படி. இந்த வலை என் கை அழுத்தத்தை தாங்குவது ஆச்சர்யமா இருக்கிறதே. ஐயோ..! என்ன இது என்னால் என் கையை எக்க முடியவில்லையே. விரல்கள் வலையில் ஒட்டிக் கொண்டதே. ம்...ம்..... வரமாட்டேன் என்கிறதே. என்ன செய்ய..?
     அந்த இளைஞன் எப்படி உட்கார்ந்திருந்தான். ஒருவேளை இதில் மாட்டிக் கோண்டுதான் பல முறை எழ முயன்றானோ? அதே வரிசையில் இருக்கும் என்னிடம் கூட அவன் உதவி கேட்கவில்லையே?
    அப்பா.....ஒருவழியாக கையை எழுத்து விட்டேன். கையில் அந்த சிலந்தி வலையில் அச்சி அப்படியே இருந்தது. சில அடிகள் முன் வைத்து மீன் தொட்டிக்கு சென்ற எனக்கு இன்னொரு ஆச்சர்யம். அந்த மீன் தொட்டியில் மீனுக்கு பதில் சில சிலந்திகள் இருக்கின்றன. மீன் தொட்டிகளில் எலி வளர்த்த காலம் மாறி இப்போ சிலந்திகளையெல்லாம் வளர்க்க ஆரம்பிச்சிட்டாங்களா.
   ஆனால், ஆனால், ,ஆனால். இந்த சிலந்திகளின் முகம் மனித முகம் போல இருக்கின்றன. இது என்ன பைப் துவாரத்தில் இருந்து புதிய சிலந்தி ஒன்று வந்து விழுகிறதே. அது, அது, அது அந்த புது சிலந்தியின் முகத்தைப் பாருங்களேன். எனக்கு நன்றாய் தெரிந்த முகம் போல இருக்கிறது. எப்போது பார்த்தேன் தெரியவில்லையே... எப்போது, எப்போது, எப்போது....? ஆம் ஞாபகத்துக்கு வந்துவிட்டது. முன்பு பார்த்த இளைஞனின் முகம் இது. அதான் நிமிர்ந்து நிமிர்ந்து உட்கார்ந்தானே அதே இளைஞன்.
     இந்த அறிவியல் கூடத்தில் தவறாக ஏதோ நடக்கிறது. அப்படித்தான் என் உள் மனது சொல்கிறது. ஒருவேளை, வேலைக்கு ஆள் தேவைன்னு விளம்பரம் செய்து, இவங்களே கூட்டி போகிறார்கள், யாருக்கும் இடம் தெரியவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் இங்கிருந்தால் நானும் இப்படி ஒர் சிலந்தியாகிடுவேன்.
    கூடாது. என்னால் இப்படி சிலந்தியாகி, மீன் தொட்டியில் எல்லாம் இருக்க முடியாது.
   அய்யோ! மீண்டும் மணி சத்தம் கேட்கிறது. அந்த கதவு திறக்கப்படுகிறது. இனி ஓட வேண்டும். ஓடத் தொடங்கினேன். ஓடும்போது திறந்திருக்கும் கதவை எட்டிப்பார்த்தேன். எப்படி சொல்வதென தெரியவில்லை. ஒரு மாதிரி நிழல்போல பெரிய என்னமோ ஒன்று நின்றுக் கோண்டிருந்தது. இனியும் தாமதிக்க கூடாது.
    ஆசைபட்ட வேலையும் கோவிந்தா.
    இனியும் எனக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் ஒன்று, எனக்கு கிடைத்த இந்த வேலை அனுபவத்தை ஒரு கதையாக எழுதலாம்னு நினைக்கறேன். கதை எழுதலாம்னு சொல்லும் போது இன்னொரு நகைச்சுவையும் நினைவுக்கு வருகிறது. சொல்லவா...
     இது சிரிக்க மட்டும், தவறியும் சிந்திச்சிங்கன்னா என் மேல கோவப்படுவிங்க. அப்பறம் என்னை பற்றிய புகார்களை தேடுவிங்க. அதனாலதான் சொல்றேன். இது சிரிக்க மட்டும். இருவர் இப்படி பேசுகிறார்கள்;
“அண்ணே நானும் எழுத்தாளராகனும். அதுக்கு நான் என்ன அண்ணே செய்யனும்”
“ஓ, அதுக்கு நிறைய வாசிக்கனும், பலரில் எழுத்தாளுமையை புரிஞ்சிக்கனும்”
“அண்ணே, நிறைய வாசிக்காமலும், யாருடைய எழுத்துகளையும் படிக்காமலும் , எழுத்தாளராக முடியாதா..?”
“ஏன் முடியாது. நிச்சயமா முடியும்”
“ஹையா... அண்ணே அதை சொல்லுங்கன்னே. நானும் எழுத்தாளராகிடறேன்”
“உங்க முடிவுல உறுதியா இருக்கிங்கலா தம்பி”
“கண்டிப்பா”
“அப்படின்னா. இருக்கற ஏதாவது ஏதாவது எழுத்தாளர் சங்கத்துல மெம்மராகிடுங்க.”
“நெஜமாவா”
“பின்ன, பொய்யா சொல்றேன்”
“அண்ணே, என்னை வச்சி காமிடி கீமிடி செய்யலையே..?”
“அவ்வ்வ்வ்வ்வ்”

     சரி, என்னோட கதையின் முதல் வரியை சொல்லவா; அந்த எட்டுகால் பூச்சியை அப்போதே நசுக்கியிருக்க வேண்டும். செய்யவில்லை. தவறுதான். இனிமேலும் ஏதும் செய்ய இயலாது. கை வலிக்கிறது.

          
   

கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்: சிறுகதை விமர்சனம்

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் சிறுகதை குறித்து மஹாத்மன் எழுதியிருக்கும் கட்டுரை)

பத்திரிகைகளில் இக்கதைக்கான விமர்சனங்களைப் பார்த்தேன்.மிகக் கடுமையான கண்டனத்திற்கும் உட்ச பட்ச தாக்குதலுக்கும் இழிவிற்கும் ஏளனத்திற்கும் உள்ளாகி இருந்தது. இதற்குப் பின்னால் பழிவாங்கும் நுண்ணிய அரசியல் இருந்தாலும் அதனை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து இக்கதைக்கான விமர்சனத்தை உண்மையான வார்த்தைகளோடு பதிவு செய்கிறேன்.
இதுவொரு மனப்பிறழ்வுக்கானவனின் கதை என்பதை ஒரு முறை வாசித்து முடியும் போது புரிந்துவிடக்கூடிய விஷயம். அடுத்து இதுவொரு பலான – ஆபாசம் நிறைந்த கதையோ என்ற எண்ணம் தோன்றுவதையும் தவிர்க்க இயலாத ஒன்றுதான்.
 
என் 20-23 வயது வரை கிள்ளான் பட்டணத்தின் மத்தியில் குளிரூட்டி உணவகத்தில் வேலைசெய்யும்போது ‘கண்டதையும் படிக்க வேண்டும்’ என்று முற்பட்டதினால் எதிர்ப்புற பெட்டிக்கடையில் ‘மஞ்சள்’ புத்தகக் கதைகளை வாங்கிப் படித்தேன். ஆங்கிலம் கலந்த தமிழ் நடையோடு இருக்கும் இச்சிறுகதையானது ஏறக்குறைய அந்தப் புத்தகங்களின் சாயலைக் கொண்டிருக்கின்றது.
 
கவனிக்க: சாயல் மட்டும் தான்.
 
மிகவும் வெளிப்படையானத் தன்மை, மிகச் சாதாரணமான சொல்லாடல், உத்திகளுக்கும் வாக்கிய இறுக்கங்களுக்கும் மெனக்கெடல் இல்லாத கதையமைப்பு ஆகியவை இக்கதையானது ‘பண்பாட்டுச் சீரழிவு’ என்ற முத்திரையை பெற்றுவிட்டது.
 
சரி,போகட்டும்.
மனப்பிறழ்வு அல்லது மனநோய் என்பது பலவகையானது. நமது அன்றாட வாழ்க்கையில் லூசு என்று அரை லூசு என்றும் முழு லூசு என்றும் ஒரு நட்டு கழன்றுவிட்டது என்றும் ஒருவருக்கொருவர் சொல்வதைப் பார்க்கின்றோம். பில்லி சூனியம்,செய்வினை, ஏவுதல் என்பது மந்திர தந்திரங்களிலும் நடு ஜாம சுடுகாடு பூசையிலும் கல்லறைகளின் மீதும் மண்டையோடு-நரபலி –செத்த ஆவிகளோடு செய்யபடுவதின் மூலம் உண்டாகும் மனப்பிறழ்வு ஒரு வகை

*தஞ்சோங் ரம்புத்தான் மனநல காப்பகத்தில் இவ்வகையான மன நோயாளிகளே 1987 வரை அதிகமானோர் சிகிச்சைப் பெற்று வந்தனர். அதன் பிறகு மனநல பாதிப்பின் தடம் மாறியது. கணக்கு வழக்கில்லாமல் விகிதாச்சாரம் எகிறியது.
 
குடும்பத்தால் வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டுபோய் மனநல சிகிச்சைப் பெற்றுக்கொண்டவர்கள் வெகு சிலரே.பெரும்பான்மையோர் வீட்டில் உள்ளோரை ஏமாற்றி அல்லது ஒருவித நாடகமாடி வீட்டை விட்டு வெளியேறி வேறொரு மாநிலத்திற்கு மாற்றலாகி {குறிப்பாக தலைநகருக்கு}வந்து தங்களின் மனப்பாதிப்பினால் நிலையான ஒரு வேலையில் இருக்க முடியாமலும் கீழ்ப்படிந்திருக்க இயலாமையினாலும் வீடற்றவர்களாக நாதியற்றவர்களாக கடைவீதி ஐந்தடிகளிலும் ‘மேபெங்க்’ படிக்கட்டுகளிலும் டத்தாரன் மெர்டெக்கா சதுக்கத்திலும் இரவு நேரத்தை கழிக்கும் இவர்களில் சிலர் போதை வஸ்துகளுக்கு அடிமையாவதால் வாழ்வு சிதிலமடைந்திருக்கின்றது.
 
ஒரு காரியத்தை குறித்தும் தீவிரமாய் ஈடுப்படுகிறார்கள். இதனால் பல முக்கியக் காரியங்களை கவனிக்க முடிவதில்லை. ஈர்ப்பில் வந்த இலயிப்பும் திளைப்பும் அதிகமாகி மாற்றம் ஏற்படுகிறது. மனத்தடுமாற்றம் தீவிரமாகி ஒரு கட்டத்தில் மனப்பிறழ்வை உண்டாக்கி விடுகின்றது.
இந்த மனப்பிறழ்வை தாங்கிக்கொள்ள முடியாததால் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகின்றார்கள். சிலர் தாங்களாகவே வெளியேறுகிறார்கள். சிலர் தெரிந்தும் தெரியாதது போல இருக்கிறார்கள். ஒரு லாபத்திற்காகவோ சுயநலத்திற்காகவோ அவமானத்திற்குள்ளாவோம் என்ற பயத்தினாலோ அடிஉதை கிடைக்க நேரிடும் என்பதாலோ மவுனிகளாகிவிடுவோரும் உண்டு.சொந்த வீட்டில் உள்ளோரே சமயத்தின் பேரில் ஒருவரை நிர்ப்பந்தித்து செய்யச் சொன்ன காரியங்கள் நிமித்தம் மனப்பிறழ்வுக்குள்ளான கதை எனக்குத் தெரியும்.அவர் ஒரு பெண்.
 
தயாஜியின் கதையில் வரும் கதாநாயகனின் மனப்பிறழ்வு யாரும் அறியாதது.இது ஒரு விதம்.இந்த விதம் இப்போதுள்ள காலக்கட்டத்தில் இனமத வேறுப்பாடின்றி எங்கும் வியாபித்துக் கிடக்கின்றது. பத்திரிகை செய்திகளே இதற்கு ஆதாரம்.ஆனால் நாம் ஒப்புக்கொள்ள மறுக்கிறோம். ‘என் வீட்டில் இப்படி கிடையாது’ என்று அடித்துப் பேசி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். ‘உவே?’ என்று வாந்தியெடுத்த நபரின் வீட்டிலும் அவருக்குத் தெரியாமல் இது நடக்கலாம்.நாம் நமது பிள்ளைகளை 24 மணிநேரமும் கண்காணிக்க முடியுமா என்ன? மகாத்மா காந்தியே தன் பிள்ளை விஷயத்தில் இடறியிருக்க நாம் எம்மாத்திரம்?

எல்லா மத வேதங்களிலும் இந்த இடறல்கள் உண்டு .ஆழமான விவரிப்பு இல்லையெனும் ஒரு வரி அல்லது ஒரு வாக்கியம் போதுமே,யூகித்தறிய.
 
இணையத்தளம் வழி ஆண்களுக்கு ஈடாக பெண்களும் ஆபாச அவலங்களுக்குள்ளாகி சிக்கி வெளிவரத் தெரியாமல் தடுமாறி தடம் மாறிபோய் தங்களத் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாமல் இருக்கிறார்கள். அவர்கள் வணங்கும் தெய்வம்/கடவுள் கூட காப்பாற்ற முடியாமல் போகிறது.

ஒரு வெளிப்படையான,அப்பட்டமான கதை இது என்ற போதிலும் கதாநாயகனின் மனப்பிறழ்வுக்கான முதன்மை காரணமாக பாலியல் சினிமா திகழ்கிறது.சிறுவயது முதலே இதிலேயே நாட்டம் கொண்டி இலயித்து திளைக்கிறான்.அடிக்கடி கழிவறைக்குப் போகிறான். கழிவறையே கதியென ஆகிறான். மனதளவில் கழிவறை இவனை சிறைப்படுத்தி விடுகிறது. இதிலிருந்து அவனால் விடுபட முடியவில்லை.கழிவறையின் அசுத்தங்கள், துர்நாற்றம் இவன் மனதிற்குள் புகுந்து மனப்பிரம்மையின் முரண்பட்ட வெளிப்பாடுகளை இவனுக்கு காட்டுகின்றன. விடுபட முடியாத கருந்துளை இருளுக்குள் அகப்பட்டவனின் இயலாமை அடையாளமாக தன்னை மீறி சிறுநீர் கழித்து நொந்துக்கொள்கிறான். மனநோயாளிகள் இடம் பொருள் ஏவல் என்று எதனையும் பார்க்கமால் நடந்துக்கொண்டிருக்கும் போதே சிறுநீரை கழித்துவிடுவார்கள்.
 
தன்னை விடுவிப்பதற்கு எட்டுபேரை அடையாளங்கண்டு அழைக்கின்றான். கதை முழுக்க தனக்குத் தானே பேசிக்கொள்ளும் ஒரு மனநோயாளியின் வாக்குமூலங்கள் ஆகும். முதலில் அழைத்த நபர் அம்மா. அம்மாவிடம் தனது தப்பிதங்களுக்காக மனதார மன்னிப்பு கேட்கிறான்.பிறகு வரிசையாய் நண்பர்கள், ஆசிரியர், நண்பனின் தங்கை, நண்பனின் காதலி என்று போய் காளியிடம் வந்து நிற்கிறது.
நான் எதிர்ப்பார்க்காதது. மனம் திக்கென்றது.
 
தமிழ் சினிமாவையும் மலேசிய சிறுகதையும் உள்வாங்கிய மனம் இப்போதெல்லாம் கதையோட்டத்தையும் முடிவையும் சுலபமாக யூகிக்க முடிந்ததினால் காளி வந்தவுடன் திக்பிரமை உண்டானது.வேறு தெய்வங்கள் என்றால் பரவாயில்லை. ஏன் காளி? யோசித்தது மனம். எல்லா தெய்வங்களும் கைவிட்ட பிறகு இறுதியாய் போய் நிற்பது காளியிடம். காளிக்கு ‘மாயா’ என்றொரு பெயரும் உண்டு. எல்லா மாய கிரியைகளையும் நிர்மூலமாக்கும் வல்லமை படைத்தவள். மனப்பிறழ்வு என்பது ஒரு மாயை உலகம்.
 
வீட்டிற்கு அருகில் இருந்த ஒரே கோயில் காளி கோயில். விபரம் தெரிந்த நாற்முதற்கொண்டு அத்தெய்வத்தை வணங்கிய பக்தன். வளர்ந்து மீசை முளைத்த காலத்தில் காளியை காதலியாக பார்த்தவன். பக்தி கசிந்துருகி காதலாகியிருக்கிறது. எல்லாம் சரிதான். இடையில் வந்த பாலியல் சினிமா பழக்கம் பக்தனுக்கு காமக்கண்களைக் கொடுத்துவிட்டதால் காமவிகாரமாகிவிட்டது. காளி கொல்லுவாள் என்ற பய உணர்ச்சியே இல்லாத பக்தன். அல்லது, பாலியல் சினிமாவில் தீவிரமாய் இருக்கும் போது குற்றவுணர்ச்சியின் கரணமாக கோயிலுக்குச் செல்லுவதை நிறுத்திவிட்டிருக்கிறான். மனப்பிறழ்விலிருந்து காப்பாற்றப்பட தன்னுடைய தெய்வமான காளியை நினைந்து வேண்டும்போது காளியை மயான சூலியாகப் பார்க்காமல் தனக்கே முழு உரிமையும் உண்டென்ற உறுதிமனப்பான்மையில் “காளி !என் காதலி!…இங்கே வாடி” என்கின்ற அழைப்பு எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. பெண் பக்தைகளான ஆண்டாளுக்கும் ராதைக்கும் ஓர் ஆண் தெய்வம் காதலனாக எப்படி அமைந்ததோ அப்படியே இவனுக்கும் பெண் தெய்வமான காளி காதலியாகிறாள்.
“உன்னை நான் உனக்கே வேறுமாதிரி காட்டுகிறேன்” என்ற இவனின் துடிப்பு எனக்கு பிரமிப்பை கொடுத்தது. ஆங்காரி,பயங்கரப் பார்வை ,நாக்கை வெளியே நீட்டி சூலத்தை ஆத்திரத்தோடு ஏந்தியிருப்பவள், மண்டையோடுகளை கழுத்தில் அணிந்திருப்பவள் காளி என்ற உருவகத்தை மாற்றி அன்பே வடிவமாய் அன்பைப் பொழியும் காதலியாய் மாற்றும் முயற்சியில் மனம் ஏங்கித் தவிக்கிறது. இவன் தன்னுடைய பலவீனங்களை, மனத்தடுமாற்றத்தை, மனப்பிறழ்வை ஏந்திக்கொண்டு காளியிடம் சரண் அடைகிறான். என்ன ஆகுமோ என்று தெரியவில்லை. மனம் நடுங்குகிறது. அதன் விளைவாக சிறுநீர் வெளியேறுகிறது.
 
பிரமாதம்!!
 
இறுதியில் யார் யாரை பழிவாங்கியது என்ற கேள்வி தனியாய் கேட்டு நிற்கிறது. காளி அருகில் வருகிறாள் என்றதோடு கதை முடிகிறது. காளி பழிவாங்குவதற்கு வருகிறாளா அல்லது காதலியாக வருகிறாளா என்பது தெரியாமல் போகிறது. சிறுகதை இலக்கணத்திற்கேற்ப முடிக்கப்படுகிறது கதை.
இறுதியாக, இப்படி அப்பட்டமான – வெளிப்படையான – எதிர்மறையான – முகஞ்சுளிக்க வைக்கும் சிறுகதை நமக்குத் தேவைதானா என்பது தான்.சமூகத்தில் இப்போதுள்ள காலக்கட்டத்தில் இதைவிட மிக மிக மோசமான சம்பவங்கள் நம் கண் முன்னே கொட்டிக்கிடக்கின்றன. பாலியல் ரீதியான வக்கிரம் ,வன்கொடுமைகள் நம் வீட்டிலும் பக்கத்து வீட்டிலும் நடக்கின்றன. பத்திரிகை செய்திகளோடு நாம் நம்மை கோடு தாண்டாதவர்களாக தமிழ் இலக்கியத்தில் இருத்திக் கொள்ளப் போகிறோமா என்ற கேள்வியை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன்.
 
தயாஜி செய்த மூன்று தவறுகள்:
 
1} புத்தக உரிமத்திற்காக எழுத்தாளர் சங்கத்தை எதிர்த்து கலகக் குரல் எழுப்பியது.

2}ஆர்.டி.எம்- யில் இருந்து கொண்டு இப்படிப்பட்டக் கதையை எழுதியது

3}மலேசியா நாட்டில் இக்கதையை வெளியிட்டது.
 
 
- மஹாத்மன்
 
நன்றி வல்லினம்

எளிய கேள்விகளும் எளிய பதில்களும்

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் சிறுகதை குறித்து கே.பாலமுருகன்)
 
 
புனைவுகள் குறித்த அபத்தமான கருத்துகள் பல்வேறு தரப்பிடம் இருந்து வருகின்ற சூழலில் வல்லினத்தின் சிறுகதை பொறுப்பாசிரியர் கே.பாலமுருகன் பொதுவாக எழும் கேள்விகளுக்கு பதில் கூறுகிறார்.
 
ஒரு இலக்கிய படைப்பில் கூறப்படும் கருத்தை ஒட்டியே அதை படைத்த படைப்பாளின் குணமும் இருக்கும் என்று கூறப்படுகிறதே, இது சரியா? உதாரணமாக போதை பழக்கத்துக்கு அடிமையானவனின் வாழ்க்கையை கூற முனையும் படைப்பாளியும் ஒரு போதைபித்தனாக இருப்பான் என்று கூற முடியுமா?
 
எப்பொழுதுமே கலை மீதான ஆதிக்கம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இருந்து வந்துள்ளன. மேட்டுகுடி மக்கள் இதுதான் கலை என பொதுப்பரப்பில் அளவீடு செய்வதும் அதை விளிம்புநிலை மக்களிடமிருந்து பிரித்துக் காட்ட வேண்டும் என்பதற்கான கலை என்பது உயரிய விசயங்களை மட்டும் பேசுவது எனத் தீர்மானிக்கிறார்கள். ஆகவே அதனை எதிர்த்து எழுதத் துவங்கும் படைப்பாளி அதுவரை இலக்கியம் கண்டிராத நிலப்பரப்பிற்குள் நுழைகிறான். சமூகம் கண்டுக்கொள்ளாமல் விட்ட மனிதர்களை அதாவது சொல்லப்படாத மனிதர்களை நோக்கி தன் படைப்புகளைக் கவனப்படுத்துகிறான். இதுவரை சென்றிறாத இடத்தைத் தேடிச்செல்லும் பயணியைப் போலத்தான் இலக்கியவாதியும். மேடையில் இராவணன் வேடத்தை அணிந்து நடிக்கும் நடிகரின் தீவிரமான கலை ஈடுபாடு இறுதியில் அவனுக்கு எதைக் கொடுக்கின்றது? பார்வையாளர்கள் அவனுடைய இராவணன் வேடத்தின் மீது அதிக வெறுப்பும் கோபமும் கொண்டு அவனை நோக்கி சப்பாத்துகளை எறிகிறார்கள். அவன் உண்மையில் இராவணன் கிடையாது, ஆனால் அவனுடைய ஈடுபாடான நடிப்பு மக்களை நம்ப வைக்கின்றது. அது மேடை என்பதன் இடைவேளியைத் தகர்க்கின்றது. ஆகவே, போதைப்பித்தர்கள் பற்றி எழுதும் ஒரு படைப்பாளியின் கூர்மையான எழுத்து அவனும் அப்படிப்பட்டவன்தான் என வாசகனை நம்ப வைத்து அவன் மீது கோபம் வர வைப்பது என்பது வெற்றியே. எம்.ஏ இளஞ்செல்வனின் கதைகளைப் படித்துவிட்டு அவரை அடிப்பதற்காக வீடுவரை சென்றவர்களும் இருக்கிறார்கள். இது வாசகனின் ஈடுபாட்டைக் காட்டுகிறது. எது போலி எது உண்மை என கலையில் பிரித்தறிய முடியாமல் போகிறது? இதுதான் இலக்கியம் எனத் தீர்மானிக்க முயலும் அனைவருமே கலையின் முதலாளிகளாகத் தங்களை நிறுவிக்கொள்ளவே நினைக்கிறார்கள்.
 
மேலும் போதைப்பித்தன் மெனக்கெட்டு தன் வாழ்வை இலக்கியமாகப் படைப்பான் என்றெல்லாம் எதிர்ப்பார்ப்பது வேடிக்கையானது. அதையும் தாண்டி ஒரு காலக்கட்டத்தில் அவன் தன் வாழ்வை எழுதினாலும் அது கண்டனத்திற்குரியதோ அல்லது தீண்டத்தகாத இலக்கியமும் அல்ல.
ஓர் இலக்கிய படைப்பு எளிய வாசகர்களாலும் புரிந்து கொள்ளப்படவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதும் அப்படி அமைந்தாலே அது நல்ல இலக்கியம் என்று கூறுவதும் சரியா?
 
யார் அந்த எளிய வாசகர்கள் எனக் கூற முடியுமா? எந்தவகையில் அவர்கள் எளிய வாசகர்கள் என அடையாளப்படுத்தப்படுகிறார்கள்? எளிமை என்பதற்கு நிறைய அர்த்தங்கள் இருக்கின்றன. இப்படி எடுத்துக்கொள்ளலாம், வாசிப்பை விரிவுப்படுத்தாமல் ஒரே இடத்திலேயே தேங்கிவிட்டவர்களை எளிய வாசகர்கள் எனச் சொல்லலாமா? அல்லது அம்புலிமாமா, பீர்பால் கதைகள் எனச் சிறுவர்களுக்கான எளிய கதைகளை மட்டுமே வாசித்து அங்கேயே தங்கிவிடும் பெரியவர்களா? இரண்டு தரப்பினரும் சமூகத்தில் ஆரோக்கியமானவர்களா? வாசிப்பு என்பது அடுத்தக்கட்ட தேடல்களை நோக்கி வளர வேண்டும் என்பதே ஆரோக்கியம். புதுமைப்பித்தனை நான் படிக்க மாட்டேன் காரணம் என்னால் நா.பார்த்தசாரதியை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என ஒரு வாசகன் தன்னைப் பூட்டிக்கொள்வது நியாயமானதா? இல்லையென்றால் அதுபோன்ற எளிய வாசகர்கள் பற்றி ஒரு படைப்பாளனும் சரி இலக்கியமும் சரி அக்கறைக்கொள்வதில்லை.
 
இன்னொன்று முக்கியமான விசயம், எல்லாம் மனிதர்களின் அறிவுநிலையும், புரிதலும், ஆர்வமும், கல்வியறிவும், ஈடுபாடும் மொழியறிவும் ஒரே மாதிரி இருக்கின்றனவா? அப்படி இல்லாதபோது எப்படி அவர்களை எல்லோரையும் ‘எளிய வாசகர்கள்’ எனும் ஒரே அடையாளத்திற்குள் வைத்துத் திணிக்க முடியும். அம்புலிமாமாவைத் தாண்டாதவர்கள் இருந்தால் அவர்களுக்கு அம்புலிமாமா இரகத்திலான இலக்கியத்தைத்தான் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் ஏதும் உண்டா? அவர்களை வளரவிடுவதில் யாருக்கு என்ன பிரச்சனை? அவர்களுக்காகக் கவலைப்படுகிறோம் என்கிற பெயரில் அவர்களைத் தத்துக்குட்டியாக்கி வைத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. நாம் இன்னும் பகுத்தறிவை இழந்துவிடவில்லை. அல்லது ஒரு பக்க மூளையோடு பிறப்பதில்லை.
 
இன்னும் எளிமையாகச் சொல்வதானால், ஒரு தீவிர வாசகனுக்கு பல்கலைக்கழகத்தில் மட்டுமே இலக்கியம் படித்தவன் எளிய வாசகன்தான். பல்கலைக்கழகத்தில் படித்தவனுக்கு படிவம் ஐந்தில் தமிழ் இலக்கியம் படிப்பவன் எளிய வாசகன், படிவம் ஐந்தில் தமிழ் இலக்கியம் படித்தவனுக்கு நாளிதழில் மட்டுமே சிறுகதைகளையும் கவிதைகளையும் வாசிப்பவன் எளிய வாசகனாகத்தான் இருப்பான். இதில் எந்த நிலை எளிய வாசகர்களுக்கு ஓர் எழுத்தாளன் இயங்க வேண்டும். யாரை மனதில் கொண்டு எழுத வேண்டும். அப்படி ஒருவன் இந்த ரக மக்களுக்கு எழுதுகிறேன் என புனைவு செய்தால், அவன் நல்ல ஆசிரியராக இருக்கலாம்; எழுத்தாளனாக முடியாது.
 
ஓர் இலக்கிய படைப்பு குடும்பத்தில் அனைவராலும் ஒன்றாக வாசித்து மகிழத்தக்கதாக அமைவது அவசியம் என்றும் அதுவே தமிழ் இலக்கிய கோட்பாடு என்றும் கூறுவது சரியா?
 
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. சினிமாவில் குழந்தைகள் சினிமா, ஆய்வு சினிமா, சிறுவர் சினிமா, அரசியல் சினிமா, கலை சினிமா, பிராந்திய சினிமா என இன்னும் பல வகைகள் இருப்பதைப் போல இலக்கியத்திலும் பலவகைகள் உள்ளன. சிறுவர் சிறுகதைகளைப் பெரியவர்கள் விரும்பி வாசிக்க இயலாது. அவர்களால் அதிக ஈடுபாட்டுடன் அதில் இலயிக்க முடியாது. அவர்களின் வயதிற்கும் அனுபவத்திற்குமேற்ற பெரியோர் கதைகளையே அவர்களால் மகிழ்ச்சியுடன் வாசிக்க முடியும். அதே போல ஒரு வண்ணதாசனின் சிறுகதையையோ அல்லது ஜெயகாந்தனின் நாவலையோ ஒரு 12 வயது சிறுவன் வாசித்தால் அவனால் அதற்குள் நுழையவே முடியாது. இந்த வேறுபாடுகூட தெரியாவிட்டால் என்ன தலைமைத்துவப்பண்பு நம்மிடம் இருக்கிறதாக நாம் நம்புகின்றோம்? இன்றைய நிலையில் ‘யூ’ சான்றிதழ் வழங்கப்பட்ட தமிழ்ச்சினிமாவை முதலில் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்க முடிகிறதா? அதிலுள்ள இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்கள் ஆபத்தானது இல்லை என்று யார் முடிவு செய்கிறார்கள்? அடுத்ததாக நடிகைகளின் தொப்புளையும் தொடையையும் காட்டும் ஞாயிறு தமிழ்ப்பத்திரிகைகள் இன்று பள்ளிகளில்கூட வாசிக்க வைக்கிறார்கள். இதை அவர்கள் பார்த்துப் பாதிப்படைய மாட்டார்கள் என எந்த மனநல மருத்துவர் உத்தரவு அளித்துள்ளார்? குடும்பத்துடன் அமர்ந்து செய்யக்கூடிய வேலையையும் இலக்கியத்தையும் ஒன்றாக்கி பார்க்க முனைவதே என்னைப் பொறுத்தவரையில் தவறுத்தான்.
 
ஒரு இலக்கிய விமர்சனம் எப்படி இருக்கவேண்டும் அல்லது இலக்கிய விமர்சனத்தின் நோக்கம் என்ன?
 
எந்தவொரு கலை விமர்சனமும் படைத்தவனின் சொந்த வாழ்வைப் புண்படுத்தாத வகையிலே அமைந்திருக்க வேண்டும். அவனுடைய வாழ்வாதாரத்தைப் பறிக்கும் அளவிற்கு அவன் ஆபத்தானவன் அல்ல. தன் மீது வைக்கப்படும் விமர்சனத்திற்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டவன். அவனுடைய தர்க்கத்தில் குழப்பங்கள் இருப்பின் அதனை விவாதத்தின் மூலம் முன்வைப்பதே ஆரோக்கியமான விமர்சனம், அவனைத் தண்டித்து அவமானப்படுத்தி குற்றவாளியாகக் காட்ட வேண்டும் எனும் வகையில் முயன்றால் அது விமர்சனமல்ல, பழிவாங்கல் ஆகும்.
 
 தமிழ் இலக்கியத்திற்கு என்று எல்லைகளை வகுத்துக் கொண்டு எழுத முடியுமா?
 
அப்படி இதற்கு முன் நினைத்திருந்தால் தமிழ் இலக்கியம் இத்தனை தூரம் உலகம் கவனிக்கும் அளவிற்கு வளர்ந்திருக்காது. தமிழில் இத்தனை நாவல்கள் படைப்புகள் தோன்றியிருக்காது. கலைக்கு ஏது வரையறை, அளவீடு, கணம், நீளம், பரப்பளவு? அது என்ன திடப்பொருளா?
 
சமுதாய / பண்பாட்டு விழுமியங்களை தன் எழுத்தில் ஒரு படைப்பாளி விமர்சிக்கவோ மாற்று கருத்தை முன்வைக்கவோ கூடாதா?
 
அதை விழுமியங்கள் என யார் தீர்மானித்தது? பரதம் உயர்ந்த கலை என்றால் நரிகுறவர்களின் தெருக்கூத்து தாழ்ந்த கலையா? ஏன் மேட்டுகுடி மக்கள் ஆர்வம் கொண்டு ஈடுபடும் கலைகளை பண்பாட்டு நிறுவனங்கள் வளர்த்தெடுத்து அதனைக் கொண்டாடுவதற்கு முனைகிறப்போது, தெருக்கூத்தும், பாவைக்கூத்தும் அழிந்து வருகின்றன? அப்படியென்றால் ஒரு சமூகத்தில் எது விழுமியங்களாக இதற்கு முன் தீர்மானிக்கப்பட்டுள்ளது? அதனை மறுபரீசீலனை செய்வதும் அதனை மீள்மதிப்பீடு செய்வதும் எப்படிக் குற்றமாகும்?
 
-கே.பாலமுருகன்
 
நன்றி வல்லினம்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்