பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 18, 2014

தயாஜியின் சிறுகதை நிற்கும் – கருணாகரன்.

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் சிறுகதை குறித்து கருணாகரன் எழுதிய கட்டுரை)

தயாஜியின் சிறுகதை – “கழிவழியும் பழிவாங்கும் வழிமுறையும்“ ஒரு நல்ல இலக்கியப்பிரதி. எந்த இலக்கியப்பிரதியும் விமர்சனத்துக்குள்ளாக்கப்படுவதுண்டு. அதன் கலைப்பெறுமானம், கருத்தியல் என்ற இரண்டு பிரதான விசயங்களில் பெரும்பாலான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. “கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் “ கருத்தியல்ரீதியாக விவாதிக்கப்படுகிறது அல்லது மறுக்கப்படுகிறது. இதுகூட ஒன்றும் புதியதல்ல. இலக்கியத்திலும் மனித வரலாற்றிலும் இத்தகைய வினைகளுக்கெதிரான மறுப்புகள் இருந்து வந்துள்ளன.
 
இன்று பன்முக வாசிப்பும் அறிவு விசாலிப்பும் தாராளமாக உருவாகிய பின்னும் பினோக்கிய பார்வைகள் இருப்பது கொஞ்சம் நெருடலாதே தவிர, புதியதல்ல. தமிழ்ச்சமூகத்தின் மனதில் நிலைப்படுத்தப்பட்டிருக்கும் புனிதப்பிம்பங்களின் மீது தயாஜின் கதை உடைப்புகளை நிகழ்த்துகிறது. புனித பிம்பங்களை தமது நம்பிக்கைகளாகக் கொண்டிருப்போருக்கு இது பேரதிர்ச்சியை அளிக்கிறது. ஆனால், இலக்கியத்திலும் சமூகத்திலும் புனிதங்களுக்கெதிரான நிகழ்ச்சிகள் தாராளமாக உண்டு. கடவுளைக் காமுறுவதிலிருந்து இந்தக் கட்டுடைப்பைக் காணலாம்.
 
எம்.வி. வெங்கட்ராம் தன்னுடைய சிறுகதை ஒன்றில் தாய் மிகக் கொடுமைக்காரியாகச் சித்திரிக்கிறார். இந்தக் கதை வந்த காலத்தில் இப்பொழுது தயாஜி எதிர்கொள்ளும் நெருக்கடியைப்போல, கண்டனங்களைப் போல எம்.வி. வியும் நெருக்கடிகளுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார். இதுதான் கடந்த சில ஆண்டுகளுக்க முன்னர் ஓவியர் ஹசேய்னுக்கு நடந்தது. தஸ்லிமா நஸ்ரீன். சல்மான் ருஷ்டி போன்றவர்களுக்கு நிகழ்ந்ததும் இதுதான். அந்தந்தச் சமூகம் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கும் அது கட்டமைத்திருக்கும் புனிதத்துக்கும் எதிராக கலைப்பைச் செய்யும்போதும் கேள்விகளை உருவாக்கும்போதும் அவற்றின் நம்பிக்கையாளர்கள் கொதிப்புறுகிறார்கள். நம் சமூகத்தில் கடவுளும் மத நம்பிக்கைகளும் மட்டுமல்ல, ஆசிரியர்கள், மதகுருக்கள், தாய், தந்தையர் போன்றவர்களும் மதிப்புக்குரியவர்களே. சமூக யதார்த்தத்தில் எத்தனை ஆசிரியர்கள் மன்னிக்கவே முடியாத தவறுகளைச் செய்கிறார்கள். தங்களில் மதிப்பும் பற்றும் வைத்திருக்கும் மாணவர்களையே பாலியல் ரீதியாக மீறல் செய்திருக்கும் சம்பவங்கள் பலதுண்டு. ஒருவருக்குத் தாயாக இருப்பவர் இன்னொருவரின் வைப்பாட்டியாக இருப்பதுண்டு. நமக்கு அக்காவாக இருப்பவள், இன்னொருத்தரால் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தப்படுவளாக இருக்கிறாள். தந்தையரால் வன்புணர்வுக்கும் அறியாப்பருவப்புணர்வுக்கும் உள்ளாக்கப்படும் சிறுமிகளின் கதைகள் இன்னும் நீள்கின்றன.
 
இப்படி புனிதப் பாத்திரங்களின் நிஜச் சீரழிவுகள் ஏராளமுண்டு. எனவே எது புனிதம்? என்ற யதார்த்தமான கேள்வியே எப்பொழுதும் ஒவ்வொன்றின் மீதும் எழுப்பப்படுகிறது. எல்லாப் புனிதங்களையும் உருவாக்கிய மனிதர்களாலேயே புனித மீறல்களும் நிகழ்கின்றன. இவற்றைத் தன்பார்வையில் தயாஜி முன்வைக்கிறார். ஆனால், என்னதான் யதார்த்த நிலைமைகள் இருந்தாலும் இந்த மாதிரியான புனிதக்கட்டுடைப்புகளை நிகழ்த்துவது எளியகாரியமில்லை. அதுதான் இங்கே தயாஜிக்கும் அவருடைய கதைக்கும் வல்லினத்திற்கும் நடந்திருக்கிறது. ஆனால், அதை மீறி தயாஜியின் கதை நிற்கும். இந்தக் கதை கலாச்சார ரீதியிலும் உளவியல் ரீதியிலும் முக்கியமான ஒன்று. அந்த வகையில் தமிழில் எழுதப்பட்ட சிறந்த கதைகளில் ஒன்றாக உள்ளது – அது சுட்ட முனையும் வேறுபட்டதன்மைகைளினூடாக.
 
 
-கருணாகரன்
 
நன்றி வல்லினம்

புனிதத்தை உடைக்கலாமா..?

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் என்ற சிறுகதையினை குறித்து ம.நவீன் எழுதிய கட்டுரை)
 
புனிதத்தை உடைக்கலாமா?
 
 
கருத்து ரீதியாக வாதிடுதல் என்பது என்ன? உங்களிடம் ஒரு கருத்து உண்டு. அதை முன்வைக்கிறீர்கள். அதற்கான எல்லா உரிமையும் உங்களுக்கு உண்டு. ஆனால் அந்தக் கருத்து நீங்கள் வாதிடும் சூழலில் இதற்கு முன் அக்கருத்து எவ்வாறான விவாதங்களுக்கு உட்பட்டுள்ளது எனும் முன்னறிவு நமக்கு அவசியமாகிறது. அந்த நகர்வின் சாதக பாதகத்தில் நின்றே நாம் அறிவு ரீதியான விவாதத்தைத் தொடர வேண்டியுள்ளது. அடுத்து, உங்கள் கருத்துக்கு வலு சேர்க்க எவ்வாறான ஆராய்ச்சி, உளவியல், அறிவியல், வரலாறு சார்ந்த ஆதாரங்களை இணைக்கப்போகிறீர்கள் என்பது முக்கியமாகிறது. அவ்வாறு எதுவும் இல்லாமல் அது உங்கள் கருத்தாக மட்டுமே இருக்கும் போது அதை நீங்கள் தாராளமாகச் சொல்லலாம். ஆனால் அறிவு தளத்தில் அதற்கான இடம் இல்லை. அதை பொருட்படுத்தி விவாதிக்கவும் வேண்டியதில்லை.
 
தயாஜியின் சிறுகதையில் நடந்ததும் இதுதான். ஆளாளுக்கு கருத்து கூறுகிறேன் என தத்தம் முக நூலில் தங்கள் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்த்தனர். கொஞ்சம் கூட இலக்கியப் புரிதல் இல்லாமல் விமர்சனம் செய்கிறேன் என மொண்ணையான கருத்துகளை வெளியிட்டனர். இதனால் ஆகப்போவது ஒன்றும் இல்லை. அதிகபட்சம் ஒருவாரத்துக்குப் பிறகு அவையெல்லாம் வெறும் குப்பைகளாக மட்டுமே குவிந்திருக்கும். வருங்கால குப்பைகளை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்ய முடியும். அதனால் தொடக்கத்திலேயே நிராகரித்துவிட வேண்டியதுதான். இதில் பெரிய நகைச்சுவை, நேருக்கு நேர் நின்று வாதாட முடியாதவர்கள், வாதாடினால் அவர்களின் கல்வி / இலக்கியப் பின்புலம் அனைத்தும் நார் நாராகக் கிழித்து வீசி அறிவையே சந்தேகிக்கும் நிலைக்கு வர நேரிடும் என பயந்து ‘லைக்’ போடுவதும் கோழைத்தனமாக குத்தல் பேசுவதும் என தங்கள் போலி பிம்பத்தைத் தக்க வைத்துக்கொள்கின்றனர். பயந்தவர்களை நோகடிப்பது நமக்கு பழக்கம் இல்லை என்ற படியால் அவர்களை மன்னித்துவிடுவோம்.
 
தயாஜியின் ‘கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ என்ற சிறுகதையில் என்னதான் சிக்கல் என முதலில் பார்ப்போம். கதையின் முதல் பகுதியும் இறுதி பகுதியும்தான் அதிக விமர்சனத்துக்கு!? உள்ளாகியுள்ளது. முதல் பகுதியில் ஒரு சிறுவன் (வயது குறிப்பிடப்படாததால் அவன் மொழி மூலம் சிறுவன் என எடுத்துக்கொள்ளலாம்) தன் தாயார் குளிப்பதைப் பார்க்க நினைக்கிறான். குளியலறையில் இருக்கும் தாயை கழிவறையில் இருந்தபடி நாற்காலி போட்டு எக்கிப்பார்க்க நினைக்கையில் அவன் கண்ணில் தூசு விழுந்துவிடுகிறான். கண்களைத் தேய்தபடி போய்விடுகிறான். வெளியே வந்த அம்மா, கண் சிவந்திருக்கும் மகனைக் கண்டு “என்னடா கண்ணு” எனக் கலங்குகிறாள். கண்களை அவ்வாறு தேய்க்கக்கூடாது என செல்லமாகத் திட்டி செல்கிறாள்.
 
ஒருவேளை இந்த இடத்தில் அந்தச் சிறுவன் தன் தாயின் காலில் விழுந்து “அம்மா… என்னை மன்னித்துவிடு” எனக் கதறியிருந்தால் அனைவருக்கும் கதைப் பிடித்திருக்கும். ஆனால் தயாஜின் கதையில் வரும் சிறுவன் அதைச் செய்யவில்லை. ஒரே நேரத்தில் தன்னை நிர்வாணமாகப் பார்க்க முயன்ற மகனின் காமத்தை அறியாத தாயின் அன்பையும், தப்பித்தப் பின் ஏற்படும் மகனின் பயத்தையும் தயாஜி காட்டியுள்ளார். கதையின் வடிவமைதியில் பல இடங்களில் எனக்கு விமர்சனம் இருந்தாலும் இந்த இடத்தில் தயாஜி சரியாகவே எழுதியுள்ளதாகத் தோன்றுகிறது.
இப்பகுதியைப் படித்தப் பலரும் இது சமுதாயத்தைக் கெடுக்கும் கதை என புலம்பினர். இதுவரை இல்லாத ஓர் விடயத்தை தயாஜி சொல்லிவிட்டது போல கோபப்பட்டனர். ஹீரோவாக ஒரு சந்தர்ப்பம் என ரஜினி வசனமெல்லாம் பேசினர். ஆனால் அறிவு தளத்தில் நின்று ஆராய யாருக்கும் பொறுமையோ தேடலோ இல்லாமல் இருபதுதான் வருத்தம்.
 
ஒடிபெல் சிக்கல் (Oedipal Complex)
பல்கலைக்கழகத்தில் ஓவியத்தை ஒரு பாடமாக பயிலுகையில் சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud) குறித்து அறிய நேர்ந்தது. படைப்பாளர்களுக்குச் சிக்மண்ட் பிராய்டின் ‘உளவியல்’ அணுகுமுறைகளின் தேவையை அறிந்தபோது ஓரளவு அவரைத் தேடி வாசித்தேன். தமிழில் ஒரு பேராசிரியரின் முதுகலைப் பட்டத்துக்காக எழுதிய ‘சிக்மண்ட் பிராய்ட் ‘ குறித்த ஆய்வு நூல் மட்டுமே கிடைத்தது. அதுவும் கல்வித்துறை ரீதியானது. ஆங்கிலத்தில் நிறைய கிடைக்கின்றன.
 
Wikipediaவில் ‘ஒரு ஆஸ்திரிய உளநோய் மருத்துவர். உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவர். உள்மனம் (unconscious mind) பற்றிய இவரது கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்புப் பொறிமுறை, உளப்பிணிகளை, பிணியாளருடன், உளப்பகுப்பாய்வாளர் பேசிக் குணப்படுத்துவதற்காக உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைச் செயல்முறைகளை உருவாக்கியமை என்பவற்றின் மூலம் பிராய்ட் பெரும் பெயர் பெற்றார். பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என வரையறுத்தமை, இவரது சிகிச்சை நுட்பங்கள், உணர்வு மாற்றீட்டுக் கோட்பாடு (theory of transference), உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்குதல் போன்றவை தொடர்பிலும் பிராய்ட் பெரிதும் அறியப்பட்டவர்.’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிக்மண்ட் பிராய்ட் முன்னிறுத்தும் கோட்பாடுகளில் ஒன்று Oedipal Complex. பிராட்டின் கோட்பாட்டின்படி, தனது தந்தையின் இடத்தில் தன்னை வைக்க விரும்பும் சிறுவன் தாயை உடல் மூலமாகவும் உடைமையாக்க விரும்புகிறான். தாயின் அன்புக்குப் போட்டியாக தந்தையைக் கருதுகிறான். உளவியல் – பாலினம் சார்ந்த வளர்ச்சி பிள்ளையின் மூன்று முதல் ஐந்து வயதுக்கு இடையே ஏற்படுகிறது. இந்தப் பருவம் பாலினம் சார்ந்த அடையாளம் உருவாதற்கான முக்கிய காலகட்டமாகத் திகழ்கிறது. இந்தக் காலகட்டத்தில்தான் ஒடிபெல் சிக்கல் ஒரு குழந்தைக்கு ஏற்படுகிறது. ஒடிபெல் சிக்கல் என்பது உள்மனதுக்குள் மறைந்திருக்கும் உணர்வுககளையும் எண்ணங்களையும் சார்ந்த உளப் பகுப்பாய்வுக் கோட்பாடு ஆகும் . உளவியல் துறையில் மிக முக்கியமானவராகக் கருதப்படும் இவரின் இந்தக் கூற்று பலருக்கும் அதிருப்தியைக் கொடுக்கலாம். ஆனால் பிராய்டின் இந்த ஆய்வை இன்று பலரும் ஒப்புக்கொண்டே உள்ளனர். அதை மையப்படுத்து ஏராளமான ஆய்வு நூல்களும் வந்த வண்ணம்தான் உள்ளன.
 
நாம் தாய் வழி சமூகம்
 
சரி இதே விடயத்தைக் கொஞ்சம் வரலாறு சார்ந்தும் பார்க்கலாம். நாம் தாய் வழி சமூகத்தினர் என்பது பலரும் அறிந்த விடயம். மனித நாகரீகம் தொடங்கிய காலத்தில் பெண்கள்தான் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர் என்கின்றனர் ஆய்வாளர்கள். தங்கள் குழந்தைகளைப் பாதுக்காக்க பெண்களே வேட்டையாடுவதில் முதன்மை வகித்தனர். இதை தாய் வழி சமூகம் என்கின்றனர். தாய் வழி சமூகத்தில் பெண்ணே மையம். அவளுக்கு பல ஆண்கள் துணை இருப்பர். தொன்மையான எல்லா கலாச்சாரங்களிலும் ஆரம்பகாலத்தில் தாய் தெய்வங்களே இருந்துள்ளது மற்றுமொரு உதாரணம். இந்த வரலாற்று உண்மையை ஒரு புனைவின் அடிப்படையில் சொல்லிச்செல்லும் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை ராகுல் சாங்கிருத்யாயன் என்பவர் எழுதியுள்ளார். தமிழில் கண .முத்தையா மொழிப்பெயர்த்துள்ளார். அதில் தாய் வழி சமூகத்தின் இயக்கம் குறித்து ஒரு காட்சி வரும்.
ஒரு தாய் (தலைமை தாங்குபவள்) குழந்தையை ஈன்றெடுப்பாள். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் . தான் ஈன்ற மகன்களின் வலுவான ஒருவனை தேர்ந்தெடுத்து அவனுடன் தாய் உறவு கொள்வாள். அவர்களுக்கும் குழந்தைகள் பிறக்கும். இது பல்வேறு நிலைகளில் தொடரும். பல்வேறு ஆய்வாளர்களாலும் முக்கியமாகக் கருதப்படும் இந்த நூலை ஆபாசக் குப்பை என தூக்கிப் போட்டுவிடலாமா? வரலாற்றில் ஒரு காலத்தில் இயல்பாக இருந்த விடயம் மற்றொரு சந்தர்ப்பத்தில் அபத்தமாகவும் அருவருப்பானதாகவும் ஆகிவிடுகிறது. இந்த உணர்வை ஏற்படுத்துவது எது? இது மனிதனின் ஆதி உணர்வா? இல்லை ! இது தந்தை வழி சமூகம் ஆனப்பிறகு ஏற்பட்ட பழக்கத்தில் விளைவு மட்டுமே. உறவுகளின் புனிதம் என்பது காலங்களுக்கு ஏற்ப மாறக்கூடியது.
 
உறவு முறைகள்
அவ்வளவு ஏன்? நமது தென்கிழக்காசியாவிலேயே உறவுகள் குறித்த மாற்று முறைமைகள் உள்ளனவே. தாய்லாந்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கூட சொத்துகளைப் பாதுகாக்க இரத்த உறவுள்ள சகோதரனுக்கும் சகோதரிக்கும் திருமணம் செய்துவைக்கும் முறை இருந்தது. நமது நாட்டில் மலாய்க்காரர்கள் சகோதர உறவு முறை கொண்டவர்களைத் திருமணம் செய்துக்கொள்ளவில்லையா? ஆக! காதல், காமம், திருமணம் என்பதெல்லாம் காலத்துக்கு ஏற்பவும் இனங்களுக்கு ஏற்பவும் பழக்கங்களுக்கு ஏற்பவும் மாறுபடுகிறது.
 
தமிழ் இலக்கியத்தில் தாய்மை
சரி, அப்படியென்ன தயாஜி அப்படியென்ன தமிழ் இலக்கியத்தில் இல்லாததைப் புதிதாகக் கூறிவிட்டார் என ஆராய்ந்தாலும் சொல்லும் அளவுக்கும் விடயம் புதிதில்லை. ஜெயகாந்தனின் ‘ரிஷிமூலம்’ எனும் பாலியல் சிக்கலை மையமாக வைத்த படைப்பு அக்காலத்திலேயே பரபரப்பாகப் பேசப்பட்டது. தாய் மீதான பாலியல் சிக்கலை எழுதி 1966 வாக்கில் வெளிவந்த இந்நாவல் எதிர்ப்புகளைச் சந்தித்தது. தாய் மீதான பாலியல் எண்ணங்களால் ஒருவன் அலைக் கழிக்கப்படுகின்றான் என்பதை விளக்குகிறது இவ்வுளவியல் நாவல். அதே போல இன்று தமிழில் மிக முக்கிய நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் ஷோபா சக்தியின் ‘ம்’ நாவலும் மகள் – அப்பாவுக்கிடையிலான காதலை, காமத்தைப் பேசுகிறது. மிக அண்மையில் அமைப்பியலில் மிக முன்னோடியாகவும் தமிழின் மிக முக்கிய விமர்சகராகவும் கருதப்படும் தமிழவன் நடத்தும் சிற்றிதழில் ஒரு சிறுகதை இவ்வாறு இருக்கும். தனது தாய் நடித்த நீலப்படத்தைத் தற்செயலாகப் பார்த்து ஓர் இளைஞனுக்கு ஏற்படும் வெறுப்பு பின்னர் காமமாக மாறும்.
முதலில் இது போன்ற சம்பவங்கள் இலக்கியப் பிரதிகள் வெளிவரக் காரணம் என்ன? அவை இந்தச் சமூகத்தில் இருக்கிறது என்பதுதான் முதல் காரணம். நமது நாட்டில்கூட விரும்பத்துடனோ வல்லுறவாகவோ இது போன்ற சம்பவங்கள் நடப்பது பதிவாகியுள்ளன. சில நீதிமன்றம் வரை சென்றுள்ளன. இலக்கியம் ஒரு சமூக நிகழ்வின் ஆழ்மனதைப் படம்பிடித்துக்காட்டுகிறது. மாறாக அது ஒரு தினசரி நாளிதழின் வேலையைச் செய்யவில்லை. தினசரிகள் பெரும்பாலான மக்கள் விரும்பும் தகவல்களை பிரசுரிக்கின்றன. இலக்கியம் யாரின் விருப்பம் பொருட்டும் இயங்குவதில்லை. தினசரிகளுக்கு எதை வெளியிட வேண்டும் / கூடாது என்ற விருப்பு வெறுப்புகள் உண்டு. இலக்கியத்துக்கு அது கிடையாது. இலக்கியத்தின் வேலை சமூகத்தை தூக்கி நிறுத்துவது என நம்பிக்கொண்டிருப்பவர்கள் உலக இலக்கியப் போக்கை கவனிக்கவில்லை எனப் பரிதாபப்படுவதை தவிர வேறு வழியில்லை.
 
உளவியல் என்ன செய்கிறதோ அதையே இலக்கியம் தன் வழியில் செய்கிறது. பிராய்ட் சொல்லும் போது ஏற்றுக்கொள்ளும் உலகம் ஓர் இலக்கியவாதி அவ்வாய்வை தனது புனைவில் சுதந்திரம் வழி செய்யும் போது ஏற்பதில்லை என்பதே வருத்தம். ஜெயகாந்தன் தொடங்கி இன்றைய இளம் இலக்கியவாதிவரை பேச முயலும் உளவியலை ஓர் மலேசிய இளைஞன் பேசினால் குற்றமாகிவிடுகிறது.
 
புராணமும் இதிகாசமும்
 
இந்து மத புராணக் கதைகளிலும் இதிகாசங்களிலும் எல்லயற்ற மனித உறவுமுறைகள் பற்றி எக்கச்சக்கமாக எழுதப்பட்டுள்ளன. சொல்லப்போனால் மகாபாரத்தில் இல்லாத கருவோ, கற்பனையோ, கதையோ இல்லை என்றே சொல்லலாம். இன்றைக்குப் புதிய சிந்தனைகளாகவும் போக்குகளாகவும் கொள்ளப்படும் எல்லாமே பாரதக் கதைகளில் உள்ளன. ஆண் பெண்ணாவது, பெண் ஆணாவது, திருமணத்துக்கு முன்பே குழந்தை பெறுவது, பிற ஆண்கள் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொள்வது, பெண் – ஆண் இருபாலருமே பல தார மணம் புரிவது என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், அதைவிட்டு நம் ஒழுக்க சீலர்கள் வருவதில்லை. மகாபாரதத்தை ஒழுக்கக் கேடான நூல் என எரிக்கவும் தயாராக இல்லை. மாறாக இந்து மதத்துக்கு ஒரு அவப்பெயரென்றால் கொதித்து எழுகிறார்கள். இது என்ன நியாயம்?
 
ரிக்வேதத்தில் அண்ணன் தங்கையரான யமன், யமி ஆகியோரைப் பற்றிய கதை ஒன்று உள்ளது. அந்தக் கதையின் படி யமி தன் அண்ணன் யமனைத் தன்னுடன் வருமாறு அழைக்கின்றாள். இதற்கு மறுக்கும் யமன்மீது அவள் கோபம் கொள்கிறாள். .. அக்காலத்தில் தந்தை மகளை மணப்பதும் வழக்கமாக இருந்துள்ளது. வசிட்டர் தன் மகள் சத்ரூபை பருவமெய்திய போது அவளை மணந்தார். மனு தன் மகள் இளையை மணந்தார். ஜானு தன் மகள் ஜானவியை மணந்தார். சூரியன் தன் மகள் உஷையை மணந்தான். …. தஹா பிரசெத்னியும் அவனுடைய மகன் சோமனும் சோமனின் மகள் மரீஷையைக் கூடினர். … தஷன் தம் மகளைத் தனது தந்தை பிரமனுக்கு மணம் முடித்தான்….” (ரிக்வேதம், மகாபாரதம் போன்றவற்றிலிருந்து)
 
உலக இலக்கியத்தில்
 
Haruki Murakami என்ற உலகப் பிரபலமான ஜப்பானிய எழுத்தாளர் Kafka on the Shore என்ற நாவலில் ஒரு சிறுவன் தனது தாயையும் சகோதரியையும் புணர்வது பற்றி எழுதியிருப்பார். அந்த நாவல் மில்லியன் கணக்கான வாசகர்களால் வாசிக்கப்பட்டது. ஏராளமான விருதுகளை வென்றது. 2005ல் இந்நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு நியூ யார்க் டைம்ஸிஸ் தலைசிறந்த 10 நூல்களில் ஒன்றாக இடம்பெற்றது. அப்படியானால், வாசித்தவர்கள் அனைவரும் ஒழுக்கக் கேடானவர்களா? விருது கொடுத்த அமைப்புகள் ஒழுங்கை நாசப்படுத்த நினைக்கின்றதா?
 
கடவுளும் காதலும்
 
புணர்ச்சியை வெளிப்படையாக காட்சிப்படுத்தும் சிற்பங்கள் கஜுராஹோ,கோனார்க் போன்ற இந்து கோயில்களில் காணக் கிடைக்கின்றன. அது மத்திய பிரதேசத்தில்தானே என நீங்கள் சொல்லலாம். ஆனால், இது மிக முக்கியச் சுற்றுலா தளமாகவும் இந்தியாவில் ஏழு அதிசயங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. கடவுளை வணங்கச் செல்லும் கோயிலுக்கு வெளிப்புறம் இப்படிப் பல சிற்பங்கள் இருக்கும் போது அதைப் பார்க்கும் இளைஞர்களின் மனம் கெட்டுப்போகாதா என ஏன் யாரும் கேட்பதில்லை. சிற்பத்தில் இருந்தால் அது கலை , எழுத்தில் இருந்தால் அது கொலை என்கிறார்கள்.
நமக்குத் தெரிந்து எல்லா கோயில்களிலும் பல பெண் சிலைகள் அரை நிர்வாணத்தோடுதான் நிர்க்கின்றன. ஏன் அவை ஆபாசம் என்று நாம் யாருமே போர் கொடி பிடிக்கவில்லை. மாறாக மதத்தைப் பற்றி பேசினால் கோபம் மட்டும் பொத்துக்கொண்டு வருகிறது. உடனே அவற்றுக்கு அறிவியல் காரணங்கள் கூற தொடங்கிவிடுகிறோம்.
 
இப்படி நம் முன் கோயில்களில் இருக்கும் அரை நிர்வாணச் சிலைகளைப் பார்த்து குழந்தைகளுக்கு ஒரு திகைப்பு வராது என நம்மால் உறுதி கூற முடியுமா? வீட்டில் எதை மறைக்கிறோமோ அதை கோயில்களில் தடையில்லாமல் காட்டுவது நமக்கே முரண்நகையாக இல்லையா? அப்படியானால் நாம் எதை மறைத்து எதை காட்ட நினைக்கிறோம். ஏன் இந்த நடிப்பு? யாருக்காக இந்த வேடம் ?
கடவுள் சிற்பங்களுக்கு நமது கோயில் ஆடை அணிவிக்காமல் கலை என வைத்திருப்பது சரியென்றால், அதைக் கண்டு முதிர்ச்சியடையாத மனம் காமம் கொள்வதும் சரிதான். அவளைக் காதலிப்பதும் சரிதான். ஒருவேளை தயாஜி தன் கதையில் அம்மனுக்குச் சாற்றிய சேலையை நீக்கிப்பார்த்து காமம் கொண்டான் எனச் சொல்லியிருந்தால் மதவாதிகள் கோபப்படலாம். இங்கு அப்படி ஒன்றுமே இல்லை. திறந்த மார்புடன் இருக்கும் காளியின் கவர்ச்சி முதிரா மனம் கொண்ட ஒரு இளைஞனை காமத்தில் குழப்புகிறது.
 
அதோடு, கடவுளின் உடலை வர்ணிப்பது அவ்வளவு பெரிய குற்றமா என்ன? அப்படியானால் அந்தக் குற்றத்தை சௌந்தர லஹரியில் ஆதிசங்கரரும் செய்துள்ளார்.
‘மேகலை பொங்க மதாசல கும்பமெ னாமுலை கண்டு இடை சோரா ‘ என்கிறார்.
பொருள் : யானையின் மத்தகத்தைப் போன்ற பெரிய தனங்களைக் (மார்பு)கொண்டு சற்று வணங்கிய வடிவுடையவள்; மெலிந்த இடையையுடையவள்.
காம சக்தியை வசமாக்கிக்கொள்ள ஆதி சங்கரர் அம்மையை வணங்கச் சொல்லும் பாடலெல்லாம் உண்டு. அதற்கான மந்திரங்களும் உண்டு. சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும். கடவுளின் மேல் காமம் கொள்ளுதல் தமிழ் இலக்கியத்திலும் புதிதில்லை. ஆண்டாளின் பாடல்களை எடுத்துக்கொள்ளலாம்.
அதாவது ஆண்டால் கண்ணனைப் பார்த்து பாடும் பாடல்கள்.
 
‘அவரைப் பிராயம் தொடங்கி
ஆதரித் தெழுந்த என் தடமுலைகள்
துவரை பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதேன்…’ என்கிறாள். பெரிய மார்பகங்கள் அவனுக்கே என உறுதிபடக் கூறுகிறாள் ஆண்டாள். அப்படியானால், இது ஆபாசம் இல்லையா? மேலும் ஒரு வரியைப் பார்க்கலாம்,
‘சாயுடைவயிறும் என் தடமுலையும்
திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
தரணியில் தலை புகழ் தரக்கற்றியே’
ஆண்டாளுக்குதான் என்ன ஆசை . மேலேயும் கீழேயும் அவன் தடவிக் கொடுக்க வேண்டுமாம்!
உடனே நம்ம ஒழுக்க வாதிகள்..”அட..அவுய்ங்க பக்தியால தடவ சொல்றாங்கப்பா” என இழுக்கலாம். அப்படியானால் இன்னும் கொஞ்சம் பார்க்கலாம்.
‘பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப்
புணர்வதோர் ஆசையினால்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து
ஆவியை ஆகுலம் செய்யும்…
என் அகத்து இளம் கொங்கை விரும்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகப் புல்குவதற்கு என்புரிவுடமை செய்யுமினோ’
 
கடவுளுடன் உடல் உறவு கொள்ள வேண்டுமாம் ஆண்டாளுக்கு. அந்த ஆசை மனதில் மேலோங்கி வளர்ந்துவிட்டதால், மார்பகம் வருந்துகிறதாம், குதூகலிக்கிறதாம், உயிரை எடுக்கிறதாம், ஆகவே எதையாவது செய்து நாள்தோறும் நாராயணனைப் புணர்வதற்கு உத்தரவாதம் கொடுங்களேன் என்று ஆண்டாள் கேட்கிறாள்.
 
தயாஜி, இந்த அளவுக்கெல்லாம் போகவில்லை. பெண் கவி ஆண் கடவுளைப் புணர நினைப்பதை எட்டாம் நூற்றாண்டிலிருந்து பொறுத்துக்கொள்ளும் நாம், ஒரு நவீன எழுத்தாளன் காளியின் மீது காமம் கொள்வதைப் பொறுத்துக்கொள்ள மறுக்கிறோம். துடிக்கிறோம். இது நல்ல நடிப்பு இல்லையா? இப்படித்தானே தான் அறச்சீற்றம் உள்ளவன் என காட்டிக்கொள்ள வசதியாகும். ஆக, ஏற்கனவே உள்ள ஆபசங்களைப் பொறுத்துக்கொண்டு தொழுகிறோம். ஏற்கனவே உள்ள ஆபசங்களை பக்தி என பாடுகிறோம். ஆனால் ஒரு இளம் எழுத்தாளன் எழுதினால் கலாச்சாரம் கெட்டுவிட்டது இல்லையா?
முடிவாக…
 
நான் தயாஜி எழுதியது மலேசியாவில் முக்கியமாக சிறுகதை எனச் சொல்ல வரவில்லை தோழர். கதையில் சில பலவீனங்கள் உண்டு. சில இடங்களில் வடிவமைதி தேவைப்படுகிறது. சில இடங்களில் நாசுக்கான சொல்முறை அவசியமாகிறது. ஆனால், இங்கு அதுவல்ல பிரச்னை. தயாஜி புனைவின் மூலம் ஆராய அல்லது உடைத்துப் பார்க்க நினைக்கும் சில சமூக புனிதங்களைத் தொடாதே எனக்கூற யாருக்கும் உரிமையில்லை. அது குறித்து பேசினால் நான் விவாதிக்கவே செய்வேன். காரணம் அது காலாகாலமாக உலகம் முழுதும் உள்ள பல படைப்பாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டே வந்துள்ளது. ஏன் அது குறித்தெல்லாம் நம் ஒழுக்கவாதிகள் வாய் திறக்கவில்லை. காரணம் அவர்கள் எதையுமே படிப்பதில்லை. இதை மட்டுமல்ல எதையுமே வாசிப்பதில்லை. ஆனால் பெரிய ஆராய்ச்சி மன்னர்கள் போல பிதற்றுவார்கள். ஒரு அடிப்படையான கேள்விக்கு ஓடி ஒளிவார்கள். அப்புறம் வேறு எவனாவது தைரியசாலி இருக்கிறானா எனப்பார்த்து, அவன் பின் நின்று நாக்கை நீட்டுவார்கள். இன்னும் நான் குறிப்பிட ஏராளமாக இலக்கியங்களும் ஆய்வுகளும் தமிழில் உண்டு.
 
மலேசியாவில் இது போன்ற சில முயற்சிகள் தேவை என்றே நான் நினைக்கிறேன். அது முதிராமல் இருந்தாலும் ஒரு தொடக்கத்துக்காகவாவது இது போன்ற இலக்கிய முயற்சிகள் நிச்சயம் செய்யப்பட வேண்டும்.
 
- ம.நவீன்
 
நன்றி வல்லினம்

ஜனவரி 01, 2014

கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்

( இக்கதை பொது வாசிப்பிற்கு ஏற்றதல்ல; சில உண்மை சம்பவங்களையும் சிலரின் அனுவங்களையும் இணைத்து உளவியல் அடிப்படையில்  எழுதப்பட்ட கதை. 
மலேசியாவில் மிகுந்த சர்ச்சையினை கிளப்பிய கதை என்றும் சொல்லலாம். இக்கதை குறித்து எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரையிகளையும் இணைப்பதில் மகிழ்ச்சி.  http://vallinam.com.my/version2/?m=201401  இங்கும் இக்கதத குறித்த கட்டுரைகளை வாசிக்கலாம். நன்றி வல்லினம்.
வாசித்தவர்களும் தத்தம் கருத்துகளை பகிரலாம் அல்லது tayag17@gmail.com   -க்கு மின்னஞ்சல் அனுப்பலாம், )


கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்

    ஜீன்ஸிலேயே சிறுநீர் கழித்திருக்கிறேன். அதன் ஈரம்தான் என்னை எழுப்பியிருக்கவேண்டும். இல்லை நான் எழுந்திருக்கவில்லை. முனகுகிறேன். என்னால் அசைய முடியவில்லை. கண்களைக் கட்டியிருக்கிறார்கள். கை கால்களும் கட்டியிருக்கிறது. என்ன இது இப்படி ஒரு வாடை. குமட்டுகிறது. இது நிச்சயம் கழிவறையாகத்தான் இருக்கவேண்டும். என் முகமும் கழிவறைக்குழியில் தொங்கிக்கொண்டிருக்க வேண்டும். என் குமட்டலின் போது வெளிவந்த காற்று  துர்வாடையாக  என் முகத்தில் அறைந்தது. அவ்வளவு அருகில் என் முக இருக்கிறது.

என்ன நடந்தது. யார் இப்படி செய்தார்கள். கடைசியாக நான் எங்கிருந்தேன். எதற்காக நான். இது உண்மையிலேயே கழிவறைதானா..?

பேச்சு சத்தம் கேட்கிறது. இவர்கள் என்ன மொழி பேசுகிறார்கள் புரியவில்லையே. சிரிக்கிறார்கள். என்னைத்தான் பார்த்து பேசுகிறார்கள். அப்படித்தான் நினைக்கிறேன். இவர்கள் மனிதர்கள்தானா..? நான் உதவிக்கு  சத்தமிட வேண்டும். ம்...ம்...ம்..ம்ம்ம். வாய்க்கு நடுவில் துணி கட்டப்பட்டிருக்கிறது. முனக முடிகிறதே தவிர கதற முடியவில்லை.

புரிந்துவிட்டது. இது கழிவறையென்றால், நான்  பழிவாங்கப்படுகிறேன். ஆமாம். இது பழிவாங்கள்தான். அதற்கான சரியான காரணம் என்னவென்று நான் சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும். அப்போதுதான் இந்த பழிவாங்களில் இருந்து நான் வெளிவர முடியும். நான் தப்பிக்கவேண்டும்.

யோசிக்கவேண்டும். எதற்காக இந்த பழிவாங்கள்.

 அம்மா முதலில் நான் உன்னிடம்தான் மன்னிப்புக் கேட்க வேண்டும். என்னை மன்னித்துவிடு.  நாள் நினைவில்லாத அன்று நீயும் நானும் மட்டும்தான் வீட்டில் இருந்தோம். மழையாக இருந்தது. என்னால் டி.வி பார்க்க முடியவில்லை. ஹாலில் தனியே திறக்கப்படாத டி.வியை பார்த்துக் கொண்டிருந்தேன். நீ குளிக்கச்சென்றாய். அந்த டி.வியின் கறுப்பு திரையில் முதல் நாள் பார்த்திருந்த ப்ளூ பிலிம் எனக்கு தெரியத்தொடங்கியது.

கண்ணாடியணிந்திருந்த பெண் ஒருத்தி, அவளது வாயில் லோலிபப்பை வைத்துக் கொண்டு நடந்து வந்துக் கொண்டிருக்கிறாள். அவளை பின்னால் இருந்து பார்க்கிறேன். ரோஸ் நிற உள்ளாடையை அணிந்திருக்கிறார். அந்த உள்ளாடை  ; கயிராடையாக இருந்தது. இடது பக்கமும் வலது பக்கம் ரிப்பன் போல கட்டப்பட்டிருக்கிறது. எனக்கு தெரிந்திருந்தது; வலது கையால் வலது புற ரிப்பனையும், இடது கையால் இடது புற ரிப்பனையும் நொடிப்பொழுதில் இழுத்து அவிழ்க்கலாம்.

காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்கிறது. பிட்டத்தை அப்படியும் இப்படியும் அசைத்தவாறு அவள் கதவுக்கு செல்கிறாள். கதவை திறக்கிறாள். கோட்டு சூட்டு அணிந்த ஒருவன் அவளுக்கு பூங்கொத்தை கொடுக்கிறான். அவள் அவனை உள்ளே இழுத்து இறுக்கி அணைக்கிறாள். எப்படியோ கதவு சாத்தப்படுகிறது.

அவள் அவனிடம் என்னமோ சொல்கிறாள். அவன் சில நிமிடம் அப்படியே ஸ்தம்பித்து எதையோ யோசிக்கிறான். பின், என்னை திரும்பிப் பார்க்கிறான். எழுகிறான் . நேரே எழுந்து வந்து என்னை நோக்கி கையசைக்கிறான். டி.வி திரை மீண்டும் கறுப்பாகிப்போனது.

அம்மா அப்போதுதான் குளிக்கும் அறையில் இருந்து சத்தம் எனக்கு கேட்டது. என் சிலுவாருக்குள் ஒன்று பலவந்தமாக  என்னையும் எழுந்து நிற்க வைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக குளியலறைக்கு வந்துக் கொண்டிருந்தேன். அம்மா நீ குளிக்கிறாய். அந்த சத்தம் இப்போது நின்றுவிட்டது. நானும் நின்றுவிட்டேன். உன்னிப்பாக கேட்டேன். இப்போது நீ மீண்டும் குளிக்கிறாய். கொஞ்ச நேரத்தில் நீ வந்துவிடுவாய் என தெரியும். இப்போது கழிவறையில் இருக்கிறேன். கழிவறையில் ஒரு நாற்காலியை வைத்து அதன் மேல் நின்று இன்னும் எக்கினால் குளியல் அறையை பார்க்கலாம். நாற்காலியை சத்தமில்லாமல் எடுத்து வைத்துவிட்டேன். அப்பாவுக்கு வேலை முடிய தாமதமாகும்.

 நாற்காலியின் மேல் நின்று, சுவரை லாவகமாக பிடித்துக் கொண்டேன். தண்ணீர் சத்தம் வேகமாக கேட்கிறது. இப்போதுதுதான் நான் எக்கி உன்னை பார்க்க வேண்டும். உன்னால் என்னை கவனிக்க முடியாது. எக்கினேன்.

 கழிவறை சுவரில் இருந்து தூசி கண்ணில் விழுந்தது. கீழே இறங்கிவிட்டேன். கண்களை திறக்க முடியவில்லை. கைகளால் கண்களை தேய்துக் கொண்டே நாற்காலியை சத்தமில்லாம் எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டேன்.

 அம்மா நீ வருவதற்குள் பழையபடி ஹாலில் போய் அமர்ந்து கொண்டேன். முழங்கால் தெரியும் படி நீ கைலி கட்டி நடந்துவந்து கொண்டிருந்தாய். என்ன நினைத்தாயோ தெரியவில்லை. நேரே என் அருகில் வந்தாய். என் கண்களை கவனித்தாய். என்னடா கண்ணு இப்படி சிவந்து போயிருக்கு என்று நீ கேட்டது எனக்கு பீதியை கொடுத்தது.  கழிவறை உனக்கு ஏதும் சொல்லிவிட்டதா..?

ஒன்னுமில்ல, அரிச்சது, அதான் தேய்ச்சேன் என்றேன். அதுக்குன்னு இப்படியா தேய்க்கிறது என திட்டிக் கொண்டே நீ திரும்பினாய். நேத்துல இருந்து ஒரு மாதிரிதான் இருக்க என்று நடந்து கொண்டே நீ சொன்னாய். நிச்சயம் கழிவறைதான் இதனை உன்னிடம் சொல்லியிருக்க வேண்டும் எனப்பட்டது எனக்கு.

அம்மா என்னை மன்னித்துவிடு. என்னை கழிவறையிடம் இருந்து காப்பாற்றேன். எனக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. ஏதேதோ செய்கிறது எனக்கு.

இல்லை இது அம்மாவாக இல்லாவிட்டால்.. வேறு யார்.. ஆமாம் குமார் இருக்கிறான்.  இது அவன் வேலையாக இருக்குமோ..? குமார் வாயேன்.

 நீதான் கழிவறை மூலமாக என்னை பலிவாங்குகிறாய். எனக்கு தெரிந்துவிட்டது. சீக்கிரம் வந்து என்னைக் கூட்டிட்டு போ.. இல்லையென்றால் அந்த வீடியோ காட்சியை எல்லோரும் அனுப்பிவிடுவேன்.

 உனக்கு அந்த யோசனையை கொடுத்தது நான் தான். அது உனக்கான யோசனை அல்ல எனக்கான யோசனை. நீயும் ரீத்தாவும் காதலிக்கிறீர்கள்தான் ஆனால், நீங்கள் செய்த கருமத்தையெல்லாம் என்னிடம் சொல்லியிருக்க வேண்டாமே. அதனால்தான் அப்படி செய்தேன். எனக்கும் ஆசை இருக்காதா சொல்லு குமார். எத்தனை ப்ளு பிலிம்ப்களை நாம் ஒன்றாக பார்த்திருப்போம். எத்தனை தோழிகளின் உடல்களை வர்ணித்திருப்போம். எத்தனை முறை உன் வீட்டு கழிவறையில் ஆளுக்கு ஒரு கையால் சுய இன்பம் செய்திருப்போம். ஆனால் காதல் என்று வந்ததும் காமத்திற்கு என்னைக் கூட்டுச் சேர்க்காதது உன் தவறுதான். நான் உன்னை மன்னித்துவிடுகிறேன். சீக்கிரம் வந்து என்னை அழைத்துப்போ. ப்ளூ பிளிம்களில் பார்த்ததையெல்லாம் ஒரு முறையாவது நேரடியாக பார்க்க தோன்றியது எனக்கு. பேசிப்பேசி உன்னை சம்மதிக்க வைக்க எனக்கு அதிக செலவானது ஐம்பது வெள்ளிதான். ‘கொண்டோம்’ உனது வழக்கமான செலவு என்பதால், அடுத்த நாளுக்கான பீருக்கும் அதனை தொடர்ந்து இரண்டு நாளுக்கான சிகிரெட்டுக்கும் நான் பொறுப்பு எடுத்திருந்தேன்.

ரீத்தாவை நீ அழைத்திருந்தாய். உன் வீட்டிலும் அவள் வீட்டிலும் ஆட்கள் வர மதியமாகும் என இருவரும் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தீர்கள்.

ரீத்தா வந்தாள். நீயும் அவளும் தனியே வீட்டில் இருந்தீர்கள். நாம் திட்டமிட்டபடி உன் வீட்டு கழிவறையில் நான் காத்திருந்தேன். வழக்கம் போலவே ரீத்தாவிடம் நீ பேசிப் பேசி மூட் வந்ததும் அவளை படுக்கைக்கு அழைத்து போவாய். அப்போது நீ ஏதாவது பாடல் பாடுவாய். அதுதான் நான் தயாராகும் நேரம்.

நீ பாடினாய். நான் தயாரானேன். 

ரீத்தாவிப் முனகல் சத்தம் கழிவறைவரை கேட்டது. இப்போது நான் லாவகமாக கழிவறை கதவை திறந்து மெல்ல நடந்து நீங்கள் இருவரும் இருக்கும் அறைக்கு வந்தேன். வாசலை நோக்கி அவளின் உச்சந்தலை இருக்கிறது. அவள் மேல் நீ படுந்திருக்கிறாய். உன் கவனம் முழுக்க அவள் மீதே இருக்கும் படிதான் இருக்க வேண்டும். கொஞ்சமேகூட நீ தலை நிமிர்ந்து வாசலை பார்ப்பதை ரீத்தா கவனித்தால் சந்தேகம் கூட ஏற்படலாம் அவளுக்கு. எல்லாமே நாம் திட்டமிட்டது படிதான் நடந்தது. ஆனால், குமார் நான் திட்டமிட்டபடியும் ஒன்றை நடத்தினேன். எனது கைபேசியில் உங்கள் இருவரையும் மறைந்திருந்து ரசித்தவாறு பதிவு செய்தேன். இருவரும் நிர்வாணமாக ஒருவரை ஒருவர் இயக்கியும் ஒருவரால் ஒருவர் இயங்கியும் இருக்கிறீர்கள். ஆடைகள் அற்ற ரீத்தா என்னையும் ஏதோ செய்துக் கொண்டிருந்தாள்.

எனக்கும் இது போன்ற காதலி தேவை என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். இருந்தும் அதற்கு முன்பாகவே அவளை கைபேசியில் பதிவு செய்ய முடிவெடுதிருந்தேன். நிறைய நேரம் என் வீட்டிலும் ஆட்கள் இல்லாத பொழுதுகள் உள்ளன.  ‘கொண்டோம்’ வாங்கும் கடையில் தமிழர்கள் இருப்பதில்லை. அந்த இந்தோனிசியாக்காரனுக்கு என்னையும் தெரியாது என் பொருட்டு யாரையும் தெரியாது. ரீத்தாவை வீடியோ எடுத்து உனக்கு தெரியாமல் அவளை அணுகலாம். அவளை என் வீட்டுக்கு வர வைக்கலாம். நீ என்ன குமார் செய்கிறாய். அவளை இதைவிட இன்னமும் கூட அனுபவிக்கலாம். அப்பறம் அவளுக்கு குமார் தேவையில்லை. நான் போதும். அவளின் கறுத்த மேனியில் சாம்பல் நிற அங்கங்களை இதைவிட இன்னும் ஈரமாக்கலாம்.

எனக்கும் ஒரு காதலி கிடைக்கும் வரை ரீத்தாவை பயன்படுத்தலாம்.

பத்து நிமிடம் வரை கூட உன்னால் நீடிக்க முடியவில்லை.  என்ன ஆண் நீ. சுயஇன்பத்தின் போது என்னை தோற்கடித்தவனா நீ. நான் சந்தேகிக்கிறேன்.

 இருவரும் மூச்சிரைக்க ஒருவர் மீது ஒருவர் இன்னமும் படுத்திருக்கிறீர்கள். இது நான் புறப்படும் நேரம். கைபேசியில் உங்கள் வீடியோவை  ‘சேவ்’ செய்தவாரு மீண்டும் கழிவறைக்கு ஒழியச்சென்றேன்.

எப்போதும் உங்கள் உறவுக்கு பிறகு அவள் குளியல் அறைக்குத்தான் செல்வாள் இன்று மட்டும் என்ன ஆனதோ தெரியவில்லை. கழிவறைக்கு வருகிறாள். நீ அவளை தடுத்திருக்கவேண்டும். தவறவிட்டாய். அது உன் தவறுதான்.

  அல்லது,

 நிச்சயம் இது உங்கள் வீட்டு கழிவறையின் சூழ்ச்சியாகத்தான் இருக்கும். கழிவறைதான் அவளை சூட்சுமமாக அழைத்திருக்கிறது. இல்லையென்றால் நான் பதிவு செய்த வீடியோவை மீண்டும் விளையாடவிட்டு பார்க்கும் நேரம் அவள் கழிவறை கதவுக்கு அருகில் வந்திருக்க வாய்ப்பே இல்லை. கழிவறையின் கதவை அவள் திறக்கிறாள்; உங்கள் வீடியோவில் உங்கள் முனகல் கேட்கிறது. ரீத்தாதான் ஆக்ரோஷமாக சத்தமிட்டாள்.

 என்னைப் பார்த்தவள் கத்தியதில்; பயந்து கைபேசியை கீழே போட்டுவிட்டேன். நீயும் நிர்வாணமாய் வந்து நிற்கிறாய். நீங்கள் இருவரும் நிர்வாணமாய் வந்தும் நான்தான் அப்போது கூனிக்குறுகிப்போனேன்.

குமார் நீயெல்லாம் ஒரு மனுஷனா..ச்சே.. உன்னையா நான் காதலிச்சேன்.. ச்சீ... என்று கூறியவள் உன்னை தள்ளிவிட்டு படுக்கையறைக்கு சென்றாள். நீயும் நானும் செய்வதறியாது நிற்கிறோம். கொஞ்ச நேரத்தில் அவள் ஆடையுடன் வெளியேறியிருக்கிறாள்.

நீதான் குமார், அந்த சம்பவத்தை மனதில் வைத்து இப்படி கழிவறையில் என்னை பழிவாங்குகிறாய். அந்த வீடியோவை பரப்பியது நான் இல்லை குமார் நம்பு. உடைந்த கைபேசியை கடையில் சரி செய்ய கொடுத்தேன். அந்த கடைக்காரன்தான் உங்கள் வீடியோவை பரப்பியிருக்கின்றான். அதனால்தான் ரீத்தா காணாமல் போனாள். உன் காதல் தேவ காதல் என்றால் நீ இந்நேரம் அவளை தேடி கண்டுப்பிடித்திருக்க வேண்டும். இல்லை, நீயும் எங்கேயாவது ஓடியிருக்க வேண்டும். இப்படி நீ என்னை பழிவாங்குவது முறையில்லை குமார். சீக்கிரம் வா. என்னை கூட்டிக்கிட்டு போ. ஒரு வாரத்திற்கு உனக்கு பீர் செலவும் சிகிரெட்டு செலவும் என் பொறுப்பு. வா குமார். இந்த வாடை எனக்கு குமட்டுகிறது.

 என் முகம் எதன் மீதோ உரசுகிறது. இது நிச்சயம் மலமாகத்தான் இருக்கும். காய்ந்த மலம். கழிவறையில் இதைகூடவா கழுவாமல் என்னை பழிவாங்குவாய் குமார்.

 ஒருவேளை இது மோகன் சாரின் வேலையோ.

 பள்ளிக்கழிவறையில் அவரை அசிங்கமாக வரைந்தவன் நான் தானே. பல ஆண்டுகளுக்கு முன்பு செய்தது இப்போது அவருக்கு தெரிய வாய்ப்பு இல்லை. எவனோ ஒருவன், மோகன் சாருக்கு இதனை சொல்லியிருக்க வேண்டும். அவர்தான் இந்த கழிவறையில் என்னை பழிவாங்குகிறார். யார் சொல்லியிருக்க வேண்டும்.

ஆறுமுகம்;

இந்த மூஞ்சிக்கு அந்த அளவுக்கு தைரியம் இல்லை. ஆனாலும் சந்தேகிக்கப்பட வேண்டியவன்தான் இவன்.  கட்டிலில் இவனும் நானும்  விளையாடும் போது விதையை அழுத்தமாக நசுக்கிவிட்டதால் , ஓங்கி அறைந்திருக்கிறேன். அன்று முதல் இவன் என்னிடம் ஒட்டி நடப்பதில்லை. அவ்வபோது பாடம் படிக்க என் வீட்டுக்கும் வருவதில்லை.நானாக மூட் வந்து அவனை அழைத்தாலும், என்னமோ தெரியாதவன் போல போய்விட ஆரம்பித்தான். இவனுக்கும் மோகன் சார் மீது கோவம் இருந்தது. அதனால்தான் நான் செய்ததை இவனுக்கு சொல்லி; இவனையும் கழிவறைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். இப்போது அவன் என்னை பழிவாங்குகிறான். ஆறுமுகம் ப்ளீஸ். வந்து  என்னை அழைத்து போ. இனி நீ எத்தனை அழுத்தமாக நசுக்கினாலும் உன்னை அடிக்க மாட்டேன். பொறுத்துக் கொள்கிறேன். சீக்கிரம் வா.

ஆறுமுகமாக இல்லாவிட்டால்...கேசவனாகத்தான் இருப்பான்.

இவனது தங்கை மீது நான் கைவைத்தது, அவளது தப்பு. நானாக சென்று அவளை தொடவில்லை. நானாக அவளை ஹோட்டலுக்கு அழைக்கவில்லை. நானாக அவள் ஆடைகளை அவிழ்க்கவில்லை. அவள்தான் வந்தாள்; அவள்தான் அழைத்தாள்; அவள்தான் அவிழ்த்தாள்; அவள்தான் ஆரம்பித்தாள். நான் அவளுக்கு இணங்கினேன் அவ்வளவுதான். அதற்குத்தான் கேசவன் பழிவாங்குகிறானோ. இது என்ன நியாயம் கேசவன். உன் தங்கையை நீ என்ன செய்தாய். எத்தனை பேரின் தங்கையை நீ செய்தாய். உன் தங்கை என்பதும், என்னை பழி வாங்கலாமா..? வேணி வேண்டுமானால் பழிவாங்கலாம்.

 ஆமாம் வேணி;

அவளைத்தான் நானே அழைத்தேன். பல கடிதங்களை கொடுத்திருக்கிறேன். இரவு முழுவதும் காதல் கவிதைகளை காமம் கலந்து அவளின் மேனியெங்கும் தூவி அவளை உச்சமடைய செய்தேன். வழக்கமாக என் வீட்டுக்குத்தான் அழைப்பேன். அவள் கொஞ்சம் விஷேசம்;வெட்கம் என்பதால், நானே அவள் வீட்டுக்கு செல்லத் தொடங்கினேன். அதிக நாட்கள் எல்லாம் இல்லை. ஒரு வாரம் கூட முழுதாக ஆகவில்லை. அவளால் எனக்கு இரண்டு லாபம் கிடைத்தது.

லாபம் ஒன்று. கவிதைகளில் காமத்தை கலக்கும் கலை தெரிந்தது.

லாபம் இரண்டு. தொலைபெசியில் வெறும் சொற்கள் மூலமே கூட பேசிப்பேசி சுகத்தினை பகிரலாம்.

இரண்டு முறைக்கு மேல் அவளை தாங்க முடியவில்லை. முதல் உறவில் இருந்தே காதல், தெய்வீகம், கல்யாணம், முதல் குழந்தையின் பெயர், என நச்சரித்துவிட்டாள். விலகிவிட்டேன். அவள்தான் கல்யாணமாகி இரண்டு குழந்தை பெற்றுக் கொண்டாளே. இப்போது போய் அவள் எதற்காக என்னை பழிவாங்க வேண்டும். வேணி, உன்னை குறித்துதான் நான் யாரிடமும் பேசுவதில்லையே; பிறகு எதற்கு என்னை இப்படி பழிவாங்குகிறாய். வேண்டுமென்றால் ஒரு முறை உன்னை காம கவிதைகள் வழி அர்ச்சிக்கிறேன். என்னை காப்பாற்று.

மறுபடியும் எனக்கு மூத்திரம் வருகிறது. நனைந்து போன ஜீன்ஸை மீண்டும் நனைக்கிறேன்.

என்னால் மேற்கொண்டு யோசிக்க முடியவில்லை. யாரால் நான் பழிவாங்கப்படுகிறேன் புரியவில்லை. இப்படிப் பலிவாங்க முடியும் ஒருவர் சக்தி மிக்கவராகவே இருக்க வேண்டும். சக்தி மிக்கவர் என்றால்...

 ஆமாம். இப்போதுதான் நினைவுக்கு வருகிறாள் காளி.

 காளி. ஆடையற்று நின்றிருக்கும் கோர பற்கள் கொண்டவள். அவள் மீது அதிக பக்தி கொண்டவன் நான்.  வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலில்தான் காளி மீது பக்திக் கொள்ளத்தொடங்கினேன். முதலில் அவளது திறந்த மார்பகங்களால் நான் ஈர்க்கப்பட்டாலும் பின்னாலில் அவள் எனது இஷ்ட தெய்வமாகிப்போனாள். ஒவ்வொரு முறையும் காளிக்கு மாலை போடும் போது  அவளின் மார்புகளை உரசுமாறுதான் பூக்களை வைப்பேன். இது என்னமோ பார்ப்பவர்களுக்கு அவளின் மார்பகங்களை நான் மறைப்பதாகத் தெரிந்தாலும். அதனை தொடும் சுகம் பூக்களைவிட மென்மையான உணர்வை எனக்கு கொடுத்தது.

 அப்போதுதான் கோவிலுக்கு ஒருவர் பெரிய காளி ஓவியத்தை அன்பளிப்பாக கொடுத்தார். கண் திறக்கப்படாத ஓவியம். பூஜைகள் சில செய்த பிறகுதான் காளிக்கு கண் வைக்க வேண்டுமாம். அதுவரை சீன நாளிதழில் அந்த ஆளுயர ஓவியம் சுற்றப்பட்டிருந்தது. பூஜைக்கு ஏற்ற நாள் வர இன்னும் ஒரு மாத காலம் இருக்கிறது. என்னால் பொறுமை காக்க முடியவில்லை. ஆளுயர காளி சிலையும் ஆடையின்றிதானே இருக்கும். முட்டிப்போட்டுக் கொண்டு நான் பார்த்து; தொட்டு; ரசித்த அந்த மார்பகங்களை எனக்கு சரி நிகராக நான் பார்க்க வேண்டும். நான் தான் முதலில் பார்க்க வேண்டும்.

 நான் காளியின் குழந்தை என்று தொடங்கி பக்தன் என்று வளர்ந்து இப்போது காதலனாகியிருக்கிறேன். நான் காளியின் காதலன் ஆனேன். காளி உன் மீது உன் உடல் மீது எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. நான் உன் காதலன். என்ன செய்தாலும் நீ என்னை மன்னிக்கவேண்டும். நீயும் என்னை காதலிக்கிறாய் தானே..

மயான காளியாகவும்; பயங்கர சூலியாகவும் பார்க்கப்பட்டு பழக்கிய உன்னை உனக்கே வேறு மாதிரி காட்டிய காதலன் நான். உன் பெண்மையை உனக்கு புரியவைத்த காதலன் நான். எத்தனை முறை உன்னை அர்ச்சிக்கும்போது  நீ மயங்கி வெட்கியிருக்கிறாய். உன் வெட்கத்தை யாரெல்லாம் பார்த்திருக்கிறார்கள் காளி. சொல். நீதான் யாரிடமாவது காட்டியிருக்கிறாயா..? இல்லை. காதலன் வேண்டும் காளி. என் போன்று காதலன் வேண்டும் காளி.

கணவனை விட காதலனுக்குத்தானே பெண்ணுடம்பில் உரிமை அதிகம். என் உரிமை. காதலி காளியின் மார்பகங்களை நான் பார்க்க வேண்டும்.

யாரும் இல்லை. கோவிலில் காளிகள் மட்டும் இருக்கிறார்கள். ஒருத்தி நான் தொட்டு தொட்டு ரசித்தவள். தன் மார்புக்கு போட்டியாக பூக்களை சுமப்பவள் .இன்னொருத்தி புதியவள். ஆளுயரமானவள். யாரும் பார்த்திடாதவள்.

புதியவளை இப்பொழுதான் பார்க்க சரியான நேரம். சுவரோரத்தில் தலைக்குப்புற  சாய்ந்திருந்தாள்.

அருகே செல்கிறேன். பழைய காளியையும் ஒரு முறை பார்க்கிறேன். அவளுக்கு இதில் பொறாமை ஏதும் இல்லையென்பதை உறுதி செய்தேன். அவள் மட்டும் மறுத்திருந்தால் உயர்ந்த காளியை பார்த்திருக்கமாட்டேன். சாய்ந்துக் கிடக்கும் காளியை நிமிர்த்தினேன். ஒரு கையால் காளியை சாய்த்து; மறு கையால் நாளிதழ் காதிகங்களை கிழிக்கிறேன்.

நீல வண்ணத்தில் மார்பு, வெள்ளை நிற மண்டையோடுகளைத்தாங்கி ஜொலித்தன. ஒரு கையில் தாங்கியிந்த காளியை பாரம் தாங்காமல் கீழே போட்டுவிட்டேன். சத்தமாகியது. பயந்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் கழிவறைக்குள் ஒழிந்து கொண்டேன். கோவிலில் சிலர் வந்திருப்பது எனக்கு புரிந்தது. சந்தேகம் வராமல் இருக்க ; வராத மூத்திரத்தை முக்கி முக்கி வர வைத்தேன். பின் வெளியேறினேன். நினைத்தது போலவே என் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. பாரேன் சாமி படமே சொந்தமா சாய்ந்திருக்கு சீக்கிரமே பூஜையை ஆரம்பிக்கனும்னு சாமி சொல்லாம சொல்லறா.. என்றார்கள். காளீ நீ என்னிடம் சொல்லாததையா அவர்களிடம் சொல்லிடப்போகிறாய். எனக்கு சிரிக்கத்தோன்றியது.

ஆனால்;

அன்று முதல் காளியுடன் எனக்கு முறிவு ஏற்பட்டது. ஒருவேளை சின்ன மார்பில் இருந்த ஈர்ப்பும் கிளர்ச்சியும் ஆளுயர மார்பில் இல்லாமல் போனதாலோ.

 இப்போது அதற்கான சரியான நேரம் பார்த்திருந்து காளிதான் பழிவாங்குகிறாள். என் சந்தேகமெல்லாம் அவளை நோக்கிதான் மையமிடுகின்றன.

  காளி. என் காதலி. மண்டையோட்டு சூளி. இங்கே வாடி.

  காதலனை இப்படி பழிவாங்குதல் முறையோ சொல்லு. இத்தனை காலம் உன்னை மறந்திருந்தது தவறுதான். இனி நீதான் எனக்கு எல்லாம் வாயேன் காளி. சீக்கிரம் வாயேன். உன் மார்பில் சூழ்ந்திருக்கும் மண்டையோடுகளை கழட்டு. என் முகத்தினை அதில் பதிக்கிறேன். உன் திறந்த மார்புகளை என் தோளால் போர்த்துகிறேன். கையில் இருப்பதையெல்லாம் தூக்கியெறிந்துவிடு. காதலை தாங்கிப்பிடி. கண்ணில் இருக்கும் குரோதங்களை தூக்கியெறியலாம். காமத்தை விதைக்களாம்.
வருகிறாள்.

காளி வருகிறாள். எனக்கு மீண்டும் மூத்திரம் வருகிறது.

 

 

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்