Pages - Menu

Pages

ஜூன் 30, 2026

வாசிப்பில்


ஜூன் மாத புத்தக வாசிப்பை நிறைவு செய்யும் புத்தகம். சிங்கை எழுத்தாளர் அழகுநிலாவின் 'மில்லேனியல் அவ்வை'; 40 குறுங்கதைகள் அடங்கிய தொகுப்பு.

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வாசித்த புத்தகங்களை இன்று இரவு அடுக்கி வைக்க வேண்டும். ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் அதுவரை வாசித்த புத்தகங்களை அடுக்குவதோடு, அடுத்த மூன்று மாதங்களுக்கு வாசிக்க வேண்டிய புத்தகங்களை தனியே எடுத்து அடுக்க வேண்டும். அதுதான் வாசிக்க புத்தகங்களை எடுக்கும் போது 'புத்தகத் தேர்வு' ஏற்படுத்தும் உளைச்சலில் இருந்து ஓரளவிற்கு தப்பிக்க முடியும்.

நேரம் இருக்கும் போது ஜனவரி முதல் ஜூன் வரை வாசித்தவற்றை சிறிய குறிப்புகளுடன் குறித்து கொள்ள வேண்டும்.

அதோடு மாதம் ஒரு நாவல் வாசிப்பு திட்டத்திற்கான நாவலையும் கண்டறிய வேண்டும்.

இப்படி முன்னமே சில புத்தகங்களை வாசிப்பதற்கென எடுத்து வைத்தாலும் காலமே  அவற்றை எடுத்து வாசிப்பதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுக்கிறது.

எல்லாவற்றையும் வாசிக்கும் மனநிலையில் நான் இப்போது இல்லை. முடிந்தவரை தேர்வு செய்தே வாசிக்கின்றேன்.

அன்புடன் #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜூலை மாத தொடர்கள்

ஜூலை மாத நடுகல்.காமிற்கான இரு தொடர்கள்.


மாதம் ஒரு மலேசிய புத்தகம் தொடர் 19-ல் 1991 ஆண்டு வெளிவந்த 'பேரவைக் கதைகள் 6' சிறுகதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவத்தை எழுதியுள்ளேன்.
எழுதி 35 ஆண்டுகள் ஆன கதைகளில் எதுவெல்லாம் இன்றைக்கும் வாசிக்க பொருத்தமாக இருக்கிறது என தொடரை வாசித்து தெரிந்து கொள்ளலாம்.

மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் தொடர் 7-லில் சிங்கை எழுத்தாளர் சித்ரா ரமேஷின் 'வெண்மையின் நிறங்கள்' சிறுகதைத் தொகுப்பு
குறித்த வாசிப்பு அனுபவத்தை எழுதியுள்ளேன்.



இரண்டில் ஒரு கட்டுரை கொஞ்சம் காரம் தூக்கலாக இருப்பதாக தோன்றுகிறது. நீங்கள் வாசித்து பார்த்து சொல்லுங்கள்.

ஜூலை முதல் நாள், நடுகல்.காமை வாசிக்க மறவாதீர்கள்..

அன்புடன் 

ஜூன் 28, 2026

நன்றி மலர்கள்





மஇகா 80 ஆண்டு நிறைவை முன்னிட்டு.....
தாமான் ஸ்ரீ மஞ்சா 'ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் இலவச மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.


மருத்துவ முகாமுக்கு அருகிலேயே நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையின் புத்தக விற்பனைக்கும் வாய்ப்பு கொடுத்திருந்தார்கள்.

என்னிடம் குடை இல்லாததால் வெயில் மேஜை நாற்காலியோடு புத்தகங்களுடன் அமர்ந்திருந்தேன். இதனை கவனித்த இயக்கத்தினர் என்னை கூடாரத்திற்குள் வந்துவிட சொன்னார்கள்.


மருத்துவ பரிசோதனைக்கு வந்திருந்தவர்களில் சிலர் புத்தகங்களை வாங்கினார்கள். சிலர் புத்தகங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டார்கள்.

திரு.மணிமாறன் என்பவர், அங்கு வந்திருந்த ஐந்து பேருக்கு புத்தகங்களை ஸ்பான்சர் செய்தார்.


இவ்வட்டார இயக்கத்தினர் இன்றைய மருத்துவ முகாமை சிறப்பாக நடத்தி முடித்தார்கள். பல புதியவர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.


இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த இவ்வட்டார மஇகா உறுப்பினருக்கும் தாமான் ஸ்ரீ மஞ்சா 'ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆலய நிர்வாகத்தினருக்கும் என் அன்பும் நன்றியும்.

புத்தகச்சிறகுகள் - தொடர் 17


நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 17' வெளிவந்துள்ளது.

புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.

இந்தத் தொடரில் எழுத்தாளர் அ.பாண்டியனின் இரண்டாவது நாவலான 'கரிப்புத் துளிகள்' நாவலைக் குறித்து எழுதியுள்ளேன். கட்டுரையின் முதல் பகுதி இந்த வார தொடரில் வெளிவந்துள்ளது.

என் வாசிப்பில் நான் முன்மொழியும் மலேசிய நாவல்களில் இதுவும் ஒன்று. நீங்கள் இந்நாவலை வாசிப்பது புதிய வாசிப்பனுபவமாக இருக்கும்.

எனது இந்த வாராந்திர தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.

அடுத்த வாரம் மேலும் ஒரு மலேசிய புத்தகத்தோடு வருகிறேன்.

அன்புடன்
#தயாஜி 

மருத்துவ முகாம்


மஇகா 80 ஆண்டு நிறைவை முன்னிட்டு.....
தாமான் ஸ்ரீ மஞ்சா 'ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் இலவச மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இன்று (ஜூன் 28) காலை 8 மணி தொடங்கி பிற்பகல் 1 மணி  வரை இம்முகாம் நடைபெறும்.


இன்றைய முகாமிற்கு அருகிலேயே நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையின் புத்தக விற்பனையும் நடைபெறுகிறது.
10 ரிங்கிட் முதல் 30 ரிங்கிட் வரையிலான தள்ளுபடி விலையில் இன்று நீங்கள் புத்தகங்களை வாங்கலாம்.


உடல் ஆரோக்கியத்தை சரி பார்ப்பதோடு மன ஆரோக்கியத்திற்கான புத்தகங்களையும் நீங்கள் வாங்கி சென்று பயன் பெறலாம்

சுற்று வட்டார நண்பர்களுடன் இந்த செய்தியைப் பகிர்ந்து உதவவும்.

அன்புடன்
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #தயாஜி


ஜூன் 26, 2026

வாசிப்பில்


////சுற்றி எதுவும் மாறாமல் வாழ்ந்து கொண்டிருப்பதென்பது ஒருவனுக்கு மிகுந்த வலியும் தாங்கமுடியாத துயரத்தையும் கொடுப்பதாகும். அது அவனது ஆன்மாவை முழுமையாகக் கொல்லாமல் இருக்கும் போது, அவன் எவ்வளவு காலம் வாழ்கிறானோ அவ்வளவிற்கு நீளும் அந்த வேதனையான சலிப்பு////
- நாவலிலிருந்து..

******************

நண்பரிடம் வேலை கேட்டு பேசியிருந்தேன். இன்று காலை சந்தித்து பேசலாம் கவலைப்பட வேண்டாம் என்றார்.

காலையுணவை விடவும் இப்போதைக்கு வேலை முக்கியம் என்பதால் சொன்ன நேரத்திற்கு முன்னமே சென்று காத்திருந்தேன். 

அலாரம் போல அழைத்து, நான் வந்துவிட்டேன் என்றேன். அவரும் இன்றா பார்ப்பதாக சொன்னோம் என கேட்டுவிட்டு அவரே ஆமாம் ஆமாம், இதோ வந்துவிடுகிறேன் என்றார்.

காலை உணவு விற்று முடிந்து மதிய உணவுகளையே விற்க தொடங்கிவிட்டார்கள். நண்பர் இன்னுமே வந்து கொண்டிருந்தார்.

காலி வயிற்றில் வழக்கம் போல ஒரு இஞ்சி டீயை ஆடர் கொடுத்தேன். எப்போதும் சில புத்தகங்கள் என்னுடன் இருக்கும் அதிலிருந்து ஒன்றை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். 

கடைசிவரை நண்பர் வரவில்லை. வாசித்த புத்தகத்தின் கடைசி பக்கம்தான் வந்தது. அது தந்த கேள்விகளோடும் இன்று கற்ற பாடத்தோடும் வீட்டிற்கு நடக்கலானேன்.

இதனைப் பகிர்வதற்கு காரணம், வராத நண்பருக்காகவோ வேலை தேடுவதற்காகவோ அல்ல. இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியிலும் ஒருவனால் புத்தகம் வாசிக்க முடிகிறதே என்பதற்காக.

ஆனால் சிலருக்கு இதுவெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. இன்னும் சொல்லப்போனால் கேலியாக கூட இருக்கலாம்தான். நாள் சம்பளக்காரனுக்கும் மாத சம்பளக்காரனுக்கும் சம்பளமாக எதையும் வாங்காதவர்களுக்கும்
இருக்கும் வித்தியாசங்கள் எல்லோருக்குமா தெரிந்துவிடப் போகிறது.

"எப்படி புத்தகங்களை வாசிக்கறீங்க...?" என கேட்கும் நண்பர்களுக்கு "இதோ இப்படித்தான் புத்தகங்களோடு வாழ்ந்து கொண்டும் வாசித்து கொண்டும் இருக்கிறேன் என சொல்வதற்குத்தான் இந்தப் பகிர்வு.

******************
வாசிப்பில் 'இருபத்தாறு ஆண்களும் ஓர் இளம்பெண்ணும்'. எழுத்து மாக்சிம் கார்க்கி. தமிழாக்கம் ஜான்ஸி ராணி. வெளியீடு தமிழ்வெளி.

இதிகாசம் தொடங்கி இன்றுவரை பெண்களைச் சர்வ சாதாரணமாக பணயம் வைத்து விடுகின்றோம் எல்லா பழியையும் பெண்கள் மீதே செலுத்தியும் விடுகின்றோம், என்கிற சிந்தனையோடு இந்த நாவலை வாசித்து முடித்தேன்.

இந்த வாழ்வில் இன்னொருவர் நம்மை பணயம் வைத்து அவர் விருப்பப்படி விளையாடுவதைவிட நம்மை நாமே பணயம் வைத்து விளையாடும் இந்த வாழ்வின் சூதாட்டத்தில் வெற்றியோ தோல்வியோ எந்த நிர்பந்தமும் இல்லாமல் நாமே விளையாடினோம் என்கிற சிறு திருப்தி கிடைத்தாலும் போதும் என்றுதான் தோன்றுகிறது.

குறைந்தபட்சம் நம்மிடம் பணயம் வைக்க நாமாவது இருக்கின்றோம். ஒரு முறை விளையாடிதான் பார்க்கலாமே....

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜூன் 21, 2026

புத்தகச்சிறகுகள் தொடர் 16


நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 16' வெளிவந்துள்ளது.

புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.

இந்தத் தொடரில் கோ.புண்ணியவான் எழுதிய 'கையறு' நாவலைக் குறித்து எழுதியுள்ளேன். கட்டுரையின் நிறைவி பகுதி இந்த வார தொடரில் வெளிவந்துள்ளது.

என் வாசிப்பில் நான் முன்மொழியும் மலேசிய நாவல்களில் இதுவும் ஒன்று.

எனது இந்த வாராந்திர தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.

அடுத்த வாரம் மேலும் ஒரு மலேசிய புத்தகத்தோடு வருகிறேன்.

வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த,
ஞாயிறு நண்பன் ஆசிரியர் மற்றும் அவர் குழுவினர்க்கு நன்றி.
வாசிப்போம்.. நேசிப்போம்..வளர்வோம்..
அன்புடன்

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


வாசிப்பில்...


வாசிப்பில், சிங்கை எழுத்தாளர் சித்ரா ரமேஷ் சிறுகதைகள் 'வெண்மையின் நிறங்கள்'

அன்புடன் #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜூன் 19, 2026

வாசிப்பில் ஜூன் 19


வாசிப்பில் பேரவைக் கதைகள் 6; சிறுகதைத் தொகுப்பு.

மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை நடத்திய ஆறாவது  தேசிய அளவிலான சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு.

12 சிறுகதைகள் கொண்ட இந்தத் தொகுப்பு 1991-ஆம் ஆண்டு வெளியீடு கண்டது.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜூன் 16, 2026

- அழகுநிலாவின் அழகிய புன்னகை -


சிங்கை எழுத்தாளர் அழகுநிலா மலேசியா வந்திருந்தார். அவரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது.

சமீபத்தில் 'மில்லேனியல் அவ்வை' என்னும் குறுங்கதை தொகுப்பை வெளியிட்டிருந்தார். வாசிக்க ஆவலாய் இருந்த புத்தகங்களில் இதுவும் ஒன்று என அக்காவிடம் சொல்லியிருந்தேன் (அவரை அப்படித்தான் அழைக்கிறேன்).

இன்றைய சந்திப்பில் 'மில்லேனியல் அவ்வை', 'மொழிவழிக் கனவு', 'சொல் ஒளிர் ககனம்' என்ற அவரது மூன்று புத்தகங்களையும் அவரது கையொப்பத்துடன் பெற்றுகொண்டேன். அதோடு அவருக்கு எனது 'அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல', 'குறுங்கதை எழுதுவது எப்படி', 'பொம்மி' என்ற புத்தகங்களைக் கொடுத்தேன்.



கிடைத்த கொஞ்ச நேரத்திலும் குறுங்கதைகள் குறித்து பேசியிருந்தோம்.

சிங்கை எழுத்தாளர்களில் நான் விரும்பி வாசிக்கும், வாசித்ததை உரிமையாய்ப் பேசும் எழுத்தாளர்களில் அக்கா அழகுநிலாவும் ஒருவர்.

ஏறக்குறைய பத்தாண்டுகள் கடந்த பின் அவரைச் சந்திக்கின்றேன். அப்போது பார்த்தது போலவே இருக்கிறார். அவரது சிரித்த முகத்தின் ஒளியை நானும் எனக்காய்க் கொஞ்சம் எடுத்து கொண்டு விடைபெற்றேன்.



விரைவில் அவரது புத்தகங்கள் குறித்து எழுதுகிறேன். சமீபத்தில் அவரது சிறுகதைத் தொகுப்பான 'சங் கன்ச்சில்' குறித்து நடுகல்.காம் இணைய பக்கத்தில் எழுதியிருக்கிறேன். வாய்ப்புள்ளவர்கள் அந்தக் கட்டுரையையும் வாசித்தால் சிங்கை எழுத்தாளர் அழகுநிலாவின் கதையுல்கத்திற்கான முதற்கட்ட நுழைவாயிலாக அது அமையலாம்...


ஜூன் 14, 2026

புத்தகச்சிறகுகள் தொடர் 15


நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 15' வெளிவந்துள்ளது.

புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.

இந்தத் தொடரில் கோ.புண்ணியவான் எழுதிய 'கையறு' நாவலைக் குறித்து எழுதியுள்ளேன். கட்டுரையின் முதல் பகுதி இந்த வார தொடரில் வெளிவந்துள்ளது.

என் வாசிப்பில் நான் முன்மொழியும் மலேசிய நாவல்களில் இதுவும் ஒன்று.

எனது இந்த வாராந்திர தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.

வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த,
ஞாயிறு நண்பன் ஆசிரியர் மற்றும் அவர் குழுவினர்க்கு நன்றி.
வாசிப்போம்.. நேசிப்போம்..வளர்வோம்..
அன்புடன்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


ஜூன் 13, 2026

செந்தமிழ் விழா 2026

செந்தமிழ் விழா 2026-க்கு நீதிபதிகளில் ஒருவராக அழைத்திருந்தார்கள். 

இம்முறை இடைநிலைப்பள்ளிக்கான 'இளையோர் கருத்தரங்கத்திற்கு' நானும் என்னுடன் தம்பி நெடுஞ்சுடரும் நீதிபதிகளாக இருந்தோம். 

இன்றைய நாளும் வழக்கம் போல இனிய நாளாக அமைந்தது.

வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த செந்தமிழ் விழா குழுவினருக்கும் ஆசிரியை உஷா அவர்களுக்கும் அன்பும் நன்றியும்.


#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜூன் 09, 2026

- இளம் எழுத்தாளர்களின் கொண்டாட்டம் -

-இளம் எழுத்தாளர்களின் கொண்டாட்டம்-


ஐபாட்டி அமைப்பின் புத்தக வெளியீட்டு விழா & மரபு நாள் கொண்டாட்டத்திற்கு  சென்றிருந்தேன். சிறப்பு விருந்தினராக என்னை அழைத்திருந்தார்கள். 

இவ்விழா ஜூன் ஆறாம் நாள் பிரிக்பீல்ட்ஸ் கந்தையா மண்டபத்தில் நடைபெற்றது. மூன்று முக்கிய அம்சங்கங்களை இவ்விழா கொண்டிருந்தது. முதலாவதாக சொற்கற்கள் போட்டி. அடுத்ததாக மண் பானை உருவாக்கம். மூன்றாவதாக இளம் எழுத்தாளர்களின் புத்தக வெளியீடு. நான் மூன்றாவது அங்கத்திற்கு சிறப்பு விழுந்தினராக சென்றிருந்தேன்.

காலை எட்டு மணி தொடங்கி மதியம் 2மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியை சங்கீதா சந்திரகுமாரன் இந்நிகழ்ச்சியின் இயக்குனராகவும், திரு.மனோஷ் இராமா (ஐபாட்டி இயக்குனர்) துணை இயக்குனராகவும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர்களோடு ஐபாட்டி அமைப்பினரும் நண்பர்களும் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு பலமூட்டினார்கள். 
மலேசியாவில் தமிழில் முதன் முறையாக   தேசிய அளவிலான ‘சொற்கற்கள்’ போட்டியை இவர்கள் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
ஐப்பாட்டி அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களில் எட்டு இடைநிலைப்பள்ளி மாணவர்களின் கதை புத்தகங்கள் வெளியீடு கண்டன.

அந்த எட்டு மாணவர்களின் கதை புத்தகங்களையும் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்து நற்சான்றிதழ்களை வழங்கினேன். பின்னர் சிறப்புரையாற்றினேன்.

எட்டு கதை புத்தகங்களையும் முன்னமே வாசித்திருந்ததால் என்னுடைய உரையில் அந்த எட்டு கதைகளிலும் இருக்கக்கூடிய முக்கியமானவற்றை பகிர்ந்து கொண்டதோடு இளம் எழுத்தாளர்களுக்கு இம்மாதிரி அமைப்புகள் கொடுக்கும் உற்சாகத்தையும் பெற்றோர்களிடம் இருந்து  ஆதரவும் அவசியம் என்பதையும் பேசினேன்.

ஐபாட்டி அமைப்பினர் முதன் முறையாக ஏற்பாடு செய்திருந்த இந்த ‘இளம் எழுத்தாளர் புத்தக வெளியீட்டு விழா & மரபு நாள்’ கொண்டாட்டத்தில் நானுமே ஓர் எழுத்தாளராக கலந்து கொண்டதிலும் இளம் எழுத்தாளர்களைச் சந்தித்து பேசியதிலும் மகிழ்ச்சி. இம்மாதிரியான நிகழ்ச்சிகள்  தொடர்ந்து ஒரு விழா போல கொண்டாடப்படவேண்டும் என்றே எதிர்ப்பார்க்கிறேன்.

இளம் தலைமுறையினரை வாசிக்க வைக்கவும் எழுத வைக்கவும் நம்மால் இயன்றதை செய்வது நமது கடமைகளின் ஒன்றுதானே.


எட்டு கதைகளைக் குறித்து சொல்லாமல் போனால் எப்படி? 

1. நான் உயர்ந்தவன், என்ற கதையை லாவண்யா சதிஷ் குமார் எழுதியிருந்தார். எப்படியாவது முன்னேறி தன் குடும்பத்தைக் காப்பாற்ற நினைக்கும் மாணவனின் கதை. கல்வியும் தொழிலும் நிச்சயம் உதவும் என சொல்லும் கதை.

2. பெண்களின் வெற்றி, என்ற கதையை மோனிகா ரவி எழுதியிருந்தார். வீனை வாசிக்க ஆசைப்படும் நாயகி நண்பர்களால் கேலி செய்யப்படுகின்றாள். மனம் உடைந்த மாணவி தனது விடாமுயற்சியால் எப்படி சாதனை பெண்ணாக மாறுகின்றாள் என்பதுதான் கதை.

3. ரோபோட் உலகம், என்ற கதையை மீனாள் முத்தையா எழுதியிருந்தார். நான் இரசித்த கதைகளில் இதுவும் ஒன்று. நமக்காக வேலை செய்து கொண்டிருந்த இயந்திரங்கள் ஒரு மனிதர்களை வேலை வாங்க ஆரம்பித்தால் என்ன ஆகும் என்ற கதை மாணவனின் பார்வையில் இருந்து சொல்லப்பட்டிருக்கும்.

4. இருட்டில் ஒரு நட்சத்திரம், யாஷினி ஏண் டிக்சன் என்பவர் எழுதியிருந்தார். விரக்தியில் இருக்கும் மின்மினி மூச்சி தவளையைக் காப்பாற்றி தனது விரக்தியை விரட்டும் கதை.
5. ஓர் இளம் பெண்ணின் வாழ்க்கைக் கதை, என்ற கதையை பரமேஸ்வரி மோகன் எழுதியிருந்தார். தந்தையின் மரணத்தில் மனம் சோர்ந்த மாணவி தனது ஆசிரியை மூலமும் பாட்டி மூலமும் தேர்வில் வெற்றி பெறும் கதை.

6. சிங்கமும் தந்திர நரியும், என்ற கதையை நர்மதா லிங்கமுத்து எழுதியிருந்தான். சிறு வயதில் நாம் வாசித்த சிங்கத்தை ஏமாற்று காட்டுக்கு இராஜாவாக மாறும் நரியின் கதைதான். இதன் சுவாரஸ்யமே அந்தச் சிங்கத்திற்கு ஒரு தம்பி இருப்பதும் அதனால் அடுத்து நடப்பதும்தான்.

7. புகழனின் இணைப்பிரபஞ்சம், என்ற கதையை மோவ்பானி ஶ்ரீ சௌமங்கலி  என்பவர் எழுதியிருந்தார். என்னை ஆச்சர்யப்படுத்திய கதை இது. பூமியில் இருந்து இன்னொரு பிரபஞ்சத்தில் சிக்கி கொள்ளும் மாணவனின் கதை. சில பக்கங்கள்தான் என்றாலும் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கும். இதனையே வளர்தெடுத்து சிறுகதையாகவும் மாற்றலாம்.

8. மர்மமான இரவு, என்ற கதையை யாளினி ஏண்ணா டிக்சன் எழுதியிருந்தார். இதுவும் எனக்கு பிடித்தமான கதைதான். இக்கதை நமக்கு பழக்கமான கதைதான். இறந்தவரே வீட்டுக்கு வந்து தான் இறந்த செய்தியைச் சொல்கிறார். அதன் பின் நடந்தது என்ன என்பதை பயம் காட்டும்படி எழுதியிருப்பார்.

இளம் எழுத்தாளர்கள் குறிப்பாக இவர்கள் அனைவருமே மாணவர்கள் என்பதால்  அவர்களின் இந்த   முதல் முயற்சிக்கு உற்சாகம் கொடுக்கும்படியும் அவர்களுள் இருக்கும் எழுத்தாளர்களை அவர்கள் தீவிரமாக தேட வேண்டும் என்பதற்காகவும் இவ்வொரு கதையில் இருந்து விமர்சனமாக அள்ளாமல் என் வாசிப்பை மட்டுமே எழுதியுள்ளேன்.

இந்த முதல் எழுத்து அவர்களில் யார்யாரின் எழுத்து வாழ்விற்கு பிள்ளையார் சுழியாக அமைந்திருக்கின்றது என்பதை நாமும் காலத்தோடு இணைந்து பொறுமையாய்க் காத்திருந்து பார்க்கலாம்.

ஐபாட்டி அமைப்பினர்க்கும் இளம் எழுத்தாளர்களுக்கும் இதுவரை வாசித்த அனைவருக்குமான எனது அன்பு.

- தயாஜி

ஜூன் 08, 2026

வாசிப்பில்


வாசிப்பில் 'கள்ளிப்பழத்தால் தொய்யில் எழுதுவேன்'. மௌனன் யாத்ரிகாவின் கவிதைகள்.

கவிஞரின் முந்தைய கவிதைத் தொகுப்புகளில் 'வேட்டுவம் நூறு' மற்றும் 'ஊர்க்காரி ஒருத்தியின் காதல்' போன்ற இரு தொகுப்புகளை வாசித்துள்ளேன்.

குறிப்பாக 'வேட்டுவம் நூறு' தொகுப்பு குறித்த வாசிப்பு அனுபவத்தை எனது வலைப்பூவில் எழுதியுள்ளேன். 'ஊர்க்காரி ஒருத்தியின் காதல்' தொகுப்பு குறித்து எழுதுவதற்கு முன்பாக இந்தத் தொகுப்பு வாசிக்க வந்துவிட்டது.

போதுவாகவே கவிதை வாசிப்பதில் கவிதையை வாசிப்பதும் கவிதையால் வாசிக்கப்படுவதும் ஓர் மையப்புள்ளியில் அமைந்துவிடும்.
எனக்கு அப்படி அமைக்கும் கவிதைளை மௌனன் யாத்ரிகா எப்போதும் கொடுத்துகொண்டே இருக்கின்றார். அதுவே அந்தக் கவிஞரை தவறாது வாசிக்க வைக்கிறது.


👉புத்தகவாசிப்பு_2021 ‘வேட்டுவம் நூறு’ ~ தயாஜி வெள்ளைரோஜா https://share.google/7oihdVSkmb362D4Bl