Pages - Menu

Pages

டிசம்பர் 31, 2024

2025 புத்தாண்டு

 


ஒவ்வொரு ஆண்டும் நமக்கான படிப்பினையையும் அனுபவங்களையும் கொடுப்பதில் குறை வைப்பதில்லை. ஜனவரி எடுத்து வைக்கும் செல்ஃபிக்கும் டிசம்பரில் எடுத்தும் வைக்கும் செல்ஃபிக்குமே பல வித்தியாசங்கள் இருக்கும் பொழுது வேறென்ன சொல்ல முடியும்.

நான் எப்போதும் என்னை ஓர் எழுத்தாளனாகவே முன்னிறுத்த விரும்புகிறேன். விரும்புவதோடு அதற்கான உழைப்பையும் விலையையும் கொடுத்துகொண்டும் இருக்கிறேன்.

ஒவ்வொருவருக்குள்ளும் அவர்களின் அனுபவம் ஓர் கதைக்கான கருவைக்  கொடுத்திருப்பதாக நம்புகிறேன். உரையாடல்வழி அந்தக் கருவிற்கு கதை கொடுக்கவே பலவற்றை முன்னெடுக்கின்றேன்.

சிறகுகளின் கதைநேரம்; சிறுகதைக் கலந்துரையாடலை கடந்த ஆண்டில் தொடங்கி இந்த ஆண்டு இறுதிவரை 50 கலந்துரையாடல்களை நடத்திவிட்டோம். புத்தாண்டு முதல் மேலும் சில திட்டங்களுடன் கதைநேர சந்திப்பை தொடரவுள்ளோம்.

குறுங்கதை எழுதும் வகுப்பின் மூலம், பல புதியவர்களை அவர்களின் முதல் குறுங்கதையை சிறுகதையை எழுத் வைத்தோம். அவை இணைய இதழ்களிலும் வெளிவந்தன. தொடர்ந்து எழுத வேண்டியது இனி அவர்கள்தான்.

இலக்கியம் சார்ந்த பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளேன். பலருடன் உரையாடியுள்ளேன். 

பல பள்ளிகளுக்கு சிறுகதை எழுதுவது குறித்து பேச சென்றிருந்தேன். அதே சமயம்  மாணவர்களுக்கு கதைசொல்லும் கதைசொல்லியாகவும் சென்றிருந்தேன். பல மாணவர்களுடனும் ஆசிரியர்களிடனும் கதைகள் குறித்து கலந்துரையாடினோம்.

நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையின் வழி வழக்கம் போல  தள்ளுபடியில் புத்தகங்களை விற்பனைக்கு கொண்டு வந்தோம். புத்தகங்களை வாங்குவதற்கு எந்த வாசகரும் சிரமப்படக்கூடாது, அவர்கள் விரும்பிய புத்தகங்களை விரும்பியபடியே அவர்களை வாங்கி வாசிக்க வைக்கிறோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்து உடன் பயணிக்கும் புத்தக விரும்பிகளுக்கு எங்கள் அன்பு.

நமது வெள்ளைரோஜா பதிப்பகத்தில் இந்த ஆண்டு எழுத்தாள உமாதேவி வீராசாமியின் 'கலவரக்கோடுகள்' சிறுகதைத் தொகுப்பை வெளியிட திட்டமிட்டிருந்தோம். எல்லா வேலையும் முடிந்தது. எழுத்தாளரின் நிறைவான சரிபார்த்தலுக்கு பின்னர் வரும் ஆண்டில் இந்தப் புத்தகம் வெளிவரும்.

அதே போல நமது பதிப்பகத்தில் மேலும் சில புத்தகங்கள் வெளியிடுவதற்கு பேச்சுவார்த்தை நடக்கின்றது. 

இந்த ஆண்டில் மொத்தமே 41 புத்தகங்கள் மட்டுமே வாசிக்க முடிந்தது. அடுத்த ஆண்டில் இதைவிட ஒரு புத்தகத்தையாவது கூடுதலாக வாசிக்க வேண்டும்.

தனிப்பட்ட முறையில், தொடர்ந்து எழுதவேண்டும். அதான் என்னை வழிநடத்தும் இறையாகப் பார்க்கிறேன். அதன் வழியே நான் அறியப்படவேண்டும் எனவும் விரும்புகிறேன்.

பிறக்கவுள்ள இந்தப் புத்தாண்டு, என் வாசிப்பிற்கும் எழுத்திற்கும் என் வாழ்க்கைக்குமே துணையாக இருக்க என் இறையிடம் பிரார்த்திக்கிறேன்.

என்னோடு எப்போதும் பயணிக்கும் உங்கள் அனைவருக்கும் எனது அன்பும் புத்தாண்டு வாழ்த்துகளும்...

அன்புடன் தயாஜி


ஜனவரி முதல் நாளும் முதல் புத்தகமும்

 

இங்கு வாழ்க்கை யாருக்கும் அவ்வளவு சுமூகமாக இருப்பதில்லை. அவரவர் தகுதிக்கு ஏற்றபடி அவரவர்க்கு ஏதோ ஒரு சிக்கலோ தொல்லையோ இருக்கத்தான் செய்கிறது. பாருங்களேன், அது கூட தகுதி பார்த்துதான் வருகிறது.

வாசிப்பதும் அப்படித்தான். ஒரு சமயத்தில் கையில் பணமிருக்காது. ஆனால் எப்படியோ சில புத்தகங்களையாவது வாங்கி வாசித்துவிடுவோம். பல தடவை மீள்வாசிப்பும் கூட இதனால்தான் நடந்திருக்கலாம்.

இன்று புத்தகங்கள் வாங்க பணமிருக்கிறது. (புத்தக விலைகளை நினைத்தால் இப்போதும் பயமாகத்தான் இருக்கிறது) ஆனால் புத்தகத்தை வாங்குவதற்கு மனம் இல்லை, அடுக்கி வைக்க வீட்டில் இடமில்லை, பராமரிக்க வசதி இல்லை, மொத்தத்தில் நேரமே இல்லை !

ஆனாலும் ஏதாவது ஒரு புத்தகத்தை வாசித்தபடியே இந்தப் புத்தாண்டை வரவேற்றுதான் பாருங்களேன்.

அதற்கான சில டிப்ஸ்கள் கொடுக்கவா,

- ரொம்பவும் தடித்த புத்தகத்தை எடுக்காதீர்கள். கை வலிக்குதே என புத்தகத்தை எடுக்கவே மாட்டீர்கள்

- குழப்பமான சிக்கலான ஆராய்ச்சி புத்தகங்கள் வேண்டாம். பிறகு நாம்தான் அதற்கு பரிசோதனை எலி.

- பிடிக்காத எழுத்தாளரின் புத்தகத்தை படிக்க எடுக்காதீர்கள். வருச ஆரம்பமே எதுக்கு மன உளைச்சல்.

- உங்களுக்கு எது படிக்கப்பிடிக்கும் ? கதைகள், கவிதைகள், நாவல்கள், ஜோக்குகள் அட சமையல் குறிப்புகள் இப்படி ஏதோ ஒன்று பிடிக்கும்தானே?

- பிடித்ததுடன் புத்தாண்டை தொடங்குங்கள்.

- தொடங்கியதை வாசித்து முடியுங்கள்

- எடுத்ததை முடிப்பதை விட ஒரு தன்முனைப்பு வேறென்ன வேண்டியிருக்கு

- அதன் பிறகு ஒன்றின் பின் ஒன்றென ஒரு புத்தகத்தை வாசியுங்கள்

- வாசித்ததை பற்றிய உங்கள் அபிப்பராயங்களை எழுதுங்கள்; குறித்து கொள்ளுங்கள்

- ஓராண்டு முடிவில் வாசித்த புத்தகங்கள் எனென்னெ என பாருங்கள் அசந்து போவீர்கள்.

எச்சரிக்கை,

முதல் புத்தகத்தை தேர்ந்தெடுப்பதில் கவனம் வேண்டும். தவறான அல்லது உங்களுக்கு ஒத்துவராத புத்தகத்தை எடுத்துவிட்டு பிறகு குத்துதே குடைதுதேன்னா நாங்க ஒன்னும் செய்ய முடியாது.

சில நாட்களாக புத்தக அலமாரியை அலசி ஆராய்ந்து புத்தாண்டு தொடங்கி, வாசிக்க வேண்டிய புத்தகங்களை எடுத்துவிட்டேன். ஒரு பெட்டியில் வருசையாய் அடுக்கியுள்ளேன்.

நிச்சயம் இந்தப் பட்டியல் முழுமையானது இல்லை. பல புத்தகங்கள் குறுக்குவழியில் உள்நுழையத்தான் போகிறது. 

நீண்ட யோசனைக்கு பின் ஜனவரி முதல் நாள் நான் வாசிக்க வேண்டிய புத்தகத்தை எடுத்துவிட்டேன். நிச்சயம் ஓராண்டு வாசிப்பிற்கு இந்தப் புத்தகம் என்னை தயார் செய்யும்  என நம்புகிறேன்.

அப்படியென்ன புத்தகம் என்பதை ஜனவரை முதல் நாள் பகிர்கிறேன்.

நண்பர்களே நீங்களும் ஜனவரி முதல் நாளில் வாசிக்க உள்ள புத்தகத்துடன் தயாராய் இருங்கள். 

புத்தக விபரங்களையும் புகைப்படத்தையும் பகிர்ந்து கொள்வோம்....

நாம் இருவருக்கும் இடையில் ஓர் உறவாக துணையாக புத்தகங்கள் இருக்கட்டும்....

அன்புடன்

#தயாஜி

#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 

#வெள்ளைரோஜா_பதிப்பகம்

டிசம்பர் 29, 2024

தீரா காதல்



 ஒரு நீண்ட கவிதை
யாரோ ஒருவரால் 
நினைக்கப்பட்டு
யாரோ ஒருவரால்
தொடங்கப்பட்டு
யாரோ ஒருவரால்
வாசிக்கப்பட்டு

ரசித்து
சிரித்து
அழுது
புலம்பி
ஆறுதல் தேடி
தோள் தட்டி
கண்ணீர் துடைத்து
மீண்டெழுந்து பின்

யாரோ ஒருவரால் 
தொடர்ந்து எழுதப்பட்டுக்கொண்டே
இருக்கிறது

இவ்வுலகில் எண்களுக்கு
வேண்டுமெனில்
முடிவின்மை இருக்கலாம்

ஆனால்
எவ்வுலகிலும் முற்றுபெறாமல்
தொடர்ந்து எழுதப்படுவது
தன்னைத்தானே வார்த்தெடுப்பது
எப்போழுதும் கவிதைகளே

தீரா நதியாய்ப்
பாய்ந்தோடும் 
தீரா கவிதையை
யாரால்தான் நிறுத்திவிட முடியும்

சுரக்கும் தாய்ப்பாலை
எந்தக் குழந்தைதான் மறுக்கும்....

டிசம்பர் 26, 2024

50வது கலந்துரையாடல்

இந்த வார திங்கட்கிழமையுடன் (23/12/24) இதுவரை நாம் நடத்திவந்த ‘சிறகுகளின் கதை நேரம் – சிறுகதை கலந்துரையாடல்’ நிறைவடைகிறது.

இது நமது ஐம்பதாவது கலந்துரையாடல் கடந்த ஆண்டு (2023) டிசம்பரில் பரிட்ச்சார்த்த முயற்சியில் தொடங்கி இவ்வாண்டு வரை  (2024) ஐம்பது கலந்துரையாடல்கள் வரை கடந்துவிட்டோம். உண்மையில் இந்த ஐம்பதாவது கலந்துரையாடலை ‘கோ.புண்ணியவான் படைப்புலகம்’ என்ற தலைப்பில் அவரின் படைப்புகளைப் பற்றி ஒரு முழுமையான கலந்துரையாடலை வைக்கலாம் என்றுதான் திட்டமிட்டிருந்தோம். 

அதற்கென வகுத்த செயல் திட்டங்களில் எனக்கு போதிய அனுபவம் இல்லாததாலும் நாங்கள் தேடிய புத்தகங்கள் குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்காததாலும் இத்திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. ஆனால் நிச்சயம் மீண்டும் முயல்வோம்.

இருந்தாலும் சிறகுகளின் கதை நேரம் – சிறுகதை கலந்துரையாடலுக்கு திட்டமிட்டதில் இருந்து தொடர்ந்து உடன் பயணிக்கும் இளம் எழுத்தாளர் பிருத்விராஜூவின் சிறுகதையை ஐம்பதாவது கலந்துரையாடலில் பயன்படுத்தியது எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி சிறப்பான முறையில் விளம்பரத்திற்கான பதாகைகளை செய்து கொடுப்பவரும் அவர்தான்.

இணையம் வழி எந்தவித செலவும் இன்றி (நேரத்தைத் தவிர) இந்தக் கலந்துரையாடலை நடத்தியிருந்தாலும் சில சிக்கல்களையும் நாங்கள் எதிர்கொண்டோம்.

குறிப்பாக இந்தக் கலந்துரையாடலுக்கு வந்தால் சிலர் தாங்கள் நட்பாக இருப்பவர்களிடம் இருந்து விலக நேரிடும் என்று கூட நேரடியாகவே சொல்லியுள்ளார்கள். 

போதாக்குறைக்கு நமது நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு இன்னொரு புலனக்குழுவில் நண்பர் ஒருவர் பகிர்ந்த போது, இதையெல்லாம் இங்கே பகிர அவசியம் என்ன இருக்கிறது என்றும் இதனால் மலேசிய இலக்கியம் அடையப்போவது ஒன்றுமில்லையென்ற விவாதத்தை அறிவிலியொன்று புலம்பியும் குழம்பியும் திரிந்தது.

அந்த அறிவிலி சொல்வதும் உண்மைதான். நாங்கள் மேடைகளை நம்பவில்லை. மாலை மரியாதையைக் காட்டி யாரையும் கவரவில்லை. இலக்கியம் என்ற பெயரின் தனிமனித விளம்பரத்தையோ தனிப்பட்ட வருவாய்க்கான ஏற்பாடுகளையோ செய்யவில்லை. அடிப்படையில் வாசிக்க சொல்லுகிறோம். “எதையாவது எழுதுங்கள், பிறகு யாரை வைத்தாவது எடிட் செய்து… புத்தகம் போட்டு எல்லோர் முகத்திலும் அடிப்போம்…” என்ற  வெட்கமற்ற வாக்குறுதிகளைக் கொடுக்கவில்லை. 

ஒரு கதையை வாசித்து அதற்கான நம் மனவோட்டத்தை சக நண்பர்களோடு பகிர்வதற்கு ஒரு களத்தை உருவாக்கியிருக்கிறோம்.

எழுத்தாளருக்கும் வாசகருக்குமான நேரடியான உரையாடல் களமாக இந்தக் கலந்துரையாடல் அமைந்திருக்கிறது.

தன் சுய இலாபத்துக்காகவும், தனக்கு கிடைக்கும் போலி பாராட்டுகளுக்காகவும் மயங்கி யார் பின்னாலும் நடப்பவர்கள் ஒருபோதும் படைப்பாளிகளாக ஆக முடியாது என்கிற அடிப்படை தெரியாதவர்களைப் பற்றி நாம் கவலைப்பட ஒன்றுமில்லை. தனக்கு நடக்கும் ஏமாற்றத்தையே கண்டறிய முடியாவதவர்கள் வாசகர்களுக்கு எதை எழுதிவிட உத்தேசிக்கிறார்கள் எனவும் புரியவில்லை.

இந்த ஐம்பதாவது கலடந்துரையாடல்வரை பல சிறுகதைகளைப் பற்றி பேசியுள்ளோம். மூத்த படைப்பாளிகள் முதல் இளம் படைப்பாளிகளின் முதல் சிறுகதைகள் என பல கதைகளை கலந்துரையாடல் செய்துள்ளோம். மலேசியா மற்றும் சிங்கப்பூர் எழுத்தாளர்களோடும் உரையாடல்களை நடத்தியுள்ளோம்.


எங்கள் நோக்கத்தை புரிந்து எங்களுக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கியதற்கு சிறகுகள் நண்பர்கள் சார்பாக எங்கள் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

எழுத்தாளர்கள் மட்டுமல்லாது, பல வாசகர்களும் கலந்துரையாடலுக்கு வந்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து உங்கள் சந்தேகங்களை எழுத்தாளர்களிடம் கேட்டு உரையாடலை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தினீர்கள். நீங்கள் எங்கள் நன்றிக்குரியவர்கள்.

இலக்கியம் குறித்து நீங்கள் சண்டையிடுங்கள் சேர்ந்து கொள்ளுங்கள் முரண்படுங்கள் உடன்படுங்கள் ஆனால் உங்களின் சுயதேவைக்கு இலக்கியத்தைப் பயன்படுத்தி மேலே வர சதி செய்யாதீர்கள். நீங்கள் மேலே வருவீர்கள் ஆனால் அங்கேயே அதிக நேரம் உங்கள் உங்களை நிறுத்தி வைக்க முடியாது. 

நிறைவாக;

இந்த ஐம்பதாவது கலந்துரையாடலுடன் நமது சிறகுகளின் கதை நேரம் – சிறுகதை கலந்துரையாடல் நிறைவடைகிறது. சிறிய இடைவேளைக்கு பின் மீண்டும் நாம் வாரந்திர கலந்துரையாடலில் இணைவோம். வாசிப்பை நம்புகின்றோம் வாசிக்கின்றோம். உரையாடலை நம்புகின்றோம் பேசுகின்றோம். இலக்கியத்தை நம்புகின்றோம் வாழ்கிறோம் வாழ்வோம்.

டிசம்பர் 22, 2024

பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு


   சமீபத்தில் நடந்த பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கிற்கு சென்றிருந்தேன். நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை சார்பாக புத்தகங்களை விற்பனை செய்யும் வாய்ப்பினைக் கொடுத்திருந்தார்கள். என்னுடன் மேலும் சில மலேசிய எழுத்தாளர்களும் அவர்களின் புத்தகங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார்கள்.




  பலரை சந்திக்கவும் பேசவும் வாய்ப்பு கிடைத்தது.

  நிகழ்ச்சி முடிந்து புறப்படும் போது வழக்கம் போல,  PSM கட்சி அலுவலக நூல்நிலையத்திற்கு எனது புத்தகங்களைக் கொடுத்தேன்.

 எங்கெல்லாம் நூல்நிலையங்களும் வாசிக்கும் மனங்களும் இருக்கின்றனவோ அங்கெல்லாம் என் புத்தகங்களும் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். நான் எழுதுவதும் அதற்காகத்தான்.



     இவ்வாய்ப்பை எனக்கு எற்படுத்தி கொடுத்த தோழர்கள் அனைவருக்கும் குறிப்பாக தோழர் நாகேந்திரன் அவர்களுக்கும் என் அன்பும் நன்றியும்...

டிசம்பர் 18, 2024

- பிரபலமற்ற வாசகன் -

 

- பிரபலமற்ற வாசகன் - 


உங்கள் புத்தகங்கள் 

பிரபலமானவர்கள் 

கைகளில் இருக்க வேண்டும்.


உங்கள் புத்தகங்களைப் பிரபலமானவர்கள் 

பேச வேண்டும்.


உங்கள் புத்தகங்களுடன்

பிரபலமானவர்கள் படம் பிடிக்க வேண்டும்.


உங்கள் புத்தகங்களுக்கு

பிரபலமானவர்கள் குரல் கொடுக்க வேண்டும்.


உங்கள் புத்தகங்களை

பிரபலமானவர்கள் இரசித்து லயிக்க வேண்டும்.


உங்கள் புத்தகங்களைவிடவும்

பிரபலமானவர்களே உங்களுடன் நிற்க வேண்டும்.


சரிதான்


ஆனால் 

உங்கள் புத்தகங்களை

வாங்குவதற்கு மட்டும்

ஏன் 

வாசகனை அழைக்கின்றீர்கள்


நீங்கள் 

உங்கள் புத்தகங்களை

பிரபலமானவர்களுக்கு 

அன்பளிப்பாக கொடுத்துவிடுவதாலா?


பரவாயில்லை


வாசகனுக்கு ஒருபோதும்

பிரபலமும் தேவைப்படாது

பிறர் பலமும் தேவைப்படாது...


#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை