"அடச்சீ... இங்கு
எல்லா தெய்வங்களுமே
ஒன்னுதான்..."
என்பவர்கள் கூட
அந்த ஒன்றில்
வைக்கச் சொல்வது
அவர்கள்
வணங்குவதைதான்...
"அடச்சீ... இங்கு
எல்லா தெய்வங்களுமே
ஒன்னுதான்..."
என்பவர்கள் கூட
அந்த ஒன்றில்
வைக்கச் சொல்வது
அவர்கள்
வணங்குவதைதான்...
பொம்மிக்கு,
நீ எங்கள்
பிரார்த்தனையின் பலன்
என்கிறார்கள்
எப்படி தெரியும்
அவர்களுக்கு
எங்கள்
ஆன்மாவின்
நூற்றாண்டு கால
பிரார்த்தனையே நீதானே....
#பொம்மி #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
இங்கு
யார் காலிலும்
யாரும் விழக்கூடாது
என்கிறார்கள்
அவர்களின் கால்களை
தொட்டு
கூம்பிட்டு
நாம்
பல்லிளிக்கும் வரை
யார் காலிலும்
யாரும் விழக்கூடாது
என்கிறார்கள்
அது அவ்வளவு
மரியாதை இல்லையாமே...
அரைமுழுக்க
ஆயிரம் புத்தகங்கள்
இருந்தாலும்
நமக்கு தேவைப்படும்
ஏதோ ஒரு
புத்தகத்தை மட்டும்
நண்பனொருவன்
எப்போதோ
இரவல் வாங்கி
காணாமல் போயிருப்பான்...
அரசியலில் இருக்கும் இலக்கியவாதியை
கண்டுகொள்ளலாம்
இலக்கியத்தில் இருக்கும் அரசியல்வாதியை
அவ்வளவு எளிதாக
அடையாளம் காண முடியாது
முதல் வகைக்கு
தன்னை வெளிகாட்டுவதுதான்
விளம்பரம்
இரண்டாம் வகைக்கு
தன்னை வெளியில் காட்டாததுதான்
வியாபாரம்
இருவருக்குமே
நாம்தான் வாடிக்கையாளர்கள்
பல சமயங்களில்
வேடிக்கையாளர்கள்...
வாழ்வதற்கான
பால பாடங்களில்
முதன்மையானது
எவ்வளவு வலித்தாலும்
கண்களைத் துடைத்துவிட்டு
எல்லா பற்களையும் காட்டி
"அப்பாவுக்கு வலிக்கல பொம்மி..."
என்றதும்
பொம்மி நம்பிவிடுவது போல
நாமுமே நம்மை
நம்பிவிட வேண்டும்
வலிக்கவில்லை என....
சரி சகாவே
நாம் தோற்றுவிட்டோம்
அவர்கள் ஜெயித்துவிட்டார்கள்
அதனால் என்ன
வா
கொஞ்ச தூரம்
நடக்கலாம்
கொஞ்ச நேரம்
ஏதாவது புத்தகத்தை வாசிக்கலாம்
முடிந்தால் கவிதை எழுதலாம்
பிறகு
அப்படியே
நிம்மதியாய்த் தூங்கலாம்
காலை சூரியன்
வந்துதான்
நம்மை எழுப்பி விடட்டுமே....
#தயாஜி
சாமானியன் செய்யும்
தப்புத்தவறுகளுக்கு
கடவுள் அவர்களை
மன்னிக்கவே மாட்டார் என்கிறீர்கள்
மதவியாதிகள் செய்யும்
தப்புத்தவறுகளுக்கு
கடவுள் அவர்களை
ரொம்பவும் சோதிக்கிறார் என்கிறீர்கள்
ஏன்
இந்தக் கடவுள்
எங்களைச் சோதித்து
அவர்களை மன்னிக்காமல்
இருக்க மாட்டரா?
நமது கைகள்
ஓங்கியிருக்கும்போது
நாம் விட்டுக்கொடுத்ததும்
நாம் மன்னித்து விட்டதும்
நமது கைகள்
வலுவிழந்தப்பின்
அர்த்தமற்றாதி
நம்மை நோக்கி
ஏளனப்புன்னகையை
கொடுக்கத் தொடங்குகின்றன
மழையோ புயலோ பூகம்பமோ
அதன் விருப்பத்தில் வந்து
சென்ற பின்
ஒருவன்
தன் விலை உயர்ந்த காரும்
தனக்கு மட்டும் கட்டிகொண்ட
நான்கு தூண் மாளிகையும்
தீயில் கருகியதைச் சொல்லிச்சொல்லி
அழுதபடி
மீதமுள்ள காஸ்ட்லியான
வைனில் மூழ்கி தன் துக்கத்தைப்
போக்கி கொள்கிறான்
அவனது எரிந்து சாம்பலான
நான்கு தூண் மாளிகைக்குள்
தன் குடும்பம் உண்பதற்கு
ஏதும் கிடைக்குமாவென்று
நேற்றிலிருந்து
சாம்பலோடு சாம்பலாக
மூழ்கிய
இன்னொருவன்
எப்போதும் போல பசியோடு
மூச்சு திணறிக்கொண்டிருக்கிறான்
இங்கு
எது யாருக்கு இடர்
எது யாருக்கு பேரிடர்
சகாவே
சமீபத்திய செய்தி
பார்த்தாயா?
இந்தோனேசியாவில் ஒரு முதலை இருக்கிறதாம்
மனிதர் போலவே
கைகளை மட்டும் காட்டி
தூரத்தில் நமக்கு
உதவிக்கான
தோற்றத்தை கொடுக்குமாம்
கடலில் தெரிந்த கையை
காப்பாற்ற சென்ற
மனிதர்களே
அன்றைக்கான உணவாம்
எவ்வளவு சாமர்த்தியசாலி
அந்த முதலை
இந்தோனேசியாவில் மட்டுமா
அந்த முதலைகள் இருக்கின்றன
சகாவே
நன்றாக யோசித்துப்பார்
அப்படி உதவி கேட்டு
நம்மை உணவாக்கிக் கொள்வது
வெறும் முதலைகள்
மட்டும்தானா...
கொண்டாட்டங்களைக்
குற்றங்களாக்கி
நாம் விரட்டி விட்டதால்
குற்றங்கள்
கொண்டாட்டங்களாகி
நம்மை விரட்ட தொடங்கிவிட்டன
மத்தாப்புகளைப் பிடித்த கைகள்
வெடிகுண்டிற்கு பழகிவிட்டன
எப்படி தொலைக்கிறோம்
என்பதெல்லாம்
தெளிவாக தெரிவதே இல்லை
உறங்கி
விழித்ததொரு நாளில்
மறைந்து போன
புதிரான கனவால்
நாள் முழுக்க
புலம்பி கொண்டிருப்பது மாதிரி
நன்கு பழகியவர்கள்
எப்படி பகைவராகிறார்கள்
என
குறிப்பாய் அறிந்திட
எந்தவொரு குறிப்பும் இல்லை
புலம்பியும்
ஒன்றும் ஆகப்போவதில்லை
விலகல் நல்லதுதான்
நமக்கு நாமே
சொல்லிக்கொண்டாலும்
என்றாவது ஒருநாள்
தூக்க கலக்கம் போல
வார்த்தைகளில் வராத
துக்க கலக்கத்தில்
உனக்காக நானும்
எனக்காக நீயும்
பேசியிருப்போம்
நாம் பிரியாமலேயே இருந்திருந்தால்
கண்கள் கலங்குகின்றன
மூக்கின் இடைவெளியை மறந்து
கண்ணீராவது
இருகண்ணிலும் ஒன்றுபோலவே
வழிந்தோடட்டும்
உண்மைகளை
உரக்க சொல்வது
பலரின்
உறக்கத்தைக் கெடுக்கும்
சமயங்களில்
சொன்னவரின் உயிரையும் குடிக்கும்
உயிர்ப்பிழைக்க
கண்டுவிட்ட உண்மைகளில்
சில சொட்டுகள்
கற்பனைகளைக் கலந்துவிட வேண்டும்
சொட்டு நீலம் போல
சொட்டு கற்பனைகள்
உண்மைகளை பார்ப்பதற்கு கூடுதல் அழகாக்கும்
உண்மைக்கும் கற்பனைக்கும்
இடையில் தோன்றும்
மெல்லிய கோட்டை
ஒருபோதும்
தெளிவுப்படுத்தக் கூடாது
தெளிவின்மைதான்
இங்கு பலரின்
முகங்களுக்கு உத்திரவாதம்
உலகின்
ரொம்பவும் அரியவகை
உயிரினம் கண்டுபிடிக்கப்பட்ட
மறுநாளே
நோய்த்தொற்றில்
அது சாவதும்
அதன் தோலும் நகமும் பல்லும்
வாலும் சதையும்
கள்ளச்சந்தையில் விற்பக்கடுவதும்
பல கோடி கொடுத்து
அது வாங்கப்படுவதும்
உண்மையில் கலந்த
எத்தனை சதவித கற்பனை
என
இங்கு யாருக்குமே அக்கறையில்லை..
2025-ஆம் ஆண்டின் சிறுபகுதியைக் கடந்துவிட்டோம். இந்த ஆண்டில் நமக்கு கொடுக்கப்பட்ட நாட்களில் நான்கில் ஒரு பகுதி முடிந்தது.
கடந்த மூன்று மாதங்களில் பல சிக்கல்களுக்கு மத்தியில் வழக்கம் போல வாசிக்கவும் முடிந்தது.
திட்டமிட்டபடி மாதம் ஒரு நாவலென மூன்றாவது நாவலையும் வாசித்து முடித்தேன். அதோடு நடுகல்.காமிற்கு எழுதும் மாதாந்திர தொடரான 'மாதம் ஒரு மலேசிய புத்தகத்திற்காக' மூன்று புத்தகங்களை வாசித்திருந்தேன். தொடர்ந்து இத்தொடருக்காக ஒன்பது புத்தகங்களை வாசிக்கவும் சிலவற்றை மீள்வாசிப்பு செய்யவும் வேண்டியுள்ளது.
இன்றையச் சூழலில் ஒரு வாசகனுக்கும் ஓர் எழுத்தாளனுக்கும் ஊக்கமும் உற்சாகமும் கொடுக்க கூடிய வார்த்தைகள் ரொம்பவும் முக்கியம். அதைவிட முக்கியம் முதற்கட்டமாக அந்த வார்த்தைகள் நம்மிடம் இருந்தே நமக்கு வரவேண்டும்.
என்னை நான் உற்சாகப்படுத்தும் இந்த நேரத்தில் நீங்களும் உற்சாகம் கொள்வீர்கள் என்பதற்காக இந்தப் பதிவில் இதுவரையில் வாசித்த புத்தகங்களைப் பகிர்கின்றேன். நீங்களும் இதுவரையில் வாசித்ததைப் பகிருங்கள். நம் இரு தரப்பிற்குமான உரையாடல் அதன் வழி தொடரட்டும்.
எனது இந்த பகிர்வில் ஒவ்வொரு புத்தகத்திற்கும் என் வாசிப்பையொட்டிய சிறு குறிப்பையும் சிலவரிகளில் எழுதுகிறேன்.
எனக்கு உதவியாகவும் உற்சாகமாகவும் அமைந்த, நான் வாசித்த நண்பர்களின் புத்தக அறிமுகம் போல எனது இச்சிறு குறிப்பும் ஏதாவது ஒரு வகையில் புத்தகங்களை நேசிக்கும் உங்களுக்கும் பயனாய் இருக்கும் என நம்புகின்றேன்.
மாதம் ஒரு நாவல் வாசிப்பு திட்டத்தில் வாசித்தவை:-
1. காதலின் நாற்பது விதிகள்.
- ரொம்பவும் பிடித்த நாவல்களில் இதுவும் அடங்கியது. நாவல் நகர்ந்த விதமும் நாவலுக்குள் நாவலாக விரிந்து சென்ற கதைகளும் கதாப்பத்திரங்களின் குரல்களும் வாசிப்பில் கவர்ந்தது. ரூமி என்னும் மகாகவி சமய போதகராக இருந்து கவிஞராக மாறும் மாற்றம் கவிதையாகச் சொல்லப்பட்டுள்ளது.
2. ஜின்களின் ஆசான்.
- வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கக்கூடிய கதை. சுவாரஸ்யமாக சொல்லப்பட்ட நாவல். துப்பறியும் பாணியில் ஒரு ஆன்மீக பயணம் என இதனைச் சொல்லலாம். ஜின் தேடி மனிதர்கள் போகிறார்கள். ஜின்களின் அரசனை சந்திக்கின்றார்கள். அதன் பின் நடந்தது என்ன என்பதை மீண்டும் நினைவுக்கூர்கிறது இந்நாவல்.
3. விசித்திரங்களின் புத்தகம்.
- காணாமல் போன நூலகரைத் தேடுவதில் தொடங்கிய கதை, மெல்ல மெல்ல அத்தேடல் அகத்தேடலாய் மாறி தனக்கான ஆன்மீக குருவைத் தேடும்படி பரிணமிக்கும் கதை. தன் ஆன்மீக பயணத்திற்கான சரியா குருவை நாயகன் கண்டடைந்தானா இல்லையா என்பது மீதிக்கதை.
இம்மூன்று நாவல்களையும் ரமீஸ் பிலாலி மொழிபெயர்த்துள்ளார். மூன்றுமே சூஃபி நாவல்கள் என்பது இந்த நாவல் வாசிப்பிற்கான என் உந்துதல். அடுத்த வாசிப்பிற்கான சில புத்தகங்களை இதன் அடிப்படையிலேயே தேர்வு செய்துள்ளேன்.
அடுத்ததாய்க் கவிதைகள்
4. யாருமற்ற நிழல் - தேவதச்சன்
5. என் ஓவியம் உங்கள் கண்காட்சி - கல்யாண்ஜி
6. வாழ்க்கைக்கு வெளியில் பேசுதல் - இசை
7. கடல் காற்று கங்குல் - மின்ஹா
8. நாங்கூழ் - முன்ஹா
9. தாகங்கொண்ட மீனொன்று - ரூமி (என்.சத்தியமூர்த்தியின் தமிழாக்கம்)
10. ரூமியின் வைரங்கள் - ரமீஸ் பிலாலியின் தமிழாக்கம்
இந்தக் கவிதைத் தொகுப்புகள் ஒவ்வொன்றுமே முக்கியமானவைதான். அதன் மொழிக்கும் அது சொல்ல எடுத்துக்கொண்ட கவிக்கும் அவை முக்கியத்துவம் பெறுகின்றன. தொடர்ந்து கவிதைகளை எழுதுகிறேன். இந்தக் கவிதைத் தொகுப்புகள் தனிப்பட்ட முறையும் எனக்கு உதவின. மூத்த படைப்பாளி இளம் படைப்பாளி மொழிபெயர்ப்பு என்ற மூன்று தரப்புகளில் இருந்து வாசித்த இந்தக் கவிதைகள் வாசிப்பின் இன்பத்தைக் கூட்டின.
அடுத்ததாய்க் கட்டுரைகள்/கதைகள்
11. கவிதை: இன்று முதல் அன்று வரை - வண்ணநிலவன்
- 20 தமிழ்க் கவிஞர்களின் கவிதை உலகைக் குறித்த அறிமுகமும் விமர்சனமும் அடங்கிய தொகுப்பு. சிலரை அறிமுகம் செய்தததோடு பல கவிஞர்களைப் புரிந்து கொள்ளவும் உதவியது.
12. என்றார் சூஃபி - ரமீஸ் பிலாலி
- சூஃபிசத்தைச் சொல்லும் குரு சிஷ்ய உரையாடலாக இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் எழுத்தாளர். ஒவ்வொன்றும் ஓரிரு பக்கங்களில் முடிந்து நம் சிந்தனையில் இன்னொரு பக்கத்தை எழுதிச்செல்கின்றன.
13. பண வாசம் - குரு மித்ரேஷிவா
- எது செல்வம், எப்படி அடைவது, அதனை அடைவதற்கான மனநிலை என்னவாக இருக்க வேண்டும் என்பதற்கான அடிப்படை கருத்துகளைச் சொல்லும் புத்தகம்.
அடுத்து 'மாதம் ஒரு மலேசிய புத்தகம்' தொடருக்காக வாசித்தவை
14. ஆதி.இராஜகுமாரன் சிறுகதைகள்
- ஜனவரியில் இந்தப் புத்தகத்தில்தான் தொடரை தொடங்கினேன்.
15. அகப் பறவை - பூங்குழலி வீரன்
- எனக்கு பிடித்த மலேசிய கவிஞர்களில் ஒருவர்.
16. ஜீவானந்தன் சிறுகதைகள்
- தொடர்பு துறையிலும் எழுத்திலும் நான் என் முன்னோடிகளாக நினைப்பவர்களில் ஒருவர்.
17. பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது - பா.அ.சிவம்
- மொழிபெயர்ப்பு கவிதைகள்
- என்றும் நம் மனதைவிட்டு நீங்கா கவிஞர் பா.அ.சிவத்தின் எழுத்துகளுக்கு என் அன்பு
இந்த நான்கு மலேசிய புத்தகங்கள் குறித்த விரிவான அறிமுகத்தை நடுகல்.காமில் எழுதியுள்ளேன். நண்பர்கள் அங்கு சென்று வாசிக்கலாம்.
மார்ச் மாதம் வரை வாசித்த புத்தகங்கள் இவை. வாசிப்பில் எத்தனை புத்தகங்களை வாசிக்கின்றோம் என்பதை விட 'வாசிக்கிறோமா?' என்கிற கேள்விதான் முக்கியம் என நம்புகின்றவன் நான். தினம் ஒரு பக்கத்தை புரிந்து ரசித்து வாசித்தாலும் கூட நாம் வாசகர்கள்தான்.
இந்த ஆண்டின் முதல் பகுதியை முடித்து இரண்டாம் பகுதிக்குள் நுழைகின்றோம். அடுத்த மூன்று மாதங்களில் வாசிப்பின் ருசி என்னவாக அமைகிறது என பின்னர்தான் தெரியவரும். வாசிப்போம்.
உங்களுக்கு எப்போதும் என் அன்பு...
என் வயது
நண்பர்களை பார்ப்பதில்
எனக்கொரு பயம் இருக்கிறது
குறிப்பாக
அவர்கள் என்னுடன் படித்த
நண்பர்கள் என்றால்
ஒரு பீதியும் உடன்
வந்துவிடுகிறது
அவர்கள் பேச வேண்டிய
அவசியம் கூட தேவையில்லை
அவர்களைப் பார்த்தாலே
நான் நடுங்குகின்றேன்
நேற்று காலை
யாரோ யாரையோ
பெயர்ச் சொல்லி அழைத்தார்கள்
நான் ஆடிப்போய்விட்டேன்
அந்தப் பெயரின் ஆள்
அங்கில்லை
அது வேறு ஆள்
ஆனால் அந்தப் பெயர்
என் பால்ய நண்பனின்
பெயர்
என் அருகில் அமர்ந்திருந்தவன்
என் உணவில் பங்கு எடுத்தவன்
அவன் தண்ணீரில் என் தாகம் தீர்த்தவன்
ஒவ்வொரு முறை
பரிட்சையின் போதும்
மாற்றி மாற்றி காப்பியடித்து
மாட்டிக்கொள்வோம்
ஒருபோதும் பாஸ் ஆகியதில்லை
அவனும் நானும் சேர்ந்து
செய்த சாகசங்கள் அதிகம்
அவன் அதிகம் நம்பியது
என்னைத்தான்
நான் அதிகம் ஏமாற்றியது
அவனைத்தான்
அவனை மட்டுமல்ல
என் வகுப்பு நண்பர்கள்
எல்லோரையுமே நான்
ஏமாற்றியுள்ளேன்
என் வீட்டில் ஒரு
டைனோசர் இருப்பதாக
சொன்னதை அவர்கள்
நம்பாமல் இருந்திருக்கலாம்
தினம் என்னிடம்
டைனோசர் பற்றி இரகசியமாக
விசாரித்தார்கள்
அதன் குறும்புகளைச் சொல்ல
அவர்கள் இரசித்தார்கள்
தொல்லை தாங்காது
ஒருநாள்
டைனோசர் இறந்துவிட்டதாகச் சொல்லிவிட்டேன்
என்னைவிட அவர்கள்தான்
அதிகம் அழுதார்கள்
அதன் சமாதிக்கு அழைத்துப்போவதாய்ச்
சொல்லிச்சொல்லியே
வருடங்கள் நகர்ந்து
நாங்களும் நகர்ந்து
வளர்ந்தும் விட்டோம்
இன்றுவரை அந்தப் பொய்
என்னைத் துரத்திக்கொண்டே இருக்கிறது
என்றாவது ஒருநாள்
நாங்கள் சந்திப்போம்
அவர்கள் விசாரிப்பார்கள்
நான் மாட்டிக்கொள்வேன்
டைனோசர் அளவிற்கு
ஒரு சமாதியை நான்
இதுவரையில் கண்டதில்லை
நிச்சயம் நான்
மாட்டிக்கொள்ளத்தான் போகிறேன
👉நடுகல்.காமின் 'மாதம் ஒரு மலேசிய புத்தகம் - 4'
'பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது' பா.அ.சிவத்தின் மொழிபெயர்ப்பு கவிதைகள்.
மலேசிய இலக்கியச் சூழலில் நாங்கள் இழந்துவிட்ட கவிஞர்களில் பா.அ.சிவமும் ஒருவர். இளம் வயதிலேயே விபத்தில் சிக்கி காலமானார். இன்றும் கூட அவரது கவிதைகளும் மொழிபெயர்ப்புகளும் ஆங்காங்கே தொடர்ந்து வாசிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அவரின் மறைவு பெரிய இழப்பாகத்தான் இன்றும் கருதப்படுகின்றது. வாழ்ந்து கொண்டே மறைந்த படைப்பாளிகளுக்கு மத்தியில் மறைந்த பின்னரும் தன் படைப்புகளால் பேசப்படும் படைப்பாளிகளில் ஒருவர் பா.அ.சிவம்.
இன்று இந்த கட்டுரையை உங்களைப் போலவே அவரும் எங்கிருந்தோ வாசிக்கிறார் எனவே நம்புகிறேன். அதோடு “நல்லாருக்குங்க தம்பி. இன்னும் நல்லா எழுதுங்க….” என வழக்கம் போல அவர் சொல்வதாகவே கேட்கிறேன்.......
நண்பர்கள் வாசித்து உங்கள் பார்வையையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்வோம்...
இணைப்பு
https://nadukal.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%ae-4/?sfnsn=wa
என் கவிதைகள்
உங்களை
ஆறுதல் படுத்துவதாகச் சொல்லி
எழுதியெழுதி
என்னை நானே
ஆறுதல் படுத்திக்கொள்கிறேன்
எந்தவித
குழப்பமும் இல்லாமல்
கவிதைகள் வந்து நிற்கின்றன
நான் மட்டும்
வார்த்தைகளின் இடைவெளியில்
சிக்கி
வழியறியாது தவிக்கின்றேன்
தண்ணீரில் பிறந்து
தண்ணீரிலே இறக்கும்
உப்பென
கண்ணீரில் கரைந்து
கண்ணீரிலே பிறக்க
கவிதைகள்
உண்டு இங்கு
கவிதைகளின் இடைவெளிக்கு
கடவுளாலும்
ஒரே பொருளை
வைக்க முடியாது
அது கண்ணுக்கு கண்
மாறி
கண்டறியும் பொருளுக்கு
பெயர் வைத்துக்கொள்கிறது
ஒரே பெயரில்
பல முகங்கள்
கவிதைகளுக்கு உண்டு
சொற்களில் மட்டுமல்ல
சொற்களுக்கிடையே சிதறும்
இடைவெளியிலும்
ஆயிரம் அர்த்தங்கள்
குறைந்தபாடில்லை...
தன் வாழும்நாள் முழுக்க
சொந்தமாய்
வீடொன்று இல்லாத ஒருவனின்
இறுதி ஊர்வலம் அது
வாடகை கட்டியே வாழ்க்கையைத்
தொலைத்தவன் அவன்
வாடகை கட்டாமல் வசைகளைச்
சுமந்தவன் அவன்
வீடே இல்லாமல்
சாலையோரத்தில்
சாய்ந்திருந்தவன் அவன்
இரவு நேரம் மட்டும்
கூரையுள்ள பேருந்து நிலையத்தில்
அவனைப் பார்க்கலாம்
பனியோ மழையோ புயலோ பூகம்பமோ
அவன் எங்கிருப்பான் என
அவனுக்கும் தெரியாது
இருந்தால்
மறுநாள் அவனைப் பார்க்கலாம்
இன்னமும் வாடகை வீடுதானா
என்ற கேள்விகளால்
அவமானப்பட்டவன் அவன்
வீடீல்லாத ஆண்களை நம்பி
எப்படி பெண் கொடுப்பதென
எல்லோரும் கேட்பதால்
பிரம்மச்சாரியானவன் அவன்
வீடே இல்லாததால்
வீட்டில் வளர்க்க எதையுமே
வாங்கவில்லை
அவனுக்கு அவன்தான் செல்லப்பிராணி
அவனுக்கு அவனே
கொல்லும் பிராணி
வீடற்றவனின் பிணத்தை
எடுத்துச்செல்லும்
இரண்டாவது வரிசை வீடுகள்
முழுக்க
காலியாக
புதர்கள் மண்டி
கண்ணாடிகள் உடைந்து
சுவர்களெல்லாம் பாசி படர்ந்து
வாசல் கதவுகள் இத்துப்போய்க்
கிடக்கின்றன
இறுதி ஊர்வல பயணி
இதன் பிறகும்
நிம்மாதியாய் விடைபெறுவானா
வாழும் போது மட்டுமல்ல
வாழ்ந்து முடித்த பின்னும்
பதில் கிடைக்காத
கேள்விகளுக்காகத்தான்
மீண்டும் மீண்டும் பிறந்து
மீண்டும் மீண்டும் சாகிறோம்
வீடில்லாத மனிதர்களையும்
மனிதர்கள் இல்லாத வீடுகளையும்
நாணயத்தில்
இருபக்கங்களாக செதுக்கிச்
சென்றவன் எவன்
மனிதரற்ற வீடுகளின்
மரண ஓலங்கள்
உங்கள் காதுகளில் விழுவதில்லையா..
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
அது ஒரு
வித்தியாசமான கனவு
என்னைச் சுற்றிலும்
எத்தனையோ பேர்
வருகிறார்கள் போகிறார்கள்
நன்கு கொழுத்த தேகத்தில்
அவர்கள் பக்கத்தில் நான்
துரும்பிலும் துரும்பென
சுருங்கி கிடக்கிறேன்
என் முன்
நீண்டதொரு சாப்பாட்டு மேசை
முழுக்க முழுக்க
உணவுகளால் மூழ்கடிக்கப்பட்டிருந்தது
உலகின் ஒட்டுமொத்த
உணவு வெள்ளத்தின் முன்னே
நானும் நீந்தி போக
வேண்டும்
கடலில் விழுந்தவன்
ஆக கடைசியாய்க்
கைகளை மட்டுமே
தூக்கி காட்ட முடிந்தவன் போல
ஏதோ ஒரு பெயர் தெரியாத
தின்னத்தகுந்த தாவர இலைகளின்
தலைகள் மேஜையெங்கும்
ஆங்காங்கு துடித்தபடி தெரிகின்றன
இத்தனை இருந்தும்
எனக்கு பசியில்லை
வண்ணமடித்த
இரவுகளில் மட்டுமல்ல
வண்ணமிழந்த
என் பகல்களிலும்
கைக்கு கிடைத்த மிச்சமீதிகளைப் பார்க்கையில்
இப்போதுமே பசிப்பதில்லை
கனவில் கூட
காலத்தோடு வயிறை
நிறைக்க தெரியாத
ஏமாளிகளில் நானுமே ஒருவன்
ஒரு நிலத்தில்
பெரும்பான்மை மனிதர்கள்
எதற்காக கொண்டாடப்படுகிறார்களோ
எவர்களை பந்தாடுகிறார்களோ
எப்படி ஏளனப்படுத்துகிறார்களோ
இன்னொரு நிலத்தில்
சிறும்பான்மை மனிதர்கள் அதற்காகவே திண்டாடப்படுகிறார்கள்
அடுத்தடுத்து பந்தாடப்படுகிறார்கள்
அப்படியே ஏளனப்படுகிறார்கள்
நிலமென்பது
எதையும் புதைப்பதற்கு மட்டுமல்ல
எவரும் கைக்கோர்த்து வாழ்வதற்கும்
என்பதனை
இன்னும் எத்தனை இலக்கியங்களில் சொன்னால் கேட்போம்
வீடும் வாசலும்
வேறென்றபோதும்
நீயும் நானும்
வாழும் தேசமென்பது ஒன்றுதானே
ஆதிக்கங்களை விரட்டிவிட்டு
இன்று
அரசியலில் சிக்கி கொண்டோம்
இது உன் தேசமும் அல்ல
இது என் தேசமும் அல்ல
உன்னை என்னையும் நம்பி
உயிர் விட்ட
நம் முன்னோர்களின் நேசம்
அது
ஒருபோதும் பொய்க்காதிருக்கட்டும்....
இன்றொருநாள்
ஓய்வெடுக்கலாம் என
உறங்க நினைத்தால்
உள்ளுக்குள்ளிருந்து கனவொன்று
எக்கி குதித்து
வெளியே வருகிறது
சிறுவயதின் கனவது
ரொம்பவும் பிடித்த கனவது
எப்போதெல்லாம் பரீட்சையில்
லட்சியம்
எதிர்கால ஆசை என
எழுதச் சொல்லி கேட்கிறார்களோ
அப்போதெல்லாம்
அச்சு அசலாய்க்
கொஞ்சமும் பிசகாமல்
ஒரே மாதிரி எழுதி எழுதி
புள்ளிகளுக்கு பதிலாய்த்
திட்டுகளை வாங்கியிருக்கிறேன்
இதெல்லாம் ஒரு கட்டுரையா
என
கிழித்தும் எறியப்பட்டேன்
ஆசைகளெல்லாம் நிராசையாய்
மாறிவிட்ட
இன்றைய நாட்களில்
எதிர்காலம் என்பது
இன்றிரவுக்கான சாப்பாடு
என சுருங்கிவிட்ட வாழ்க்கையில்
கனவாவது கண்ணீராவது
எல்லாமே காய்ந்து போவதற்குத்தான்
குழந்தைகளிடம் ஒருபோதும் எதிர்கால ஆசைகளைக்
கேட்டு
ஏளனமாய்ச் சிரிக்காதீர்கள்
உங்கள் பல் பட்டு
பாழாய்ப் போன கனவுகளின்
நகல்களை நாங்கள்
தினம் தினம் பார்த்து
பயப்படுகின்றோம்
சிறுவயதின் கனவை
எங்கள் வாழ்நாளின் சாபமாக
மாற்றிவிடாதீர்கள்
இதுநம்நாடு
இது நம் நாடு
இ து நம் நாடு
இ து ந ம் நாடு
இ து ந ம் நா டு
இ து ந ம் நா டு
இ +@(&*:]@?#&#-@(@(℅©©=¢[> டு
பசிக்கிறதா என
கேட்காமல்
பசிக்கிறது எனவும்
சொல்லாமல்
தட்டு நிறைய
எதையாவது எடுத்து
வாயில் தினிக்கும் கைகளுக்கும்
வாயில் தினித்த
எல்லாவற்றையும் தின்று தீர்க்கும் வாய்களுக்கும்
இருக்கும் உறவை
புரிந்து கொள்ள
தாயாகவும் சேயாகவும்
இருக்க வேண்டுமென்பதில்லை
கொடுக்கும் கையாகவோ
கேட்கமுடியாத வாயாகவோ கூட
இருக்கலாம்....
பழைய சட்டையில்
எப்போதும் போல
உன் நினைவுகள்
அங்கொன்றும் இங்கொன்றும்
நூல்களென பிரிந்து
கிடக்கின்றன
என்னையும் உன்னையும் போலவே x2
எப்படி திணித்தாலும்
உள்நுழையாத
நூல் பஞ்சுகளாய்
எப்படி தள்ளினாலும்
வெளியேறாமல் நிற்கும்
நினைவுகளின் நஞ்சுகளை
என்ன செய்யலாம்
எப்படி சமாளிக்கலாம்
ஆலகால
நஞ்சென்ற போதும்
அது
சென்ற தூரம் போதுமென
தொண்டையில் பதுக்கி
ஊதாவில் வண்ணம் பூசி
மறைத்து நின்று
போஸ்டர்களில் சிரிக்கலாம்
இது
காதல்கால நஞ்சன்றோ
தொண்டை முதல் கெண்டை வரை
நஞ்சுப்பூ
பூத்து குலுங்கியும்
வீழ்ந்து சிதறியும்
உள்ளத்தை வதைக்கிறது
உணர்வுகளால்
உடலையும் சிதைக்கிறது
பார்த்து பழகிய
பழைய சட்டைக்கே என்னை
அடையாளம் தெரியவில்லை
காதல்தான் இல்லை
கொஞ்சம் கூடவா கருணையும் இல்லாமல் போனது
அச்சட்டை இன்று
அளவில் பெரிதாகி என்னை
அப்படியே விழுங்கி விழுங்கி
துப்புகிறது
வெறெந்த ஆடையிலும்
மனம் மட்டும் ஏனோ
நிர்வாணமாய்த் தவிக்கிறது
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
எல்லா கடவுள்களையும்
வரிசையாய் நிறுத்தி
யாருக்கு பலமதிகம் என்று
சோதிக்க
எந்தப் பக்தனுக்கு
அந்த இடத்தில்
அதிகாரம் அதிகமாய் இருக்கிறதோ
அந்தக் கடவுளே
தன்னை பலசாலி என
பிரகடனம்
செய்து கொள்கின்றன
செய்தும் கொல்கின்றன
ஆகவேதான்
மதத்தை பழித்தால்
இங்கு தண்டனை
அது யார் மதம்
என்பதுதான்
முதல் நிபந்தனை
தற்கொலை செய்துகொண்டவளின்
கடிதம் ஒன்று
கைக்கு கிடைத்தது
ரொம்பவும் நிதானமாக
அவளதை
எழுதியிருக்கக்கூடும்
ரோஸ் காகிதத்தில்
ஒவ்வொரு மூலையிலும்
ரோஜா பூத்திருக்குமே
அந்தக் காகிதத்தை
எடுத்திருந்தாள்
அதையும் அவள்
பிள்ளையார் சுழியில்தான்
தொடங்கியிருந்தாள்
தன்னைக்
காப்பாற்றாத கடவுளுக்கு
எந்த கூந்தலுக்காக!
வணக்கம் வைத்து
தொலைக்கிறாள் என
கோவம்கோவமாக வந்தது
என்னென்ன நினைத்தாலோ
அதையெல்லாம்
எதையெல்லாம் மறைத்தாலோ
அதையெல்லாம்
எப்போதெல்லாம் அழுதாலோ
அதையெல்லாம்
வரிசை கட்டி எழுதியிருந்தாள்
கொலைகாரியாகாமல்
தற்கொலையாளி ஆவது
மேலென நினைத்தவள்
எதையோ குடித்திருந்து
உயிரை முடித்திருந்தாள்
கடவுள் மீது ஒட்டியிருந்த
கொஞ்சநஞ்ச கடைசி பக்தியால் என்னவோ
அவளது நான்கு வயது குழந்தையை
அப்படியே விட்டுவிட்டுதான் போயிருக்கிறாள்
அதுவரையாவது
தன் நம்பிக்கையைக்
காப்பாற்றி கொண்ட கடவுளுக்கு
இன்னொரு பிள்ளையார் சுழியையும் போட்டுத்தொலைக்கலாம்...
எனக்கு என்னிடம்
மிகவும் பிடித்தது
என் குரல்
ஆனால்
அது முக்கியமல்ல
எப்போதிருந்து பிடிக்கிறது
என் சொல்கிறேன்
அதுதான் முக்கியம்
ஒருநாள்
பேசியதற்காக
நாக்கில் சூடு வைத்தார்கள்
என்றாவது
பேசுவேன் என்பதற்காக
கழுத்தை நெரித்தார்கள்
இனியெப்போதும்
பேசக்கூடாது என்பதற்காக
வாயில் அமிலத்தை ஊற்றினார்கள்
அப்போதுதான்
புத்தி வந்ததெனக்கு
இந்த உலகில் நான்
முதலாவதாகவும் முழுமையாகவும்
நேசித்து
பாதுகாத்து
பரப்ப வேண்டியது
என் குரலைத்தான்
அதுதான் என் அடையாளம்
நான் சொல்லப்போவதுதான்
என் வரலாறு
எந்த உயரத்திற்கும்
அது கேட்க வேண்டும்
எவர் உயரத்தையும்
அது அசைக்க வேண்டும்
எப்போதெல்லாம்
அதிகாரம் ஒன்றை அழிக்க
நினைக்கிறதோ
அப்போதெல்லாம்
அரிதாரம் பூசி ஆக்ரோஷம்
கொள்ள வேண்டும்
யுத்தங்களை முறியடிக்க
சத்தங்களைத் தயார் செய்வோம்
வானிடிக்க பேசுவோம்
வானமே இடிந்தாலும்
பாடுவோம்...
சர்க்கஸ் கோமாளியை
சிங்கம் கடித்து குதறுகிறது
மேடை முழுக்க
இரத்தம் தெறிக்கிறது
காணக்கிடைக்காத
முப்பரிணாம
ஓவியக் காட்சி போல
சட்டகத்தில் இருந்து
பல்வேறு நிலையிலான
சிவப்பு வண்ணங்கள் வழிந்து
பார்வையாளர்களின்
நாற்காலி கால்களை நனைக்க
அரங்கமே கைத்தட்டி
ஆர்ப்பறிக்கிறது
கோமாளியென்றால்
குறும்புகள் செய்து சிரிக்க வைப்பான்
என
காலம்காலமாகப் பார்த்து
பழகிய பொதுஜனத்திடம்
வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்
அவர்களுக்கு
சிங்கத்தின் பசியும்
ஒன்றுதான்
கோமாளியின் பசியும்
ஒன்றுதான்
இரண்டுமே அவர்களைச்
சிரிக்க வைக்கும் யுக்திகள்
அவ்வளவுதான்...
'போடா நாயே...!'
கையடக்கத்திரையைத்
தட்டித்தடவி வார்த்தைகளைச்
சேர்க்கும் போதே
மனமும் சேர்ந்து அதிர்கிறது
துணுக்குறுகிறது
ஏறக்குறைய இதுவும் கூட
பாதி கிணறு தாண்டிய
வசை சொல்தான்
அந்தரத்தில் தன் சுயம்
தெரியாது
மிதந்து மிதந்து
தப்பித்துக்கொள்கிறது
அம்மா சொன்னால்
ஒருமாதிரி கேட்கும்
அப்பா சொன்னால்
ஒருமாதிரி கேட்கும்
காதலி சொன்னால்
ஒரு மாதிரி கேட்கும்
அண்ணன் சொன்னால்
அக்கா சொன்னால்
தம்பி சொன்னால்
தங்கை சொன்னால்
நண்பன் சொன்னால்
நண்பி சொன்னால்
ஆசிரியர் சொன்னால்
அரசியல்வாதி சொன்னால்
என
ஆளுக்கு ஆள் சொல்லத்தான்
செய்கிறார்கள்
ஆனால் கோவம் மட்டும்
இன்னொரு சாமியை
கூம்பிடுபவன் சொன்னால்
சொன்னால் என்ன சொன்னால்
சொல்வான் என்று தெரிந்தாலோ
அவன்
சொல்ல முயன்றாலே
பொத்துக்கொண்டு வருகிறது
மொத்த கோவமும்
அதுவொரு வரலாற்று
பெருமிதம்
முதலில் அவனை
வெட்டி
வீசிவிட்டுதான்
உங்களோடு அளவலாவிக் கொண்டிருக்கிறேன்
இப்போது இந்த வார்த்தை
முழு கிணறையும் தாண்டிவிட்டது
நிச்சயமாய்ச் சொல்கிறேன்
இது 100 சதவிதம்
வசைதான்
எல்லாம் முடிந்துவிட்டது
என்பதாக
வட்சப்பில் செய்தி அனுப்பி
ப்ளாக் செய்துவிட்டவளிடம்
ஒரேயொரு கேள்வி
கேட்க வேண்டியுள்ளது
அவள் சொன்ன
'எல்லாம் முடிந்ததில்'
எதையெல்லாம்
சேர்த்து வைத்திருக்கிறாள்
எதையெல்லாம்
சேராமல் வைத்திருக்கிறாள்
எதையெல்லாம்
விட்டு வைத்திருக்கிறாள்
எதையெல்லாம்
விடாமல் வைத்திருக்கிறாள்
என்பதைதான்
எல்லாம் என்பது
எங்கள் இருவருக்குமே
வெவ்வேறு என இன்றுதான்
புரிந்தது
எனக்கு எல்லாம் என்பதும்
எல்லாமுமாக இருந்ததும்
அவள் மட்டும்தான்
அவளுக்கு எல்லாம் என்பது
இனி
என்னைத்தவிர்த்தது
ஒரே இடத்தில் நின்றாலும்
என் பக்கத்தில் பூ இருக்கிறது
அவள் பக்கத்தில் தலை இருக்கிறது
இடையில் சிக்கிய உடலோ
சிதைந்துகொண்டே போகிறது
அதனால்தான் கேட்க வேண்டும்
அவள் சொன்ன
'எல்லாம் முடிந்ததில்'
எதையெல்லாம் சேர்த்திருப்பாள்
பெரிதாக அலட்டிக்கொள்ள
அவசியம் உண்டா
சொல்லுங்கள்
எப்படியும் நம்மை
ஏமாற்றத்தான் போகிறார்கள்
அல்லது
நாமே சென்று
ஏமாறத்தான் போகிறோம்
வேறென்ன செய்ய
நமக்கு பழகிவிட்டது
இந்த ஏமாற்றங்கள் எல்லாம்
எங்கே
எப்போது
தொடங்கியது
என நமக்குதான் தெரியவில்லை
அவர்களுக்கு
மிகத்துள்ளியமாகத் தெரிந்திருக்கிறது
நம்மை காட்டிலும்
அதிகமாய் நம்மை கவனிப்பவர்கள்
அவர்கள்தான்
இவ்வளவு நெருக்கமாக கவனித்து
பின் தொடர்ந்த
நம்மையே அவர்களால்
ஏமாற்ற முடியுமெனில்
நம்மை போல ஏமாளி
யாராவது இருப்பார்களா
இப்போது கூட பாருங்களேன்
அவர்களை திட்டுவதற்கு பதில்
நம்மையே நாம் திட்டி கொள்கிறோம்
பாழக்கதோஷத்தில்
எமாற்றியவர்கள் எவ்வளவு
தூரம் செல்கிறார்களோ
செல்லட்டும்
என விட்டுவிடுவதுதானே
நம் இயல்பு
எப்படியும் திரும்ப வருவார்கள்
ஏமாற்றுவார்கள்
நம் மீது பழி சுமத்தி
அவர்கள் அழுவார்கள்
நாம் ஏமாறுவோம்
நாம்தான் தவறோ என
கண் கலங்குவோம்
அவர்களுக்கு ஆறுதல் சொல்லியே
அலுத்துப்போவோம்
அப்போது கூட
நமக்கெல்லாம் புத்திவராது
பழகிவிட்டது நமக்கு
பாழாய்ப்போக.....
#தயாஜி
ஏதோ ஒன்றை
இறுக்கமாக பிடிக்கத்தான்
வேண்டுமா?
இல்லையென்றால்
விழுந்துவிடுவோமா
அல்லது
தள்ளிவிடுவார்களா
தள்ளப்படுவதைவிட
தானே விழுவதில்
பெரிய பாதகமில்லை
ஆனாலும் பாதுகாப்பு அவசியம்
யாரின் கைகளை
நாம் பிடித்துக்கொண்டால்
தப்பிக்கலாம்
எவனொருவன் நம்
வீழ்ச்சியில் சிரிப்பானோ
நாம் விழுந்தால் ரசிப்பானோ
நம் இயலாமையை ருசிப்பானோ
அவன் கைகளைத்தான்
முதலில் பிடிக்கவேண்டும்
ரொம்பவும் இறுக்கமாக
பிடிக்க வேண்டும்
அந்தக் கைகள்
இனியெப்போதும் அசையாதபடிக்கு
அழுத்தி பிடிக்க வேண்டும்
நாம் நினைத்தாலன்றி
அந்தக் கைகள்
சிறிதேனும் அசையக்கூடாது...
பூக்களை நேசிப்பவர்களுக்கு
பூந்தொட்டிகள்
தேவையில்லை
மீன்களை நேசிப்பவர்களுக்கு
மீன் தொட்டிகள்
தேவையில்லை
பறவைகளை நேசிப்பவர்களுக்கு
கூண்டுகள்
தேவையில்லை
காதல் கவிதைகளுக்கு
காதல் தேவையில்லை என்பது போல
கவிதை எழுதுவதற்கு
கவிதையே தேவையில்லை என்பது போலவும்
ஒன்றைச்
சொந்தம் கொண்டாட
வடிவமும் சிறையும் பூட்டும் அநாவசியம்
சில நிமிடங்களில் அதனுடன்
லயித்திருந்தாலே போதும்
அதுதான் அவசியம்
அதுதான் வசியம்
வாழ்நாளுக்கான நினைவுகளை
அது தந்துவிட்டு செல்லும்
அந்தத் தாலாட்டும்
நாம்
வாழும் காலம் மட்டும்
பாடும்....
உண்மையைச் சொல்லுங்கள்
மறைக்காமல் சொல்லுங்கள்
அன்பின் பெயரால்
கூர்வாளை மார்பில் ஏந்தி
உடல்
உடைந்தூற்றும் உதிரத்தில்
பூக்களை மலர்விப்பவர்கள்
நீங்கள்தானே
வலிக்கவில்லை வலிக்கவில்லையென
சிரித்துக்கொண்டே செல்பவர்கள் நீங்கள்தானே
முழுக்க முட்டாளாக்கி
உங்களை உதாசினம் செய்பவர்களுக்காகவும்
நீங்கள் பிரார்த்திப்பீர்கள்தானே
அவர்கள் அறியாமல் செய்கிறார்கள்
என அழுகிறீர்களே
ஒரே ஒரு கேள்வியைக் கேட்கவா
உங்கள் உதிரம் குடித்து
வளர்ந்த செடிகளில்
இன்று
பூத்துக்குலுங்கும் பூக்களுக்கு
உங்களைக் கொஞ்சமாவது நினைவிருக்கிறதா?
இனியெப்போதும்
தொட்டுவிடவே முடியாத ஒன்றுக்கு
தொடுவானம் என பெயரிட்டவனிடம்தான்
எவ்வளவு கருணை
எவ்வளவு அன்பு
அவனைத்தானே இவர்கள்
முதலில் கொன்றிருப்பார்கள்
உன்னையும் என்னையுமா
விட்டு வைக்கப்போகிறார்கள்....
சகாவே
செத்துபிழைத்தான் என
இவர்களிடம் பெயர் வாங்குவதற்காக
நாம் செத்துப்போக முடியுமா....
அந்த மௌனத்தை
அப்படியே விட்டுவிடலாம்தானே
என் சகாவே
ஏன் தடுமாறுகிறாய்
மீண்டும் மீண்டும்
காயப்படும் இதயத்தின்
வலியை
இன்னும் எத்தனை நாட்கள்தான்
பொறுப்பாய்
நெருப்பாய் விழும்
சொற்களை
வெறுமனே தாங்கிகொள்ள
உன் இதயம் என்ன
கற்களா
அவர்கள்
மௌனம் காக்கிறார்கள் என்றால்
உன்னை இன்னமுமே
வதைக்க
வழிமுறைகளை யோசிக்கிறார்கள்
என புரிந்து கொள்
இங்கு
எல்லா மௌனங்களுமே மௌனங்கள் அல்ல
அதில் சில
நயவஞ்சக ஓநாய்களின் நாக்குகள்
பசித்திருக்கும் கழுகுகள்
காத்திருக்கும் கட்டுவிரியன்கள்
தானாய்ச் சென்று
தலை கொடுக்காதே
மௌனத்தை அப்படியே
விட்டுவிடுவதுதான்
உனக்கும் நல்லது
உன்னையே நம்பி துடிக்கும்
இதயத்திற்கும்
ரொம்பவே நல்லது
தொலைக்காட்சி விவாதமேடை
காதலால் சாதியை எதிர்த்து
ஓடிப்போய்
எங்கோ ஓர் மூலையில்
நிம்மதியாய்
வாழ்ந்திருந்த தம்பதிகள்
முகம் காட்டினார்கள்
கடந்த காலத்தின்
கசப்புகளையும்
எதிர்காலத்தின் நம்பிக்கையையும்
கண்கலங்க பேசினார்கள்
இழந்துவிட்ட
அம்மாவின் பாசம்
அப்பாவின் அக்கறை
அண்ணன் தம்பிகளின் அரவணைப்பு
அக்கா தங்கைகளின் சிரிப்பு
உறவுகளின் உரையாடல்
ஊர் மக்களின் உற்சாகம்
என
இழந்துவிட்டவை எவ்வளவோ
வீட்டிலிருந்து பார்த்த
பலரும் அழுதார்கள்
நிகழ்ச்சி முடிவில்
சாதி தோற்று
காதலே வென்றது என
நடத்துனரும் கொண்டாடினார்
சில நாட்களில்
பங்கேற்ற மூன்று தம்பதிகளையும்
அடையாளம் தெரியாதவர்கள்
வெட்டி கொன்றார்கள்
மேற்கொண்ட இரு
தம்பதிகள் தற்கொலை
செய்து கொண்டார்கள்
அடுத்த வாரம்
அதே விவாத மேடையில்
'ஏன் கொல்கிறோம்' என்பவர்களை
பேச அழைத்திருந்தார்கள்
விவாத மேடைகளின்
விளைவுகள் அவ்வளவுதானா
எழுத எதுவும்
இல்லையென்றால்
இருக்கவே இருக்கிறது
கிறுக்கல்
பகிர எதுவும்
இல்லையென்றால்
இருக்கவே இருக்கிறது
புரளி
பாட எதுவும்
இல்லையென்றால்
இருக்கவே இருக்கிறது
ஒப்பாரி
பேச எதுவும்
இல்லையென்றால்
இருக்கவே இருக்கிறது
வசை
சிரிக்க எதுவும்
இல்லையென்றால்
இருக்கவே இருக்கிறது
பகடி
தப்பிக்க எதுவும்
இல்லையென்றால்
இருக்கவே இருக்கிறது
கழிவிரக்கம்
மில்லியன் பண ஊழலில்
அரசியல்வாதி சிக்கிவிட்டால்
இருக்கவே இருக்கிறது
மதச்சண்டையும் இனச்சண்டையும்
சகாவே
தற்கொலைக்கும்
முக்தியடைவதற்கும்
என்ன வித்தியாசம்
எங்கே போகிறோம்
எதற்கு போகிறோம்
ஏன் போகிறோம்
என்கிற
தெளிவின் ஆழம்தான்
இல்லையா
என்னை மறைத்துக்கொள்ள
எனக்கிருப்பது
என் கவிதைகள்
மட்டுமே
என்னை கண்டுபிடிக்க
உனக்கிருப்பதும்
என் கவிதைகள்
மட்டுமே
யாராவதென்னை
கண்டறியட்டும் என்றே
காலம் முழுக்க
மறைந்தாடுகிறேன்
நான் விலகி ஓடவில்லை
நமக்கிருக்கும் இடைவெளியின்
மீது வெளிச்சம் பாய்ச்சுகிறேன்
அது எவ்வளவு பிரகாசமோ
அவ்வளவு வலி
அது எவ்வளவு மங்கலோ
அவ்வளவும் வழி
ஒரே வரியில் ஆயிரம் அர்த்தங்கள்
வைப்பவன் ஞானி என்றால்
ஆயிரம் வரிகளை ஒரே அர்த்தத்தில் வைப்பவன் தீர்க்கதரிசி என்றாகக்கடவது
இதிலொரு பிரமை இருக்கிறது
இதிலேதான் பிரேமையும் இருக்கிறது
நெடுநாட்களாக
மனதை இம்சித்திருந்த
கவிதையை
இன்று எப்படியோ
எழுதி முடித்து விட்டேன்
இன்றுதான்
எதோ கொஞ்சம்
பெருமூச்சு விடமுடிகிறது
இனியாவது
நிம்மதியாய் உறங்குவாயா
என கேட்கிறாள்
இல்லை
இனி ஒருபோதும்
என்னால் நிம்மதியாகவே
இருக்க முடியாது
நாம்
அடுத்த கவிதைக்கு
செல்லவேண்டாமா
ஒரு கவிதை என்பதை
ஒரே கவிதை என்றா
நினைக்கிறாய்
ஒருவனை உடைக்க
ஒரு சொல்
போதுமானது
ஒருவனை வதைக்க
ஒரு சொல்
போதுமானது
ஒருவனை சிதைக்க
ஒரு சொல்
போதுமானது
ஒருவனை வஞ்சிக்க
ஒரு சொல்
போதுமானது
ஒருவனை தாழ்த்த
ஒரு சொல்
போதுமானது
ஒருவனை வீழ்த்த
ஒரு சொல்
போதுமானது
ஆனால்,
ஒருவன் தன் தேடலை
தெரிய
ஒருவன் தன் மீட்சியை
அறிய
ஒருவன் தன் அறத்தை
விளங்க
ஒருவன் தன் அவமானத்தை
துடைக்க
ஆயிரமாயிரம் பக்கங்கள் தேவைப்படுகின்றன
அதற்கென்றேதான் இங்கு
இன்னும் இன்னும்
கவிதைகள்
எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன
கண்ணீரைத் துடைக்க
வழி சொல்பவன்
அந்தக் கண்ணீரின் வலியின் சென்றிருக்கத்தான் வேண்டும்
ஆதாம் ஏவாள்
காலத்திலிருந்தே இங்கு
சொற்களே வாதை
சொற்களே போதை
சொற்களே பாதை