‘சார் நீங்க வரலையா?’, ‘ஐயா உங்களை சந்திக்க ஆவலாக வந்தோம்?’, ‘புத்தகத்தில் உங்கள் கையெழுத்து வேண்டும்?’, ‘நீங்கள் ஏன் மாணவர்களின் கதைகளுக்கு அறிமுக உரை எழுதவில்லை?’, ’மகன் உங்களுக்காக பரிசு கொண்டு வந்திருந்தார்’, ’உங்கள் உழைப்பு முக்கியமான ஒன்று’, ‘உங்களால்தான் மகன்/மகள் கதை எழுதவே ஆரம்பித்தார்’ போன்ற அழைப்புகளும் செய்திகளும் வந்தவண்ணம் இருந்தன.
அதற்கு காரணம்; ‘இரட்சகன்’ மாணவர்களின் குறுங்கதைத் தொகுப்பு வெளியீட்டில் நான் இல்லாததுதான்.
இப்பதிவை நான் தொடர்ந்து எழுதுவதற்கு முன் ‘இரட்சகன்’ குறுங்கதைத் தொகுப்பில் கதைகள் எழுதிய மாணவர்களுக்கு என் வாழ்த்துகளைச் சொல்லிக்கொள்கிறேன். இந்த யோசனை தொடங்கிய போது நான் வாசித்த, எனக்கு கிடைத்த அறுபதற்கும் அதிகமான கதைகளை எழுதிய மாணவர்களுக்கும் என் வாழ்த்துகள். இரு தரப்பும் தொடர்ந்து எழுதுங்கள். அதுதான் அவசியம். இம்முறை உங்கள் கதைகள் தேர்வாகவில்லை என்றாலும் அடுத்த முறை நிச்சயம் உங்களால் முடியும் முயலுங்கள்; தொடர்ந்து எழுதுங்கள்.
அதோடு இம்மாணவர்களின் பெற்றோருக்கு; இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கும் உங்கள் வீட்டிலும் ஓர் எழுத்தாளரை நீங்கள் உருவாக்க ஆசை கொண்டதற்கும் இன்னொரு எழுத்தாளர் என்கிற முறையும் என் அன்பும் நன்றியும்.
தங்கள் பிள்ளைகளை எழுதிய கதைகளை புத்த வடிவில் ஏந்தி மகிழ்ந்திருக்கும் பெற்றோரின் மகிழ்ச்சியை நான் சிதைக்க விரும்பவில்லை. அதற்காக ஒரு தவறான முன்னுதாரணத்தை வளரவிடக்கூடாது அல்லவா?
இதனை நான் எழுதுவதற்கு முன்பாக இக்குறுங்கதை பயிலரங்கில் இதுநாள்வரை நான் பயிற்றுவித்த அனைத்து மாணவர்களையும் ஒரு முறை நினைத்துப் பார்க்கிறேன். இதனால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பு வருவதையும் நான் விரும்பவில்லை. அந்த கவனத்துடந்தான் இதனை எழுதுகிறேன்.
ஏனெனில் நான் பயிற்றுவித்த இந்த ஒவ்வொரு மாணவர்களும் என் மாணவர்கள் என் நண்பர்கள் என் எழுத்தாளர்கள். அவர்களை அடைக்காப்பது என் நோக்கமல்ல; அவர்களை யாரும் தங்களுக்காக பயன்படுத்தக் கூடாது என்ற அக்கறை இல்லாமலில்லை.
ஒரு புத்தகம் இலக்கிய படைப்பாக வந்திருக்கிறதா என்று கேட்பதற்கு முன் அடிப்படையில் அது புத்தகமாக தரமாக வந்திருக்கிறதா என பார்க்க வேண்டும். அதற்கு அடிப்படையில் நேர்மை வேண்டும்!
தொடக்கமாக சில கேள்விகளை மட்டும் இப்போதைக்கு கேட்க நினைக்கிறேன்.
முன்னேமே பேசியபடி; புத்தகத்தில் இருக்க வேண்டிய என் வாழ்த்துரையை ஏன் நிராகரித்தார்கள்? என் வாழ்த்துரையை வேண்டாம் என சொல்ல இவர்கள் யார்? அதன் பின்னணி என்ன?
தொடங்கிய நாளிலிருந்து மாணவர்களோடும் அவர்களின் கதைகளோடும் பயணித்த என்னை ஏன் அழைக்கவில்லை? குறைந்த பட்சம் புத்தக வெளியீட்டு அழைப்பிதழையாவது அனுப்பாதது ஏன்?
எத்தனைக் கதைகளை வாசித்திருப்பேன். எத்தனை முறை திருத்தியிருப்பேன். எத்தனை முறை மாணவர்களுடன் இணையம் வழியும் புலனம் வழியும் உரையாடியிருப்பேன். எல்லாவற்றுக்கும் மேலாக, மாணவர்களின் இந்தத் தேர்ந்தெடுத்த கதைகளை மீண்டும் ஒருமுறை செறிவாக்கம் செய்யவேண்டும் என சொல்லியிருந்தேன். ஏன் அதனை ஒரு பொருட்டாக சம்பந்தப்பட்டவர்கள் கருதவில்லை.?
பிப்ரவரி 2022 முதல், தொடங்கிய ‘குறுங்கதை பயிலரங்கம்’ புலனக்குழுவில் 30 அக்டோபர் 2023-ல் “ஏன் வாக்களித்தபடி மாணவர்களின் குறுங்கதை தொகுப்பு இன்னும் தயாராகவில்லை’ என நான் கேட்ட பின்பு, ஒரு மாதத்திற்கும் குறைந்த அவகாசத்தில் அவசர அவசரமாக இந்தத் தொகுப்பை வெளியிட காரணம் என்ன?
இன்னும் இருக்கின்றன. இப்போதைக்கு இது போதும். சம்பந்தப்பட்டவர்களுக்கும் யோசிக்க கொஞ்சம் அவகாசம் வேண்டுமல்லவா ? எடுத்துக்கொள்ளட்டும்.
நட்பையும் நெருக்கத்தையும் தாண்டிதான் நாம் இலக்கியம் பேச வேண்டியுள்ளது. அந்த மனநிலை இல்லாது ஆணவத்தின் அடுக்குகளில் இருந்தால்; அது எத்தனை நாள்கள்தான் தாங்கும்…..
மற்றவை பிறகு….

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக