Pages - Menu

Pages

டிசம்பர் 14, 2025

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 14/20


மலேசியா வருகிறார் பெருமாள்முருகன்

பெருமாள்முருகன் சிறுகதை ‘பரிகாரம்’ 14/20

முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.

****************************************

காதல் எல்லாவிதமான பைத்தியக்காரத்தனத்தையும்  செய்ய வைக்கிறது. சாதுக்களைச் ‘சேதுக்களாய்’ ஆக்குவதும் காதல்தான் ‘சேதுக்களைச்’ ‘சாதுக்களாய்’ ஆக்குவதும் காதல்தான்.

காதலைப் பற்றி என்ன சொன்னாலும் யாரோ ஒருவர் அழுவதற்கும் யாரோ ஒருவர் சிரிப்பதற்கு யாரோ ஒருவர் வெறுப்பதற்கும் அதிலொரு காரணமும் அவர்கள் மனதில் மறைத்திருக்கும் காதலும் இருக்கும்.

காதலுக்கு எதிர்ப்பும் எதிரிகளும் இருப்பது காதலை சுவாரஸ்யப்படுத்துவத்ஓடு காதலர்களை  பலப்படுத்துகிறது. வழக்கமாய் வரும் எதிர்ப்புகள் காதலுக்கு வெளியில் இருந்துதான்  வரும் சில சமயங்களில் காதலர்களாலேயே வரவும் செய்யும். அத்தி பூத்தாற் போல, காதலே காதலுக்கு எதிரியாக அமைந்துவிடுவதும் இருக்கிறது. அப்படியொரு அத்திப்பூதான் இந்தச் சிறுகதை

பெருமாள்முருகன் சிறுகதை ‘பரிகாரம்’ 14/20
காதலிக்கு திருமணம் நடக்கவிருக்கிறது; காதலனோ அந்த வலியைத் தாங்காது தற்கொலைக்கு முயல்கிறான். தெய்வாதீனமாக காப்பாற்றப்படுகின்றான். எல்லாமே கூடிவந்த சமயத்தில் இவன் தான் இந்தக் கல்யாணம் வேண்டாம் என்றான். அதுவும் தன் காதலிக்காகத்தான். இவனுக்கும் காதலிக்கும்  திருமணம் நடந்தால் காதலி இறந்துவிடுவாள் என்று ஜோதிடத்தில் சொல்லிவிட்டதால். தன் காதலி வாழ்வதற்காக தன் காதலை கொலை செய்யும் காதலனின் கதை.

இது ஒருபக்கம் இருந்தாலும்; இம்மாதிரி ஜாதகங்களும் ஜோதிடங்களும் தனிமனிதனின் வாழ்வில் எப்படி நுழைகிறது; எப்படியெல்லாம் அவனது நம்பிக்கையை அசைக்கிறது என எழுத்தாளர் சொல்லியிருக்கும் விதம் கவனிக்கத்தக்கது. நாயகனின் வாழ்க்கைக்குள் மெல்ல மெல்ல இவை நுழைந்து அவனது மனதை குழப்புகிறது. அதற்கான பரிகாரத்தைத் தேடிச்செல்லும் நாயகனின் மனநிலை மேலும் சஞ்சலப்படுகிறது.

தொடக்கத்தில் நமக்கு அது நகைச்சுவையாக இருந்தாலும் மெல்ல மெல்ல நமது முட்டாள்த்தனங்களும் நம் கண்முன்னே வந்து நிற்கிறது.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக