Pages - Menu

Pages

மார்ச் 11, 2025

- தொடாவானம் -

 

உண்மையைச் சொல்லுங்கள் 

மறைக்காமல் சொல்லுங்கள்


அன்பின் பெயரால்

கூர்வாளை மார்பில் ஏந்தி

உடல் 

உடைந்தூற்றும் உதிரத்தில் 

பூக்களை மலர்விப்பவர்கள் 

நீங்கள்தானே


வலிக்கவில்லை வலிக்கவில்லையென

சிரித்துக்கொண்டே செல்பவர்கள் நீங்கள்தானே


முழுக்க முட்டாளாக்கி 

உங்களை உதாசினம் செய்பவர்களுக்காகவும்

நீங்கள் பிரார்த்திப்பீர்கள்தானே


அவர்கள் அறியாமல் செய்கிறார்கள்

என அழுகிறீர்களே


ஒரே ஒரு கேள்வியைக் கேட்கவா

உங்கள் உதிரம் குடித்து

வளர்ந்த செடிகளில் 

இன்று

பூத்துக்குலுங்கும் பூக்களுக்கு

உங்களைக் கொஞ்சமாவது நினைவிருக்கிறதா?


இனியெப்போதும் 

தொட்டுவிடவே முடியாத ஒன்றுக்கு

தொடுவானம் என பெயரிட்டவனிடம்தான்

எவ்வளவு கருணை

எவ்வளவு அன்பு

அவனைத்தானே இவர்கள்

முதலில் கொன்றிருப்பார்கள்


உன்னையும் என்னையுமா

விட்டு வைக்கப்போகிறார்கள்....


சகாவே

செத்துபிழைத்தான் என 

இவர்களிடம் பெயர் வாங்குவதற்காக

நாம் செத்துப்போக முடியுமா....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக