Pages - Menu

Pages

ஜனவரி 04, 2024

செல்லுமிடம் தூரமில்லை

 


நீண்ட நாட்களுக்கு பிறகு

நாங்கள் சந்தித்தோம்

உணவருந்தினோம்

பேசினோம்


எங்கள் இருவரில்

யார் சொன்னாரோ தெரியவில்லை


சட்டென ஒரு வார்த்தை 

எங்கள் இருவரின் 

காதிலும் ஒரே நேரத்தில்

விழுந்தது


நாங்கள் அதிர்ச்சியானோம்


அந்த வார்த்தை 

மெல்ல மெல்ல

கீழிறங்கி இதயம் வரை

எட்டிப்பார்த்தது


அது எங்களுக்கு நாங்களே

சொல்லிக்கொள்ளும்

வார்த்தையாகவே

தன்னைக் கற்பிதம் செய்தது


எங்கள் உரையாடல் நின்றது

வாயிலிருந்து வெளிவரவேண்டிய

வார்த்தைகளையும் கேள்விகளையும்

எங்களுக்குள் நாங்கள் 

அனுப்பிக்கொண்டோம்


அது எங்களுக்கான

உரையாடலாய் மாறி

இன்னொரு பரிணாமம்

அடைய முற்பட்டது


நாங்கள்

மீண்டும் ஒருவரையொருவர்

பார்க்கலானோம்

மீண்டும் அந்த வார்த்தைகள் 

எங்கிருந்தோ வந்தன..


"இங்கு யாருக்கும் எதுவும் தெரியாமலில்லை... 

அவரவர் தேவைக்கு ஏற்றார்போலவே அவரவர் பழக்கத்தை வைத்துக்கொள்கிறார்கள்.... அவர்களுக்காக வருத்தப்பட என்ன இருக்கிறது... 

நீ உன் வேலையை செய்தாலே போதும்.. நீ அதற்காகப் பிறந்தவன் தானே அதை மட்டும் செய்.... அவரவர்க்கு தெளிவு  பிறப்பின் அவர்கள் தானாய் வருவார்கள்.. 

வழி அறிவார்கள்.."


அந்த அசரீரி 

எங்கிருந்து வந்ததென

தெரியவில்லை

ஆனால் அது

எங்குச் செல்லவேண்டுமென

தெரிகிறது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக